மரணமான மஹா பயத்துக்கு – நீக்குதற்கு விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ காளமேகம் அல்லது துணை இல்லை – என்று அவனைப் பற்றுகிறார் –
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1-
—————————-
போக ஹேதுவான -இன்பத்துக்கு காரணமான ஒப்பனையும்-உஜ்ஜீவன ஹேதுவான -உய்வு பெறுவதற்கு காரணமான
திருப் பெயர்களையும் உடையவனுடைய திருவடிகளை அல்லது காலம் என்னும் ஒரு பொருள் தத்வம் -உள்ள வரையிலும்
வேறு புகல் உடையோம் அல்லோம் – என்கிறார் –
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2-
——————-
சர்வ ரக்ஷகனானவன் -மூன்று உலகங்களையும் காப்பாற்றுகின்ற ஸ்ரீ இறைவன்-வர்த்திக்கிற – எழுந்து அருளி இருக்கின்ற
ஸ்ரீ திரு மோகூரை நம்முடைய சகல துக்கமும் -எல்லா துக்கங்களும் கெடச் சென்று அடைவோம் என்கிறார் –
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-
———————–
நம்முடைய ஸமஸ்த -எல்லா துக்கங்களும் கெட ஸ்ரீ திரு மோகூரிலே வந்து ஸூலபனாய் நிற்கிறவனை ஆஸ்ரயிக்க –
அடைவதற்கு வாருங்கோள் -என்று ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைக்கிறார்
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4-
———————-
அவன் எழுந்து அருளி நிற்கின்ற ஸ்ரீ திரு மோகூரை ஆஸ்ரயித்து -அடைந்து அனுபவிக்க வாருங்கோள்
என்கிறார் –
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5-
——————-
ஸ்ரீ திரு மோகூரிலே நின்று அருளின பரம ஆப்தன் திருவடிகள் அல்லது
வேறு ரக்ஷை -பாதுகாவல் நமக்கு இல்லை – என்கிறார் –
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6-
——————
நம்முடைய ரக்ஷணம் -நம்மை பாதுகாத்தல் தனக்கே உரியதாய்-அவர்ஜ்ஜ நீயமான உத்பாதகன் வர்த்திக்கிற –
எல்லா உலகங்களையும் படைக்கின்ற ஸ்ரீ இறைவன்
எழுந்து அருளி இருக்கின்ற ஸ்ரீ திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே -அடையவே நம்முடைய துக்கங்கள் அப்போதே போம் –
என்கிறார்
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7-
———————-
ஸ்ரீ திரு மோகூரிலே நின்று அருளினவனான ஆண் பிள்ளையான ஸ்ரீ தசரதாத் மஜனை
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகனை ஆஸ்ரயிக்க -அடைய நம்முடைய துக்கம் எல்லாம் போம் –
என்கிறார்
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-
——————-
நமக்கு அரணான ஸ்ரீ திரு மோகூரை நாம் பிராபிக்க -அடையப் பெற்றோம் என்று
தம் லாபத்தை பேசுகிறார்
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9-
————————-
சர்வ ரக்ஷகன் வர்த்திக்கிற ஸ்ரீ திரு மோகூரை-நமக்கு பந்துக்களானவர்கள் –
நமர்காள் ஆதரித்து நினைத்து ஏத்துங்கோள் -என்கிறார்
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-
——————-
நிகமத்தில் –
பரம உதாரமான -மேலான வண்மையை உடைய ஸ்ரீ திரு மோகூருக்கு கொடுத்த
இத் திருவாய் மொழியை அப்யஸிக்க – கற்க வல்லார்க்கு துக்க நிவ்ருத்தி யுண்டாம்
என்கிறார்
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11-
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply