ஸ்ரீ திருப்பாவை -கூடாரை வெல்லும் சீர்–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

(கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது -)

பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இறே
நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-
ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –

1-நம் பாஞ்ச சன்னியத்தையும்
2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கையையும்
3-ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –

பறை என்றீர்கள்
ஆகில் நாம் உலகு அளந்த போது
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –
அத்தை தரலாய்த்து –

பெரும் பறை என்றி கோளாகில்
நாம் லங்கையை அழித்த போது
நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு அத்தை தரலாய்த்து –

சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் –
அற விஞ்சின பறையாவது
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்கக் குடமாடுகிற போது –
நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு –
அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்

கோல விளக்குக்கு
உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இறே

கொடிக்கு
கருளக்   கொடி ஒன்றுடையீர் (பெரிய திருமொழி -10-8 )என்று
நீங்கள் சொல்லும் பெரிய திருவடியை கொண்டு போரி கோளே

விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ் வூருக்கு வருகிற போது
நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் –

உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்

மார்கழி நீராடக் போம் போதைக்கு வேண்டுமவை இவை –
நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –
இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
உன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று-பாடுவதே பறை –
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக–பரிசு -விதம்
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்-மேல் காதுப்பூ
பாடகம்–பாத கடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ் வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப் பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை––உடுத்திக் களைந்த -சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–.

பெண்காள் –
நம்மை எளிவரும் இயல்வினன் என்று
அழகிதாக வறிந்து கொண்டி கோள்
எங்கனே –
அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு
உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன

கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி
கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்

கூடாரை வெல்லும்
பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு
ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும்
அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் –
வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 )
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது

பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் –
லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –

கூடாரை வெல்லும் சீர்
சேராக் குலை கொண்ட ஈரந்தலையான்-என்று
ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –

கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது –
(வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் )
ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற
துரியோதனனை வெல்ல வல்லனானான் –

நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும்
தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்

சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் —
சீலம் அழகுக்கு இலக்காகும் –
(ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் )

அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்
சீலமும்
அழகும் நின்று ஈரா நிற்கும்

ஈர்கின்ற கண்கள் -(திருவாய் -8-1 )
தாமரைக்கு கண்கள் கொண்டு ஈர்த்தியாலோ -(திருவாய் -10-3-1 )

அம்பு தோல் புரையே போம் –
அழகு உயிர்க் கொலை யாக்கும்

வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார்
ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று
இருப்பாருடைய அபிமானத்தை முறித்து
தன் வாசலிலே வரப் பண்ணின குணம் –
தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ

நலமுடையவன் என்னா-
தொழுது எழு -என்றார் இறே குணங்களுடைய எடுப்புக் கண்டு

வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் –
சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்

கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில்
கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ

கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-
ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால்
மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை –

காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இறே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -(திருவாய் -10-3-10 )
கன்று மேய்த்து இனிது உகந்த –
காலி மேய்க்க வல்லாய் -(திருவாய் -6-2 )
கன்று மேய்த்து விளையாட வல்லானை -(பெரிய திருமொழி -2-5 )

சாமான்ய ரக்ஷணமும் –
விசேஷ ரக்ஷணமும் –

தன் வாயாலே பறித்து மேய்வாருடைய -(பசு-உபாயாந்தர பரர் )ரக்ஷணமும் –
தான் பறித்துக் கொடுப்பாருடைய (கன்று -பிரபன்னர் )ரக்ஷணமும்

கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான
நீர்மையை யுடையவன் –

உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு –
அநந்தரத்திலே இவர்கள் கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம்
சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –

உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –
வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்

உன்னைப் பாடி என்னாதே
உன் தன்னைப் பாடி என்கிறது
அத் தலை இத் தலை யாவதே –
உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே

கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது –
கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி
பெண்கள் புணர்ப்பை குழலிலே இட்டுப் பாடி –
எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே
எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே (நாச்சியார் -8-3 )
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே

பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே
ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –
ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே
தங்களுக்கு ப்ராப்யம் இறே

(பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம்
இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி )

யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு
பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்

பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது –
எங்களுடைய அபிமதமும் பெற வேணும்

யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே –
ஆத்வாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி
இட்டு
காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இறே
இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது

அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் –
இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே

அவளுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-
இவனுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்

அவனுடைய வியாபாரம் வைதம் –
இது ராக பிராப்தம் –
ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
அவ் விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே

வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர
யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்

நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக
ஒருவன் கொடுத்த படியே –
சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –
பாரோர் புகழ (1 )என்னும் படியே தலைக் கட்ட வேணும் —

கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க –
கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி
இவ் விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் –
துரியோதனனுக்கு கெடுவாய் –
அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இறே –

சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும்
அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது –
ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே
உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இறே –

இப்படி தன்னை ஆஸ்ரயித்தாரை நாடு புகழும் படி இறே வாழ்விப்பது –
வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ (திருவாய் -3-3-11 )-என்கிறபடியே –

நாடு புகழ என்று
யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –
புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இறே லோகம் இகழ்வது –
சர்வ ஸமாஸ்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இறே

நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே –
படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் –
நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் –
அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –

நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள –
திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க –
பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன
திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து
நன்றாக ஒப்பிக்கை யாவது –

இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இறே –
அப் பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –

சூடகமே
அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று
தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே –
இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது –
அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் –
வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –
அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

வேய் இரும் தடம் தோளினார் (திருவாய் – 6-2 )-என்று
சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
வேய் மரு தோளிணை (திருவாய்-10-3-1 )-மெலியும் காலத்தில் இறே வளை பொறாது ஒழிவது –
இப்போது அணைக்கிற காலம் இறே

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த
சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று
அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

தோடே
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே

செவிப் பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்

பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —
திருக்கையால் தாள் பற்ற –

கையைக்
காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

என்றனைய பல் கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே –
பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் –
நீ அறியுமவை எல்லாம் என்கிறார்கள்-
பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இறே அவன் தனக்கு உட்பட –

யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று –
பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –

இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் —
அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்

யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –(நாச்சியார் 4-11 )
அணி இழை யாய்ச்சியார் (திருவாய் 9-10-11 )-என்கிற இரண்டும் பெற வேணும் –

ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -(திருவாய் 8-9 )
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுங்கும் (பெரியாழ்வார் -3-9 )-என்றால்
பின்னை கூறை யுடுக்கை இறே அடைவு –

நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம் –
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-(பெரியாழ்வார் -3-9 )-என்று
வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை

கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள்
இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ

ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று –
அவன் உடுத்த உடுத்தும் இறே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று
அவன் அழிக்கை இறே நன்றாக யுடுக்கை யாவது

நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு(நாச்சியார் -13-1) -என்கிறபடியே
அவனைப் போலே வெளுப்போடே வாங்கி உடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வேர்ப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை

அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இறே வரி
வளையால் குறைவிலமே–(திருவாய் -4-8 )
மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது

பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும்(திருவாய் 4-3 ) -என்னக் கடவது இறே

அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இறே

அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால்
அவையும் இல்லை –
அவனையும் கிடையாது –
அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –

பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் ஸமாப்பித்து –
இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –

நெய் பெருமையாலும்
பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே
பாலில் யாக்கி
நெய்யை நிரம்ப விட்டு
நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை

முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்தைகளாய் இருக்கிறவர்களுக்கு
உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய

கூடி இருந்து
பசி கெட யுண்கிறார்கள் அன்றே –
எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இறே உத்தேச்யம் –

கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி –
எனை நாள் வந்து கூடுவன்-(திருவாய் -10-10 )என்ற இழவும் தீர்ந்த படி

இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம்
எல்லாம் தீர இருந்து –

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து –

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –
காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –

ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –

விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு
காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –(பெரியாழ்வார் -4-4 )
ஆண்மின்கள் வானகம்-(திருவாய்-10-9 )என்கிற மங்களா சாசனம் –
நிறை குட விளக்கம் –
கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய்
விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும்
திவ்ய அப்சரஸ் ஸூக்கள் பல ஹஸ்தைகளுமாய்
வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூரிகளோடே சேர்ந்து இருந்து
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே நிரதிசய போக்யமாய் –

உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை –
பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை
ஒரு முகத்தால் ஸூசிப்பிக்கிறார்கள் –

முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும்
இவ் வனுபவமும் சித்திக்கிறது –
கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இறே -(திருவாய் -10-9-8 )

கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு
நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று
சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது

திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூரி வர்க்கம்
திவ்ய மஹிஷிகள்
முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
முமுஷுவாய் முக்தனாம் என்கிற ஸ்ருதி யர்த்தம் ஸூசிதமாகிறது-

கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு
ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் –

ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் –

நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே
நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
குளியாது இருந்தமை அவர்களும் அறிகையால் இறே –
உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள் (20)

இவர்களோடு கூடின பின்பு
விசோதித ஜடராய் (ஜடை முடி ஷவரம் பண்ணி)
ஸ்நாநம் பண்ணி
சித்ரமால்யா நுலேபநராய்
மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே

இவனும்
இவர்களோடு கூடிக் குளித்து
ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே
கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்

கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

நன்றாகக் கூடி இருந்து குளிர்ந்து
இனி விஸ் லேக்ஷம் கலசாமல் கூடி

நல்ல நாளிலே வருகிற கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –

(நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே
நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading