ஸ்ரீ திருப்பாவை —-அன்று இவ் வுலகம் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

ஒரு நாள் அர்ஜுனன் உபய சேனைக்கும் நடுவே தேரை நிறுத்து என்று சொல்ல –
அப்படியே செய்தவன் –
இத்தனை பெண்களும் திரண்டு
இங்கனே போந்து அருள் என்றால்
அது செய்யாது இருக்க மாட்டான் இறே –

தாங்கள் அபேக்ஷித்தபடியே
திருப் பள்ளி அறையின் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்து அளவும் நடந்து போரத் தொடங்கினான் –

பிராட்டி கட்டு வாசல் அளவும் தொடர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் போலே
நப்பின்னைப் பிராட்டியும் தொடர்ந்து ஏத்தும் இறே –

அவனைக் காணும் அளவும் இறே
இங்கனே போர வேணும்
எழுந்து அருளி இருக்க வேணும் –
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும்
அது வேணும்
இது வேணும் என்று பல தேவைகளை சொல்லி அலைக்கலாவது

தண்ட காரண்யத்தில் ரிஷிகள் கண்டவாறே
ராக்ஷஸ பரிபவங்களை மறந்து
மங்களா சாசனத்தில் மண்டினார்கள் இறே

அப்படியே
இவர்களும் பெரியாழ்வார் படியாய் யாய்த்து –

இங்கனே போந்து அருளுகிற போது
பின்னே நின்று
நடந்த நடை அழகைக் கண்டு
மாறி இட்ட அடி தோறும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
வந்து திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த
அனந்தரம்

பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
இங்குத்தை மங்களங்களை ஆஸாஸித்து மங்களா சாசனம் பரம பிரயோஜனமாக
வந்தவர்கள் அன்றோ நாங்கள் -என்கிறார்கள் –

இங்கனே போந்து அருளி என்று தாங்கள் சொல்ல
தங்களுக்காக நப்பின்னை பிராட்டியோடே சீரிய சிங்காசனத்தில்
இருந்த அளவிலே

ஆல வட்டக் காற்றிலே அத்தவாளந்தலை மேல் பறக்க
பாத பீடத்தில் நீட்டி அருளின திருவடிகளையும்
மடித்து இட்ட திருவடிகளையும் கண்டு
திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
தங்கள் கர ஸ்பர்சம் பொறாதே கன்றும்படியான மார்த்தவத்தைக் கண்டு
இப்படி ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு இங்கனே நடக்கச் சொல்லுவோமே

திருவடிகளை வாங்கி இடுகிற போது
திரு யுலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருந்தது
அன்று அளக்கப் பண்ணினவர்களோடு ஓத்தோம் இறே இன்று நடக்கப் பண்ணின நாங்களும்

நடந்த கால்கள் நொந்தவோ (திருச்சந்த )-என்று பிடித்து
நாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு உலாவி அருளின படி
திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தோ பாதி போருமே என்று
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-என்கிறார்கள் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹா பலியால் நலிவு பட்ட)
அன்று அக் காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
சக்ரத்தாழ்வாராகவே கொள்ளலாம் -அனைத்தும் திரு வாழி அம்சமே
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

அன்று இவ்வுலகம் அளந்தாய் –இன்று யாம் வந்தோம்
அன்றும் இன்றும் காணும் இவர்களுக்கு வயிறு எரிச்சல் –
இவர்களுக்கு இரண்டு காலமும் ஒரே காலமாய் தோற்றுகையாலே-
அன்று -இன்று -என்கிறார்கள்

அன்று
ஆர் நோன்பு நோற்கத் தான் இச் செயல் செய்தது –
நோற்றுக் கூடுவாரையும் விலக்குமவர்கள் தலையிலே இறே திருவடிகளை வைக்கிறது

அன்று
தன்னதான விபூதியை அஸூரனான மஹாபலி நெருக்கி தன்னைத் தாக்க
(இந்திரன்)நோவு பட்ட அன்று
அவன் அபிமானத்தில் நின்றும் மீட்டு
தன் கால் கீழ் இட்டுக் கொண்ட அன்று –

எங்கள் பந்துக்களும் எங்களை உன்னோடே சேர்க்க ஒட்டாதே –
நாங்களும் ஆர்த்தைகளாய்
அபிமானம் கால் கட்டி வாராது இருக்க
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பஃனமாக்கி உன் கால் கீழ் இட்டு கொண்டு
உன் வடிவு அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளி தானம் பண்ணின அன்று

இவ் வுலகம்
திருவடிகளின் மார்த்வத்தையும்
காடு மோடையுமான பூமியினுடைய காடின்யத்தையும்
இங்கு வர்த்திக்கிறவர்களுடைய வன்மையையும் அனுசந்தித்து இவ்வுலகம் என்கிறார்கள் –

சீல வயோ வ்ருத்தாதிகளால் துல்யர் என்று கவி பாட்டுண்டார் கடக்க நிற்க வேண்டும் படி
வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும்
எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே

அளந்தாய்
பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே
யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே

அடி போற்றி
அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் –
சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் –
அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்

அடி போற்றி
திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –
போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள்
அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்

அடி போற்றி
மன்னன் தேவிமார் கூத்து கண்டு மகிழ்ந்து போனார்கள் -(பெரியாழ்வார் -2-5-9-)
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் அன்றோ
(மாயக்கூத்து என்று மகிழ்ந்து போனார்கள் 8-5 )
செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
திரு வுலகு அளந்து அருளின இடத்தில் சிவந்த தன் கை அனைத்துமார
சென்னி மேல் ஏறக் கழுவினான் என்று ப்ரஹ்ம ருத்ராதிகள்
அனுவர்த்திக்கும் படி ஐஸ்வர்யமான செயல்களை செய்த அவதாரம் ஆகையாலும்

அங்கே நின்று (திருவாய் -5-10-9 )-
(ஒரு கால் நிற்ப -திருநெடும் தாண்டகம் )என்னும் படி
நின்று இரண்டாம் அடியிலே தாவடி இட்டு
வருத்தம் அற செய்ததாகையாலும்
அத்தனை வயிறு எரிதல் இல்லை இறே –

ராமாவதாரத்தில் தேவத்வம் கலசாத படி
ப்ரஹ்ம ருத்ரர்கள் நாராயணன் என்றாலும் மனிச்சுக்கு இசையும் இடம் ஆகையாலும் –
(கீழே தேவனாகவே அவதாரம் )
கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்
ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்

சென்று
இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற -என்று ஒரு செல்லுகை உண்டு இறே –
அவ்விடம் அழகால் நெஞ்சு உருக்கலாம் இறே
அழகுக்கு இலக்காகாத தீ மனத்து அரக்கரை
அம்புக்கு இலக்காக்கின பராபிபவன சாமர்த்யத்துக்கு பரிகிறார்கள்

சென்று அங்குத்
அங்கே சென்று –
நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –
கொடிய காட்டிலே
பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள்
எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )

சென்று அங்கு
புலி கிடந்த தூற்றிலே சென்று தட்டி எழுப்பிக் கொல்லுவாரைப் போலே
லங்கைக்கு அரணாக வைத்த கர தூஷண கபந்த விரரதாதிகள்
ஜல துர்க்கமாக வைத்த கடல் காடுகள் மலைகள் தொடக்கமானவை எல்லாம்
நடவா நிற்கச் செய்தே
மணல் கொட்டகம் போலே
கால் கீழே அழித்துக் கொண்டு நடந்த படியை நினைத்து –
அங்கு சென்று -என்கிறார்கள்

தென்னிலங்கை செற்றாய்
எல்லாவற்றிலும் ஊர் அரண் விஞ்சின படியால்
இலங்கை செற்றவனே-என்கிறது –

திறல்
அரண்கள் ஒன்றும் வேண்டாத படி எத்தனையேனும் தரமுடைய தேவ ஜாதி
தம்தாமுடைய வருத்தங்களாலே சாதித்த அஸ்திரங்களை எல்லாம்
ஒரு மிடறாக நின்று ஒருக்காலே ஓர் இலக்காக விட்டால்
அவர்களுக்கு தப்ப ஒண்ணாது என்று விட
நாலடி பிற்காலித்து விடாதே
நெஞ்சு கலங்காதே
நிலையும் பேராதே
மஹிஷிகளும் தானும் கூட ஜலக்ரீடை பண்ணும் போது
அவர்கள் பூவை இட்டு தன் மேல் எறிந்தால் பிறக்கும் விகாரம் பிறவாதபடி இருக்குமவன்
நான் கடவேன் என்று நோக்குமவனூராய்-
அழகிதான அரணை யுடைத்தாய் குளவிக் கூடு கொண்டால் போலே
ஹிம்ஸிகர் அடையத் திரண்ட நிலமாய் இருந்த லங்கையை

அரண் சிதற அடை மதிள் படுத்தி
சதுரங்க பலத்தையும் துவள வென்று –
சேனைத் தொகையைச் சாடி (பெரிய திருமொழி -6-5)
ப்ராத்ரு புத்ராதிகளை தலை அழித்து
தான் சிலரை ஆஸ்ரயித்து கதிர் பெறுக்கி (பொருக்கி) கூடினவை அல்லாத அம்புகளைக் கொண்டு
இடி ஏறு உண்டிடச் சுற்றும் வேமா போலே
பையலைப் பக்க வேர் அறுத்து
நெஞ்சு அழிந்து
நிலை தள்ளும்படி பண்ணி
சத்தை அழிந்து
பட்டு விழும் போதும்
வில் பிடித்த பிடி நெகிழாதே விழக் கடவ அவனை

எதிரி வீரம் அறியாதே கோழையாய்ப பட்டான் என்று தரக் கேடான் ஆகாதே
வீரன் என்று விருது பிடிக்கும் படி வில்லைப் பொகடுவித்து
(சசால சாபஞ்ச விமோச வீர -வில்லை க்கைவிட்ட வீரன் )
ஸ்த்ரீ பிராயனாக்கிக் கொன்று வென்றி கொண்ட
பராபி பவன சாமர்த்தியத்தை எல்லாம் நினைத்து –
திறல் -என்கிறார்கள் –

திறல் போற்றி
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே -என்று
இம் மிடுக்கு தங்கள் துக்க நிவ்ருத்திக்கு உடல் இன்றிக்கே
அரணுக்கு அரண் இடுவாரைப் போலே திறலுக்குப் பரிகிறார்கள் –
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு-என்று பரியுமது ஜென்ம சித்தம் இறே –

உலகு அளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோபாதி
காடுறைந்த பொன்னடிக்கு காப்பிடத் தேடுகிறவர்களுக்கு
அஞ்சாமைக்கு திறலைக் காட்டினான்

அத் திறல் தனக்கு
அஞ்சத் தொடங்கினார்கள் –
தோளில் அழகுக்கு காப்பிடப் புக
மல்லடர்த்த திண்மையைக் காட்ட
அது தனக்கு வயிறு எரிந்தால் போலே
(மல்லாண்ட திண் தோள் காட்ட அதுக்கும் பல்லாண்டு பாடினார் அன்றோ )

திறல் போற்றி
கல்லாதவர் இலங்கை கட்டழித்த–(நான்முகன் )
தேவனே தேவன் ஆவான் (திருமாலை )-என்று
மண்டோதரி உள்ளிட்டாரைப் போலே தத்வ நிர்ணயம் பண்ணுதல் –

தன் வில் அங்கை வைத்தான் -(முதல் -59)
என் தன் தனிச் சரண் -3-10-
கூர் அம்பன் அல்லால் –(நான்முகன் )
மற்றிலேன் தஞ்சமாகவே (2-6 )-என்று ரக்ஷகத்வ புத்தி நடத்தல் –

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு –(11-3)
என்னையும் உளள் என்மின்களே– -என்று
போக்யதா புத்தி நடையாடி இழவு சொல்லி விடுதல் செய்யாதே
தங்கள் ரக்ஷகராக பரிவார்கள்

சக்கரவர்த்தி திருமகன் தசரதனிலும் விஞ்சும் படி
பால்ய அவஸ்தையில் ஆயுத சிரமம் பண்ணி –
விச்வாமித்திராதிகளோடே சஸ்த்ர அஸ்திர மந்த்ரங்கள் சிஷித்து
சமைய வளர்ந்த பின்பு செய்த செயல் இறே
லங்கையை அழியச் செய்த செயல் –

பிறந்த ஏழு திங்களில் என்கிறபடியே
பிறந்து
மறு பத்துக் கழிந்த அளவிலே
எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உடலான ஞானமும் இன்றிக்கே
ஆயுதமும் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்திலே செய்த செயல் இறே
சகட பங்கம் –

ராவணன் நேரே சத்ருவாய் தோற்றான் இறே
அப்படி அன்றிக்கே
பிரசன்ன (மறைந்த) சத்ரு வாகையாலே –
கள்ளச் சகடம் என்றத்தை
அறிந்து முற்பட்ட படிக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள்

பொன்றச் சகடம் உதைத்தாய்
சகடம் பொன்ற –
முடிய –
சூர்ப்பணகையும் மாரீசனையும் போலே குற்றுயிரோடே விட்ட பின்பு
அனர்த்தம் விளையும் படி இளிம்பு படாதே
தோற்ற அரவிலே சகடாசூரனை முடித்து விட்ட படி

உதைத்தாய்-
முலை வரவு தாழ்த்து தொட்டிலை உதைத்த திருவடிகளுக்கு
இலக்காய் முடியும் படி பண்ணின அனாயாசம்

உதைத்தாய்-
பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே
கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு –
தழும்பு இருந்த -இத்யாதி-

தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.

புகழ்-
பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை
கால் கூறாக்கி விட்ட படி –
திருக் காலாண்ட பெருமானே -என்கிறபடியே

புகழ் போற்றி-
நின் சிறுச் சேவகமும் (திருவாய் 5-10 )-என்று
காரை மூரிருகிக் (மூரி திருகினக்) கன்னிப் போருக்கு காப்பிட வேணும் இறே –

அருளின் பெரு நசையால் -என்று ஆண் பிள்ளை என்று ஆசைப்படுவர்
என்னை நிறை கொண்டான் (திருவாய் 5-3 )-என்று அடக்கம் கெட்டு மடல் எடுக்கத் தேடுவர் –
உறக்கில் நிமிர்த்தீர் (பெரிய திருமொழி 10-8 )-என்று ஊடுதலாய்ப் போனார்கள் பெண்கள்
இவர்கள் செயலுக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள் –

பசலைத் தனத்தில் செய்த செயல் என்று விடலாம் அது –
பருவம் நிரம்பி செய்த செயலோ தான்
கணக்கு வழக்கு பட்டு இருக்கிறது என்று அதுக்கு வயிறு எரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் –
சகடாசூர நிராசனம் பண்ணின வயிறு எரிதல் அல்ல கிடாய் –
கன்றாய் நின்ற அசுரனை கொன்ற தீம்பு பூமி எல்லாம்
பிரகாசிக்கும் படி செய்தாய் என்று வயிறு எறியும் செயல் இறே

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க)
மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க)
வாசியற
பழி கேடன் என்று சொல்லும் படி இறே

செய்த தீம்பும் (பெரிய திருமொழி 8-6 )-சகடாசூர பங்கம் பண்ணிச் செய்த தீம்பு –
திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்

என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்கள் -என்று
தாயார் உட்பட வயிறு பிடிக்குமது இறே

குணில் -எறி கருவி
குணிலா எறிந்தாய்-
எதிரிகளை இட்டு எதிரிகளை முடித்த படி

கழல் போற்றி
விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக்
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்

கழல் போற்றி
கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் –
காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல்
கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

அடி போற்றி -கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள் –

விரோதி நிரசனம் பண்ணித் தன்னை நோக்குகைக்கு அடைவு கெட்டு இருந்தால்
அனுகூலர் விரோதிகளாக ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுமதோ சால அடைவுண்டாய் இருக்கிறது
என்று அதுக்குப் பரிகிறார்கள்
(விஷ்ணு பக்தி உள்ளார் தேவர் -அனுகூலர் )

குன்று குடையா வெடுத்தாய்
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று
மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கீழ் எல்லாம் இந்திரனுக்கு சத்ருவானவர்கள் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிந்தார்கள்-
இப்போது அவன் தான் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிகிறார்கள் –

அசூரர்களோடு தேவர்களோடு வாசி இல்லை இறே
பகவத் சேஷமான வஸ்துவை தங்களதாக நினைத்து இருக்கைக்கு –

சர்வ யஞ்ஞ போக்தாவாக தன்னை அருளிச் செய்தானே
(சர்வ யஞ்ஞ போக்தா ச பிரபுரேவ ச கீதை )
தனக்கு இட்ட சோற்றை அமுது செய்தால் ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி பண்டு புஜித்த இடம் உள்பட
ஆத்ம அபஹாரத்தோடு ஒவ்வா நிற்க
ததீய புத்தி பண்ணாதே ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி நலியத் தேட
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரித்த படி

குணம்
அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ –
அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் –

பெரும் பசியால் வந்த கோபத்தால் வர்ஷித்தான் ஆகில்
கை நொந்தவாறே விடுகிறான் –

பெரும் பசியாலே இவனை நலிந்தால்
நாமே யுண்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை அறுக்கவோ

அவன் கை சலிக்கும் தனையும் கடக்கிட்டுக் காப்போம் என்று
அவனை தலை அழியாதே
மலையை எடுத்து ரஷித்தது ஆன்ரு சம்சயத்தாலே –
அந்த குணத்துக்குப் போற்றி –

(கடக்கிட்டுக் காப்போம்-கையாலே குடை பிடித்து
நமது கை கொண்டு கார்யம் செய்யும் தனையும் ரக்ஷிக்காமல்
அஞ்சலி செய்யவே ரக்ஷிப்பானே )

பாயும் பனி மறுத்த பண்பாளா –
சீர் கற்பன் வைகல் -என்று
அறிவுடையார் நாள் தோறும் கற்பதொரு குணம் இறே
(பண்பு சீர் அங்கு குணம் இங்கு )

குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ வாடிற்றோ(3-5 ) என்று பார்த்துப்
பரியத் தேட
அவ்வளவு போக ஒட்டிற்று இல்லை மழை எடுத்த குணம் தான்

(அடி போற்றி கழல் போற்றி அங்கு பரிந்தது போல்
விரல் போற்றி இல்லையே –
குணம் தடுத்து பாடப் பண்ணிற்று )

குணம் போற்றி
என் தனக்கொரு துணையாளான் ஆகாயே-என்று
நொய்ய தொரு மலையைப் பொகடுவித்து (தூக்காமல் இருந்தாய் ஆகில் )
கனவிது இரண்டு மலையைக் கையிலே கொடாதே (பொன் முலைகள் பொன் அரும்ப )
மலையை எடுத்த ஷமா குணத்துக்குக் காப்பிடுகிறார்கள் –

(வாளாய கண் பணிப்ப–பொன் முலைகள் பொன் அரும்ப –நின் நினைந்து நைவேற்கு –
ஓ மண் அளந்த எடுத்த தாளாளா -வரை எடுத்த தோளாளா
அளந்து எடுத்து காட்ட வேண்டா -தாள் தோள் காற்றா அமையும் தோடு இட்ட காது எடுத்தாலும் தெரியுமே
என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாதே
துணையாளன் ஆனமை காட்டிய குணம் )

வர்ஷம் விட்டவாறே மலையைப் பொகட்டு வேலை பிடிக்கும் அத்தனை இறே –
கிருஷ்ணன் பசுக்களின் பின்னே திரியா நின்றால்
ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்தி எடுத்துப் போக்கும் அத்தனை இறே –
அதுக்கு எடுத்த வேலுக்கு பரிகிறார்கள்

எல்லா குணங்களையும் ஒரு வியக்தியில் சொன்னால் கண் ஏறாம் என்று
வேலிலே அசலிட்டுச் சொல்கிறார்கள் வெற்றியை –

வென்று பகை கெடுக்கும்
சத்ருக்களை வென்று ஓட்டக் கடவதாய் இருக்கும்

நின் கையில் வேல் போற்றி
சக்கரவர்த்தியும் வில் பிடித்து
பரிகரமும் வில் பிடித்து
பிள்ளைகளும் வில் பிடித்தால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
இடையரும்
பிள்ளைகளும் வேல் பிடித்தாய்த்து திரிவது –
கூர் வேல் கொடும் தொழிலன் –
வேலைப் பிடித்து என்னைமார்கள் (நாச்சியார் )

நின் கையில் வேல்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அவ் வழகுக்கு மேலே வேலைப் பிடித்த அழகு

கையில் வேல்
எதிரிகள் மேல் பட வேண்டா —
பிடித்த பிடியில் யுகவாதாரை முடிக்கும்

நின் கையில் வேல்
தன்னை உணராதே அசத்திய ப்ரதிஞ்ஞனாய் சீறின போது காணும்
ஜன்மாந்தரம் மேல் இட்டு திரு வாழியை எடுப்பது –

(வேல் எப்போதும் கையில் உண்டு –
திருவாழி எப்போதாவாது எடுப்பார் -இந்த அவதாரத்தில் )

வேல் போற்றி
ஈஸ்வரனைக் காணில் இறே ஆழியும் பல்லாண்டு என்பது
பெருமாளைக் காணில் இறே சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை பல்லாண்டு என்பது

நின் கையில் வேல் போற்றி
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலாக வென்றவன் கையில் வேல் இறே -(திரு நெடும் தாண்டகம் -7)
ஆகையால் பரிகிறார்கள்

என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று
இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –

என்று என்று
பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –

அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே –

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –

உன் சேவகமே
வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது –
பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது

என்று என்றும் உன் சேவகமே
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே

உன் சேவகமே ஏத்திப்
வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று
அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் –
இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்

சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் –
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று
தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே

இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-

இவர்கள் ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம்
ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –

அவன் தான் பிறந்த போதே மூன்று பிறவி யுண்டே –
உங்களுக்கு பிறக்கிறது என் என்றான்
வில் பிடித்தாரில் சக்கரவர்த்தி பிள்ளை நான் என்றான் -(கீதை -10 )
ஆகையால் அவதாராந்தரம் என்று இருப்பார் ஒருவரும் இல்லை

ஏத்திப் பறை கொள்வான்
எங்கள் பலம் முன்னாக –(ஏத்துதலே எங்கள் பலம் )
நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-
பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –
உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்

இன்று
இசைவு பிறந்த இன்று –
நென்னேற்று வந்தோமோ –
நாளைக்கு இங்கே நிற்க ஓட்டுவார்களோ –

யாம்
பெரு மிடுக்கரான வ்ருத்தைகள் எல்லாம் கிடந்து உறங்க
குளிர் பொறாத பாலைகளான நாங்கள்

வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க
விரஹ துர்பலயத்தாலே ஆற்றாமை இழுக்க வந்தோம்

யாம் வந்தோம்
நாங்களும் எங்களை அறியாமல் செய்தோம் –
நீயும் உன்னை அறியாமல் செய்வது உண்டாய்த்து இறே

இரங்கேலோ ரெம்பாவாய்
எல்லா வியசனங்களையும் பட்டாலும் கீழ் பிரவர்தித்தித்தது எல்லாம் பேற்றுக்கு உடல் அன்று –
அவன் இரக்கமே கார்ய கரமாவது
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்கி மங்களா சாசனம் பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்

வந்தோம் இரங்கு
இரங்காமைக்கு வேண்டுவது செய்தோமே யாகிலும் இரங்க வேணும் –
இத் தலையில் பர பக்தியும் பேற்றுக்கு உடல் அன்று
அவனுடைய இரக்கமே அவ்யவஹித உபாயம் என்று இருக்கிறார்கள் –

அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம்
நீ எங்களைத் தேடி எல்லா உலகும் தட வந்தாய் -அன்று –
இன்று உன்னைத் தேடி நாங்கள் வந்தோம் –

யாம் வந்தோம் –
வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து நீ நிற்க நாங்கள் பெற்றோம் -(திருவாய் 8-5 )

அளந்தாய் –
தென்னிலங்கை செற்றாய் –
சகடம் உதைத்தாய்-
யாம் வந்தோம்

மண் அளந்த கண் பெரிய செவ்வாய் என் கார் ஏறு வாரானால் -(திருவாய் -5-4 )
காகுத்தன் வாரானால் -கண்ணனும் வாரானால் -என்று
இருந்த உன்னுடைய பிரதான மஹிஷிகளில் (பராங்குச நாயகி )
எங்களுக்கு உண்டான வாசி பாராய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் இரங்கு
உவந்த உள்ளத்தனாய் எங்களோடு அணைந்திலை யாகிலும்
சத்தா ப்ரயுக்தமான கிருபையை யாகிலும் பண்ணு

அளந்தாய் -இரங்கு
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே என்று அன்றோ நாங்கள் இருப்பது

தென்னிலங்கை செற்றாய் –இரங்கு
சிறிது தாழ்க்கில் இரக்கம் எழீர்-என்று உன்னை வசை பாடுவார்கள் கிடாய் என்று
தாய்கள் சொல்லும் அளவேயோ (ஆழி எழ தாயார் பதிகம் )
இரக்கம் ஒன்றும் இலாதாய் (நாச்சியார் )-என்று நாங்கள் தான் சொல்லோமோ

சகடமுதைத்தாய் -இரங்கு
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் அன்றோ நாங்கள் வந்தது -(திருவாய் 2-1 )

குன்று குடையாய் எடுத்தாய் –இரங்கு
குன்று குடையாக ஆ காத்த கோவலனார் ஒன்றும் இரங்கார் என்னாம் இரங்கு -(பெரிய திருவந்தாதி )

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading