திரு நீர் மலையிலே சென்று அனுபவிக்கிறார் —
அன்றாயர் குலக்கொடியோடு அணி மா மலர் மங்கை யொடன்பாளாவி அவுணர்க்கு
என்றானுமிரக்க மிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும் பொழில் சூழ்
நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-1-
ஆயர் குலக் கோடி -ஸ்ரீ நப்பின்னை பிராட்டி -கும்பன் திருக் குமாரி
அணி மா மலர் மங்கை -ஸ்ரீ மகா லஷ்மி -அவள் அம்சமான ஸ்ரீ ருக்மிணி பிராட்டி
இருவரையும் லபிக்க ஆசூர பிரப்ருதிகளை பங்கப் படுத்திப் போந்தான்
திரு நறையூரிலே நின்ற திரு கோலமும் –
திருவாலியிலே வீற்று இருந்த திருக் கோலமும் –
திருக் குடந்தையில் பள்ளி கொண்ட திருக் கோலமும் –
திருக் கோவலூரிலே உலகளக்க திருவடி நீட்டி அருளிய திருக் கோலமும்
இங்கே கொண்டு அருளி சேவை சாதித்து அருளுகிறான் –
மா மலை யாவது -மா மலையான -என்றபடி
நீர் அரண் போலே சூழப் பெற்ற மலையானது பற்றி திரு நீர் மலை –
——————————————————–
காண்டா வனமென்பதோர் காடு அமரர்க்கரையனது கண்டவன் நிற்க முனே
மூண்டாரழலுண்ண முநிந்ததுவும் அதுவன்றியும் முன்னுலகம் பொறை தீர்த்து
ஆண்டான் அவுணனவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய்
நீண்டான் குறளாகி நிமிர்ந்தவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-2-
காண்டா வவனம் -எனபது காண்டாவனம் -என்று கிடக்கிறது
மகா பாரதம் ஆதி பர்வம் -அக்னிக்கு இரையாக கொடுத்த வரலாறு
மிடைந்த நால்வகை மகீருகங்களு நெடு வேற் பிணங்களுந்தின்றி
அடைந்த தானவரக்கர் பேருரகருக் கால யங்களுமாகிக்
குடைந்து சோரி கொள் வாளுகிரரி முதற்கொடு விலங்கினமிக்குக்
கடைந்த கூர் எயிற்றால் தக்ககனும் வாழ் கானனமது கண்டீர் -வில்லிபுத்தூர் ஆழ்வார் –
காண்டவம் -காண்டவதனச் சுருக்கம்
தேவேந்தரன் தடுக்க முயன்றும் முடியாமை பற்ற -கண்டு அவன் நிற்க முனே -என்கிறார்
பூமிப் பாரங்களை தொலைத்து அருளினவன் நித்ய வாஸம் செய்யும் ஸ்தலம்-
—————————————
அல மன்னு மடல் சுரி சங்க மெடுத்து அடலாழியி னாலணி யாருருவில்
புல மன்னு வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முனாளடுவாளமரில்
பல மன்னர் படச் சுடராழி யினைப் பகலோன் மறையப் பணி கொண்டணிசேர்
நிலா மன்னனுமாயுலகாண்டவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-3-
பத்தி மூன்றாம் நாள் போரில் -ஜெயத்ரனை கொல்லத் துணிந்த அர்ஜுனனுக்காக திரு வாழியைக் கொண்டு
சூர்யனனை மறைத்து அருளினவன்
ஒளி பள பள த்து கண்களை இருளைப் பண்ணுமே
இவ் வுலகுக்கு எல்லாம் பிரபுவாய் இருந்து ரஷித்து அருளுபவன் நித்ய வாஸம் செய்யும் ஸ்தலம்
ஹலாயுதன் -பரசுராமன் -திரு ஆயுதம் -கலப்பை –
புலம் மன்னு வடம் -புனை கொங்கையினாள் –இந்த்ரியங்கள் வேறு எங்கும் போக ஒட்டாத முத்து வடம் தரித்த மண் மடந்தை என்றபடி
ஆளடுவாளமர் -எண்ணிறந்த ஆண் பிள்ளைகள் முடிந்த பாரத யுத்தம்-
——————————————————
தாங்காத தோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்தவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கெரி மூழ்க விளைத்தது வன்றியும் வென்றி கொள் வாளமரில்
பாங்காக முனைவரொடு அன்பளவிப் பதிற்றைந்தி ரட்டிப்படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்குகிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-4-
நிறை காத்தவன் -த்ரௌபதியின் கலகத்தை ரஷித்து அருளினவன்
பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் –
அர்ஜூனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக –
————————————————————–
மாலுங்கடலார மலைக் குவடிட்டணை கட்டி வரம்புருவ மதி சேர்
கோல மதிளாய விலங்கை கெடப் படை தொட்டொரு கால மரி லதிர
காலமிது வென்றயன் வாளி யினால் கதிர் நீண்முடி பத்தும் அறுத்தமரும்
நீல முகில் வண்ணம் எமக்கிறைவர்க்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-5-
அயன் வாளி -பிரஹ்மாஸ்திரம்
துஷ்ட நிக்ரஹமும் -சிஷ்ட பரிபாலனமும் செய்து அருளும் ஸ்ரீ ராம பிரானே இங்கே எழுந்து அருளி உள்ளான்
———————————————————–
பாராருலகும் பனி மால் வரையும் கடலும் சுடருமிவை யுண்டும் எனக்
காரா தென் நின்றவன் எம்பெருமான் அலை நீருலகுக்கரசாகிய அப்
பேரானை முனிந்த முனிக் கரையன் பிறரில்லை நுனக்கெனும் எல்லையினான்
நீரார் பேரான் நெடு மாலவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே –2-4-6-
பாராருலகும் ஆர் பாருலகும் -விசாலமான பூ லோகமும்
நீர் ஆர் பேரான் -நீர் வண்ணன் -என்னும் திரு நாமத்தை யுடையவன் –
நீர் வண்ணன் நீர் மலைக்கே போவேன் -திரு நெடும் தாண்டகம் –
உலகமுண்ட பெரு வாயனே இங்கே நித்ய வாஸம் செய்து அருளுகிறான்
ஒத்தார் மிக்கார் இலையாய பரத்வனும் இவனே
ஸ்வரூப ஆவேச அவதாரம் -பல ராமன் -பரசு ராமன் -போல்வார்
சத்யா ஆவேச அவதாரம் -கார்த்த வீர்யார்ஜூனன் -அர்ஜூனன் -வியாசர் போல்வார்
உபாசனத்துக்கு உரியர் அல்லர் என்றாலும் விரோதி நிரசன உபகாரத்துக்குத் தோற்று –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி –பெரியாழ்வார் -5-4-6-என்றும்
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழு கால் கொன்ற தேவா -பெரிய திரு மொழி -5-3-1-
பேரானை -ஜாதிக வசனம் -ஷத்ரியன் -என்று -கார்த்த வீர்யார்ஜூனன் என்றுமாம்
பிறரில்லைநுனக்கு -பக்தர்கள் சொல்லும் சொல்லின் அநுகாரம் –
———————————————————-
புகரார் உருவாகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன்
நகராயின பாழ்பட நாமம் எறிந்தது வன்றியும் வென்றி கொள் வாள்அவுணன்
பகராத வனாயிர நாமம் அடிப்பணி யாதவனைப் பணியால் அமரில்
நிகராய வன்னெஞ்சு இடந்தானவனுக்கு இடம் மா மலையாவது நீர் மலையே-2-4-7-
பௌண்டரக வாசுதேவனை முடித்து -திரு ஆழியினால் தலை அறுத்து அருளி –
ஹிரண்யாஷனை முடித்து அருளியதும் என்பர்
நாமம் எறிந்து -பெயரும் கூட இல்லையாம்படி செய்து அருளி-
——————————-
பிச்சச்சிறு பீலி பிடித்துலகில் பிணந்தின் மடவாரவர் போல் அங்ஙனே
அச்சமிலர் நாணிலரா தன்மையால் அவர் செய்கை வெறுத் தணி மா மலர் தூய்
நச்சிந மனாரடையாமை நமக்கருள் செய்யென வுள் குழைந்தார்வமொடு
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யுமவற்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-8-
அந உசிதமாய் உள்ள ஜைனர்கள் செய்கைகளிலே ஜூகுப்சை கொண்டு
அந்தரங்க பக்தியுடன் தன்னை வந்து பணியும் பக்தர்களுக்கு அருள் செய்யும் பெருமான் உறைவிடம்
நித்யம் எனபது நிச்சம் என்று திரிந்து
நமக்கு நிச்சம் அருள் செய் -என்றும் –
நிச்சம் உள் குலைந்து நைவார்க்கு -என்றும் –
நிச்சம் அருள் செய்யுமவர்க்கு -என்றும் மூன்று விதமாக அன்வயிக்கலாம் –
அவைதிக மதங்களில் அபிமானத்தை விட்டு ஒழிந்து
வைதிக சம்ப்ரதாயத்தில் அன்பு பூண்டு
இருக்கும் அடியவருக்கு திருவருள் செய்பவன் –
—————————————————–
பேசுமளவன்றிது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்
நாசமது செய்திடுமா தன்மையால் அதுவே நமதுய்விடம் நாண் மலர் மேல்
வாச மணி வண்டறை பைம்புறவில் மனமைந்தொடு நைந்து உழல்வார் மதியில்
நீசரவர் சென்று அடையாதவனுக்கிடம் மா மலையாவது நீர் மலையே–2-4-9-
நமர் -அண்மை விளி
நாஸ்திகர்கள் செவியில் படக் கூடாதாகையாலே ஏகாந்தமாக அழைத்து
இது பேசும் அளவன்று -என்று வியக்கிறார் –
பணியுமவர்களின் தீ வினைகளை முடித்து -உஜ்ஜீவனம் அருளும்
விஷயாந்தரங்களில் மண்டி இருப்பார் அற்ப மனிதர்களே
நாண் மலர் மேல் -என்றும் நாண் மலர் தூய -என்றும் பாட பேதம்
நாண் மலர் தூய பணிவார் -என்று அந்வயம் –
———————————————————-
நெடுமாலவன் மேவிய நீர் மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களியானை வல்லான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை வல்லார்க்கு உடனே
விடுமால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி யிலங்கொலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக்குடை மன்னவராய் அடி கூடுவரே-2-4-10-
ராஜாதி ராஜரான தன்மைக்கு ஏற்ப மத களிற்றை நடத்தி போர் செய்ய வல்ல திரு மங்கை மன்னன்
பாசுரங்களை ஓத வல்லவர் பாபங்கள் உடனே அகன்று ஒழியும்
அத்தால் பரம பத பிராப்தி கிட்டும்
ஸ்வர்க்கம் போன்ற பலனில் அபேஷை யானால் அத்தை பெறுவார்
இங்கேயே இருந்து வெண் கொற்றக் குடைக் கீழ் இருந்து அரசாண்டு பின்பு பரம பதம் செல்ல விரும்புவார்க்கும் அவை கிட்டும்
ஐஹிகம் ஆமுஷ்மிகம் -இரு வகைப் பலன்களையும் எளிதில் சாதித்து தர வல்லது என்றது ஆயிற்று –
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply