பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-6-வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்–

பெரிய பிராட்டியார் முன்னிலையாக நைமிசாரண்யம் எம்பெருமான் திருவடிகளில் சரணம் புகுகிறார்
அவன் மேன்மையையும் தன்னுடைய தாழ்வையும் சொல்லி சரணம் புக வேண்டுமே
க்ருத்ய அகரணம் அக்ருத்ய கரணம் -பிரகிருதி வாசனையால் ஸ்வல்ப தோஷங்களையும்
நைச்ய அனுசந்தான ரீதியில் பெருக்க சொல்லி
பகவத் சந்தியில் தம்முடைய தோஷங்களை சொல்வது ஆவஸ்யகம் சாஸ்திர மரியாதை கட்டி அருள –
நைமிசாரண்யத்தில் அரண்ய ரூப சேவை
புஷ்கரத்தில் தீர்த்த ரூபம் சேவை
நைமிசம் நேமி விழுந்த ஸ்தலம் -தவம் செய்ய சிறந்த இடம் என்று காட்டி அருள –
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே –திருவடி அடைந்தேன் -என்று பிராட்டி முன்னாக சரண் அடைகிறார்

————————————————————————–

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-

வாள் நிலா முறுவல் -ஒளி நிலாவுகின்ற முறுவல் -ஒளி வீசும் நிலா போன்ற முறுவல்
சிறு நுதல் -நகிலம் தோள் கண் என மூவழிப் பெருகி –நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி -கலித்தொகை
முலை தோள் கண் மூன்று அவயவங்கள் பெரிதாகவும்
நெற்றி பாதம் இடை மூன்று அவயவங்களும் சிறுத்து இருக்கை அழகு
நெற்றி சிறுத்து இருக்கை இல்லையாகில் பும்ஸ்த்வ கந்தியாய் இருக்கும் இறே-பெரியவாச்சான் பிள்ளை
ஆழ்வார் நா வீறு விலஷணம் உடையவர் ஆகையால் அல்ப விஷயங்களையும் கனக்க பேசுவர்
மேலே ஆறாம்பத்தில் -சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பத்து வெள்ளத்தில் ஆழ்ந்தேன் -என்பர்
இங்கும் வனமுலையே பயன் பேணினேன் -என்கிறார்
நெடு நாள் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை என்பதே இல்லாமல்
விஷய அனுபவத்துக்கு மேல்பட்ட புருஷார்த்தமே உலகில் கிடையாது என்று அதில் ஆழ்ந்து இருந்தேன்
பின்பு சாஸ்திர விஸ்வாசம் உண்டாகி -விஷய போகம் பிசகு -என்கிற புத்தி மாத்ரம் பிறந்தது
ஆனால் அதை விட்டு ஒழிந்து நல் வழி போகப் பெற்றிலேன்
அந்த இரண்டு அவஸ்தைகளும் நீங்கி
இன்றி விஷய போகங்களை காறி உமிழ்ந்து
பிறவி நோய் அறுக்கும் வழியிலே வந்து நின்றேன்-

—————————————————————–

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா
அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர்
நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-2-

ஸ்திரீகளுக்கு வழி பறித்திடுமது மறக்க ஒண்ணாதே
தன்னுடைய உஜ்ஜீவனதுக்கு உபாயமானத்தையே யாயிற்று
வருந்தி மறப்பது -அறத்தையே மறந்து -ஸ்திரீ போகத்தில் ஈடுபட்டு
பாவத்தை மறக்காமல் புண்ணியத்தையே மறந்தேன்
அலம் புரி தடக்கை
அலம் -போதும் -சர்வ ஸ்வதானம் பண்ணி அருளும் திருக்கை
ஹலம் கலப்பை -பலராமனுக்கு கலப்பையும் உலக்கையும் திவ்ய ஆயுதங்கள் –
ஹலாயுதன் -ஹலீ -முசலீ -திரு நாமங்கள் இதனால் உண்டு
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி -இறைஞ்சுன் திருவடி-பாட பேதங்கள் -இறைஞ்சு உன் திருவடி என்று பிரிக்க –

———————————————————–

சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த
நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3-

சூது -களவு
விவேகியாய் இருப்பவனை -நாஸ்திகனாய் மாற்றுவது சூது
எம்பெருமானுக்கு சேஷமான ஆத்மவஸ்துவை தனது என்கை -களவு
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -திருமாலை
கண்டவா திரிந்த தொண்டனேன் -ஸ்த்ரீகளுக்கே தொண்டு பட்டு
உனக்கு தொண்டனான நான் இப்படி கண்டவா திரிந்து என்றுமாம்

———————————————————————–

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் —1-6-4-

வம்புலாம் கூந்தல் மனைவி -சிறப்பித்து சொல்லி
பிறர் பொருள் தாரம் -என்றது
விஷயாந்தரங்களிலே ஸ்ப்ருஹை பண்ணுமே –
அவற்றில் வந்தால் வம்புலாம் கூந்தலாகவும் வேண்டா வாய்த்து
பிறராம் இத்தனை யாய்த்து ஆதரிக்க வேண்டுவது -பெரியவாச்சான் பிள்ளை –
நமன் இத்யாதி –
சர்வேஸ்வரன் தன்னோடு ஒக்க
சமமாக ஆராய்ந்து கேட்பான் ஒருவனாக விட்டவன் ஆயிற்று -யமன் ஆகிறான் –
அவன் தான் தன்னோடு ஒப்பார் சிலரை யாயிற்று வர விட்டது –
அவர்கள் தாங்கள் ஒரு கைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவர்கள் ஆயிற்று –
பின்னை இவன் உடம்பு தன்னோடு எற்றுவர்கள்
அநந்தரம்
தங்கள் கை சலித்த வாறே பொகட்டு இட்டு வைப்பர்கள் –
இவர் இத்தனை பொழுது ஸ்திரீகளை ஒழிய இருக்க வல்லீரோ
அவளை அணைப்பியும் -என்பர்கள் –
இவனும் நம்மை நலிவது எல்லாம் நலிந்தார்கள் ஆகில் இனி அவளை
அழைக்கிறார்கள் இத்தனை யிறே -என்று குறு விழி கொண்டு கிடக்கும் –

எரி -இத்யாதி –
எரி எழா நிற்பதாய்
செம்பாலே செய்யப்பட
பாவையைப் பாவீ தழுவு என்பர்கள் ஆயிற்று –
கெடுவாய் அவர்கள் ஒழியச் சினம் இருந்தவர்கள் ஆகிலும்
அனுதாபம் பிறந்து
உகந்து அருளிற்று ஒரு திரு வாசலிலே ஒதுங்கினாய் ஆகில்
இன்று எங்களுக்கு கை சலியாது ஒழியல் ஆயிற்று –
என்பர்கள் ஆயிற்று –

மொழிவதற்கு அஞ்சி–இத்யாதி –
அவர்கள் பண்ணும் நலிவை பொறுக்கலாம் ஆகாதே
க்ரூரமான பேச்சாயிற்று பொறுக்கப் போகாதது

————————————————————–

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-5-

துற்று -ஒரு கவளம்
நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை -பாவங்களுக்கு பலன் உண்டு எண்ணாமல் செய்து விட்டேன் –
இப்பொழுது தவிக்கின்றேன்
கடும் சொலார் -அவர்கள் செய்யும் ஹிம்சைகளை விட சொற்கள் கடினமானவை
கொடுமிறை -கொடிய வருத்தங்கள்

—————————————————————————

கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய்
நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-6-

ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன்–
உயிர்களே கொன்றேனாய் உணர்விலேனான நான் வந்து உன் திருவடி அடைந்தேன் ஆதலால்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் -என்று அந்வயித்து
இனி யமன் ஆணை யமபுரத்தில் செல்லாமல் செய்து விட்டேன்
அன்றிக்கே
உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் -என்று உள்ளபடியே அந்வயித்து
இப்போது இருக்கும் எமனால் கலியனைத் தண்டிக்க முடியாது
இந்த எம புரம் உபயோகம் அற்றது
இனி வேறு யமனும் யமபுரமும் வேணும் -என்றபடி

—————————————————————————

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—-1-6-7-

மனம் மொழி மெய் மூன்றினாலும் பாவங்களையே செய்து-
தொல் நெறி -அநாதியான -அர்ச்சிராதி கதியும் தூமாதி மார்க்கமும் தொல் மார்க்கம்
சுக்ல கிருஷ்ணா கதி ஹயதே ஜகதஸ்சாச்வதே மாதே
ஏகயா யாத்ய நாவ்ருத்தி மன்ய- யாவ்ருத்ததே புன -கீதை
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் -அடியேன் என்று சொன்னதை மெய் என்று கொண்டு
நெஞ்சினில் புகுந்து அருளினாய்
தானவர்க்கு என்றும் நஞ்சனே –

————————————————————————

ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா
பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-8-

ஏவினார் கலியார் -இத்யாதி –
கலி புருஷன் என்னைத்  துன்பப் படுத்த நினைத்து தனக்கு கையாட்களான இந்த்ரியங்களை அழைத்து –
நீங்கள் திரு மங்கை ஆழ்வாரை நன்றாக ஹிம்சித்து விடுங்கள் என்று ஏவினான் –
நான் இத்தனை நாளும் இருந்தபடி இருந்தேன் ஆகில் அவற்றால் மிகவும் துன்பப் பட்டு இருப்பேன் –
தைவா தீனமாக நான் பழைய நிலையில் நின்றும் நீங்கி
உன் திருவடிகளிலே புஷ்பங்களை சமர்ப்பித்தும் -நமஸ்காரம் செய்தும் –
ஸ்தோத்ரங்களை பணியும் வருகிறேன் ஆகையாலே
இந்த்ரியங்களின் செங்கோன்மை என்னிடம் செல்ல ஒண்ணாத படி தடுத்து விட்டேன்
கலி புருஷனுடைய கட்டளை பாறிப் பறந்து போயிற்று
அந்தக் கலி புருஷன் இனி இவ் வுலகில் வாழ்வதற்கே வழி இல்லை என்று
திரு உள்ளம் யுகந்து அருளிச் செய்கிறார் ஆயிற்று –
கலியார் -பெருமைப் படுத்திச் சொல்லுகிற வார்த்தை அன்று
கோவமும் -பகையும் -இழிவும் -தோற்றச்-சொல்லுகிறபடி –
வினையார் -என்று பாபங்களைச் சொல்லுவது போலே –
நலிக -வியங்கோள் வினை முற்று –
எங்கனே வாழுமாறு -என்கிறதுக்கு -இனி எப்படி வாழ்வேன் என்று ஆழ்வார் இந்த்ரியங்களுக்கோ கலி புருஷனுக்கோ
அஞ்சி நடுங்கிச் சொல்கிறதாகப் பொருள் கூறுவார் -சிலர் அது பிரகரணத்துக்குச்   சேராது –
கோவினார் செய்யும் கொடுமையை மடிந்தேன் -என்று உடனே அருளிச் செய்கிறார் ஆகையாலே
தாம் அஞ்சினதாக பொருள் கொள்ள ஒண்ணாது
அந்த கலி புருஷன் வாழ்வதற்கு இனி வழி யுண்டோ -என்பதாகவே கொள்க –

—————————————————————-

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்—1-6-9-

தம்முடைய அத்யவசாயத்தை வெளியிடுகிறார் இதில் –
சரீரத்தை ஒரு குடிசையாக உருவகப் படுத்துகின்றார் –
குடிசையில் இடை இடையே சுவர்கள் வைக்கப் பட்டு இருக்கும் –
இவ் வுடம்பில் மாம்ச பிண்டங்கள் சுவர் போலே இருக்கின்றன –
குடியில் தூண்கள் நாட்டப் பட்டு இருக்கும் -இதில் எலும்புகள் தூண்கள் போன்றுள்ளன –
குடிசையில் பல வாசல்கள் யுண்டு -யுடலிலும் நவத்வாரங்கள் பிரத்யஷமே
குடிசை ஓலைக்கொத்து முதலியவற்றால் மூடப் பட்டு இரா நிற்கும் –
இதுவும் யுரோமங்களால் மூடப் பட்டு இரா நின்றது –
ஆக இவ்வகைகளால் ஒரு குடிசை  என்னலாம் படி இரா நின்றது இவ் வுடல்
குடிசையில் நாம் வாழ்வது போலே இவ் வுடலில் ஆத்மா வாழ்கின்றான் –
இவ் விடலை விட்டு ஆத்மா வெளிக் கிளம்பும் காலமே மரணம் எனப்படும் –
அம் மரணம் நேர்ந்த பிறகு இவ் வாத்மா போய்ச் சேர வேண்டிய இடம் எம்பெருமான் திருவடிகளே
என்கிற அத்யாவசாயம் தமக்கு இருக்கிறபடியை முன்னடிகளால் அருளிச் செய்தார் ஆயிற்று –
எம படர்கள் வந்து என்னைப் பற்றி இழுத்துக் கொண்டு போய்
பலவகையான ஹிம்சைகளைச் செய்வதற்கு உறுப்பான பாவங்களை நான் வேண்டியபடி செய்து வைத்து இருந்தாலும்
இன்று தேனுடைக் கமலத் திருவாகிய பெரிய பிராட்டியாரை முன்னிட்டு உன்னை சரணம் அடையும்படியான பாக்யம்
எனக்கு நேர்ந்ததனால் இனி நான் யம புரம் சென்று வருந்த வேண்டிய ப்ரசக்தி இல்லை –
உன் திருவடிகளையே கிட்டி ஆனந்திக்க வழி ஏற்பட்டு விட்டது என்று தம்முடைய மகிழ்ச்சியை வெளியிட்டார் என்று உணர்க –
நானுடைத் தவத்தால் -என்றது என்னுடைத் தவத்தால் என்றபடி –
இவருடைய தவமானது என்ன என்றால் -எம்பெருமானுடைய திருவருளையே தம்முடைய தவமாகச் சொல்லிக் கொள்வார்கள் ஆழ்வார்கள் –
உன் அருளாலே உன் திருவடி வந்து பணிந்தேன் -என்றபடி –

——————————————————————

ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே–1-6-10-

இமையோர் நாதனாகிய இந்த்ரன் தனது பரிவாரங்களை எல்லாம் அழைத்து நாம் எல்லோரும்
நைமி சாரண்யம் சென்று எம்பெருமானை சேவிப்போம் வாருங்கள் -சேவித்தோம் ஆகில்
நம்முடைய ஏதங்கள் எல்லாம் ஓடிப் போம் -என்று சொல்லி எல்லாரைக் கூட்டிகோ கொண்டு
வந்து சேவித்து இருக்கும் இடம் நைமி சாரண்யம் –
அவ்விடத்தில் அரண்ய ரூபியாக  சேவை சாதிக்கிற எம்பெருமான் விஷயமாக
திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த இச் சொல்மாலையை ஓத வல்லவர்கள் –
இவ் வுலகத்து அனுபவங்களில் விருப்பம் யுண்டாகில் அவற்றை யுண்டு களித்த பின்
நித்ய ஸூரிகளின் கோஷ்டியிலும் சென்று சேர்ந்து நித்ய ஆனந்தம் அனுபவிக்கப் பெறுவார்கள்
என்று இத் திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித் தலைக் கட்டினார் ஆயிற்று –

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading