சர்வ ஸ்வாமி சர்வ சுலபன் -திருமந்த்ரத்தின் அர்த்தத்துக்கு எல்லை நிலம் -அர்ச்சையில் இழிகிறார்
பிருதி பிரிதி என்று வழங்கப் படும் திவ்ய தேசம்
நந்தப் பிரயாகை
பொருப்பிருதிக்கும் கிடந்தால் போல் துணித்து வீழத்தான்
திருப் பிருதிக்கு என் நெஞ்சே செல் -பிள்ளை பெருமாள் ஐயங்கார்-
————————————————————
வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-
ஆலி -சிறு துளிக்கு பெயர்-
மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செயும்
வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவார் உடம்பு பேசாது இராது இறே
காலுக்கீடாக வாய்த்தவாறே ஆடுவாரைப்போலே அவை முழங்க இவை ஆடா நிற்கும் ஆயிற்று -பெரியவாச்சான் பிள்ளை
வருவரை அகடுற முகடேறி -கீழ் வயிறு மலையிலே தழுவ கொடு முடியின் மீதேறி
பீலி மா மயில்கள் தோகையின் கனத்தாலே பறந்து சென்று ஏற மாட்டாமல் மெல்லத் தவழ்ந்து சென்று ஏறுகிறபடி
அக்றிணைப் பொருள்களும் களித்து வாழும் தேசத்தில் உயர்திணை நீ சென்று களித்து வாழ வேண்டாமோ நெஞ்சே
————————————————————
கலங்க மாக்கடல் அரிகுலம் பணி செய்ய அருவரை யணை கட்டி
இலங்கை மா நகர் பொடி செய்தவடிகள் தாம் இருந்த நல்லிமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர் கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரியவை திரிதரு பிரிதி சென்றடை நெஞ்சே –1-1-2-
இமயத்துள் -மூன்றாம் அடி முதல் எழுத்து உயிர் எழுத்துடன் தொடங்கினால்
இமயத்து -என்று -மூன்றாம் அடி முதல் எழுத்து மெய் எழுத்துடன் தொடங்கினால்-
————————————————————-
துடி கொள் நுண்ணிடைச் சுரி குழல் துளம் கெயிற்று இளம் கொடி திறத்து ஆயர்
இடி கொள் வெங்குரலின விடை யடர்த்தவன் இருந்த நில்லிமயத்து
கடிகொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி யறை மிசை வேழம்
பிடியினோடு வண்டிசை சொலத் துயில் கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-3-
பிரதி பந்தகங்களைப் போக்கி அபிமத விஷயத்தோடு புணர்ந்த எம்பெருமான்
நம் போன்ற அபிமதர்களையும் சேர்த்து கொள்ள நித்ய வாசம் செய்து அருளும் திருப் பிரிதி
திர்யக்குகளும் ஸ்ருங்கார ரசத்தில் நோக்கு கொண்ட திவ்ய தேசம்-
———————————————————
மறம் கொள் ஆள் அரி யுருவென வெருவர ஒருவனதகல் மார்வம்
திறந்து வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பி இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும்
பிறங்கு மா மணி யருவி யொடிழி தரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-4-
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க வுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகள் -என்றும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையா என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே -என்றும்
ஆழ்வார்கள் ஈடுபடுவர்கள்
சுராசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர் வானில் பகல் இரவில் உள் புறம்பில் பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகாலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில்
நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி யுதித்து உயர் வாசல் படி மீதேறி
இரணியனைத் தொடை மிசை வைத்து உகிரினால் இருபிளவாக்கினை அரியே எம்பிரானே -என்பர் பின்னோரும்
கை தொட்டுப் பிளக்க வேண்டாதே நரசிம்ஹத்தின் உடைய பேரைச் சொல்லவே ஆசூர வர்க்கம் அஞ்சும்படி யாயிற்று -பெரியவாச்சான்பிள்ளை –
வராஹங்கள் குனிந்து வளைந்த கொம்புகளாலே மாணிக்கப் பாறைகளை குத்திப் பெயர்த்திட
மாணிக்கங்கள் மலை அருவிகள் உடன் உருண்டது வந்து இழியும்
அருகு கிடந்து -திருப் பிரிதியின் சமீபத்தில் உள்ள மாணிக்கப் பாறைகள்-
——————————————————————–
கரை செய் மாக்கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த
அரை செய் மேகலை யலர் மகள் அவளோடும் அமர்ந்த நல்லிமயத்து
வரை செய் மாக்களிர் இள வெதிர் வளர்முளை அளை மிகு தேன் தோய்த்து
பிரச வாரி தன்னிளம் பிடிக்கருள் செய்யும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-5-
வெதிர் என்று மூங்கிலுக்கு பெயர் -முளைக்கும் போதே நெடுக ஓங்கி வளரும் ஆதலால் வளர் முளை -என்கிறார்
யானை பேடையை மகிழ்விக்க வேண்டி மூங்கில் முளையைப் பெயர்த்து தேனிலே தோய்த்து அதன் வாயிலே பிழியும் –
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை -இரண்டாம் திருவந்தாதி -75-
பிரசம் என்று -கள் -தேனீ -தேன் -தேன் கூடு -வண்டு இவற்றுக்குப் பெயர்
பிரசவாரி -தேன் வெள்ளம்
தேனீக்கள் நிறைந்த தேனை என்றுமாம்-
———————————————————————
பணங்கள் ஆயிரம் யுடைய நல்லரவணைப் பள்ளி கொள் பரமா வென்று
இணங்கி வானவர் மணி முடி பணி தர இருந்த நல்லிமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்புற நிமிர்ந்தவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-6-
இணங்கி -திரள் திரளாக -பொருந்தி என்றுமாம்
மாதவிக் கொடி முகிலோடு பிணங்கு வதாகவும் -வண்டுகள் இடை பாடுவதாகவும் சொல்லிற்று
மாதவிக் கொடி பிராட்டி
முகில் எம்பெருமான்
அபராதிகளான சேதனர்களை ஷமிப்பித்து ரஷிக்க போராடி மன்றாடுவாள்
சாரக்ராஹிகள் மகான்கள் வந்து ஸ்தோத்ரம் பண்ணும் படியை -வண்டுகள் இசை சொலும் -என்றது-
———————————————————————
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7-
கனவரை -அழகிய தாழ் வரைகளிலே
கறி கொடி -மிளகுகளின் கொடிகளானவை -வேங்கை மரங்களை தழுவி நிற்கும்
கார்கொள் வேங்கைகள் -கரிய நிறத்தை கொண்டு இருக்கும் வேங்கைகள் என்றபடி
புனவரை -கொல்லை நிலங்களில் உள்ள சிறு மலைகளிலே
எங்கும் வேங்கை மயம்
செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை -புஷ்பங்கள் இனமலர் எட்டும்-
—————————————————————————-
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும்பசியது கூர
அரவம் ஆவிக்குமகம் பொழில் தழுவிய அருவரை யிமயத்து
பரமனாதி எம்பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெரும் தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-8-
அரவம் ஆவிக்கும் -மலைப் பாம்புகள் பெரும் மூச்சு விட்டு கொண்டு இருக்கிற
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை -இராப் பொழுதே விஞ்சி இருள் அதிகரிக்கப் பெற்ற மலை முழைஞ்சுகளிலே –
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியா -என்றபடி
அரவம் ஆவிக்குமகம் பொழில்-பாம்புகள் -சோலைகளில் -பரிமளத்துடன் கூடிய காற்றை ஆக்ராணித்து தரிக்கும்-என்றுமாம்
——————————————————————-
ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல்
ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9-
பிண்டி -அசோக மலர்கள் –
அசோக மலர்கள் விரிந்து அலருகின்ற போது உண்டான நெருப்புப் போன்ற அழகாய்
அறிவில்லாத வண்டுகள் -அப்புஷ்ப விகாச சோபையைப் பார்த்து நெருப்பாகவே நினைத்து பயப்படும்
நித்யமாக அச்சமும் அச்சம் கழிதலும் மாறி மாறிச் செல்லும்
அவன் சர்வ ரஷகன் என்று தெரிந்தும் பல்லாண்டு -போற்றி -என்று மங்களா சாசனம் செய்யும் பெரியாழ்வார் போல்வார் வண்டுகள்
பயமும் பய நிவ்ருத்தியும் மாறி மாறி செல்லும் பிரபன்னர்கள் வாழும் இடம் –
ஏதம் இன்றி -பாட பேதம் -ஏதம் இன்றி -பாவம் ஒன்றும் இல்லாதபடி –
ஏதும் இன்றி -நிர்ஹேதுகமாக -பாடம் சிறக்கும்-
——————————————————————-
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டு அரை பைம் பொழில் மங்கையர் கலியனதொலி மாலை
அரியவின்னிசை பாடு நல்லடியவர்க்கு அருவினை யடையாவே –1-2-10-
பெரிய மேகங்கள் -உட்கொண்ட நீரின் கனத்தாலே பெயர்ந்து போக மாட்டாமல் இருந்த இடத்திலே நின்று கர்ஜிக்க
மலைப் பாம்புகள் யானைகள் என்று எண்ணி விழுங்க நினைத்து மலை பெயருமா போலே பெயரும்
மலைப்பாம்புகள் யானையை விழுங்கும் -அஞ்சி நடுங்கி ஓடும் இரண்டும் உண்டானாலும்
இங்கு -களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு-என்கையாலே
மா சுணங்கள் மேகங்களை நோக்கி யானைகளாக பிரமித்து அவற்றை விழுங்க
மலை பெயருமா போலே பெயர்ந்து கிட்ட வருகின்ற -என்ற பொருள் நன்கு பொருந்தும்
———————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply