பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-3-முற்ற மூத்துக் கோல் துணையா-

திருப் பிரிதியை அனுபவித்த பின்பு திருவதரியை அனுபவிக்க இழிகிறார்
பதரீ வடசொல் வதரி -எனத் திரிந்து கிடக்கிறது
இலந்தை மரங்களுக்கு பதரீ -அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் ஸ்தானம் –
வதரி வணங்குதுமே -என்று ஸ்ரீ பதரிகாச்ரம ஷேத்ரத்தையும்
வதரியாசிரமத் துள்ளானே -என்று அடுத்த திருமொழியில் அந்த ஷேத்ரத்தில் உள்ள எம்பெருமானையும்
துதித்து மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
அடுத்த திருமொழி -ஏனமுனாகி-அவதாரத் தொடக்கத்தில்
ஸ்ரீ பதரி என்றும் பதரிகாச்ரமம் என்றும் இரண்டு திருப்பதியாய்-என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்பஷ்டமாக அருளிச் செய்துள்ளார்
ஸ்ரீ பதரீ நாதன் எழுந்து அருளி உள்ள திருமலை முழுவதையும் திரு உள்ளம் பற்றி -வதரி வணங்குதுமே என்றும்
அந்த திருமலையில் ஏக தேசமாய் ஸ்ரீ நாராயண மூர்த்தி தவம் புரிந்த இடமாயும்
தானே சிஷ்யனும் ஆச்சார்யனுமாய் நின்று திரு மந்த்ரத்தை வெளியிட்டு அருளின இடமாயும் இருக்கிற
ஸ்ரீ பதரிகாச்ரம ஸ்தான விசேஷத்தை
திரு உள்ளம் பற்றி வதரியாசிரமத் துள்ளானே -என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார் என்பதைக் காட்டி அருளவே-

பிள்ளை பெருமாள் ஐயங்கார் -நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் –
தாட்கு அடிமை என்று தமை உணரார்க்கு எட்டு எழுத்தும்
கேட்க வெளியிட்டு அருளும் கேசவனை -வேட்கையோடு
போவது அரிதானாலும் போய்த் தொழுவோம் நெஞ்சே
மா வதரி யாச்சிரமத்து –

கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை போன்ற திருப்பதிகள் போல் அல்லாமல்
சிரமப்பட்டு அடையக் கூடிய திவ்ய தேசம் ஆதலால் சரீரம் கட்டுக் குலைவதற்கு முன்னமே சென்று
அனுபவிக்க வேணும் என்கிறார் ஆழ்வார் இதில்-

——————————————————————–

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

கோல் துணையா -நஞ்சீயர் சந்நியாச்ரம ஸ்வீகாரம் செய்து கொள்ளும் போது த்ரிதண்டம் தரித்துக் கொள்வதற்கான மந்த்ரம்
சகா மா கோபாய-த்ரிதண்டமே-நீ எனக்குத் துணையாக இருந்து ரஷிக்க வேணும் -என்னக் கேட்டு
சர்வஞ்ஞனாயும்-சர்வ சக்தனாயும்-பரம சேதனனுமாய் இருக்கிற எம்பெருமானையே துணையாக பற்ற வேண்டி இருக்க
அசேதனமான தண்டத்தை நோக்கி இங்கனம் சொல்லும்படியான ஆஸ்ரமம் நேருவதே-என்று சாதித்தாராம் –
பட்டர் ப்ரஹ்ம ரதத்தில் எழுந்து அருளி திரு வீதி அலங்கரிக்கப் புறப்பட்டவாறே நஞ்சீயரும் ஸ்ரீ பாதம் தாங்கப் புக
உத்தம ஆச்ரமியாய் த்ரிதண்டதாரியான உமக்கு இக்காரியம் தகாது -என்று பட்டர் முதலானோர் மறுத்துக் கூர
நஞ்சீயர் -எனக்கு நீ துணையாகி ரஷிக்க வேணும் -என்கிற மந்த்ரத்தை சொல்லி ஸ்வீகரிக்கப் பட்ட
இந்த முக்கோல் தானே இன்று எனக்கு விரோதி யாகிறதே
இக்கோல் எனக்குத் துணை அல்லவோ
ஸ்வரூப ரஷணத்துக்கு இக்கோல் இடையூறாயின் இஃது எனக்கு வேண்டா என்று சொல்லி
த்ரிதண்டத்தை விட்டு எறியப் போனாராம்
அப்போது அவருடைய பக்தி விசேஷத்தை கண்கொண்டு வியந்தனர் –
சாஸ்திர விதிப்படி கோலைத் துணையாக கொள்வது அங்கு
இங்கு அசக்தியால் கோலைத் துணையாக கொள்வது பற்றி –

——————————————————–

முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன்னொரு கோலூன்றி
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளை கொண்டு இருமி
இது வென்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசாமுன்
மது வுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-2-

கிழத்தனம் வருவதற்கு முன்பே கரண களேபரங்கள் பூர்ண சக்தியோடு இருக்கும்
கிளர் ஒளி இளமையில் தானே வதரியை வணங்குதல் நன்று
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -என்னும்படியான எம்பெருமானை
பரிபூர்ணமாக அனுபவித்து ஹர்ஷத்துக்கு போக்குவீடாக
ஏதத் சாம காயன் நாஸ்தே -ஹாவுஹாவு ஹாவு -சாமகானம் பண்ணிக் களிக்கும் முமுஷூக்கள் வாழப் பெற்ற வதரி-

———————————————————-

உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்
அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3-

————————————————————-

பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன்
காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே—-1-3-4-

காளை-காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம் -நிகண்டு
காளையாய் கன்று மேய்த்து இனிது உகந்தான்

————————————————————–

பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம்
உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன்
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே—1-3-5-

அப்படிப் பட்ட நிலை வருதற்கு முன்பே
தோளிணை மலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் தாளிணை மேலும் புனைந்த
தண் அம் துழாய் உடையன் எழுந்து அருளி இருக்கும் வதரியை வணங்குவோம் –
பாவையர் வாய் அமுதம் -வாழ்ந்தவாரும் -சம்சாரிகள் சொல்வதை அனுவதித்த படி

————————————————————

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம்
பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன்
அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே–1-3-6-

அத்தன் எந்தை -அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின்

——————————————————————–

பப்ப வப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப ஐக்கள் போத வுந்த உந்தமர் காண்மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம்
வைப்பும் நங்கள் வாழ்வு மானான் வதரி வணங்குதுமே—1-3-7-

உந்தமர் காண்மின் என்று –
இவன் பக்கல் யௌவனமும் கையில் வீசமும் உள்ள வன்று
எல்லாரும் ஒக்க என் தமர் என் தமர் என்பர்கள் –
கையில் வீசமும் போய் இவனோட்டை   சம்பந்தம் நமக்கு
அவத்யாவாஹம் என்று தோற்றும் படி யௌவனமும் போனவாறே
உன்னுடையவன் -என்றும் –
மற்றை அவளும் உன்னோடே -அன்றோ அவனுக்கு உறவு என்றும் –
தங்கள் உடன் ஒற்று அற சொல்லி பின் வாங்கா நிற்பர்கள்-

செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியா முன்னம் –
இவனைக் கொண்டு போது போக்கைகாக
முலைக் கச்சை நெகிழ்த்தி
முலையினுடைய சந்நிவேசத்தை காட்டுவார்கள்
இவன் கண்ணை விடுத்து எழப் பார்க்கும்
அத்தைக் கண்டு பிள்ளாய் -இவன் இவற்றோடு என்ன உறவு உண்டாய் பார்க்கிறான்
என்று சிரிப்பார்கள் ஆயிற்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் அப்பர் என்று சிரியாத முன்னம் என்னுதல் –
பண்டு தன் சர்வ ஸ்வத்தை நேர்ந்து இ றே ஸ்மிதம் பெறுவது
இப்போது இவன் இருப்பு கண்டு விட்டு சிரிப்பர்கள் ஆயிற்று-

நாங்கள் வைப்பும் வாழ்வும் ஆனான் -அவனே உபாயம் உபேயம்
வைப்பு உபாயத்வம்
வாழ்வு உபேயத்வம்

———————————————————-

ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர்
உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால்
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில்
வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8-

ஆசாபாசம் ஸ்வரூப நாசத்துக்கு உறுப்பு -நாசமான -நாச ஹேதுவான –
அத்தை விட்டு நல் வழி சேர வதரி வணங்குமின் -நல் நெறி -அர்ச்சிராதி மார்க்கம்
குவளையம் கண்ணியர் -கிழப் பிணங்களின் கருத்தால்-

——————————————————————

புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி
கலங்க  வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன்
அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி
வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே —1-3-9-

வலம் கொள் தொண்டர் -பலம் என்பது- வலம் ஆக திரிந்து -பிரபலர்கள்
பகவானை அனுபவிப்பதில் கை தேர்ந்தவர்கள் -என்றபடி

———————————————————————

வண்டு தண்  தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை
கொண்டு தொண்டர் பாடி யாடக் கூடிடில் நீள் விசும்பில்
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே –1-3-10

வதரி வணங்குதுமே என்று பாட்டுத் தோறும் சொல்லி
இதிலோ வதரி நெடுமாலை -என்று
வதரி நாராயணனை உத்தேசித்தே வதரி வணங்கினார்
இயையாமுன் -ஏசாமுன் -நடுங்காமுன் -தள்ளி நடவாமுன் -பேசி அயரா முன் -சிரியாத முன்னம் என்றவர்
வணங்குதும் -என்கிறார்- வணங்குமினே -சொல்ல வில்லை
இத்தை தாமே பாரிக்கிறார்
பரோபதேசமும் ஸ்வ அனுபவமும் கலந்து அருளிய அருளிச் செயல்
வணங்குதும் -பிறரை நோக்கிச் சொல்லும் இடத்தும்- தன்மையாக சொல்வதும் உண்டே-

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading