ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -83 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் ஆஸ்ரித பரதந்த்ரன்
அவர்களது அபேஷிதம் செய்யும் ஸ்வ பாவன் என்று நீர் எங்கனே அறிந்தீர் -என்ன
மது கைடபர்களை நிரசிக்க வல்ல பரிகரம் உடையவன் நீ-
அது கொண்டு கார்யம் கொள்ளாதே
மலையை எடுப்பது
ருஷபங்களை அடர்ப்பது ஆயத்து
வெருமனேயோ
என்கிறார் –

————————————–

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து ஆயர்
நிரை விடை யேழ்   செற்றவா  றேன்னே உரவுடைய
நீராழி யுள்  கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான் -83-

பதவுரை

உரவு உடைய–மிடுக்கை யுடைத்தான
நீராழியுள்–நீரை யுடைய திருப்பாற் கடலிலே
கிடந்து–திருக் கண் வளர்ந்து,
நேர் ஆ(ன)–எதிரியாக வந்த
நிசாசரர் மேல்–மது கைடபர் முதலிய ராக்ஷஸர்களின் மீது
(அவர்கள் நீறாகும்படி)
பேர் ஆழி–பெரிய சக்ராயுதத்தை
கொண்ட–கையிற் கொண்டிருக்கிற
பிரான்–உபகாரகனே!
(இப்படி கருதுமிடஞ் சென்று பொருது கை நிற்க வல்ல திருவாழி யாழ்வானிருக்கவும்
அவனைக் கொண்டு காரியங்கொள்ளாமல்)
வரை குடை ஆக–(ஒருவராலும் அசைக்கவும் முடியாத கோவர்த்தன) மலையே குடையாகவும்.
தோள் காம்பு ஆக–தனது திருத் தோளே அந்தக் குடைக்குக் காம்பாகவும் ஆக்கி
ஆ நிரை காத்து–பசுக்களின் கூட்டங்களைப் பாதுகாத்து,
(நப்பின்னைப் பிராட்டிக்காக)
ஆயர் நிரை விடை ஏழ்–இடையர்கள் வைத்திருந்த திரண்ட ரிஷபங்கலேழையும்
செற்றவா  றேன்னே –முடித்த விதம் எங்ஙனே?

—————————————-

வியாக்யானம் –

வரை குடை தோள் காம்பாக ஆநிரை காத்து –
ஒன்றால் சலிப்பிக்க ஒண்ணாத மலையைக் குடையாகக் கொண்டு
அதுக்கு தாரகமான காம்பு தன் தோளாகக் கொண்டு
பசுக்களை ரஷித்து –

ஆயர் நிரை விடை யேழ் செற்றவாறேன்னே –
நப்பின்னை பிராட்டியோட்டை சம்ஸ்லேஷத்துக்கு பிரதிபந்தகமாய்த்
திரண்டு வந்த ருஷபங்கள் ஏழையும் முடித்தது யென்னீ –

இது உன் சர்வ சக்தித்வம் காட்டச் செய்தாயோ
உன்னால் அல்லது செல்லாதார்க்கு அவர்கள் விரோதிகளைப் போக்கி
உன்னைக் கொடுத்த படி இறே என்கிறார் –

கையில் திரு வாழியைக் கொண்டு இந்த்ரனை நேராதே
உன் தோள் நோவ ரஷிப்பதே –

உரவுடைய நீராழி யுள்  கிடந்து –
சர்ப்பத்தை உடைய நீர் -என்னுதல்
உரகம் என்கிறத்தைக் குறைத்து உரம் -என்று கிடக்கிறது
இத்தால்
துஷ்ட சத்வங்கள் எல்லாத்துக்கும் உப லஷணம்

அன்றிக்கே
மிடுக்கை உடைத்தான நீர் -என்றுமாம்
திருப் பாற்  கடலிலே கிடந்து-

நேரா நிசாசரர் மேல் -பேராழி கொண்ட பிரான்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளச் செய்தே
சத்ருக்களாய் கிட்டின நிசாசரர் உண்டு மதுகைடபர்கள்
அவர்களைத் திரு வாழியை இட்டுப் பொடி படுத்தி விட்டான் ஆய்த்து
நீ உறங்கா நிற்கச் செய்தே விரோதி வர்க்கத்தை
பொடி படுத்த வற்றான பரிகரத்தை யுடைய உபாகாரனே –

உன் தோள் நோவ மலை எடுத்ததும்
ருஷபங்கள் முன்னே உன்னை அழிவுக்கு இட்டதும்
இவை எல்லாம் என் செய்தாய் –

இத்தால்
ஆஸ்ரிதர்க்கு விரோதம் வந்த போது
சங்கல்பத்தால் அன்றியே
தன்னுடம்பு நோவக் கார்யம் செய்யும்
என்றபடி –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading