ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -77 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருமலை ஒன்றுமே யல்ல கிடீர்
உகந்து அருளின தேசங்களுக்கும் இப்படிக் கிடீர்-என்கிறார்

அவன் நமக்காகப் பண்ணின வியாபாரங்களை அனுசந்திக்க
நம்முடைய செயலால் வந்த துக்கங்கள் அடைய ஓடிப் போம் -என்கிறார் –

நாம் நம்முடைய அனர்த்தத்துக்கு உறுப்பாக
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
செய்கிற செயலாலே பண்ணிக் கொண்டவை

அவன் நம்முடைய ஹிதத்துக்கு உறுப்பாக
நிற்பது இருப்பது கிடப்பதான வியாபாரங்களை அனுசந்திக்கத்
தன்னடையே ஓடிப் போம்
என்கிறார் –

———————-

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும் அக்காத
பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் நான்கிடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே
என்றால் கெடுமா மிடர் –77-

பதவுரை

வேங்கடமும்–திருமலையும்
விண்ணகரும்–வைகுந்த மா நகரும்
வெஃகாவும்–திரு வெஃகாவும்
அஃகாத பூ கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும்–பூ மாறாத நீர் நிலைகளை யுடைய
சிறந்த திருக் கோவலூ ரென்கிற திவ்ய தேசமும்
(ஆகிய)
நான்கு இடத்தும்–நான்கு திருப்பதிகளிலும்
(வரிசைக் கிரமமாக)
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் என்றால்–(எம்பெருமான்) நிற்பதும் வீற்றிருப்பதும்
பள்ளி கொண்டிருப்பதும் நடப்பதுமா யிருக்கிறா ரென்று அநுஸந்தித்தால்
இடர்–துக்கங்களெல்லாம்
கெடும் ஆம்–விட்டோடிப் போய் விடும்

———————————

வியாக்யானம் –

வேங்கடமும் விண்ணகரும் வெக்காவும்
திருமலையிலே நின்று அருளினான்
ஸ்ரீ வைகுண்டத்திலே வீற்று இருந்து அருளினான்
திரு வெக்காவில் கண் வளர்ந்து அருளினான் –

அக்காத பூங்கிடங்கின்  நீள் கோவல் பொன்னகரும் –
ஒன்றோடு ஓன்று விச்சேதிக்க கடவது அன்றிக்கே
போக்யதை யளவிறந்து உள்ள  அழகை யுடைத்தான
நீர் நிலங்களை யுடைத்தாய்
தர்ச நீயதை விஞ்சி
ஸ்ப்ருஹணீயமாய் இருந்துள்ள
திருக் கோவலூர் நகரத்திலே நடந்து அருளினான் ஆய்த்து –

நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே  என்றால் கெடுமா மிடர் –
இவை நாலிலும் ஒக்குமாய்த்து இவ்வோ வ்யாபாரங்களைப் பண்ணின படி
இவர்களுக்கு எல்லாம் ஒரு போகியாய் இருக்கிறபடி

பொன்னகர் என்று தானே வந்து நோக்கின இடம்
இவ்வோ இடங்களிலே அச் செயல்களைச் செய்தான் என்று அனுசந்தித்துச் சொல்லுவோர்க்குத்
தாம் தாம் பண்ணிக் கொண்ட துக்கங்கள் அடையத் தாம் தாமை விட்டோடிப் போம் என்கிறார் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading