ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -45 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிறவனுடைய நீர்மை
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும்
நிலம் அன்று கிடீர்
என்கிறார் –

—————————-

ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு —45-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
பூ மேய மாதவத் தோன் தாள் பணிந்த–திருநாபிக் கமலத்திற் பொருந்திய
மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆஸ்ரயித்த
வாள் அரக்கன்–கொடிய இராவணனுடைய
நீள் முடியை–நீண்ட பத்துத் தலைகளையும்
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு– அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக் காட்டின எம்பெருமானுடைய குணம்.
அமரர்க்கு அறிய ஆமே–பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?
அது நிற்க–அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;
நாமே அறிகிற்போம்–(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபா கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

————————————————————————

வியாக்யானம் –

ஆமே யமரர்க்கு அறிய –
ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனை அறிந்ததாகப் போமோ
இவர்களால் அறியப் போகாமைக்கு
மேன்மையோடு நீர்மையோடு வாசி இல்லை –

வது நிற்க –
அதுக்கு மேலே –

நாமே யறிகிற்போம் –
அதிசய ஜ்ஞானரான ப்ரஹ்மாதிகளும் மதி கெட்டுக் கிடக்க
நாமே அவனை அறியப் புகுகிறோம்

அங்கன் அன்றிக்கே
அது கிடக்க
நாம் ஆகில் அவனை அறிவுதோம் -என்றுமாம் –
அவன் தானே காட்டக் கண்ட நமக்குக் காண வரிதோ –

நன்னெஞ்சே –
அவர்களுக்குக் காண ஒண்ணாமைக்கு அடி
தம் தம் நெஞ்சு தம்தாமுக்கு விதேயம் அல்லாமை –
ஈ விதேயமாகப் பெற்ற எனக்கு ஒரு குறைவுண்டோ –

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை   –
அவர்கள் அறியாமைக்கு அடி சொல்லுகிறது

சர்வேஸ்வரன் உடைய திரு நாபீ கமலத்தை தனக்கு வாசஸ் ஸ்தானமாக உடையனாய்த்
தபஸ் ஸாலே பெரியனாய் உள்ள ப்ரஹ்மாவின் காலில்
விழுந்த ராவணானவன்
இவன் பக்கலிலே தனக்கு வேண்டின வரம் எல்லாம் கொள்ளா நிற்க
அவ்வளவிலே ஒரு பாலகனாய் கொண்டு
அந்த ப்ரஹ்மாவின் மடியிலே இருந்து
கெடுவாய் உனக்கு இது கார்யம் அன்று கிடாய் -என்னும் இடத்தைத்
தன் திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த்தானம் பண்ணினான் ஆய்த்து-

இவன் அறுப்புண்ணப் புகுகிற தலைகள்
இவற்றைப் பூண் கட்டிக்  கொடுப்புதியாகில் உனக்கு 
குடி இருப்பும் இழவு கிடாய் -என்னும்
இவற்றை தெரிவித்தான் ஆய்த்து –

பாதமத்தால் எண்ணினான் பண்பு –
எனக்கு போக்யமான திருவடிகளைக் கொண்டு கிடீர் கீறிக் காட்டிற்று

தனக்கும் கூட ஹிதம் அறியாதே
சூழ்த்துக் கொள்ளப் புக்கவனோ
சர்வேஸ்வரன் உடைய குணங்களை அறியப் புகுகிறான் –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading