ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -36 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கூறிய குற்றமாகக் கொள்ளல் நீ என்று
இரக்க வேண்டாத படி
அவன் தானே வந்து அர்த்தியாய் நின்ற படியை
அநு சந்தித்து
நீ இப்படி உன்னை அழிய மாறிக் கொண்டு வந்து கார்யம் செய்து
சம்சாரிகளை உனக்காக்கிக் கொள்ளலாம் என்று
பார்த்து -அத்தாலே -என்கிறார் –

———————————-

முரணை வலி தொலைதற்காம் என்றே முன்னம்
தரணி தனதாகத் தானே இரணியனைப்
புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் நீ
மண்ணிரந்து கொண்ட வகை –36-

பதவுரை

முன்னம்–முற் காலத்தில்
தரணி தனது ஆக தானே–பூமி யெல்லாம் தன்னுடைய தென்று அஹங்காரங் கொண்டிருந்த
இரணியனை–ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த–புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர்–கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால்–அழகிய திருவாழியைக் கொண்ட திருக் கையினால்
நீ–நீ
மண் இரந்து கொண்ட வகை–(மாவலி யிடத்தில்) பூமியை யாசித்துப் பெற்றதானது
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே–(ஸம்ஸாரிகளின்) முரட்டுத் தனத்தின் மிடுக்கைத் தொலைக்கலா மென்றல்லவோ?.

——————————

வியாக்யானம் –

முரணை வலி தொலைதற்காம் என்றே-
எட்டுக்கு நோக்குப் போலே
ந நமேயம் -என்று இருக்கிறவர்கள் உடைய மிறுங்குதலைப் போக்கி
நமக்கு ஆக்கலாம் -என்றே
யானே என் தனதே -என்று இருந்து
ஏத்தவும் தவிர்ந்து
எல்லாம் செய்தாலும்
நம் சந்நிதியிலே நெகிழ்ந்து நமக்கு ஆகார்களோ என்றோ பார்த்தது –

முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் –
ஈஸ்வரனதான விபூதியை
பண்டே
தன்னதாக தானே சமைந்து இருந்துள்ள ஹிரண்யனை
இதுக்கு வேறே மேல் எழுத்து இடுவார் வேண்டாத படி
தானே தன்னதாக அபிமானித்து இருந்தது –

புண்ணிரந்த வள்ளுகிரால் –
புண் நெருங்கி
கூரிய உகிராலே
ஹிரண்யனைப் பிளந்து பொகட்டவன் -என்னுதல்
அன்றிக்கே
அவனுடைய புண் பட்ட நெஞ்சை பிளந்து -என்றுமாம்

பூமி யடங்கத் தன்னுடையதாக அபிமானித்து   இருந்த
மகா பலி யஞ்ஞ வாடத்திலே சென்று
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –
ரஷணத்துக்கு பரிகரமான திருவாழியை உடைய கையாலே
பூமியை இரந்து
அளந்து கொண்ட பிரகாரம்
முரணை வலி தொலைதற்  காமென்றே –

சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து
அர்த்தித்வம் தோற்ற நின்ற சௌலப்யத்தைக் கண்ட நாட்டார்
நெஞ்சு நெகிழும் என்றே

முரண் –
அரண் அழியும் என்று நீ மண் இரந்து கொண்ட வகை
தன்னது என்று தர உகக்குமாகில் –
நாம் இன்று பெற்றோமானால் ஆகாதோ என்று –
அநபாயினியான பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் தரக் கொள்ளுமா போலே –

——————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading