ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -27 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆக திருமலையிலே வந்து நிற்கிற படியை அனுசந்தித்தார்
அந்த நிலை தன்னையே கொண்டு இவனுடைய கைகள் ஆனவை
உகவாதார் மண் உண்ணும்படி வளர்ந்தவை என்று கொண்டு
நிச்சயிக்கலாம் படி நின்றது என்கிறார் –

————————————————

மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை –27-

பதவுரை

மலையால்–கோவர்த்தன கிரியைக் கொண்டு
குடை கவித்து–குடையாகப் பிடித்தும்,
மா வாய் பிளந்து–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசி யென்னும் அஸுரனுடைய வாயைப் பிளந்தும்,
சிலையால்–வில்லைக் கொண்டு
மராமரம் ஏழ் செற்று–ஸப்த ஸால விருக்ஷங்களை அழித்தும்,
(இச் செயல்களோடு நிற்காமல்)
கொலை யானை–கொலை செய்வதாக வந்த குவலயா பீடமென்னும் யானையினுடைய
போர் கோடு–சண்டை செய்ய உதவியாயிருந்த தந்தங்களை
ஒசித்தனவும்–பிடுங்கினவையும்.
பூ குருந்தம்–பூ வோடு கூடிய குருந்த மரத்தை
சாய்த்தனவும்–வேரோடே பறித்துத் தள்ளினவையும்
(எவை யென்றால்)
கார்–(கம்பீரமாக முழங்குவதில்) மேகத்தை யொத்த
கோடு–சங்கை
பற்றியான்–ஏந்தி யிருக்கின்ற பெருமானுடைய
கை–திருக் கைகளே யாகும்.

—————————————-

வியாக்யானம் –

மலையால் குடை கவித்து –
வர்ஷத்துக்குக் குடை என்று ஒன்றை இட்டுப் பரிஹரிக்கக் கடவதாய் இருக்கும் இறே
அதில் அவன் இவ்வர்ஷத்தை எத்தை இட்டுப் பரிஹரித்தது என்னில்
ஒரு மலையைக் குடையாகக் கொண்டு கிடீர் – என்கிறார்

இந்த்ரன் ஆசூர பிரக்ருதி அல்லாமையாலே
பசி க்ராஹத்தாலே செய்தான் ஆகில்
மலையை இட்டு நம்மை நோக்கிக் கொள்வோம் -என்று நலிவைப் பரிஹரித்து விட்டான் –

மாவாய் பிளந்து –
பண்ணின ப்ராதி கூல்யத்தின் கனத்தாலே கேசியைக் கொன்ற படி
நாரதாதிகள் கூப்பிடும்படி வந்த கேசியை நெட்டிக் கோரையைக்
கீண்டாப் போலே வாயைக் கிழித்துப் பொகட்டு –

சிலையால் மராமரம் ஏழ் செற்று –
அவ்வதாரத்துக்கு அடுத்த ஆயுதத்தாலே
மராமரம் ஏழையும் எய்து –
அதுவும் இவர்க்கு ஒரு போகியாய்த் தோற்றுகிற படி

கீழும் மேலும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரமாய் இருக்க
நடுவே ராமாவதாரத்தை அனுபவிக்கிறார் இறே
அதுக்கும் ஒரு ஆஸ்ரிதனுக்கு விச்வசிப்பித்துக் கார்யம் செய்த படி இறே –

கொலையானைப் போர்க்கோடு ஒசித்தனவும் –
அங்கு ஷத்ரியன் ஆகையாலே சிலையாலே கார்யம் கொண்டான்
இங்கு இடையன் ஆகையாலே முன் கை உரத்தாலே கார்யம் கொள்ளுகிறான்

கண்ணுக்கு இலக்கானாரை விழ விட்டுக் கொண்டு சஞ்சரியா நிற்பதான
குவலயா பீடத்தின் உடைய யுத்தத்துக்கு பரிகரமான
கொம்பை முறித்துக் குட்டிச் சுவர் போலே தள்ளிற்றும் –

பூங்குருந்தம் சாய்த்தனவும் –
அடியே பிடித்து
தலை யளவும் செல்லப் பூத்து
பிள்ளைக்கு ஆகர்ஷகமாய் நின்ற குருந்திலே பூப் பறித்து
லீலா ரசம் அனுபவிக்க அத்தைத் தள்ளி விட்டதும்

கார்க்கோடு பற்றியான் கை
இவை எல்லாம் கார்க்கோடு பற்றியான் கை கிடீர் செய்தது என்கிறார்

காரின் தன்மையை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைப் பற்றினவன் உடைய கை கிடீர்
கோஷத்துக்கும் ஸ்ரமஹரதைக்கும் மேகத்தோடு ஒக்கச் சொல்லுகிறது

அன்றிக்கே
திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் இருந்த போது
மேகத்தைப் பற்றி இருந்த சங்கம் போலே இருந்தது -என்றுமாம்

ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் பிடிக்கவும் பொறாத மிருதுவான கையைக் கொண்டு கிடீர்
இத் தொழில்கள் எல்லாம் செய்தது

கீழ் பஹூ வசனமாகச் சொல்லிக் கொடு போந்ததே யாகிலும்
இங்கே கேவல ஏக வசனமாகத் தலைக் கட்டப்
பாங்கும்
பிராப்தியும் உண்டு-

———————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading