அவதாரிகை –
அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய இழவும் தீர்க்கைக்காக
திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர் என்கிறார் –
————————————-
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை –26-
பதவுரை
எழுவார்–(தாங்கள் விரும்பின ஐஸ்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐஸ்வர்யார்த்திகளும்
விடை கொள்வார்–(தாங்கள் விரும்பின கைவல்ய மோக்ஷம் கைப்பட்ட பின் எம்பெருமானைத் திரும்பிப் பாராமல்)
விடை பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும்
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்–இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை
ஒரு நாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய
இம் மூவகை அதிகாரிகளுடைய
வினை சுடரை–(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீ வினையாகிய நெருப்பை
நந்துவிக்கும்–அணைக்கின்ற
வேங்கடமே–திருவேங்கட மலையே
வானோர்–நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை–ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும்–தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற
மலை–மலையாகும்.
——————————————–
வியாக்யானம் –
இம் மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம் என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்ம ப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப–கீதை -7-16-
பரதர்ஷப அர்ஜுந:-பரதரேறே அர்ஜுனா!
அர்தார்தீ-பயனை வேண்டுவோர்,
ஆர்த:-துன்புற்றார்,
ஜிஜ்ஞாஸு:-அறிவை விரும்புவோர்,
ஜ்ஞாநீ-ஞானிகள் என,
சதுர்விதா ஸுக்ருதிந: ஜநா:-நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்,
மாம் பஜந்தே-என்னை வழிபடுகின்றனர்.
நற் செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே,
துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என. நான்கு வகையார்–
எழுவார் –
தம் தாமுடைய த்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்தவாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இறே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-என்கிறபடியே –
விடை கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று ஆத்ம அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இறே கைவல்யத்துக்கு –
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய ஸூசகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்
யேன யேன ததா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவஸ்தைகளிலும் கிட்டி நின்று அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து
எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய ஸூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும் திரு மலையில் அன்றோ -என்கிறார் –
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது
ஐஸ்வர்ய விரோதி
ஆத்ம பிராப்தி விரோதி
பகவத் ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்
மூவர்க்கும் உத்தேஸ்ய விரோதிகளைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விஸ்லேஷம் –
வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய ஸூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குண அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்
இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –
—————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply