திரு நெடும் தாண்டகம்–30–மின்னு மா மழை தவழும் மேக வண்ணா–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

நிகமத்தில் –
ஸ்வ லாபத்தை சொல்லா நின்று கொண்டு
இப் பிரபந்தத்தை அத்யவசித்தவர்கள் உடைய
சாம்சாரிகமான சகல துக்கங்களையும்
தாங்களே முதலரிய வல்லார் –
என்கிறார் –

(“பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே“ என்று
பயனுரைக்கும் முகத்தால்
அப்படிப்பட்ட பேற்றைத் தாம் பெற்று மகிழ்ந்தமை தொனிப்பிக்கப்பட்டதாகும்.)

—————————————————

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா
விண்ணவர் தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த
அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
மானவேல் பரகாலன் கலியன் சொன்ன
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப்
பழ வினையை முதலரிய வல்லார் தாமே -30-

பதவுரை

முனிவரோடு அமரர் ஏத்த-முனிவர்களும் தேவர்களும் ஸ்தோத்ரம் பண்ண அன்னமாய் ஹம்ஸ ரூபியாய் அவதரித்து
அரு மறையை-அருமையான வேதங்களை
வெளிப்படுத்த-பிரகாசிப்பித்த
அம்மான் தன்னை-ஸர்வேஸ்வரன் விஷயமாக,
மன்னு மா மணி மாடம் மங்கை வேந்தன்-சாஸ்வதமான சிறந்த மணி மாடங்களை யுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரும்
மானம் வேல்-பெருமை தங்கிய வேற்படையை யுடைவரும்
கலியன்–திருமங்கை யாழ்வார்
மின்னும் மா மழை தவழும் மேகம் வண்ணா-‘மின்னலோடு கூடியும் மிகவும் குளிர்ந்தும்
தவழ்ந்து வருகின்ற மேகம் போன்ற வடிவை யுடையவனே!
விண்ணவர் தம் பெருமானே–தேவாதி தேவனே!
அருளாய்-அருள் புரிய வேணும்
என்று சொன்ன–என்று பிரார்த்தித்து அருளிச் செய்த
பன்னிய -மிகவும் பரம்பின
தமிழ் நூல்-தமிழ் சாஸ்த்ரமாயிராநின்ற
மாலை-இச் சொல் மாலையை
வல்லார் தாம்–ஓத வல்லவர்கள்
தொல்லை–அநாதியான
பழ வினையை–முன்னே வினைகளை
முதல்-வேரோடே
அரிய வல்லார்–களைந்தொழிக்க வல்லவராவர்.

ருஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் ஸ்தோத்ரம் பண்ண
ஹம்ஸ ரூபியாய்
பெறுதற்கு அரிய வேதத்தை பிரகாசிப்பித்த ஸர்வேஸ்வரன் விஷயமாக நிலை பெற்ற
விலை உயர்ந்த ரத்னங்களால் செய்த மாடங்களை யுடைத்தான திரு மங்கைக்கு ராஜாவாய்
பெருமை தங்கிய வேலை யுடையராய்
பிரதி பக்ஷத்தை வென்றவராய் கலி தோஷத்தைப் போக்கின ஆழ்வார்
மின்னலை யுடைத்தாய் தர்ச நீயமாய் வர்ஷியா நின்றுள்ள
மேகத்தினுடைய வடிவை யுடையனாய் நித்ய ஸூரி நிர்வாஹகனானவனே
கிருபை செய்து அருள வேணும் என்று அருளிச் செய்த ஸ்வரூப ரூப குண விபூதிகளைப் பிரதிபாதிப்பதாய்
லக்ஷணோ பேதமாய் தமிழ் பாஷையாய் மாலா ரூபமான இப் பிரபந்தத்தை
அர்த்தத்தோடே கற்க வல்லவர்கள் அநாதி ஸித்தமான ப்ராரப்த கர்மத்தை
முதலோடே அரிந்து விடுகைக்குத் தாங்களே சமர்த்தராவார்கள் –

———————————————————-

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா –
மின்னி முழங்கி வில் விட்டு
தர்ஸ நீயமாய் –
வர்ஷியாது இருப்பதொரு வர்ஷூக வலாஹகம் போலே
இருந்துள்ள வடிவை உடையவனே –

ஒரு நீர்ச் சாவியிலே ஒரு காள மேகம் வர்ஷித்தால் போலே
அடி நாயேன் நினைந்திட்டேனே -என்று
இவருடைய ஆர்த்த நாதத்தை கேட்டு -இவருடைய தாபம் எல்லாம் நீங்கும்படியாக
குளிர நோக்கிக் கொண்டு -காளமேக நிபஸ்யமமான வடிவோடு வந்து
முகம் காட்டின படியைச் சொல்கிறது –

கீழில் பாட்டிலே –
பரோஷ நிர்த்தேசம் பண்ணி இருக்க
இங்கே அபரோஷித்துச் சொல்லுகையாலே -வந்து முகம் காட்டினமை தோற்றுகிறது –

பிரணய ரோஷம் அகிஞ்சித்கரமான தசையிலும்
ஸ்வ தோஷ ஞாபநம் கார்யகரமான படி –

நம் ஆழ்வார் (உயர்வற உயர் நலம் உடையவன் என்று  )ஜகத் காரணத்வத்திலே உபக்ரமித்து –
அவா வறச் சூழ் அரியை அயனை அரனை -என்று ஜகத் காரணத்தோடு தலைக் கட்டினார்

இவர் வடிவிலே -மணிவுருவில் பூதம் ஐந்தாய் -என்று -உபக்ரமித்து
மின்னு மா மழை தவழும் -என்று வடிவோடு தலைக் கட்டுகிறார் –

விண்ணவர் தம் பெருமானே –
இவ் வடிவைப் படியிட ஜீவித்து இருக்குமவர்களைச் சொல்லுகிறது –
அயர்வறும் அமரர்களுக்கு உன்னை அனுபவிக்க கொடுத்துக் கொண்டு இருக்கிறவனே –

(திருமேனி குணம் அனுபவமே அன்னம் –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னான் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத)

கடலிலே வர்ஷித்தால் போலே அவர்களுக்கு உன்னைக்
கொடுக்குமது ஒரு ஏற்றமோ –

அவர்கள் உன்னை சதா தர்சனம் பண்ணுமா போலே
நானும் உன்னை
சரீர சம்பந்தம் அற்று
சதா தர்சனம் பண்ணும்படி கிருபை பண்ணி அருள வேண்டும்

அருளாய் என்று
பரம பக்தி பர்யந்தமான விடாய் – பிறந்த இடத்திலும் இரக்கமே சாதனம் என்று இருக்கிறார் –

ஆழியான் அருளே -என்று விஷயாந்தர நிவ்ருத்திக்கும்
இரக்கமே சாதனம் -என்கிறார் –
பகவத் அனுபவத்துக்கும் இரக்கமே சாதனம் -என்கிறார்-

(வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல் கணார் கலவியே கருதி* 
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். )

அன்னமாய் –
தமக்கு அவன் வந்து தன்னைக் கொடுத்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார் –

ப்ரஹ்மாவுக்கு பிரமாணத்தை வெளி யிட்டால் போலே யாய்த்து
தமக்கு பிரேமேய பூதனான தன்னை வெளி இட்ட படியும் –

முனிவரோடு அமரர் ஏத்த
ரிஷிகளோடே கூட ப்ரஹ்மாதிகள் வேத சஷூஸ்சை
இழந்தோம் என்று
தன்னை ஆஸ்ரயித்து ஏத்த –
ரிஷிகளுக்கு ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக பிரமாண அபேஷை உண்டு
ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்ர்ஷ்டாதி வியாபாரத்துக்கு பிரமாண அபேஷை உண்டு –

அன்னமாய் –
அபௌருஷேயத்வம் குலையாத படி
ஹம்ஸ ரூபியாய் –

அரு மறையை –
பெறுதற்கு அரிய வேதம் –
பெறுதற்கு அரியது பிரமேயம் அன்று –
பிரமாணம் ஆய்த்து –

வெளிப்படுத்த –
பிரமாணத்துக்கு உத்பத்தி விநாசம் ஆவது
பிரகாச -அப்ரகாசங்கள் -என்கை –

அம்மான் தன்னை –
சர்வேஸ்வரன் இவர்களுக்கு வேத பிரதானம்
பண்ணுகைக்கு அடி
உடையவன் ஆகையாலே -என்கை –

மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்
இவர் தரித்த வாறே
ஊரும் ஸ்திரமான படி –

கல்பாவசாநத்து அளவும் அழிவு இன்றிக்கே
ஸ்லாக்கியங்களான ரத்னங்களாலே
செய்யப்பட மாடங்களை உடைத்தான -திருமங்கை –

மங்கை வேந்தன் –
பஷியின் காலில் விழுந்தவர்
திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனார்

(“அரசமர்ந்தானடி சூடுமரசையல்லால் அரவாகவெண்ணேன் மற்றரசுதானே“ என்றாற்போன்ற
அத்யவஸாயத்தின் கனத்தாலே இங்ஙனே பேசினாராயிற்று)

மான வேல் பரகாலன் –
கிஞ்சித் கரிக்கவும் பெற்றார் -என்கை –
அத் தலையிலே பரிவாலே எடுத்த வேல் -இறே –

மான வேல்
கா புருஷன் எடுக்கிலும்
திரு மங்கை மன்னன் ஆக்க வல்ல வேல் –
மான வேல் பரகாலன் -என்னுதல்-

பர காலன் –
கையில் வாளாலும்
பிரதி பாதனத்தாலும்
பிரதி பஷத்தை வென்று
வைதிக மரியாதையை ஸ்தாபித்தவர் –

(அபிமான துங்கன் செல்வ நம்பி போல் பகவத் பாகவத அபிமானம் உத்தேச்யம் -கொண்டாடத் தக்கதே
ஸ்ரீ பராசர பட்டராலே ஸ்ரீ மாதவாச்சார்யரை ஸ்ரீ நஞ்ஜீயராக்கிய ஸாஸ்த்ரம் அன்றோ -)

கலியன் –
உபயத்துக்கும் அடியான மிடுக்கை சொல்கிறது
கலி -மிடுக்கு
அங்கன் இன்றியே
கலி காலத்தை கடிந்தவர் -என்னுதல் –

(கலி ஹந்த –உன் தனக்கும் பொருள் கற்கலாம் -கலி கன்றி

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன் என்று காதலால் கலிகன்றி யுரை செய்த
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஓன்று இவை வல்லராய் யுரைப்பார் மதி யந்தவழ்
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்மை சொல்லில் வெண் சங்கம் ஓன்று ஏந்திய
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –7-10-10-)

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் –
பன்னுதல் -பரம்புதல்
ஸ்வரூப ரூப குண விபூதிகள் இத்தனையும்
விளாக் கொலை கொண்டு இருக்கை –

நூல் -சர்வ லஷணோபேதமாய் இருக்கை –
பின்பு லஷணம் கட்டுவாருக்கும் இது கொண்டு செய்ய வேண்டும்படி இருக்கை –

தமிழ் -சர்வாதிகாரமாய் இருக்கை –

மாலை
ஈஸ்வரனுக்கு சிரஸா தார்யமாய் இருக்கை –

(எம்பெருமானும் அவனடியார்களும் உகந்து முடி மேற் கொள்ளும் பிரபந்தமாதலால் மாலை எனப்பட்டது.)

தொல்லை இத்யாதி
கார்ய காரண ரூபத்தாலே
அநாதியாய் வருகிற -அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி
சம்பந்தங்களை
தாங்களே சவாசனமாக போக்க வல்லவர்கள்

வினை
அதாகிறது -புண்ய பாப ரூபமான கர்ம த்வயம்

இது தான் பூர்வ உத்தர ஆக (போய பிழையும் புகு தருவான் நின்றனவும் ) பிராரப்த ரூபமாய் இருக்கும்

இது தான் அல்லாத
ஜ்ஞான அநுதயம்
அந்யதா ஜ்ஞானம்
விபரீத ஜ்ஞானம்
ஸ்தூல சூஷ்ம ரூபமான அசித் சம்பந்தம்
வாசனா ருசிகளுமாகிற -விரோதி வர்க்கத்துக்கும் உப லஷணம் –

தொல்லைப் பழ வினை –
இவை தான் பழையதாய் இருக்கையும்
அடி காண ஒண்ணாதாய் இருக்கையும் -அதிசயத்தைப் பற்றி சொல்லுதல்
அறவும் பழையதான வினை -என்னுதல் -(அநாதி அன்றோ )

தாமே –
இப் பிரதிபந்தங்களை எல்லாம் தாங்களே சவாசனமாக போக்க வல்லார் –
ஈஸ்வரன் முழங்கை தண்ணீர் வேண்டாம் -என்கை –

(அனுஷ்டித்த கோபிமாருக்கும் – அநு கரித்த நாய்ச்சியாருக்கும் -அனுசந்தானம் செய்யும் நம்மோடு வாசி அற
செங்கண் திரு முகத்துக்குச் செல்வத் திரு மாலால் எங்கும் திரு வரும் பெற்று இன்புறுவோம் அன்றோ)

அருளாய் என்று முனிவரோடு அமரர் ஏத்த -என்று
அவர்களுக்கு விசேஷணம் ஆன போது –

எம்பெருமானைக் கண்ட போதே -என் அவா அறச் சூழ்ந்தாயே – என்ன சக்தர் அல்லாமையாலும்
கீழில் பாட்டில் போலே இப்பாட்டில் இயலின் பல ஹானி தோற்றி இராமையாலும்
எம்பெருமான் திரு மேனி வர்ஷூக வலாஹம் போலே இருக்கையாலும்
அயர்வறும் அமரர்களுக்குத் தன்னை புஜிக்க கொடுத்துக் கொண்டு இருக்கும்படியைச் சொல்லுகையாலும்
தாமே வேல் எடுக்க சக்தராகையாலும்
பிரதி பஷத்தை நிரசித்தபடியை அருளுகையாலும்

இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றாலும்
தம்முடைய பல ஹானி போய்
தம்முடைய அபேஷிதம் பெற்று
திருப்தரானார் என்னும் இடம்
இப் பாட்டிலே வ்யக்தம் –

முனிவரோடு அமரர் ஏத்த –
அன்னமாய் அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் மான வேல் பரகாலன் கலியன்
மின்னு மா மழை தவழும் மேக வண்ணா விண்ணவர் தம் பெருமானே அருளாய் -என்று -சொன்ன –
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லைப் பழ வினையை முதலரிய வல்லார் தாமே -என்று அந்வயம் –

—————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading