ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –15-முன்பொலா ராவணன் தன் -ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

அவதாரிகை –

முன்புத்தை இழவு எல்லாம் தீர
நீராட்டுகிறார் –

(இவ் வாழ்வார் தாமும் பெரியாழ்வாரைப் போலவே சில வழிபாடுகள் செய்யப் பெற வேணுமென்று பாரித்து
மாநஸிகமாகவே நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார் இப் பாட்டிலும் மேற் பாட்டிலும்

கோவை வாயாள் பொருட்டு -நம்மாழ்வாரது மானசீக திருவாராதனம்ஆறு அங்கம் கூற அவதரித்த இவரும் இங்கு

திருவாராதனத்துக்கு அங்கங்களான நீராட்டுதலும் பூச்சூட்டுதலுஞ் செய்து மகிழ்கிறார்.)

———————————————-

முன்பொலா ராவணன் தன் முது மதிள் லங்கை வேவித்து
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு
என்பொலாம் உருகி யுக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே -15-

பதவுரை

முன்-முன் பொருகால்
பொலா–பொல்லாதவனான
இராவணன் தன்–இராவணனுடைய
முது மதிள் இலங்கை–வலிய மதிள்களை யுடைத்தான இலங்கா புரியை
வேவித்து–சுடுவித்து
அனுமன்–சிறிய திருவடி
அன்பினால் வந்து–மகிழ்ச்சியுடனே வந்து
ஆங்கு–கிஷ்கிந்தையாலே
அடி இணை பணிய–உபய பாதங்களையும் தொழும்படியாக
நின்றாற்கு–நின்ற பெருமானுக்கு
அடியனேன்–அடியேன்
என்பு எலாம்–எலும்பெல்லாம்
உருகி–உருகி
உக்கிட்டு–இற்றுப் போய்
என்னுடை–என்னுடைய
நெஞ்சம் என்னும்–நெஞ்சென்று சொல்லப் படுகிற
அன்பினால்–ஆர்வத்தினால்
ஞானம் நீர் கொண்டு ஆட்டுவன்–ஞானமாகிற தீர்த்தத்தைக் கொண்டு திருமஞ்சனம் செய்வேன்.

———————————————————————

முன்பொலா ராவணன் தன்-
அதுவும் ஒரு காலமே -என்று வயிறு பிடிக்கிறார் –
ஸ்ரீ ராமாயணத்தில் பேசின பரப்பை எல்லாம்
ஒரு வார்த்தையாலே சொல்லுகிறார் –
ஏக த்ரவ்யத்தை பின்னம் ஆக்கினாப் போலே
தாயையும் தமப்பனையும் பிரித்த பையல் –

(சுரி குழற் கனிவாய்த் திருவினைப் பிரிந்த கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன்
என்ற பொதுவிலே கொடுமையிற் கடுவிசை யரக்கனாகையாலே பொல்லாதவன் என்று பொதுவிலே
சொல்லாமத்தனை யொழியப் பிரித்துப் பாசுரமிடப் போகாதென்க.)

முது மதிள்
வலித்த மதிள் -(நீர் -மதிள் -வந துர்க்கங்கள் )

இலங்கை வேவித்து –
திருவடி வாலில் நெருப்பாலே சுடுவித்து –
நெருப்பும் காற்றும் கூடினால் போலே இறே
வாயு புத்திரன் வாலில் -நெருப்பு –

(இட்டு வா என்றால் சுட்டு வர வேண்டுமே-கணையாழியை இட்டு வா சொல்லி-இலங்கையை சுட்டு -வேவித்து வந்தான்)

அன்பினால் அனுமன் வந்து –
காலால் அன்று போலே –
அந ஸனம் தீஷித்தும் –
கடல் கடந்தும் –
யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டி திருவடியைத் தொழுது –
த்ரஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதி யோடு இறே வந்தது –

(த்ருஷ்டா தேவேதி ஹனுமத் வத நாதம் ருதோபமாம்
ஆகர்ண்ய வசனம் ராமோ ஹர்ஷ மாப ஸ லஷ்மண -ஸூந்தர –64-37-

ஸீதா த்ருஷ்டா -சீதை பார்க்கப்பட்டாள்
ஸீதா அத்ருஷ்டா -என்றும் பிரிக்கப்படலாமே -சீதா தேவி பார்க்கப் படவில்லை )

(’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.(சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

(வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -15-

வில்லால் -நாலிரண்டு அம்பு விட்டவாறே வந்து முகம் காட்டி முது எடுத்துக் கொடுத்தவாறே
அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று -ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை –

இங்கன் அன்று ஆகில்  இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்தாய் தலைக் கட்டாது-
அன்பினால் -வில்லால் இரண்டும் ஸாபிப்ராயம்-)

ஆங்கு அடியிணை பணிய நின்றார்க்கு –
பிராட்டி விருத்தாந்தம் கேட்டு
ஸ்தப்தராய் நின்றவர்க்கு –

என்பொலாம் உருகி யுக்கிட்டு –
அந் நிலையை நினைத்து சிதிலர் ஆனபடி –

என்னுடை நெஞ்சம் என்னும் அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன்
என் நெஞ்சிலே உண்டான அன்பன்று –

நெஞ்சு என்ற பேராய்
பகவத் ப்ரேமமே வடிவாய் இருக்கிற அன்பாலே
ஜ்ஞானம் ஆகிற திரு மஞ்சனத்தாலே
நீராட்டுவன் –

அன்புடனே கூடின நீர் –
அந் நீருக்கு சம்ஸ்காரம் இறே அன்பு –

அடியனேனே –
அங்குத்தைக்கு யோக்யராவது
அடியார் ஆனால் போலே காணும் –

——————————————————————————— –

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading