ஸ்ரீ திருப்பாவை – வங்கக் கடல் கடைந்த -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

அவதாரிகை –

நிகமத்தில் –
இப்பிரபந்தம் கற்றார் –
பிராட்டியாலும் எம்பெருமானாலும்
சர்வ காலமும்
விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –

கற்றாருக்கு
அனுஷ்டித்தாரோபாதியும்
அனுகரித்தாரோபாதியும்
பலம் சித்திக்கும் -என்கை

கன்று இழந்த தலை நாகு
தோற்கன்றுக்கும் இரங்குமா போலே
இப் பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –
என்று பட்டர் அருளிச் செய்வர்

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

பதவுரை

வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த–(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறைகொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திருமுகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ்விடத்தும்
திருஅருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க
மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் –
கடைந்த போது சுழன்று வருகையாலே
கடலடைய மரக்கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து
அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –

கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக
கடல் கடைந்தபடி –

ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி
பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த
கிருஷ்ணன் உடைய
ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்
லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் -என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து
அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை –
ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும் போக்கினவனை —

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் -இங்கு
இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்
தாங்கள் அபேஷித்த படியே -அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீ கார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீ காரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே
அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப் பறை கொண்ட வாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு
தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

பட்டர்பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன –
பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே
சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே
திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இ றே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே
உபநிஷத் தமிழ் ஆனபடி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே
போக்யமுமாய் இருக்கையும்
தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே
விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –
இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்

இப்பரிசு உரைப்பார்-
இப் பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே
அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்
இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் –

செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீ ய பதியாலே –
இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே
த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்
பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி
பிரசாதத்தைப் பெற்று

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ஸ்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் –
விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் –
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading