ஸ்ரீ திருப்பாவை – மாலே மணி வண்ணா -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

அவதாரிகை –

உங்களுக்கு அபேஷிதம் என் -என்ன
நோன்புக்கு வேண்டும் உப கரணங்களையும் அபேஷிக்கிறார்கள் –

கிருஷ்ண சம்ஸ்லேஷ ரச உத்சாகரான இவர்கள்
இவற்றை அபேஷிக்கைக்கு அடி -என் என்னில்

அந்த சம்ஸ்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை பிரஸ்தாவிக்கையாலும்
கிருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும் –
அவனுடைய திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும்
நோன்புக்கு அங்கங்களை வேண்டிக் கொள்கிறார்கள்-

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமியடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

மாலே-

முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்
மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந் நீர்மை இன்றிக்கே
காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-
நீங்கள் வந்தது என் -என்ன
வந்த கார்யத்தைச் சொல்லுகிறார்கள் –

மார்கழி நீராடுவான் –
மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-
ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –
அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –
மார்கழி நீராட்டமாவது என் -என்ன –
இது பிரசித்தம் அன்றோ -என்ன –

மேலையார் செய்வனகள் –
பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –
ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –

வேண்டுவன கேட்டியேல் –
கேட்புதியாகில் -என்கிறது
அந்ய பரதையாலே –
அந்ய பரதை என் -என்னில்
பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே
இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும்
துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே
தட்டி எழுப்புகிறார்கள் –

இத்தால் -ஸ்வாபதேசத்தில்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது –
கார்ச்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது –

கார்ச்யத்தாலே -வைராக்கியம் தோற்றுமோ -என்னில்
கர்ச்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய்
அத்தால்
விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை சொல்லுகிறது –

உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமோபாதி
உங்கள் வார்த்தை செவிக்கு போக்கியம் அன்றோ
சொல்லுங்கோள் என்ன -சொல்லுகிறார்கள்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஜகத்தை எல்லாம் வாழும்படிக்கு
த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி இறே தாரகம் –
அப்படியே நாடெல்லாம் இந்த-த்வனி கேட்டு வாழ வேணும் –
இவர்கள் தாங்களும் -வலம்புரி போல் நின்று அதிர வேணும் -என்று இறே சொல்லிற்று –

பாலன்ன –
பாலைத் திரட்டினாப் போலே இருக்கை —இப்படி இருப்பன பல சங்கு வேணும் –

போய்ப்பாடு –
பேரிடமாய் இருக்கை –
இடம் உண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
புகழ் என்றுமாம் –
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினான் என்கிற புகழ் –

பின்னையோ வென்ன –
சாலப் பெரும் பறையே –
ஒரு மன்றில் த்வநிக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க த்வநிப்பது ஒரு பறை வேணும் –

பின்னையோ வென்ன
பல்லாண்டு இசைப்பாரே –
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் –

பின்னையோ வென்ன –
கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –

கொடி
திருக் கொடியாட வேண்டும் –

விதானம் –
மேல் கட்டி வேணும் –
என்று இவற்றை அபேஷிகக –

சங்கும் பல கிடையாது–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை கொள்ளுங்கோள்-என்றான்
தன்னைப் போலே இருப்பார் சில உண்டாகில் இறே
புறம்பு–ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் சங்கு உண்டாவது –

பறைக்கு பாரோர்கள் எல்லாம் மகிழ–
பறை கறங்க கூத்தாடின போது
திரு வரையில் கட்டின பறையையும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்
விளக்குக்கு -நப்பின்னைப் பிராட்டியையும் –
கொடிக்கு -பெரிய திருவடியையும்
மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள் என்றான் –

விதானத்துக்கு திருவவதரித்த அன்று
பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த-திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில்
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய-ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே –
அத்த வாளத்தைக் கொடுத்தான் –
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு இறே வாட்டம் தணிய சொல்லிற்று –

ஓர் ஓன்று போராது –
இப்படி இருப்பன பல வேண்டும் -என்ன

இல்லாததை தேடப் போமோ -என்ன
உனக்கு அரியது உண்டோ -என்ன–எனக்கு எளியதாய் இருந்ததோ -என்ன

ஆலினிலையாய் –
சிறியதொரு வடிவைக் கொண்டு–சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து–
பவனாய் இருந்ததொரு ஆலம் தளிரிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ —
லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்க வல்லை என்று கருத்து –

அருள்–
வேண்டாது ஒழியில்-செய்யலாவது இல்லை —
சக்தி இல்லாமை இல்லை
இத் தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் பிரசாதம் என்கை –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading