ஸ்ரீ திருப்பாவை -மாரி மலை முழஞ்சில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –மூவாயிரப்படி –

ஸ அபராதரைப் போலே சாந்த் வனம்-நல்ல வார்த்தை – பண்ணுமவன் ஆகையாலே
பெண்களை சாந்த் வனம் பண்ணி அருளினான் –

அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யத்தை கேட்டு அருள வேணும் என்கிறார்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானை —
தம் குற்றம் என்று நினைத்து -மதுர பாஷணங்களாலே-சந்தோஷிப்பித்தாப் போலே

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாரி–மழைகாலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்

மாரி மலை முழஞ்சில்-
வர்ஷா காலம் ராஜாக்கள் படை வீடு விட்டு
புறப்படதாப் போலே
சிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது –

பெருமாள் வர்ஷா காலம் மால்யவானில் எழுந்தருளினாப் போலே –
விஸ்லேஷித்தார் கூடும் காலமுமாய்
கூடி இருந்தார் போக ரசமும் அனுபவிக்கும் காலமுமாய் இருக்க
நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவமோ -என்கை –

மன்னிக் கிடந்து –
மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமையாலே
குவடு போலே பொருந்தி
வீசுவில் விட்டு எழுப்பினாலும்
எழுப்பப் போகாது இருக்கை –

மன்னிக் கிடந்து -உறங்கும் –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம்படி
பொருந்திக் கிடக்கிற -என்னவுமாம் –

இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று
நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இறே
முலையோடே பொருந்திக் கிடக்கிற படி –

உறங்கும் –
சம்சாரிகள் உறக்கம் போலே
தமோபிபூதியால் அன்றே இவன் உறக்கம் –
வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும்
ஆகையால் -அவ் உறக்கத்திற்கு ஸ்மாரகமாய் இருக்கை –

சீரிய சிங்கம் –
உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி
வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை –
ஸ்மாரகமாய் இருக்கை –

அறிவுற்றுத் –
பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –
சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்
இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –

தீ விழித்து-
பிரதம கடாஷ சன்னி பாதத்திலே
பேடைக்கும் அருகு நிற்க ஒண்ணாது இருக்கை –
ஐஸ்வர்யமான தேஜஸ் முன் ஒருவர்க்கும் நிற்க ஒண்ணாது இருக்கை –

வேரி மயிர் பொங்க –
வேரி -பரிமளம்
ஜாதி உசிதமான கந்தம் -உளை மயிர் பொங்க -சிலும்ப
ஸ்மா ரகமாய் இருக்கை –

எப்பாடும் பேர்ந்துதறி –
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே
நாலுபாடும் போருகிறபடி –

உதறி –
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி –

மூரி நிமிர்ந்து –
உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி –

முழங்கிப் –
ஸ்வ வ்யதிரிக்த மிருகங்கள் முழுக் காயாக அவிந்து கிடக்கும் படி –
பெண்காள் வந்தி கோளோ-வென்கை-

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்
சிம்ஹமோ நமக்குத் திருஷ்டாந்தம் என்ன

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு திருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோம் அத்தனை –
வடிவு அழகையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ணப் போமோ –
பூவைப் பூவின் நிறம் உனக்கு திருடாந்தமான வன்று இறே
சிம்ஹம் உனக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -என்னவுமாம் –

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்

பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-
சதுர்க்கதி இறே
நடையிலே
ரிஷபத்தின் உடைய வீறும்
மத்த கஜத்தின் உடைய மதிப்பும்
புலியினுடைய சிவிட்கும்
சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை

நமக்கு இவை எல்லாம்
நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –

இங்கனே போந்தருளி –
படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே
தனி மண்டபத்திலே வார்த்தை யாக வேணும் –

கோப்புடைய –
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்
தர்ம ஜ்ஞானாதிகளாலும்
அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –

சீரிய சிங்காசனத்து –
இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால்
அறுதியாய் இருக்கை –
கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும்
தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும்
பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும்
அமோகமாய் இருக்கை –

அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான
சிம்ஹாசனம் என்றுமாம் –

இருந்து –
நடை அழகு போலே
இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –

கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே
உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –

தண்ட காரன்யத்தில் ரிஷிகளின் உடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக
பெற்றிலோமே என்று வெறுத்தாப் போலே
பெண்கள் நோவு பட பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று வெறுத்து –
அவர்களை அழைத்து
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன

இங்கனே சொல்ல ஒண்ணாது
பேர் ஓலக்கமாய் இருந்து கேட்டருள வேணும் -என்கிறார்கள் –

நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று
அநந்ய கதிகளாக சொல்லுவதே -என்று பொருது இலள்

அழகர் கிடாம்பி ஆச்சானை அருள் பாடிட்டு
ஓன்று சொல்லிக் காண் என்ன –
நம் இராமானுசனை உடையையாய் இருந்து வைத்து
அகதிம்-என்னப் பெறாய் -என்று அருளிச் செய்தார் –

ஆகையால் இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –
வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –
அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –

அதாவது –
அவர்களோடு ஆர்த்தியையும் காட்டி திருவடிகளிலே சென்று விழ
இரங்குவர் காண் என்று நினைத்து வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவசரம் இல்லாமையாலே
அனபியவ நீயர் ஆனார்
ஆனால் அவசரத்திலே சொல்லக் கடவோம் என்று இருந்தார்கள் –

ஆராய்ந்து அருள் –
நீங்கள் என் பட்டி கோள்-
என் செய்தி கோள் -என்கை

அதாவது
பெண்களை எழுப்புவது –
வாசல் காப்பானை எழுப்புவது –
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –
நம்மை எழுப்புவதாய்
போர வ்யசனப்பட்டி கோள் ஆகாதே -என்கை –

எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு
இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading