ஸ்ரீ திருப்பாவை – ஒருத்தி மகனாய் பிறந்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –மூவாயிரப்படி –

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.

ஒருத்தி –
சர்வ லோகங்களையும் நியாமகன் ஆனவனையும் கூட
நியமிக்குமவள் ஆகையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்
ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ் ஸூபண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி
ஒரு மகனைப் பெற்றபடி –

மகனாய் பிறந்து –
பிறந்த போதே
சொல்லிற்று செய்கை –
சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ –
பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –

பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்

நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –

அவன் பிறவி நமக்கு என்று கோல –
நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –

நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே
திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
கம்சாதிகள் தன்மை ஸூதிகா கிருஹத்திலே
ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ் விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –

ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து
கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்
கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –

மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே
இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-

நாட்டார் செய்வான செய்யப் பெறாதே
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்
முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது
அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வலரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது –
துஷ் பிரகிருதி யாகையாலே

தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக –
அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை
அதாவது பாகனி கொளுத்துகை –

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –
ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்
திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –
அவன் நினைவாலே பலம் என்கை –
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உகப்போடே அத்தைச் சொல்லி –

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து
பிரிந்தார் படும் பாடறிய
உன்னை நீ பிரிந்து அறியாயே –

மகிழ்ந்து –
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி
ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாகவேணும்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading