திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-9-4–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கொள்என்று கிளர்ந்துஎழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள்என்று தமம்மூடும்; இவைஎன்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய்து அடியேனை உனதுஅருளால் வாங்காயே.

    பொ-ரை : ‘‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று கிளர்ந்து வருகின்ற பெரிய செல்வமானது, நெருப்பைப் போன்று தங்களையழிக்க, பின்னையும் செல்வத்தைக் கொள்வாய் என்று பிறர் சொன்ன அளவிலே அறிவின்மையால் மூடப்பட்டு அச்செல்வத்தை விரும்புகின்ற இவை என்ன உலகு இயற்கை! வள்ளலே! மணி வண்ணா! உன் திருவடிகட்கே வரும்படி திருவருளைச்செய்து அடியேனை உன் திருவருளால் கைக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.

    வி-கு : ‘நெருப்பாக’ என்றது, ‘நெருப்பைப்போன்று இருக்க’ என்பது பொருள். ‘என்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘கொள்ளென்று தமம் மூடும்’ என்ற இடத்தில் ‘கொள்ளென்று தூண்டுதல், மனம்’ என்று கோடலுமாம்.

  ஈடு : நான்காம் பாட்டு. 1‘மக்கள், செல்வத்தை விரும்பினால், அது அழிவிற்குக் காரணமாதலைக் காணாநிற்கச் செய்தேயும், மீண்டும் அந்தச் செல்வத்தை விரும்புதலே இயல்பாம்படி இருக்கிற இதற்குக் காரணம் யாதோ? நான் இது கண்டு பொறுக்கமாட்டுகின்றிலேன்: முன்னம் என்னை இவர்கள் நடுவினின்றும் வாங்க வேண்டும்,’ என்கிறார்.

    கொள் என்று கிளர்ந்து எழுந்த பெருஞ்செல்வம் – இவன் தான் விரும்பாதிருக்கச்செய்தேயும் ‘கொள், கொள்’ என்று 2மொண்டெழு பானைபோலக் கிளர்ந்து வருகிற எல்லைஇல்லாத செல்வமானது. நெருப்பாக – 3‘அடியோடு அழிய’ என்னுதல்; 4அன்றிக்கே ‘தன்னுடைய அழிவிற்குக் காரணமாக’ என்னுதல். ‘செல்வம் அழிவிற்குக் காரணமாதல் யாங்ஙனம்?’ எனின், ‘இவன் வாழ்கிறான்’ என்கிற இது கேட்டுப் பொறுக்க மாட்டாமலே அன்றோ பிறர் இவனை அழிக்க வருவது? ஆதலால், தன் அழிவிற்குச் செல்வம் காரணமாதல் காண்க. கொள் என்று தமம் மூடும் – 5இப்படிச் செல்வமானது அழிவிற்குக் காரணமாதலைக் காணச் செய்தேயும், பிறர் இவனைக் ‘கொள், கொள்’ என்று தூண்ட, அறிவின்மையால் மூடப்பட்டவனாய் பேராசையாலே முன்பு அழிவிற்குக் காரணமான அச்செல்வத்தை ஏற்றுக்கொள்வான். ‘அறிவின்மையால்

மூடப்பட்டவனாய் விரும்புகிறான் என்பதனை இவர் அறிந்தவாறு யாங்ஙனம்?’ எனின், மீளவும் அச்செல்வத்தை அவன் விரும்பும் போது தமோ குணத்தாலே மூடப்பட்டவனாய்த்தானே இருத்தல் வேண்டும்?

    அன்றிக்கே, ‘கொள்’ என்று தூண்டுகிறது, மனமாகவுமாம். அன்றிக்கே, ‘இது அழிவிற்குக் காரணமாம்,’ என்று அறியச் செய்தேயும், இவனுடைய மனத்தைத் தமோ குணத்தாலே மறைப்பித்து, ‘அதனைக் கொள்’ என்று தூண்டி இவனை விரும்பும்படியாகச் செய்யும் இச்செல்வத்தினுடைய வலிமை,’ என்னலுமாம். 1‘மஹாரதரான வீடுமர் இறந்த பின்னரும், துரோணர் இறந்த பின்னரும், கர்ணன் இறந்த பின்னரும், சல்லியன் பாண்டவர்களை வெல்வான் என்ற ஆசையானது அதிகரித்தது,’ என்கிறபடியே, அதிரதர் மஹாரதர் அடையப்பட்டுப்போகாநிற்கச் செய்தேயும், பின்னையும் சல்லியனைக் கொண்டே பாண்டவர்களை வெல்லப் பார்த்தான் அன்றோ துரியோதனன்? இவை என்ன உலகியற்கை – இவை உலக வாழ்வுகள் சில இருக்கிறபடியே!

    வள்ளலே –  2‘செல்வம் அழிவதற்குக் காரணம்’ என்னுமதனை என் நெஞ்சிலே படுத்தி எனக்கு ஒளதார்யத்தைச் செய்தவனே! மணிவண்ணா -மாணிக்கப் பண்டாரத்தை அன்றோ ஒளதார்யம் செய்தது? 3சாதந அநுஷ்டானம், மற்றொன்றனைப் பண்ண அன்றாயிற்று. அன்றிக்கே, ‘செல்வம் முதலானவற்றில் வெறுப்பினைப் பிறப்பித்தது, 4பிடாத்தை விழவிட்டு வடிவழகைக் காட்டியாயிற்று,’என்பார், ‘மணி வண்ணா’ என்கிறார் என்னலுமாம். உன கழற்கே வரும் பரிசு – 1ஞானலாப மாத்திரத்தால் போதுமா? பேற்றினைப் பண்ணித் தரவேண்டாவோ? 2மயர்வுஅற மதிநலம் அருளினதைப் போன்று, துயர்அறு சுடரடி தொழுது எழப் பண்ண வேண்டாவோ? பசியை விளைத்தால் சோறு இட வேண்டாவோ? வள்ளல் செய்து – உன் திருவடிகளிலே நான் வந்து கிட்டும்படியாக ஒளதார்யத்தைப் பண்ணி. என்றது, ‘இவன் இப்பேற்றைப் பெறுவான்,’ என்று அங்கீகரித்து, என்றபடி. அடியேனை – 3‘பிறர் உடைமை நசியாமல் நோக்க வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்ற என்னை. உனது அருளால் – மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று பேற்றுக்கும் தனியே ஓர் அருளைச் செய்யவேண்டும். ‘வாங்காய்’ என்று அஃறிணையைப் போன்று சொல்லுகிறார். அதற்கு அடி, இத்தலையில் பரமபத்தி பர்யந்தமாகப் பிறந்தாலும், 4பெறுகிற பேற்றின் கனத்தைப் பார்த்தால், அத்தலையின் அருளாலே பெற்றதாம்படி இருக்கையாலே.

உனது கழல் கிடைக்கும்படி அருளாய்
சம்சாரத்தில் இருந்து வாங்காய் –
கொள் கொள் என்று நெருப்பு போலே செல்வம் ஆசை உண்டாக்கி
கிளர்ந்து எழும் -தமஸ் மூடி -இது என்ன உலகு இயற்க்கை
அர்தியாது இருக்கச் செய்தேயும் கொள்
நீள் செல்வம்  தான் வேண்டாதான் –
நெருப்பு -நசிக்கும் தனக்கும் விநாச ஹேது
பொறுக்க மாட்டாமல் பிறர் அழிக்க செய்வார்கள்

‘கொள்ளென்று தமம் மூடும்’ என்பதற்கு மூன்று வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார். முதல் கருத்து, ‘இப்படிச் செல்வமானது’ என்று
தொடங்கும் வாக்கியம். இரண்டாவது கருத்து, ‘அன்றிக்கே’ என்று
தொடங்கும் வாக்கியம். மூன்றாவது கருத்து, ‘அன்றிக்கே, இது அழிவிற்குக்
காரணமாம்’ என்று தொடங்கும் வாக்கியம்.

மனசும் கொள் கொள் சொல்லி
தமோ குணம் மேலிடப் பட்டு -அழிவுக்கு காரணம் ஆகுமே
நெருப்பு -ஆஸ்ரய -முதலில் அழிக்கும் -அது போலே ஐஸ்வர்யம் –
பெரும் செல்வத்தராய் திருமால் அடியாரை பூசிப்பார்களே பலன் சொல்லி -பின்பு
நெருப்பு எப்பொழுதும் த்யாஜ்யம் இல்லையே –
பக்குவப்படுத்த நெருப்பு வேண்டுமே –
பெரும் செல்வதை நெருப்பு என்கிறார் அளவோடு கொள்ள வேண்டும்
ஐஸ்வர்யமும் புருஷார்த்தம் அளவுக்கு அதிகமான ஆசை கொள்ள கூடாது
அதுவே எல்லாமாக கொள்ள கூடாது -அளவோடு செல்வ்சம் இருந்தால் அதை கொண்டு நாம் ஜீவிகலாம்
அளவுக்கு அதிகமான செல்வம் நாம் காக்க வேண்டும்
ஹதே பீஷ்மே -ஹதே துரோனே ஹதே கர்ண சல்யனுக்கு பட்டாபிஷேகம் வைத்து
ராஜ்ஜியம் நப்பாசையால் செய்தானே

வள்ளலே ஐஸ்வர்யம் விநாச  ஹேது புரிய வைத்து வள்ளல் தனம் காட்டி
மாணிக்க பண்டாரம் வைத்து -மணி வண்ணா -திருமேனி ஸ்வரூபம் வைத்து இருக்கும் பண்டாரம்
சாதனா அனுஷ்டானம் வேண்டாமே தானே காட்டி கொடுத்து
ஐஸ்வர்யம் விட்டு -குப்ச்யை பிறப்பித்தது திருமேனி காட்டி
மேலேயும் வேண்டும்
உனது கழல்
பிராப்தி வேண்டுமே ஞானம் மட்டும் போதாதே
மயர்வற மதி நலம் அருளிய பின்
துயர் அரு சுடர் அடி தொழுது எழப் பண்ண வேண்டுமே
பசியனுக்கு சோறு வேண்டுமே
அடியேனை பிறர் உடைமை காக்க பிறரை கேட்டு கொள்ளும்
உனது வச்துவ்சை உன்னை காக்க சொல் லும் என்னை
கைங்கர்யம் கொடுத்து
வாங்காய் -அசித் போலே பரம பக்தி இருந்தாலும் பெறுகிற பேற்றை பார்த்தல் அத்தலையால்
வந்தது என்றே இருப்பார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading