திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடந் தாள்வரை.

    பொ-ரை : படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடத்தினது மொய்த்த சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய தடாகங்களையுமுடைய திருத்தாள் வரையை, உங்கட்கு ஏற்படுத்திய ஆயுளின் முடிவில் எல்லையைச் சென்று குறுகி எய்த்து இளைப்பதற்கு முன்னர் அடைமின்.

    வி-கு : ‘சென்று குறுகி இளைப்பதன் முன் தாள்வரையை அடைமின்,’ என்க. பை – படம். தாள்வரை – மலையடிவாரம். இரண்டாமடியிலும் நான்காமடியிலும் யகரம் ஆசு எதுகையாய் வந்தது.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1ஆக, ‘திருமலையாழ்வார் எல்லார்க்கும் ஒக்க உத்தேஸ்யமான பின்பு எல்லாரும் ஒருசேரத் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்கிறார்.

    வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ – சர்வேசுவரன் நியமித்து வைத்த ஆயுளின் முடிவான எல்லையைச் சென்று கிட்டி, ‘திருமலைக்குப்

போக வேண்டும்’ என்னும் ஆசையும் மனத்தில் தொடர்ந்து கிடக்கவும் ‘பாவியேன் 1கரணபாடவ தசையுண்டாகப் பெற்றிலேன்’ என்னும் நிலை வருவதற்கு முன்னே செல்லுங்கள். ஆக, 2‘ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான இச்சரீரம் முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, ‘சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம் தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.

    3‘ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகி

தர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

    பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் – தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப்படுக்கையைக்காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்; 2திருமலையாழ்வார்தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும். மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாள் வரை – செறிந்த சோலையையும், பரப்பு மாறப் பூத்த தடாகங்களையும் உடைத்தான திருத்தாள்வரையை. எய்த்து இளைப்பதன் முன்னம் சென்று அடைமினோ. எய்த்தல் – நெஞ்சு இளைத்தல். இளைத்தல் – சரீரம் இளைத்தல்.

எல்லாரும் ஒக்க ஆஸ்ரயிக்க –
அழகரடிவாரத்தில் சேவை
இங்கே உச்சியில் சேவை
எல்லை குறுகிச் சென்று இளைப்பதன் முன்னம்
பைத்த பாம்பணையான்
மொய்த்த சோலை
பூம் தடம் தாழ்வரை
எய்த்து -சர்வேஸ்வரன் சரீர
நரகாநுபவம் அனுபவிக்க சரீரம் இல்லை
விசித்ரா தேவ சம்பந்தி ஈச்வராயா நிவேததி
சுமத்ரை -ஸ்ருஷ்டப்யம் வனவாசா -இதற்காக பெறப் பட்டாய்
நாமும் திருவேம்கடமுடையான் சேவிக்க பிறந்து
ஐயர் சொல்ல காடேறப் பெருமாள் போக -ஐயா அப்பன் -சமபுத்தி அப்பா
அப்பனை கேளு இன்றும் திரு நாராயணபுரத்தில்

அப்பனோடு –
அவன் காட்டிலே எழுந்து அருளா நிற்க படை வீட்டில் இருக்கவா பெற்றேன் –
பந்துக்கள் இடம் ப்ரீதி உள்ளவனே -தாத்பர்யம்
அதனால் காட்டுக்கு
அவர்கள் யாருக்கும் உயிர் பிராணன் போகாமல் இருக்க கைங்கர்யம் செய
வேர் பற்றான பெருமாளை நோக்கித் தாரீர்
சுக்ருதம் எல்லாம் -பெருமாள்
எல்லா உறவுமாகா ராகவன் -தானே
போவது நியாயம்
ராமே ஆபத்து விளைவிக்க பண்ணாதே கொள்ளும் –நியமிக்க
தமையனார் நடப்பார் -நடையிலே நடை கொள்ளுவார்
நடை அழகிலே கண் வைத்து காவல் சோர்வு கோளாமல்
அது போலே சேதனர் திருமலைக்கு ஸ்ரத்தை உண்டானாலும்
பாவியேன் -கர்ம அவஸ்தை வரும் முன்
தன்னோட்டை ஸ்பர்சத்தால் விரிந்த மலர்ந்த
படுக்கை விட இங்கே விரும்பு நிற்கும் தேசம்
காட்டிலும் திருமலை ஆழ்வார் சேஷ கிரி சேஷாசலம்
மொய்த்த சேர்ந்த சோலையையும் -பரப்புமாற பூத்த
எய்த்து -இளைத்தல் -இரண்டு சப்தம்
நெஞ்சு இளைப்பு சரீர இளைப்பு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading