சூரணை–220-
இரண்டாம் பத்தால்
சர்வ காரண பூதனான சர்வேஸ்வரன் கீழில் பத்திலே தமக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ண –
அவனாலே தத் ஞானரான இவர் -அந்த ஞானத்துக்கு பலமான மோஷத்தை-அப்போதே பெற வேண்டும் என்று
ஆசைப் பட்டுப் பெறாமையாலே – அவசன்னராக –இவருடைய அவஸாதம் எல்லாம் தீரும் படி –
அவன் வந்து சம்ஸ்லேஷித்து –அந்த சம்ஸ்லேஷத்தினால் வந்த ப்ரீதியை உடையனாய் –
அந்த ப்ரீதி இவர் ஒருவர் அளவிலே பர்யவசியாதே -இவரோடு பரம்பரயா சம்பந்தம் உடையார் அளவும் வெள்ளம் இட்டு –
அந்த ப்ரீதியாலே பரம புருஷார்த்த லஷண மோஷத்தை -இவர்க்கு அவன் கொடுக்கத் தேட –
அந்த மோஷத்தை -அவனுடைய சேஷித்வத்துக்கும் தம்முடைய சேஷத்வத்துக்கும் அனுகுணமாம் படி நிஷ்கரிஷித்தவர் –
ஆஸ்ரயணீயான அவனுக்கு கீழ் உக்தமான பரத்வத்தை நிலை பெறுத்துவனான லக்ஷணங்களை வெளி இட்டு –
தத் அனுகுணமான வசன பிரத்யஷங்களையும் தர்சிப்பித்து –ஆஸ்ரயிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக-
த்யாஜ்யமான சம்சாரத்தின் துக்கமும்
பிராப்யமான மோஷத்தின் ஆனந்ததமும்
சம்சார நிவ்ருத்தி பூர்வக-மோஷ பிராப்திக்கு உறுப்பான -சாதனத்தின் உடைய ரசமும் –
முன்னாக விதிக்கிற ச குண ப்ரஹ்ம உபாசனத்தை –
நிஷித்த அனுஷ்டானங்களினுடைய த்யாக பூர்வகமாக ஷேத்திர வாஸாத் யங்கங்களோடே கூட்டுகிறார் -என்கிறார் —
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற
சித் அசித் த்ரய திரிவித காரணமானவன் அறியாதன அறிவிக்க
உள்ளம் தேறித் தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான
ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
2-உலராமல் ஆவி சேர்ந்து சிக்கெனப் புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன
வாழ்வித்து உபகரிக்கிற நீந்தும் கெடலில்
எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை
ஸ்தாபிக்கிற சகல பல ப்ரதத்வ காரணத்வ
சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை
திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன
பிரத்யஷங்களும் காட்டிப்
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ
சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற
அந்தர் குண உபாசனத்தை
6-மதித்துப் பெருக்கி மூழ்கி அழுந்திக்
கீழ்மை வலம் சூதும் செய்து
இளமை கெடாமல் செய்யும்
ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி
பிரதஷிணகதி சிந்தநாத் அங்க
உக்தம் ஆக்குகிறார்
இரண்டாம் பத்தில்-
1-சோராத மூவா வேர் முதலாய் உலகம் படைத்தவன் என்கிற சித் அசித் த்ரய திரிவித காரணமானவன்
அதாவது
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி-2-1-11 -என்றும் ,
மூவாத் தனி முதலாய் -2-8-5–என்றும் ,
எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் -2-8-10–என்றும் ,
பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் -2-10-11-என்று
லீலா விபூதியில் சங்கல்ப விசிஷ்ட வேஷத்தால் நிமித்தமாயும் –
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட வேஷத்தால் உபாதானமாயும் —
ஞான சக்தி யாதி குண விசிஷ்ட வேஷத்தாலே சஹ காரியாயும் —
இப்படி பக்த -முக்த -நித்ய ரூபமான சித் த்ரயத்துக்கும்
ப்ராக்ருத அப்ராக்ருத கால ரூபமான அசித் த்ரயத்துக்கும்
திரிவித காரணமும் தானே யான சர்வேஸ்வரன்
அறியாதன அறிவிக்க உள்ளம் தேறி
அறியாதன அறிவித்த அத்தா-2-3-2- -என்று இவருக்கு அஜ்ஞாதமான தத்வ ஹித புருஷார்த்தங்களை
விசத தமமாக அறிவிக்க —
அடியை அடைந்து உள்ளம் தேறி -2-6-8–என்று அத்தாலே இவரும் அவனைக் கிட்டி
நெஞ்ளில் தெளிவை உடையவராய்-
தூ மனம் மருளில் என்னும் ஜ்ஞான பலமான ஒளிக் கொண்ட மோஷம் தேடி வாட
தூ மனத்தனனாய் –2-7-8-
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்-2-10-11 -என்று
மோஷ க ஹேது தயா பரிசுத்தமான அந்த கரணத்தை உடையராய் –
அவனுடைய கல்யாண குண விஷயமான அஞ்ஞான கந்தம் இல்லாதபடி –
கீழில் பத்தில் பிறந்த தம்முடைய ஞானத்துக்கு பலம் மோஷம் ஆகையாலே –
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று ஒளிக் கொண்ட சோதி மயமாய் –
அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –2-3-10–என்று
பிராக்ருத விஷய லாப அலாபங்களால் வரும் கர்வ க்லேசங்களும் -ஷட் பாவ விகாரங்களும் போய் –
சுத்த சத்வம் ஆகையாலே –நிரவதிக தேஜோ ரூபமான விக்ரகத்தை உடையோமாய் –
நித்ய சூரிகள் திரளிலே கூடப் பெறுவது எப்போதோ என்று
அந்த மோஷத்தை பெறுகையில் ஆசையாலே தேடி
அப்போதே கிடையாமல்
வாடி விடும் -2-4-1-என்று
ஆஸ்ரயித்தை இழந்த தளிர் போல் வாடி
2-உலராமல் ஆவி சேர்ந்து
உள்ளுள் ஆவி உலர்ந்து உலர்ந்து-2-4-7- -என்கிற தாபம் ஆறும் படி
அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு-2-5-1- -என்கிறபடியே
பரம பதத்தில் பண்ணுகிற வியாமோகத்தை இவர் பக்கலிலே செய்து —
கமர் பிளந்த தரையிலே நீர் பாய்ச்சுவாரைப் போலே -இவரோடு நிரவதிக சம்ஸ்லேஷத்தைப் பண்ணி – சிக்கெனப் புகுந்து-
சிறிதோர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே -உலகுகள் ஒக்கவே விழுங்கி சிக்கனே புகுந்தான்-2-6-2- -என்று
அத் அல்பமாய் இருப்பதோர் பதார்த்தமும் தன் பக்கல் நின்று பிரி கதிர் பட்டு நோவு படாதபடி
தன் சங்கல்ப சஹஸ்ரைக தேசத்தில் சர்வ லோகங்களையும் ஒருக் காலே வைத்து இனி போராதபடி புகுந்து
சம்பந்திகளும் சேர்தல் மாறினர் என்ன வாழ்வித்து
எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வென் நரகத்து என்றும் சேர்த்தல் மாறினார்-2-6-7- -என்று
இவருடைய சம்பந்த சம்பந்திகளும் -சம்சாரான் முக்தராம் படி பண்ணி -அத்தாலே –
எமர் ஏழு பிறப்பும் –கேசவன் தமர் –மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -2-7-1–என்று
என்னோடு பரம்பரயா சம்பந்தம் உடையாரும் என்னோட்டை சம்பந்தமே ஹேதுவாக பகவத் அதீயரானார்கள் –
நிர்ஹேதுக பகவத் கிருபையாகிற பெரும் சதிரைப் பெற்று
ஸ்ரீ வைஷ்ணவ சம்பத்தானது ஊற்று மாறாமல் பெருகிகிற படியே ! என்றிவர்
தாமே ஆச்சர்யம் படும் படி இவரை வாழ்வித்து –
உபகரிக்கிற நீந்தும் கெடலில் எம்மா வீட்டை உபய அனுகுணம் ஆக்கினவர்
இப்படி தம்முடைய பரம்பரை அளவும் வெள்ளம் இடுகிற தன் ப்ரீதியாலே
தமக்கு அவனுபகரித்து இடுகிற
நீந்தும் துயர் இல்லா வீடு –2-8-2-
கெடலில் வீடு-2-9-11-
எம்மா வீட்டுத் திறமும் -2-9-1–என்றும்
துக்க கந்த ரஹிதமாய்–அநர்த்த கந்தம் இல்லாததாய் -எவ் வகையிலும் விலஷணமான மோஷத்தை எனக்கு என்று தரில் –
அந்த மோஷம் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே ஐஸ்வர்யகளோபாதி ஸ்வரூப விருத்தம் ஆகையாலே –
அதனுடைய பிரசங்கமும் எனக்கு அசஹ்யமான பின்பு எனக்கு மோஷம் தரப் பார்த்தது ஆகில் –
நின் செம்மாபாத பறப்பு தலை சேர் தொல்லை –அம்மா அடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-
என்று சேஷியான உன்னுடைய அகவாய் சிவந்து புறவாய் ஸ்யாமமாய் -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமான திரு அடிகளை -சேஷ பூதனான என் தலையிலே –
கொக்கு வாயும் படி கண்ணியும் போலே சடக்கென சேர்க்க வேணும் —
சேஷியான உன் பக்கல் சேஷ பூதனான நான் அபேஷித்து பெறுவது இதுவே என்றும் –
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9-4–என்று
உபாய ஸ்வரூபத்துக்கும் அனுகுணமாக நிஷ்கரிஷித்தார்-
3-ஆச்ரயணீயனுக்கு பூர்வோக்த பரத்வத்தை ஸ்தாபிக்கிற
ஆஸ்ரயணீயான அவனுக்கு -முதல் பத்தில் சொல்லப் பட்ட -சர்வ ஸ்மாத் பரத்வத்தை –நிலை பெருத்துவனான
சகல பல ப்ரதத்வ காரணத்வ சேஷ சாயித்வ ஸ்ரீ யபதித்வ சௌலப் யாதிகளை திண்ணன் அணைவது என்று வெளி இட்டு
வீடு முதல் முழுதுமாய் –என்று சகல பல பரதத்வம் –
தேவும் எல்லா பொருளும் —கருத்தில் –வருத்தித்த மாயப் பிரான் -என்றும் –
ஆக்கினான் தெய்வ வுலகுகள் -என்று சர்வ காரணத்வம் –
ஆழி அம் பள்ளியாரே -என்ற லக்ஷணையாலே சேஷ சாயித்வம் –
பூ மகள் தன்னை வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து – என்று ஸ்ரீ ய பதித்வம் –
கண்ணன் கண் – கோபால கோள் அரி ஏறு -என்று அவதார சௌலப்யம் –
ஆதி -சப்தத்தாலே
தகும் கோலத் தாமரைக் கண்ணன் -என்று புண்டரீ காஷத்வம் –
ஏழு உலகும் கொள்ளும் – வள்ளல் வல் வயிற்று பெருமான் -என்று அகடி தகடனா சாமர்த்தியம் –
என்கிறவற்றை – திண்ணன் வீட்டிலும் —
அணைவது அரவணை மேல்-2-8-என்று சேஷ சாயித்வம் –
பூம் பாவை ஆகம் புணர்வது -என்று ஸ்ரீ யபதி த்வம் –
இருவர் அவர் முதலும் தானே -என்று காரணத்வம் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்று அவதார பிர யுக்த சௌலப்யம் –
வீடு முதலாம் -சகல பல ப்ரதத்வம்-
ஆதி -சப்தத்தாலே
பிறவி கடல் நீந்துவார்க்கு புணைவன் – என்று மோஷ உபாயத்வம் –
ஆனை இடர் கடிந்த -என்று ஆபத்ஸஹத்வம் –
மூ உலகும் காவலோன் -சர்வ ரஷகத்வம்
ஆகியவற்றை -அணைவது அரவணையிலும் -பிரகாசிப்பித்தது –
அன்றிக்கே –
வீடு முதல் முழுவதுமாய் -என்று மோஷ ப்ரப்ருதய சேஷ புருஷார்த்த
பிரதன் என்கையாலே சகல பல பிரதத்வத்தையும் –
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க –
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும் வருத்தித்த –
தன் உந்தி உள்ளே வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் ஆக்கினான் -என்று
காரணத்வத்தையும் –
திண்ணன் வீட்டிலும் -அணைவது அரவணை மேலிலும் -என்றும் –
பூம் பாவை யாகம் புணர்வது- என்றும் –
இணைவனாம் எப்பொருட்கும் -என்றும்
அடைவே சேஷ சாயித்வ ஸ்ரீ ய பதித்தவ சௌலப்யங்களையும் —
ஆதி சப்ததாலே -வீடு முதலாம் -என்று மோஷ பிரதத்வத்தையும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -பலமுந்து சீரில் படிமின் -என்று
முமுஷ பாஷ்யத்வத்தையும்
அணைவது அரவணை -யிலும் வெளி இட்டு என்னவுமாம் —
இந்த யோஜனை இதன் பட்டோலையான க்ரந்தத்தில் இவர் அருளிச் செய்ததுவுக்கு சேருவது ..
முற்பட்ட யோஜனையில் – ஆழி அம் பள்ளியாரே -என்று சேஷ சாயித்வம் லக்ஷணை யாலே
கொள்ள வேண்டுகையும் -வீடு முதலாம் -என்று மோஷத்துக்கு ஹேதுவாம் என்கிறதை
பிரகரண விருத்தமாம் படி -மோஷாதி புருஷார்த்த பிரதத்வமாக சொல்லுகையும் –
சகல பல பரதத்வம் என்று தொடங்கி இவர் எண்ணின அடைவுக்குச் சேர இரண்டு திருவாய் மொழியிலும்
சொல்லப் போகாமையும் ஆகிற அஸ்வாரஸ்யங்களும் உண்டு
4-கள்வா தீர்த்தன் என்று வசன பிரத்யஷங்களும் காட்டி
கள்வா-2-2-10–என்கிற பாட்டிலே -அவதரித்து உன் பரத்வம் தெரியாதபடி நின்றாயே ஆகிலும்
எங்களுக்கு காரண பூதனான சேஷி நீயே -என்று தேவதாந்த்ரங்களில் தலைவரான
பிரம ருத்ராதிகளே தங்களுக்கு காட்சி கொடுக்கைக்கு -பெரிய திரு வடியை மேல் கொண்டு
புறப்பட்டால் -அவனுடைய திருவடிகளில் விழுந்து கூப்பிடா நிற்ப்பார்கள் என்று
அவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இவ் அர்த்தத்துக்கு தேவதாந்த்ரங்கள் வசனத்தையும் –
தீர்த்தனுலகு அளந்த -2-8-6-–என்கிற பாட்டிலே -ஓர் அஸ்த்ர லாபத்துக்காக புஷ்பாதிகளும் கொண்டு
ருத்ர சமாராதானம் பண்ணப் புகுகிற அர்ஜுனனைப் பார்த்து -அந்த புஷ்பங்களை நம் காலிலே பொகடு –
என்று கிருஷ்ணன் அருளிச் செய்ய -அவனும் தீர்த்த பூதனான அவனுடைய -திரு உலகு அளந்த
திரு அடிகளிலே -அப்பூவை பரிமாற —
பார்த்தோ விஜேதா மதுசூதனச்ய பாதாரா விந்தார்ப்பித்த சித்ர புஷ்பம்
ததர்ச கங்காதர மௌலி மத்யே பபூவ வீர கருத நிச்சி தார்த்த – என்கிறபடி
தன் திருவடிகளிலே சாத்தின புஷ்பங்களோடு -சஜாதீயமான வற்றை அன்றிக்கே –
அவை தன்னையே பாடே பக்கே அன்றிக்கே -ருத்ரன் தலை மேலே -ஆப்த வாக்யத்தால் அன்றிக்கே –
தானே பிரத்யஷித்து -சது பார்த்தோ மகாமனா-ஸ்ரீ கீதா பாஷ்யம் -என்கிறபடியே -பேரளவு உடையவனான அவன்
நிர்ணயித்த பரத்வம் மந்த மதிகளால் இன்று ஆராயும் படி இருந்ததோ என்று
பிரத்யஷைத்தையும் காட்டி-
5-புலன் ஐந்து என்று சம்சார மோஷ சாதன துக்க ஆனந்த ரசம் முன்னாக விதிக்கிற அந்தர் குண உபாசனத்தை
புலன் ஐந்து -என்கிற பாட்டில் -ஆஸ்ரயணத்தில் இழிகிறவர்களுக்கு த்யாஜ்யத்தில் -ஜிகாசையும் –
பிராப்யத்தில் பிராவண்யமும் –சாதனத்தில் ருசியும் -விளையும் படி –
புலன் ஐந்து மேவும் பொறி ஐந்து நீங்கி- என்று பரிச்சின வஸ்துக்க்ராஹமான -இந்த்ரிய வஸ்யராகை
தவிர்ந்தது என்கையாலே -அல்ப அஸ்திரஸ்வாதி தோஷ துஷ்டமான சப்தாதி போகங்களை
அனுபவித்து இருக்கும் சம்சாராத்தினுடைய துக்கமும் –
நலம் அந்தமிலதோர் நாடு புகுவீர் -என்று நன்மைக்கு முடிவு இல்லாத திரு நாட்டிலே புகுவீர்
என்கையாலே -மோஷத்தினுடைய ஆனந்தமும்
பலமுந்து சீரில் படிமின் -என்று -ஸூசகம் கர்த்தும் -என்கிறபடி
ஸ்மர்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே-பல தசையில் போல சாதன தசையிலும் இனிதாய் இருக்கையாலே –
பலம் முற்பட்டு இருக்கிற கல்யாண குணங்களில் பிரவணர் ஆகுங்கோள் என்கையாலே –
சாதனத்தினுடையரசம் முன்னாக -சம்சார நிவ்ருத்தி பூர்வகமான -மோஷ பிராப்தி வேண்டி இருப்பார் –
அசூர வர்க்கத்தை தடுமாறி முடிந்து போம் படி செற்றவன் ஆகையாலே -பிரபல பிரதி பந்தகங்களை
அனாயசேன போக வல்லவனுடைய குணங்களிலே பிரவணர் ஆகுங்கோள் என்று விதிக்கிற –
தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் -என்று ப்ரஹ்ம ஸ்வரூப அந்தர்கதமான -அபஹத பாப்மத்வாதி
குண உபாசனத்தை
6-மதித்து பெருக்கி மூழ்கி அழுந்தி கீழ்மை வலம் சூதும் செய்து இளமை கெடாமல்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதித்து –
திறமுடை வலத்தால் தீவினை பெருக்கி –
வல்வினை மூழ்கி
நரகழுந்தி
கீழ்மை செய்து
வலம் கழித்து
சூது என்று களவும் சூதும் செய்து
கிளர் ஒளி இளைமை கெடுவதன் முன்னம் -என்று
உபாசன விரோதியான -இதர விஷய பிராவண்யத்தைப் பண்ணி –
அத்தாலே பாபங்களை கூடு பூரித்து -அவற்றிலே மறு நனைய மூழ்கி தரைப் பட்டு
தண்மையை செய்து பலத்தை பாழ் போக்கி -பஸ்யதோகரனாய்-க்ரித்ரிமனாய்
பால்யத்தை பாழ் போக்காதே –
செய்யும் ஷேத்திர வாஸ சங்கீர்த்தன அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத் அங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில்
அதாவது
பால்ய ஏவ சரேத் தர்மம் -என்றும் ,
தஸ்மாத் பால்யே விவேகாத்மா யததே ஸ்ரயசே சதா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-75–என்றும்
சொல்லுகிறபடியே பால்யத்தில் கர்தவ்யமான –
மாலிரும் சோலை சார்வது சதிரே –
போது அவிழ் மலையே புகுவது பொருளே -என்கிற ஷேத்திர வாசம் –
பதியது ஏத்தி -என்கிற சங்கீர்த்தனம்
தொழக் கருதுவதே -என்கிற அஞ்சலி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்கிற பிரதஷணம்
நெறிபட அதுவே நினைவது நலமே -என்கிற கதி சிந்தனை
ஆகிற இவை முதலான உபாசன அங்கத்தோடு சேர்க்கிறார்
இரண்டாம் பத்தில் என்கை–
(ஆக இரண்டாம் பத்தால்
காரணத்வத்தை வெளியிட்டு –
அவனாலே அறியாதது அறிவிக்கப் பெற்று உள்ளம் தேறினமையும்
ஞானத்தின் பலமாக மோக்ஷத்தைத் தேடி வாடினமையையும்
அந்த வாட்டம் தீர விசேஷ அனுக்ரஹம் செய்து அருளி மோக்ஷத்தைக் கொடுப்பதாக இருந்தமையையும்
அந்த மோக்ஷத்தின் தன்மையை ஆழ்வார் அறுதியிட்டு பேசினமையையும்
உலோகோருக்கு உபதேசிக்க ஒறுப்பட்டு ச குண ப்ரஹ்ம உபாசனத்தை அங்கத்தோடே விதித்தமையையும்
-தெரிவித்தபடி – )
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply