ஸ்ரீ திரு விருத்தம் -21–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

(சாது பரித்ராணாம் போன்றவை கீதையில் அவதார பிரயோஜனம்
இங்கு உண்மை அறிந்தவர் சரியான காரணங்கைக் காட்டி அருளுகிறார்
ஏறு கோள் கூறி வரைவு தடவுதல் -ஏறு தழுவுதல் )

அவதாரிகை
கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள்
எங்கனே என்னில்
சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே
உயர்வற உயர் நலம் உடையவன் என்னா —
உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு  எத்திறம் என்னும் படியாலே-
மோஹித்த போது அறியாதே கிடக்கவும் ,
உணர்ந்தார் ஆகில் ,தம் உடைய பாழியான கிருஷ்ண அவதாரத்தில் மண்டும் இத்தனை-

(த்வராவதி மன்னனை ஏத்துமின் -சொன்னதும் உணர்ந்தாள் அங்கு –
அதே போல் -மாலையைச் சூட்டுமின் என்ற சொல் கேட்டதுமே உணர்ந்தாள் )

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி -எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-
முதல் பாசுரம் இதுவும் இறுதி பாசுரமும் தாமான தன்மை —
அகத்துறை சொல்ல வேண்டாம் என்றும் சொல்வர் சிலர் –

பதவுரை

அங்கு–பரமபதமாகிற அவ்விபூதியில்,
விண்ணோர்கள்–நித்ய ஸூரிகள்
நல் நீர் ஆட்டி–நன்றாகத் திருமஞ்சனம் ஸமர்ப்பித்து
அம் தூபம் தரா நிற்க–அழகிய தூபத்தை ஸமர்ப்பித்துக் கொண்டு நிற்க,
(அந்தத் தூபத்தினால் திருமுக மண்டலம் மறைந்திருக்கும் க்ஷணத்திலே)
ஓர் மாயையினால்–(உனது) ஒப்பற்ற மாயவகையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து–(இங்குத் திருவாய்ப் பாடியிலுள்ளார் நாள் தோறும் கடைந்து)
சேர்ந்த வெண்ணெயை எடுத்து அமுது செய்ய விரும்பி வந்து
தூயன சூட்டு நல் மாலைகள் ஏந்தி–பரிசுத்தாமனவையாய் (உனக்குச்) சூட்டத்தக்க அழகிய மாலைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு நின்று
அடல் ஆயர்தம் கொம்பினுக்கு–வலிமையை யுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்பு போன்ற மகளான
நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக
இமில்-முசுப்பையுடைய
ஏறு–(ஏழு) எருதுகளினுடைய
வல் கூன் கோட்டிடை–வலிய வளைந்த கொம்புகளின் நடுவிலே
கூத்து ஆடினை–கூத்தாடி யருளினாய்.

வியாக்யானம்

சூட்டு–
சிரோ பூஷணமாய் இருப்பது ஒன்றுக்கு பேர்
ஆஸ்ரிதர் காலில் -காலால் – இட்டாலும் ,-
கிருஷ்ணாதி சிரசா ஸ்வயம்-என்றபடி யாலே
ஏற்பது தன் தலையால் இருக்கையாலே

பிள்ளை உறங்கா வல்லி தாசர் பொன் நாச்சியாருக்கு அருளிச் செய்த வார்த்தை–
பத்ரம் புஷ்பம்   கீதை -9-26–இலை ,மலர் ,தண்ணீர் என எதனை அன்புடன் அளித்தாலும்
ஏற்பேன் என்று அருளியதை சொல்லி காட்டினார்–
அஸ்நாமி-என்னுமா போலே-

(பொன் ஆச்சியார் கேட்டதுக்கு தாஸர் பதில்
எத்தைக் கொடுத்தாலும் உண்ணுவது போல் போக்யமாகக் கொள்ளுபவன் )

நன் மாலைகள் —
இவன் ஆதரிக்கும் என்னா
எருக்கும் தும்பையுமாக தேடி இடும் அளவு இன்றிக்கே ,
இங்குத்தைக்கு சத்ருசமாய்-
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கும்  

(பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயா -என்றும் –
கள்ளார் துழாய் -என்றும்
நூறு தடா வெண்ணெய் நூறு தடா அக்கார வடிசில் சொல்லுவது எவ்வாறு பொருந்தும்
அந்யத் பூர்ணத்துக்கும் அதமம் -அவனைப் பார்த்தால் )

மாலைகள் —
ஈரம் கொல்லியை கொன்று திரு  பரியட்டம் சாத்தி
ஸ்ரீ மாலாகாரர் கிருகத்திலே எழுந்து அருளி- திரு பள்ளி தாமம் சாத்தி ,
சாந்து சாத்த அபேஷிதமான தசையிலே கூனி சாந்து கொண்டு போகா நிற்க ,–
இடு சாந்து கொண்டு வா என்ன –

பெண்டாட்டி ஆகையாலே  மறுக்க மாட்டாதே –
இடை பிள்ளைகளுக்கு முடை நாற்றத்தோடு கூடின வடிவுகளுக்கு ஏதேனும்
வழக்கான சாந்தை இட்டு ,மருட்டுகிறோம் –
என்று தண்ணிய சாந்தை கொடுக்க ,

முன் கையை நீட்டி மோந்து பார்த்து ,-
சுகந்தமேதத் –
இது உனக்காய் இருந்தது என்ன-
அதற்க்கு மேல் தரமாய் இருந்ததொரு சாந்தைக் காட்ட –

ராஜார்ஹம்-
இது உம் கண் ஆயனார்க்காய் இருந்தது —
அதற்க்கு மேல் தரமாய்  இருப்பதோர் சாந்தை காட்ட –

ருசிரம்-
நிறம் அழகியதாய் இருந்தது –
கந்தத்தாலே நன்றாம் இது நிறம் அழகிது என்கை
அதுக்கு உறுப்பு அன்று இறே –

ருசிரானனே –
இடை பிள்ளைகள் சாந்தின் வாசி அறியார் என்று என்று இருந்தோம் ..
இது இவர்கள் வாசி அறிந்த படி என் என்று
ஹிருதயத்தில் கிடந்த பிரியம்
முகத்திலே தோற்றி இருந்த படி 

ஒரு சாந்து இட வேணுமோ –
ஒரு முகம் இருந்த படி என் என்று ஏத்துகிறான்–

கம்சனுக்கு வைத்த சாந்து இடுகைக்காக-
ஆவயோர்காத்ர சத்ரு சந்தீயதா மனுலேபனம் —
நல் சரக்கு பரிமாறுகிற நீ   உடம்பின் வாசி அறிய வேண்டாமோ-
அண்ணர் உடம்புக்கும் நம் உடம்புக்கும் சத்ருசமான சாந்து நீயே அறிந்து தா-

தூயன —
அநந்ய பிரயோஜனர் இடுமதாய் இருக்கை–
கெண்டை ஒண் கண்  இத்யாதி

(மிக்க சீர் தொண்டர் இட்ட
தொண்டர் -லௌகிக ப்ரயோஜனாந்தரர்
சீர் தொண்டர் -மோக்ஷம் உபாசகர்
மிக்க சீர் தொண்டர் ஸ்வயம் பிரயோஜனம் )

ஏந்தி–
தன்னை அங்குத்தைக்கு உறுப்பாக்கி , இருக்கும் அதுக்கு
மேற் பட வில்லையாய் இருக்கை
அங்குற்றைக்கு இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் என்கிற படி —
மஞ்சளும் செம்கழு நீரும் வாசிகையும்–பெரியாழ்வார் திரு மொழி -2-4-4–என்கிறபடி  

(கொண்டு வைத்தேன் -இதுவே நம் கர்தவ்யம்
ஏற்றுக் கொள்வது அவன் இச்சை
இஷ்ட விநியோக அர்ஹத்வமே ஸ்வரூபம் )

விண்ணோர்கள் இத்யாதி –
மண்ணோர்கள் இட்டதை கொள்ளும் அவன்
விண்ணோர்கள் இட்டால் சொல்ல வேண்டா இறே-
பிரயோஜனந்ததுக்கு அன்றி
லோகம் வாழ பண்ணும் திரு மஞ்சனம்

அம் தூபம் தரா நிற்கும் அங்கு –
முறை  மாற வேண்டாதே ,
முதுகு நோவ வேண்டாதே ,
தானே போஷக தாரக போக்யமாய் இருக்கை –
நமஸ்நானம் –

(பரதாழ்வான் இடம் கூடின பின்பே ஸ்நானம்
விபீஷணன் தாங்கிப் போகப் பிரார்த்திக்க -மறுத்து பெருமாள் கடுக விரைந்தால் போல் )

ஓர் மாயையினால்-
அத்வதீயமான ஆச்சர்யம் –அவ்விடம் அங்கனே செல்லா நிற்க செய்தே ,
திரு ஆய்ப்பாடியிலே அனுகூலர் பக்கல் வெண்ணெய் உண்டாய் இருந்தது என்று நாரதராதிகள்-சொல்ல —
தனது சங்கல்பத்தால் கிடைக்கும் வெண்ணெய் விட
கோபிமார் ஸ்பர்சத்தால் கிடைக்கும் வெண்ணெயில் விருப்பம் கொண்டு ,
தூபம் உண்டாகிய புகையிலே தன்னை மறைத்து –
ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று இருக்கிறவர்களை-கண்ணில் மணல் தூவின படி

மாயை–
மாயா வயுனம் ஞானம் என்கிற படியே இச்சை-

ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து —
சிர காலம் கூட சம்பாதித்த வெண்ணெயை-
க்ருத்ரிமத்தாலே ,புஜிக்க போந்து ,
இவன் கையிலே சிலவர் அடிலும் அநபிமதமாய் இருந்த படி ..
இவர் தாம் அங்கும் கூட நின்று இங்கும் கூட போந்தார் போல் காணும்
ஆழ்வாருக்கு பரத்வத் தோடு-அவதாரத்தோடு வாசி அற நிலமாய் இருந்த படி

(கையிலே கொடுத்தாலும் கொள்ளான்
தானே களவு கண்டு உண்ணும் அத்தனை
அதுவும் ஆய்ச்சியர் வெண்ணெயை மட்டுமே கொள்வான்
அங்கு நடந்தவற்றையும்
இங்கு நடந்தவற்றையும் பிரத்யக்ஷமாகக் கண்டு அன்றோ அருளிச் செய்கிறார் )

அத பஞ்சவடீம் கச்சன் -என்னுமா போலே–
பஞ்ச வடிக்கு போகும் வழியில் ஜடாயுவை கண்டால் போல் –
வெண்ணெய்க்கு போந்த இடத்தே ஸ்திரீ ரத்னத்தை லபித்த படி —
விறகுக்கு போந்த இடத்தே விற்பிடி மாணிக்கம் பெற்ற படி

இமில் ஏற்று இத்யாதி–
ககுத்தை உடைத்தான எருத்தை உடைய வலிதாய்- வளைந்து இருந்துள்ள கொம்பிலே விழுந்தான் ..
அனந்தரம் நப்பின்னை பிராட்டியை அணைக்கப் புகுகிறோம் என்னும்
அத்தாலே அவன் நின்ற படி–

உத்தேசம் ஆகையாலே
கூத்து -என்கிறார்–
(கிஞ்சித் தாண்டவம் -நின்ற திருக்கோலமே கூத்து போல் இருக்குமே )

அடல் ஆயர் தம் கொம்பினுக்கே–
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதசபாண்டவ-என்று-
இவன் பிறந்த பின்பு யுத்தோன் முகமாய் இருந்த படி–    
இவனைக் கண்டு வைத்து  கடுக நீராட்டிக் கொடாதே -நடுவே எருத்தை இருத்துவதே –

தம் கொம்பினுக்கே-
அம் கொம்போடே பொரலாம் ஆகில் ,  
இக் கொம்புகளோடே பொருதல் என்றே வேணும் என்று பொருதான்
கரு மாறி பாய்ந்தாலும் பேற்றுக்கு தக்கது போராதாய் இருக்கிற படி

ஜனகானாம் குலே கீர்த்தி மா ஹரிஷ்யதி மேசுதா–என்னும் படியே  —
சீதை பிராட்டியால் ஜனகன் குலத்துக்கு கீர்த்தி உண்டானது போல் –பால காண்டம் -68-21–

நம் கொம்பினுக்கே 
அக் குலத்தை எல்லாம் உண்டாக்க பிறந்த படி-

(ஆயர் பன்மை -கொம்பு ஒருமை -இதுக்கு இந்த பிரமாணம் )

———

திருவாராதனம் விளக்க வந்த பாசுரம்
அமர்ந்து திருவாராதனம் ஏற்றுக் கொள்கிறான்
1-அந்தூபம் தாரா நிற்கவே -அங்கு -ஆஸ்தே -மந்த்ராஸனம்
2-நன்னீராட்டி -ஸ்நாநாசனம்
3-நன்மாலைகள் தூயன ஏந்தி அலங்காராசனம்
4-வெண்ணெய் தொடு உண்ணப் போந்து போஜ்யாசனம்
5-புனர் மந்த்ராஸனம் -இப்பாசுர அனுசந்தானம்
6-ஸய்யாசனம் -நப்பின்னைப் பிராட்டியை அணைக்க -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே
ஆகவே இப்பாசுரம் நித்ய அனுசந்தானமாகக் கொள்கிறோம்

—–

தாத்பர்யம்

கீழ் பாசுரத்தில் ஸூஹ்ருத்துக்கள் உச்சரித்த பகவத் திரு நாமங்களைக் கேட்டு
வெறி விலக்க
பகவத் நாமங்களைச் சொல்லுங்கோள் என்பதைக் கேட்டு
மோகம் தெளிந்து- (மோகம்-பக்தி மேலிட்டு -ப்ரேமம் )
தாமான தன்மையால் கிருஷ்ண அவதாரம் -தனது பாழியிலே ஆழ்ந்து
கிருஷ்ண த்ருஷ்ண தத்வம்
ஏறு தழுவுதகள் துறை என்பதையும் பார்த்தோம்
ஸ்ரீ வைகுண்ட மா நகரத்தில் வீற்று இருந்து
உன்னை நித்ய ஸூரிகள் திருமஞ்சனம் செய்வித்து
வஸ்திரம் மால்யா திரு ஆபரணாத்திகள் -உபசாரங்கள் சமர்ப்பித்து
16 உபசாரங்கள்
சந்தனம் சாத்தி -பூ சமர்ப்பித்து சாம் ஸ்பர்சிகம்
தீபம் ஒத்துவாடை சமர்ப்பித்து உபசாரிகம் தொடாமல்
உள்ளே செல்வது போனகம் -போன்ற மூன்று வகைகள் உண்டே –
தூபம் சமர்ப்பிக்க
அவர்களுக்குத் தெரியாமல் புகை மண்டலத்தில்
ஒளிந்து ஓடி வந்து -சமத்காரமாக சாதிக்கிறார்
திருவாய்ப் பாடியில் கோபிமார் கடைந்து ஈட்டிய-திரட்டி வைத்த வெண்ணெயை
தானே திருடி புஜித்து -அமுது செய்ய- கிருஷ்ண அவதாரம் செய்து
நப்பின்னைப் பிராட்டியைப் புணருகைக்காக
கோபர்கள் -கும்பன் இட்ட-ஏழு எருதுகளைப் பொருது
அக் கொம்புகளில் அகப்படாமல் நடுவே கூத்தாடிய படி
வல்லார் தாண்டவம் போல் சஞ்சரித்து
இது என்ன ஆச்சார்யம் என்று ஈடுபட்டு அருளிச் செய்கிறார் –
கொம்புகளை ஆட்டி தாமும் தாண்டவம் ஆடினார் அன்றோ

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading