https://www.tamilvu.org/node/154572?linkid=118853
மாறன் அலங்காரம் தமிழ் இலக்கண நூல்களுள் ஒன்று.
இது பாட்டில் அமையும் அணிகள் பற்றி விரிவாகப் பேசும் நூல்.
இது ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால்
இது எழுதப்பட்ட மாறன் அகப்பொருள். மாறன் பாப்பாவினம், மாறன் அலங்காரம் என்னும் மூன்று நூல்களில் ஒன்று.
தமிழ் இலக்கணம் பற்றிப் பேசும் அதே வேளையில் இந்நூலில்
மாறனாகிய நம்மாழ்வார் பெருமையும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.
பேரை காரி ரத்தினக் கவிராயர் என்பவர் இந்நூலின் பழைய உரையாசிரியர்.
பழைய உரையுடன் தேவைப்படும் விரிவான விளக்கங்களுடன் புதிய உரை ஒன்றை தி.வே. கோபாலையர் வெளியிட்டுள்ளார்.
அணிகள்
அணிகள் (மாறன் அலங்காரம்-64 அணிகள்)
இதில் அணி மற்றும் அணி வகைகளாக மொத்தம் 321 அணிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அசங்கதி 2
அதிகம் 1
அபநுதி 4
அற்புதம் 2
ஆசி 2
ஆர்வமொழி 1
இணையெதுகை 2
இலேசம் 1
இறைச்சிப்பொருன் 1
உதாத்தம் 9
உபாயம் 1
உருவகம் 26
உல்லேகம் 4
உவமை 46
உள்ளுறை 5
உறுசுவை 1
ஏகாவளி 1
ஏது 24
ஒட்டு 6
ஒப்புமை 2
காரணமாலை 1
காரியமாலை 1
காவியலிங்கம் 1
சங்கரம் 1
சங்கீரணம் 1
சந்தயம் 3
சமாயுதம் 1
சமுச்சயம் 2
சிலேடை 18
சுவை 18
தடுமாறுத்தி 1
தற்குணம் 1
தற்குறிப்பேற்றம் 2
தற்பவம் 1
தன்மை 12
திட்டாந்தம் 1
தீபகம் 18
நிந்தாத்துதி 1
நிரல்நிறை 13
நெடுமொழி 1
பரிகாரம் 4
பரிசங்கை 2
பரியாயம் 1
பரிவர்த்தனை 1
பாவிகம் 1
பிரத்தியனீகம் 1
பிரதீபம் 1
பிறவணி 1
புகழ்வதின் இகழ்தல் 1
புணர்நிலை 2
பொருள்மொழி 1
மாறுபடு புகழ்நிலை 1
மின்வருநிலை 3
முன்னவிலக்கு 21
வகைமுதலடுக்கு 1
விசேடம் 6
விதர்சனம் 2
விநோத்தி 1
விபாவனை 4
விரோதம் 7
விற்பூட்டு 1
வேற்றுப்பொருள் வைப்பு 8
வேற்றுமை 5
——–
மாறனலங்காரம் ஓர் அணியிலக்கண நூல். இது உரைதருநூல்களில் ஒன்று.
இது திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது.
வைணவ ஆழ்வார்களில் ஒருவராகிய நம்மாழ்வாரைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல்.
பாண்டி நாட்டுச் சிற்றரசர் வழிவந்தவர் நம்மாழ்வார்.
பேரரசர்களுடைய பெயரைச் சிற்றரசர்களும் சூட்டிக்கொள்ளும் அக்கால வழக்கத்துக்கு அமைய
நம்மாழ்வாரும் பாண்டிய மன்னர்களைக் குறிக்கும் மாறன் என்ற பெயராலும் அறியப்பட்டவர்.
இதனால் இப் பெயரைத் தழுவி இந்நூலுக்கு மாறனலங்காரம் எனப் பெயரிடப்பட்டது–
அணியிலகணத்தைத் தனிநூலாகச் செய்த முதல் நூல் தண்டியலங்காரம்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த தண்டி என்பவர் வடமொழியில் இயற்றிய அலங்கார நூலைப் பின்பற்றித் தமிழ்நூல்
தண்டியலங்காரம் 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதன் விரிவாக மாறன் அலங்காரம் எழுதப்பட்டது.
இதில் மாறன் என்னும் சொல் நம்மாழ்வாரைக் குறிக்கும்.
————
சிறப்புப்பாயிரம்
உலகம்யாவையுமுறுபயன்விளைப்பா
னலகில்சோதியணிகிளர்திருவுரு
வுணர்வுயிரெனக்கலந்துத்தமர்நித்தர்
கணமகலாதபொற்கவின்பதிநின்று
முரவுநீர்வளைத்தவொன்பானுட்டென்புலப்
பரதகண்டத்துட்பழம்பதியெனப்புகும்
விண்டொடநிவந்தபொழில்வடவேங்கடந்
தெண்டிரைகறங்குதென்குமரியென்றாயிடை
யமிழ்தினும்வான்சுவைத்தாகியமும்மைத்
தமிழ்தெரிபுலமைச்சான்றோர்மதிக்கு
முதுமொழித்தண்டிமுதனூலணியொடும்
புதுமொழிப்புலவர்புணர்த்தியவணியையுந்
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையு
மனாதுறத்தொகுத்தும்வகுத்தும்விரித்தும்
பொதுவியல்பொருள்சொல்லணியெச்சவியலெனச்
சதுர்பெறவிரண்டிடந்தழீஇயசார்பெனலாய்க்
காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்
தாரியர்துவன்றவவைக்களத்துரைத்தனன்
சிற்குணச்சீநிவாதனின்னருளா
னற்பொருண்மூன்றையுநலனுறவுணர்வோன்
பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமா
ளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்
திருக்குருகைப்பெருமாள்கவிராய
னருட்குணத்துடன்வளர்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே.–என்பது பாயிரம் :-
எந்நூலுரைப்பினுமந் நூற்குப் பாயிரமுரைத்தே நூலுரைக்கவென்பதுமரபு.
என்னை? “ஆயிரமுகத்தாலகன்றதாயினும், பாயிரமில்லது பனுவலன்றே.” என முன்னோர்கூறிய முறைமையானும்,
இந்நூலுடையாரும் “பொற்புறவிழுமியபொருள்பல புணர்க்கினுந், தற்சிறப்புளதே தந்திரமென்ப.” என்பதனானுமுணர்க.
இப் பாயிரத்துக்குப் பொருண் மேற்காட்டுதும்.
1.புறவுரைமுகவுரைபுனைந்து ரைதந்துரை
பதிகநூன்முகமணிந்துரைபாயிரம்.
(இதன்பொருள்) இவையேழும் பாயிரத்திற்குக் காரணப்பெயரா மென்றவாறு.
2.புறவுரையேயதுகேட்டென்னைபயனெனின்
மாயிருஞாலத்தவர்மதித்தமைத்த
பாயிரமில்லாப்பனுவல்கேட்கிற்
காணாக்கடலிடைக்கலைஞரில்கலத்தரின்
மாணாக்கன்றன்மதிபெரிதிடர்ப்படும்.
(என்னுதலிற்றோவெனின்) பாயிரமில்லாப் பனுவல் கேட்போன் மதியிடர்ப்படுதற் குவமையுணர்த்து தனுதலிற்று.
(இதன்பொருள்) முந்து நூல் செய்தற்காசிரியர் மனத்தினாலுட் கொண்டு விதித்ததாம்
பாயிரமில்லாத நூல்கேட்பானாகிற் கேட்ட மாணாக்கன்மதி முன்பு கண்டறியாத கடலிடத்து
மீகானில்லா வங்கத்திற் செல்பவர் மதிபோல மிகவுமயக்கமெய்து மென்றவாறு;
என்பதாற் பாயிரங் கேட்டல் பயனுடைத்தாயிற்று.
3.பொதுச்சிறப்பெனவதுபுகலிருவகைத்தே.
(எ-ன்) பாயிரத்தினது கூறுபாடுணர்-ற்று,
இ-ள்) பாயிரமென்ன வொன்றாய் நின்றவது
பொதுவுஞ் சிறப்புமென முந்துநூல் கூறியதா மிரண்டுகூறுபாடுடைத்தென்றவாறு.
4.அவற்றுள்,
போக்கறுபனுவலுட்புகல்பொருளல்லா
தாக்கமுற்றனைத்தினுமமைவதுபொதுவே.
(எ-ன்) முறையானே பொதுப்பாயிரத்தியல்புணர்ற்று.
(இ-ள்) அவ்விரண்டனுட் புலவராற் கூறப்பட்ட குற்றமற்ற நூல்களுட் கூறப்படும் பொருளல்லாத
புறப்பொருளாயெல்லாநூன் முகத்து மின்றியமையா தாக்கம்பெற்றமைவது பொதுப்பாயிரமா மென்றவாறு.
அமைதல் வெளிப்படாது மறைந்துமறைந்து நடத்தல்.
எல்லா நூன்முகத்தும் பொதுவாக மறைந்து நடத்தலிற் பொதுவெனக் காரணப்பெயராயிற்று.
5.அதுவே,
நுண்ணூனுவல்வோனுவல்வதனியற்கை
கொள்வோன்குறிப்பிற்கொள்கடன்றன்னொடுந்
தெள்ளிதினைந்தெனச்செப்பினர்புலவர்.
(எ-ன்) பொதுப்பாயிரத்தின் கூடுபாடுணர்ற்று.
(இ-ள்) அப்பொதுப்பாயிரம் நுண்ணியநூலின்மரபும், நுவல் வோன்மரபும், நூல்நுவல்வதன்மரபும்,
கொள்வோன்மரபும், அம்மாணாக்கனுள்ளக் குறிப்பினாற் கொள்வதன் மரபு தன்னொடு மைந்தென்று
தெள்ளியதாய்க் கூறினர் முந்து நூலாசிரியரென்றவாறு. ஏகாரமீற்றசை.
தெள்ளிதினைந்தெனச் செப்பினரென்று சிறப்பித்தவதனால் “ஈரிரண்டென்ப பொதுவின்றொகையே” என்போர்
சுருங்கக் கூறிய நோக்கமே நீக்கி யைந்தென்போர் நோக்கமே யுட்கொண்டாரென்பதாயிற்று.
6.அவற்றுள்,
உத்தமநூன்மரபுணர்த்துங்காலை
முத்திறத்தொன்றாய்ப்பாயிரமுதலுபு
நாற்பொருணலனுறநவில்வனவாகிச்
சூத்திரமோத்துப்படலமென்றுரைபெறு
முறுப்புடைப்பிண்டத்தொடுமமைந்தஃகாக்
காண்டிகைவிருத்தியிற்காட்சிதந்தீரைங்
குற்றமொன்றின்றிக்குழகொடுமெண்ணான்
குத்தியிற்சிறந்ததென்றுரைத்தனர்புலவர்.
(எ-ன்) வைத்தமுறையானே நூன்மரபுணர்ற்று.
(இ-ள்) அங்ஙனங்கூறப்பட்ட வைந்தனுள்ளு முத்தமநூலின திலக்கணத்தை யறிவிக்குமிடத்து
முத்திறத்தொன்றென்பது முதலாக வெண்ணான்குத்தியீறாகப் பன்னிரண்டுகூற்றதாய்ச் சிறந்ததென்று
மேனாட் கற்று வல்லோருரைத்தன ரென்றவாறு.
எனவே, இந்நூலுடையார்க்கு மங்ஙனமுரைப்பதே கருத்தென்பதாயிற்று.
பிண்டத்தொடு மமைந்தெனவே மகாபிண்டமு மொன்றுளதாகப் பன்மூன்றுண்டென வுணர்க.
இவை பன்மூன்றும் மேற்காட்டும் வகைச்சூத்திரங்களாலுணர்க.
7. முத்திறத்தொன்றென்பனமுதல்வழிசார்பே.
(எ-ன்) தொகைச்சூத்திரத்தினுண் முதலே நூல்கண்
மூன்று கூற்றினுளொன்றாமென்றா ரவையிவையென் றவற்றின் பெயரு முறையுந் தொகையுமுணர்ற்று.
(இ-ள்) நூல்கண் மூன்று கூற்றினுளொன்றென்பன முதனூல் வழிநூல் சார்பு நூலென மூன்றுகூற்றனவாமென்றவாறு.
நூலென்பதனை யதிகார முறையான் மூன்றினும் விரித்துரைக்க.
8. முதல்வனிற்சிறந்ததுமுதனூலாகும்.
(எ-ன்) முறையானே முதனூலாமாறுணர்ற்று.
(இ-ள்) முதல்வனான் மொழிவதா யழிவிலாதே சிறப்பெய்தியது முந்து நூலாமென்றவாறு.
அன்றியும் முதல்வன் றனதில்லாளுக்குரைத்ததாய்ச் சிறப்பெய்தி வருவதெனினுமாம்.
அதற்கு அரி அயன் அரன் எனுமிவர் பூமிதேவி காயத்திரி உமாதேவி என்பவர்க்குரைத்ததாய் எனக்கூறுக.
இன்னும் அவ்விலேசானே இல்லென்பதனை யுவமவுருபாக்கி முதல்வனைப்போலப்
பழமைத்தா யழிவில்லாதே சிறப்பெய்தி வருவதெனினுமாம். அது கருதியேயாம்.
9.விழுமியமுதனூல்விதித்தவற்றினொடும்
பழுதறச்சான்றோர்படைத்தவுந்தழீஇ
வழுவின்றாய்வரல்வழி நூலாகும்.
(எ-ன்) வழி நூலாமாறுணர்ற்று.
(இ-ள்) முக்கியமான முதனூல் கூறிய விலக்கணங்களோடுங் குற்றமறக் கற்று வல்லோரால் விதித்து
வழங்கிவருமி லக்கணங்களோடும் பொருந்தி முறைவழுவுதலின்றிப் புலவராலமைக்கப்பட்டு வருவது வழி நூலாமென்றவாறு.
வழி-பின்.
10.இவ்வகைப்பனுவலோடொத்திழுக்கின்றாய்ச்
செவ்விதிற்சிறிது திரிவதுசார்பே.
(எ-ன்) சார்புநூலாமாறுணர்-ற்று.
(இ-ள்) இங்ஙனமிரண்டு திறத்தவாகப் பகுத்துக் கூறப்பட்ட நூல்களிரண்டோடுமொரு தன்மைத்தாகவொத்து
அவற்றோடு மூன்றாவதோர் புலவ னிலக்கணமிழுக்கா தழகிதாகச் சிறிது வேறுபட விரிப்பது சார்பு நூலாமென்றவாறு.
இம் மூன்றனுளொன்றாய்வருவது நூலென்றறிக.
11.அதன்வழிநடைபெறுமதுநால்வகைத்தே.
(எ-ன்) வழிநூலினைத்தெனவுணர்-ற்று.
(இ-ள்) இறந்ததுபோற்ற லென்னுமுத்தியான், முதல்வனிற் சிறந்த முதனூலின்வழியொழுகலாறுடைய
வழி நூலானது நால்வகைப் படுமென்றவாறு. அதை முன்னர்க்காட்டுதும்.
12.தொகுத்தலும்விரித்தலுந்தொகைவகைவிரியிற்
பகுத்தலுமொழிபெயர்த்தலுமெனும்பான்மைய.
(எ-ன்) மேற்காட்டப்படுமென்ற நால்வகை யாப்பிற்கும் பெயரு முறையுந் தொகையு முணர்ற்று.
(இ-ள்) முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலுந் தொகுத்துச் செய்ததனை
விரித்துச் செய்தலு மிருவகையையுந் தொகைவகைவிரியாகப் பகுத்துச் செய்தலும் வடமொழியைத்
தமிழ் மொழியாகப் பெயர்த்துச் செய்தலுமெனப் பெரியோராற் கூறப்படும் பான்மையையுடைய அந்நால்வகையுமென்றவாறு.
13.பாயிரமுன்பின்பகர்நெறியினிலுறும்.
(எ-ன்) தொகைச்சூத்திரத்துட் பாயிரமுதலுபுவென்றா ரவை யிரண்டு முணருமாறுணர்ற்று.
(இ-ள்) பொதுவுஞ்சிறப்புமெனக் கூறிய பாயிரங்களினிலக்கணங்க ளிந்நூன்முகத்து முன்னரும் பின்னருங்
கூறு மிருவகைச் சூத்திரங்களா னறியப்பெறு மென்றவாறு. எனவே வேறெடுத்துக் கூறப்படுவதில்லை யென்பதாம்.
14.அறம்பொருளின்பம்வீடவைபகர்நாற்பொருள்.
(எ-ன்) நாற்பொருணலனுற நவில்வனவாகியென்றா ரவையிவை யென்பதுணர்-ற்று.
(இ-ள்) அந்நூல்கள் பகருநாற்பொருள் அறனும் பொருளுமின்பமும் வீடுபேறுமாமென்றவாறு.
15.நூலினொருபொருணுதலியதொன்றாய்ச்
சில்வகையெழுத்திற்செறிந்திடும்யாப்பாய்ப்
பலதிறப்பயன்றெரிவுடையதோர்பண்பாய்ப்
படிமக்கலத்துட்படுநிழல்பொருவ
வொண்மையுநுண்மையுமுறுவதுசூத்திரம்.
(எ-ன்) நூல்கட்கங்கமாகிய சூத்திரங்களினிலக்கணமுணர்-ற்று.
(இ-ள்) மேற்றொகுத்தன்முதலாய நால்வகையாப்பிற்றாம் நூலினுளொரு பொருளைக் குறித்ததொன்றாகிச்
சில்வகையெழுத்தினா லகல் வின்றியடங்கிய யாப்பா யுரைக்குங்காற் பலவகைத்தாய
பொருள்களெல்லாந் தன்னகத்தடக்கி யாராயப்படுவதோர் பண்புடைத்தாகி யாடி
சிறிதாயினும் அகன்ற பொருள்களின் வடிவை யகத்தடக்கியறிவித்தாற் போல
நுண்ணிய பொருண்மையோடு விளக்கமுடைத்தாய் மிகுவது சூத்திரமாமென்றவாறு.
16.அதுவே,
மாட்டுறுப்பரிமாநோக்கந்தவளைப்
பாய்த்தாற்றொழுக்குப்பருந்தின்வீழ்வொடு
நிரனிறைவிளக்கெனும்பொருள்கோணிலைத்தே.
(எ-ன்) சூத்திரங்களின் பொருள்கோணிலையுணர்ற்று.
(இ-ள்) அச்சூத்திரம் மாட்டுறுப்புமுதலாகத் தீபகமீறாகக் கூறப்பட்ட வேழு பொருள்கோணிலையை யுடைத்தென்றவாறு.
நிலைமை யுடைத்தென்றதனா லொழிந்தபொருள்கோளான் வருவனவுங்கொள்க.
17.ஓத்தெனப்படுவதோரினப்பொருளைக்
கோத்தொருநெறிபடக்கூறுவதாகும்.
(எ-ன்) இஃதோத்திலக்கணமுணர்ற்று.
(இ-ள்) மேலோத்தெனக்கூறப்பட்டது ஓரினமாகியபொருள் களையிதற்கிஃதியைபுடைத்தென்ன நேரினமணிகளை
வடத்திற்கோத்தாற் போல அடைவிலேசேர்த்தோரியலாகிய நடைபெறக் கூறுவதாமென்றவாறு.
அது வேற்றுமையோத்து, வேற்றுமைமயங்கியல், விளிமரபென முறையே வேற்றுமையாயினும்
வேறுவேறியலாக்கி யொரோரின மாகவுரைத்தவாற்றா னுணர்க.
18.படலமென்பது பன்னெறிப்பொருளாற்
புடைபடவிரவியபொது மொழித்தொடர்பே.
(எ-ன்) படலமென்பதனிலக்கணமுணர்ற்று.
(இ-ள்) படலமென்று கூறப்படுவது பலவேறு நடைபெற்று வருபொருளா லிடம்பெற்று
விரவிய பொதுமொழித்தாய்வருந் தொடர்புடைத்தாமென்றவாறு.
19.அவையொருமூன்றுமடக்குதல்பிண்டம்.
(எ-ன்) பிண்டமாமாறுணர்ற்று.
(இ-ள்) மேற்கூறிய சூத்திர மோத்துப் படல மென்னுமூன்றுறுப்பையு மகத்தடக்குவது பிண்டமாமென்றவாறு.
அம்மூன்றினையு முறுப்பெனவே பிண்டமென்ப துறுப்புடையவயவியென்பது பெற்றாம்.
அவையாவன : தொல்காப்பியமென்பது பிண்டம். அதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம்.
ஒழிந்த விரண்டும் ஓத்தும் சூத்திரமுமாம்.
20.மிகத்தெளிவுடையவகத்தியமதுபோன்
முத்தமிழுட்கொளுமூன்றுபிண்டமுமுறுப்
பொத்தொருங்குட்கொளலுறின்மகாபிண்டம்.
(எ-ன்) மகாபிண்டமாமாறுணர்ற்று.
(இ-ள்) மிகவுமுந்து நூல்களையாராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனாற் கூறப்பட்ட வகத்தியமென்னு
நூல்போல இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னு மூன்று பிண்டத்தினையுந் தனக்குறுப்பாகப் பொருந்தும்படி
முழுதுமுட்கொண் டொருநூலாக நிற்றல்பொருந்தின் மகாபிண்டமாமென்றவாறு.
21.உற்றதுபதப்பொருளுதாரணமூன்றுடன்
கற்றவர்வினாவிடைகாட்டுதல்காண்டிகை.
(எ-ன்) வைத்தமுறையானே காண்டிகையாமாறுணர்ற்று.
(இ-ள்) நூல்களைக் கற்றுணர்ந்த வாசிரியர் சூத்திரத்துட்கூறக் கருதியதுணர்த்தலுஞ் சூத்திரத்துட்
சொற்றொறும் பொருளுணர்த்தலு மதற்குதாரண முணர்த்தலு மென்னு மிம்மூன்றுடன்
கடாவுங் கடாயதற் கெதிர்மொழியுங் காட்டுதல் காண்டிகையாமென்றவாறு. வினாவல்-கடாவல், விடை – அதற்கெதிர்மொழி.
22.ஒன்றியசூத்திரத்துட்பொருளன்றியு
மின்றியமையாதனபுணர்த்திசைத்தவைந்
துறுப்புடனிருதிறத்துரையிடனாகமெய்ந்
நிறுத்தியதொன்றெனநிகழ்த்துதல்விருத்தி.
(எ-ன்) முறையானேவிருத்தியாமாறுணர்ற்று.
(இ-ள்) புலவனாற்கூறக்கருதிய பொருளினைக் கூறுதற்குப் பொருந்திய சூத்திரத்துட் சொல்லோடும் பொருளன்றி
யெஞ்சிநின்றவற்றையு மிவ்விடத்திற் கிஃதின்றியமையாதென்பனவற்றையு மவ்விடத்திற் கொணர்ந்து
பொருத்திச் சொல்லப்பட்ட காண்டிகையுறுப்பாகியவைந் தோடுங்கூட்டி யதற்குத் தன்னூலிடனாகவும்,
பிறநூலிடனாகவுமுண்மை நிலைநிறுத்தப்படுவதொன்றாய் நடத்துதல் விருத்தியாமென்றவாறு.
உறுப்பைந்தாவன. கருத்துமுதல் விடையீறாகக் கூறியவைந் தென்றறிக.
இருதிறத்துரையிடனாகவென்பது தன்னூல் பிறநூலென்னுமிரண்டிடனாகவென்றறிக.
23.பொருளிலகூறன்மருணிலைத்தாத
லின்னாச்சொற்பெறல்வெளிறுபட்டிழிதன்
மொழிந்ததைமொழி தன்முரண்கொளமொழிதல்
குறைபடக்கூறன்மிகைபடவிளம்பல்
சந்தவின்பந்தழுவுதலின்மை
யெதிர்மறுத்துணர்த்தலென்றிவையுளப்படக்
கூறினரீரைங்குற்றநூற்கே.
(எ-ன்) மேலதிகாரப்பட்ட முறையே யீரைங் குற்றமுமுணர்ற்று.
(இ-ள்) பொருளிலகூறலென்பது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக்கொப்பின்றிப் பயனில்லாதனகூறல்.
மருணிலைத்தாத லென்பது கேட்போர்க்குப் பொருள்விளங்காமன் மருளுதற்கிடனாதல்.
இன்னாச்சொற் பெறலென்பது கேட்போர்க்கின்னா யாப்பிற்றாயிருத்தல்.
வெளிறுபட்டிழித லென்பது குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல்.
மொழிந்ததை மொழிதலென்பது ஒருகாற்கூறியதனைப் பின்னுங் கூறல்.
முரண்கொள மொழிதலென்பது முதலே கூறியபொருளோடு மாறுகொள்ளுமாறு பின்னர்க்கூறல்
குறைபடக்கூறலென்பது முதலே யதிகரித்த பொருள்களுட் சிலவற்றைக் கூறாதொழிதல்.
மிகைபடவிளம்பலென்பது அதிகரித்த பொருளன்றிப் பிறபொருளுங்கூறல்.
சந்தவின்பந் தழுவுதலின்மை யென்பது எடுத்த யாப்பிற்கிணங்குமோசையின்றிக் கூறுதல்.
எதிர்மறுத்துணர்த்தலென்பது எதிர்மறுத்துணர்த்தலுங் குற்றமாமென்றவாறு.
அஃதாவது
பாவஞ்செய்தானிரயம்புகுமெனக் கருதிக்கூறுவான் தவஞ்செய்தான் சுவர்க்கம்புகுமென்றல்.
இவ்வாறு கூறிற் சுவர்க்கம் புகுமென்னும் பொருடோன்றி நிரயம்புகுமென்னும் பொருடோன்றாமையிற் குற்றமாயிற்று.
என்னை? “எதிர்மறுத்துண ரினித்திறத்தவுமவையே” என்னுமரபியற் சூத்திரத்தானுணர்க.
24-அழகெனத்தகுவதரிறபநாடி
னகலாநடைத்தாயாழமது டைத்தாய்ப்
பொருள்புலப்பாட்டிற்பொருணலன்சொன்னல
னோசையினிமையோடூதியம்பயத்த
லுலகமலையாமையுதாரணம்புணர்த்த
னவிறொறும்புதுவதுவாய்நயனளிப்பதி
னீரைந்தாமெனவியம்பினர்புலவர்.
(எ-ன்) ஈரைந்தழகுமுணர்-ற்று.
(இ-ள்) நூலுக்கழகெனும்படிக்குத் தகுவது குற்றமற வாராயிற் சூத்திரஞ்சில்வகையெழுத்தாற்
செறிந் திறப்பவகலாதநடைத்தா யாழ்ந்த பொருளுடைத்தா யிலக்கணவான்களுக்குப் பொருள் புலப்படுவதாய்ப்
பொருணலனுஞ் சொன்னலனு மோசையினிமையுமுடைத்தாய்க் கற்றோர்க்குப் பயன்றருவதா யுலகத்தோடு
மாறுபடுதலின்றி யுதாரணம் புணர்ப்பதாய்க் கற்குந்தொறும் புதுவதா யின்பமளிப்பதோடு மீரைந்தென்று கூறினர் புலவரென்றவாறு.
25.உள்ளுறுத்தமைத்தவுத்திவகையுணர்த்தி
னுள்ளியதுணர்த்தலுரைமுறைவைப்பே
தொகைபெறநாட்டல்வகைபெறக்காட்டல்
விரிந்தவையிவையெனவிழுமிதிற்கூட்டல்
தொகுத்தமொழியின்வகுத்தனகோடன்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றே
பலபொருட்கேற்பினல்லவைகோடன்
மொழிந்தபொருளோடொன்றவைத்தன்
மொழிந்தனமென்றன்மொழிவாமென்ற
லிறந்ததுகாத்தலெதிரதுபோற்றன்
மொழியாததனைமுட்டின்றிமுடித்தல்
வந்ததுகொண்டுவாராததுமுடித்தல்
வாராததுகொண்டுவந்ததுமுடித்தல்
பிறன்கோட்கூறறன்கோட்கூறல்
பிறனுடம்பட்டது தானுடம்படுத
லறியாதுடன்படலாணைகூற
றன்குறியிடுதறந்துகொணர்ந்துரைத்தன்
மறுதலைசிதைத்துத்தன்றுணிபுரைத்தன்
மாட்டெறிந்தொழிதலிரட்டுறமொழித
லொன்றினமுடித்தறன்னினமுடித்தன்
மாட்டுறுப்பினவாமனக்கொளக்கூற
லுய்த்துக்கொண்டுணர்தலினுரனுடையனவாய்த்
தீபகவகையாற்சிறப்புறக்கூறல்
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்தலென்
றமைத்ததினகப்படவமையாதனவுஞ்
சுருங்கக்கூறியதொடர்பினைநாடி
யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே.
(எ-ன்) மேலதிகாரம்பாரித்த பன்னிரண்டினு ளிறுதிநின்ற தந்திரவுத்தியாமாறுணர்-ற்று.
(இ-ள்) உள்ளியதுணர்த்தன் முதலாகச் சொல்லினெச்சஞ் சொல்லியாங் குணர்த்தலீறாகச் சொல்லப்பட்ட
முப்பத்திரண்டு மத்தன் மையபிறவுந் தந்திரவுத்திகளாம்.
அவற்றையு மிதனுட்கூறியதாகப் பிறர்க்குணர்த்துத லறிவுடையோர்க்கு முறைமையாமென்றவாறு.
தந்திரமெனினு நூலெனினுமொக்கு மென்றவாறு உத்தியென்பது வடமொழிச் சிதைவு.
அஃதாவது சூத்திரத்தின்பாற் கிடப்பதோர் பொருள் வேறுபாடுகாட்டுவது.
உள்ளுறு…… யுணர்த்தினென்பது முந்துநூல் செய்த ஆசிரியர் நூற் கின்றியமையாச் சிறப்பென்பதாகக
கருதியமைக்கப்பட்ட தந்திரவுத்தியினது கூறுபாடுணர்த்தினென்றவாறு.
உள்ளியதுணர்த்தலென்பது சூத்திரத்திற் சொற்றசொற்குக் கூறிய வடைவே பொருளுணர்த்துவதன்றி
யிதன்கருத் திஃதெனவுணர்த்தல்.
அஃதாவது எழுத்தெனப்படுப என்னுஞ்சூத்திரத்தினுள் எழுத்தினைத் தென்றறிவித்தலை நுதலிற்றென்றல்.
உரைமுறைவைப் பென்பது நூலுண் முன்னம் பலபொருளை யதிகரித்தவழிப் பின்னுமவற்றை யம்முறையேவிரித்தல்.
அஃதாவது உயர்திணை யஃறிணையென வதிகரித்து ஆடூஉவறிசொன் மகடூஉவறி சொல்
என்னுஞ்சூத்திரங்களா னிறுத்தமுறைபிறழா துயர்திணையை முற்கூறல்.
இன்னுமிதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்திரத்துளோதாததன் காரியமாயின
வழியதனைச் சூத்திரந்தோறுங் கொணர்ந்துரைத்தலுமாம்.
அஃதாவது ஏழாவதுயிர் மயங்கியலில் “அகரவிறுதிப்பெயர்நிலைமுன்ன” ரென்னுஞ் சூத்திரத்திற் கசதபத் தோன்றினெனக்கூறி,
வினையெஞ்சுகிளவியுமென்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றிலரேனும் அதிகாரமுறைமையினால் வல்லெழுத்து வரும்வழி யெனவுரைத்தல்.
தொகைபெறநாட்டலென்பது வகைபெறக் கூறல் வேண்டுமாயினு மதனைத் தொகுத்துக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய் முப்பஃதென்ப” என்றாற்போல்வன.
இன்னும் பலசூத்திரத்தாற்கூறிய பொருளை யித்துணையுங்கூறப்பட்ட திஃதெனக் கூறலுமாம்.
அஃதாவது “தூக்கியல்வகையேயாங்கெனமொழிப” என்பதனாற்கொள்க.
வகைபெறக்காட்டலென்பது தொகைபெறக் கூறியவற்றை வகைபெறக் கூறல்.
அஃதாவது “அகரமுதனகரவிறுவாய்முப்பஃதென்ப” எனத் தொகுத்தவற்றை
அ இ உ எ ஒ என்றும் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் வகுத்தல்.
அன்றியும் “ஒளகாரவிறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரெனமொழிப”
“னகாரவிறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யெனமொழிப” என்பனவுமாம்.
விரிந்தவையிவையென விழுமிதிற் கூட்டலென்பது, தொகுத்தும் வகுத்துங் காட்டியவற்றை யிறப்ப
விரியாமல் விழுமியவாக விரித்து முடித்தல்.
அஃதாவது “உயிர்மெய்யாய்தமுயிரளபொற்றள, பஃகிய இ உ ஐ ஒள மஃகான், றனிநிலைபத்துஞ்சார்பெழுத்தாகும்” என்னு
மதனுட் சார்பெழுத்தெனத் தொகையாலொன்றும் வகையாற்பத்து மாகியவற்றை
“உயிர்மெய்யிரட்டு நூற்றெட்டு” என்னுஞ் சூத்திரத்தான் “ஒன்றொழிமுந்நூற்றெழுபானென்ப” என விரித்ததன்
மேலும் உயிர் மெய்க்குறில் உயிர்மெய்ந்நெடில் உயிர்மெய்யகரமெனவும் வல்லினம் மெல்லினம் இடையினம்
எனவும் இறப்பவிரியாமல் விழுமிதாய்க்கூட்டல்.
தொகுத்த……. கோடலென்பது “றெட்டெழுத்திம்பரும்…… வல்லாறூர்ந்தே” என்னுஞ் சூத்திரத்தாற்
பிறிதுமோர்பொருள் வகுத்துக் காட்டல்.
அஃதாவது “குற்றியலுகரமுறைப்பெயர்….. முதலும்” என்னுஞ் சூத்திரத்தான் மொழி
முதற் குற்றுகரமுங்கோடல். சொல்லின் முடிவினப் பொருண்முடித்த லென்பது மது.
முந்துமொழிந்ததன்றலை தடுமாற்றே யென்பது முற்படவதிகரித்த பொருளை யம்முறையிற்கூறாது முறைபிறழக்கூறுதல்.
அதனை யங்ஙனங் கூறுங்கால் ஒருபயனோக்கிக் கூறல்வேண்டும்.
அது புள்ளிமயங்கியலுள் “ஞகாரையொற்றிய” என்ற சூத்திரத்தினுள் ஞகார வீறுகூறி யதன் பின்னர்
ணகாரவீறுகூறாதே வருஞ்சூத்திரத்தினுள் “நகரவிறுதியுமதனோரற்றே” என முடிபொப்புமை நோக்கிக் கூறியதாற் கண்டுகொள்க.
பலபொருட்… கோடலென்பது ஒருவகைப்பொருள் பலபொருட் கேற்குமாயினு மவற்றுணல்லதனைக் கோடல்.
அஃதாவது மெய்ப்பாட்டியலுள் அகத்திற்குரியவாகப் புகுமுகம்புரிதன் முதலாகக் கையறவுரைத்த லீறாகக் கூறிய
அறுநான்கு மெய்ப்பாடும் அகத்தினுள் இரு வகைக் கைகோளுள்ளுங் களவினுள் முறையேவந்து கற்பினுளம்
முறையே வரப்பெறாமையி னவைகளவிற்கே யுரித்தென விதந்து கூறலானறிக.
அன்றியும் ஒரு சூத்திரம் பலபொருட்கேற்குமாயினு மதற்குணல்லதனைப் பொருளாகக்கோடலுமாம்.
அஃதாவது “வேண்டிய கல்வியாண்டு மூன்றிறவாது” என்பதற்குக் கல்வி வேண்டிய ஆண்டிறவாது
அக் கல்வியெல்லா மூன்றுபாதத்தைக் கடவாதென்றதனாலறிக. அன்றி ஓதற்பிரிதற் காண்டு மூன்றென்பது பொருந்தாது.
அன்றியும் “இலனென்னுமெவ்வமுரையாமையீதல், குலனுடையான்கண்ணேயுள” என்பதனுட் பலபொருடோன்றியவிடத்து
முதலேகண்ட விரண்டு கிரிகையுமன்றி யிரப்போனின்னு மொருவர்பால் யானொன்று மில னென்னு மான
பங்கங்கூறாம லிரக்கப்படுவோ னீகையெனப் பொருள் கோடலுமாம்.
மொழிந்த பொருளோடொன்றவைத்த லென்பது சூத்திரத்துப் பொருள் பலபடத் தோன்றுமாயினு
முற்பட்ட சூத்திர யாப்பிற்கேற்பப் பொருளுரைத்தல். அஃதாவது
“இலனென்னுமெவ்வமுரையாமை” என்னுங் குறளுக்கு முன்னருத்திக்கேற்பக் கூறிய பொருளன்றி
“நல்லா றெனினுங்கொளறீதுமேலுலக, மில்லெனினுமீதலேநன்று” என்னு மேலிற் குறளிற் பொருள்கட்கொன்ற
வும்மையைவிரித்து இலனென்னு மெவ்வமுரையாமையு மீகையுங் குலனுடையான் கண்ணேயுள எனவுரைத்தல் கொள்க.
மொழிந்தனமென்றலென்பது பலபொருள்களையும் அதிகரித்த வற்றுட் சிலபொருளை மேற்கூறப்பட்டனவென்றல்.
“அஃதாவது மாத்திரை யளவு மெழுத்தியல்வகையு, மேற்கிளந்தன்ன” வென்றதனாற் கொள்க.
மொழிவாமென்றலென்பது சில பொருளைக் கூறி யவற்றுள் ஒன்றனை யின்னவிடத்துக் கூறுவாமென்றல்.
அஃதாவது “குற்றியலிகரநிற்றல் வேண்டும்” என்ற சூத்திரத்தில் ஒருமொழிக் குற்றியலிகரங்கூறி
அதன் பின்னர் இருமொழிக்கண்ணுங் குற்றியலிகரம் வருமென்பதற்கு “புணரியனிலையிடைக்குறுகலுமுரித்தே” என்னுஞ் சூத்திரத்தின்
“உணரக் கூறின் முன்னர்த்தோன்று” மெனக்குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படுமென்றத னாலுணர்க.
இறந்தது காத்தலென்பது மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின்வருஞ்சூத்திரத்தானமைத்தலாம்.
அஃதாவது முதனூலுக்குச் சூத்திரங் கூறிய பின்னர் “வழியெனப்படுவததன் வழித்தாகும்” என்று
வழி நூற்குக்கூறிய சூத்திரத்தில் வழிநூலானாய பயன் கூறாது மேல்வருஞ் சூத்திரங்களாயவவற்றின்கண்
“வழியினெறியே நால்வகைத்தாகும்” என்ற பின்னர் அதனாலாயபய னதனிற்கூறாது
“தொகுத்தல் விரித்தல்” என்னுஞ்சூத்திரத்தா லதனாலாயபயன் கூறல் இறந்தது காத்தலாயிற்று.
எதிரது போற்றலென்பது முன்பு கூறிய சூத்திரத்தானே மேல் வருஞ் சூத்திரப் பொருளையும் பாதுகாத்தமைத்தல்.
அஃதாவது நூன் மரபினுள் “உட்பெறுபுள்ளியுருவாகும்மே” எனப்பகரத்தோடு மகரத்திடை வரிவடிவிற் கிலக்கணங் கூறப்
புகுந்து மேல்வருஞ் சூத்திரத்தின் “மெய்யினியற்கை புள்ளியொடுநிலையல்” என்றதனால்
மெய்களிற்கூடிப் புறத்திற் பெறும்புள்ளியோ டுள்ளாற்பெறும்புள்ளியும் மகரத்திற்கு வரிவடிவாமெனக் கோடல் எதிரது போற்றலாயவாறு காண்க.
“அற்புதஞ்சிலேடை” யென்னும் பொருளணியியற் சூத்திரமுமிது.
மொழியாததனைமுட்டின்றி முடித்தலென்பது சூத்திரத்தின் கண்ணேயெடுத்தோதாத பொருளை முட்டுப்படாம லுரையினான் முடித்தல்.
அஃதாவது “அரையளபுகுறுகன்மகரமுடைத்தே, யிசையிட னருகுந்தெரியுங்காலை” என்பதனாற்கொள்க.
என்னை? அரையளவாகிய வெல்லையிற்குறுகிக் கான்மாத்திரையவாதலை மகரமெய்யுடைத் தஃதி யாண்டோவெனின்
வேறோரெழுத்தின தோசையின் கண்ணதுதான் சிறுபான்மையவாகிவரு மாராயுங்காலத்தென்பதனாலாயிற்று.
என்னை? கான்மாத்திரையென்பது சூத்திரத்தின் கண்ணவாய்ச்சொல்லி முடியாததனை யுரையினான் முட்டின்றி முடித்தலானெனக்கொள்க.
இக் கருத்தினானே “சூத்திரத்திற் பொருளன்றியும் யாப்புற, வின்றியமையா தியைபவை யெல்லா,
மொன்ற வுரைப்ப துரையெனப்படுமே” யென்றோதுவாராயிற்று.
வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதும், வாராதது கொண்டு வந்தது முடித்தலென்பதுமான
ஒருங்கெண்ணப்பட்ட விரண்டிற்கும் ஒரோவொன்றாகப்பகுத்து இலக்கணங்கூறிய விரண்டனுள்
பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்ததனைக் கொண்டு முன்னர்க்கூறிய சூத்திரத்துள்
வருமிலக்கணத்திற்கு வாராததனைக் கூட்டிமுடித்தலும், முன்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வாராததனைக் கொண்டு பின்னர்க் கூறிய
சூத்திரத்துள் வருமிலக்கணத்திற்கு வந்ததனைக்கூட்டி முடித்தலுமாம்.
அவையாவன : “கூறியவுறுப்பிற் சிலகுறைந்தியலினும், வேறுபாடின்றென விளம்பினர்புலவர்” எனவும்,
“அறமுதனான்கினுங் குறைபாடுடையது, காப்பியமென்று கருதப்படுமே” எனவும் பொதுவியலுட் கூறிய சூத்திரங்களானுணர்க.
என்னை? அறமுதனான்கினுங் குறைபாடுடையது காப்பியமெனவே, பின்னர்க்கூறிய சூத்திரத்தினுள் வந்தது கொண்டு
அறமுதனான்கு மொழித் தல்லா தவுறுப்பிற் குறைவதே பெருங்காப்பியமென்று முடித்தலானுங்,
கூறியவுறுப்பிற் சில குறைந்தியலினு மெனவே முன்னர்க் கூறிய சூத்திரத்தினுள் வாராத அறமுதனான்கின்
ஒன்றும் பலவுங் குறைபாடுடையது முறுப்பிற் சில குறைதலுங் காப்பியமென்று வாராததனைக் கொண்டு வந்ததனோடு
முடித்தலானுமென அடைவே கண்டுகொள்க. இவை தம்மிற்றாமாறாடினுமிழுக்காது.
பிறன்கோட்கூறலென்பது பிறநூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல்.
அஃதாவது “வேற்றுமைதானேயேழெனமொழிப” என்றல். எனவே, தன் கோட்பாடன்றென்பதாயிற்று.
தன்கோட்கூறலென்பது பிற நூலாசிரியன் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுதல்.
அஃதாவது “விளிகொள்வதன்கண் விளியோடெட்டே” என்றல்.
பிறனுடம்பட்டது தானுடம்படுத லென்பது பிறநூலாசிரிய னுடம்பட்டதற்குத் தானுமுடம்படல்.
அஃதாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் வருமென்றார் பாணினியா ரஃதிவர்க்கு முடம்பாடு என்றல்.
அஃது இயற்றப்படுவதும் வேறுபடுக்கப்படுவதும் எய்தப்படுவதுமாம்.
அதற்குதாரணம் – எயிலையிழைத்தான், மறத்தைக் குறைத்தான், நூலைக் கற்கும் என அடைவேகாண்க.
அறியாதுடம்படல் என்பது தானறியாதவற்றைப் பிற பெரியோர் கூறியவாற்றானுடம்படல்.
அஃதாவது ஏழாநரக மித்தன்மைத்தெனச் சான்றோர் கூறியவழித் தனக்கது புலப்படாததாயினுந் தானதற்குடம் படல்.
இது வழி நூலாசிரியர்க்குமுரித்து.
ஆணைகூறலென்பது ஒருபொருளைக் கூறும்வழி யேதுவினாற் கூறலன்றித் தன்னாணையாற்கூறல்.
அது வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறியவழி அவர் விளியை முதல்வேற்றுமையிலடக்கினார்.
அதற்குத் திரிபு கூறாதே யதனை யெட்டாம் வேற்றுமை யென்றாலும் ஆண்டுக் கடாவப் படாமை.
தன்குறியிடுத லென்பது உலகின்கண் வழக்கின்றி யாசிரியன்றன் குறியிடல். அஃதாவது உயர்திணை அஃறிணையென்பன.
தந்துகொணர்ந்துரைத்த லென்பது முன்னராயினும் பின்னராயினு நின்ற சூத்திரச் சொல்லை யிடைநின்ற சூத்திரத்திற்
கொணர்ந்து புணர்த்துரைத்தல். அஃதாவது
“நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழி யீற்றுங், குற்றியலுகரம்வல்லா றூர்ந்தே” என்பதனில் முன்னின்ற சூத்திரத்தில்
நிற்றல்வேண்டுமென்ற சொல்லைக் கொணர்ந்து புணர்த்துரைத்தல்.
மறுதலை சிதைத்துத்தன்றுணிபுரைத்த லென்பது நெட்டெழுத் தேழளபெடையென்பன குற்றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்தது.
அது அஅஅ என நின்றதல்லவென அவர் மறுதலையைச் சிதைத்து வேறோரெழுத்தென்று கூறல்.
மாட்டெறிந்தொழித லென்பது முன் னொரு பொருட்கிலக்கணங் கூறிப் பின்னர்வருவது மதுபோலுமென்றல்.
அஃதாவது ஏழாவ துயிர்மயங்கியலில் “உகரவிறுதியகரவியற்றே” என்றல்.
இரட்டுறமொழித லென்பது ஒருவகையானின்ற தொடர்ச்சொல்லாதல் ஒரு சொல்லாதல் ஒரு செய்யுளகத்துப்
பலபொருளை மொழிவதா மென்றவாறு. அஃதாவது
“வந்தவரவென்னையெனவாட்கண்மடவாய் கேள், சிந்தை நலிகின்ற திருநீர்க்குமரியாட,
வந்திலதனாய பயனென்னை மொழி கென்றாண், முந்திநலிகின்ற முதுமூப்பொழியுமென்றான்” என்பதனாலறிக. என்னை?
திருநீர்க்குமரியாடவெனவே அழகிய நீர்மையையுடைய கன்னியாகிய நின்னைப் புணரவந்தேனென்பதனை மறைத்தனவாகவும்,
பொலிந்த தீர்த்தநீராகிய குமரியாற்றை யாடவந்தேனென வெளிப்படையாகவுஞ் செம்மொழியாக விரட்டுறமொழிதலாலும்,
அதனாலாய பயன்யாதென அக்காலத் திம்மூப்பு நீங்குமென அத்தச்சிலேடையாகவுங் கொள்ளக்கிடந்தமையாலு மெனக் கொள்க.
ஒன்றினமுடித்த லென்பது ஒன்றற்கிலக்கணங்கூறியவிடத்துக் கூறாது தொக்குநின்ற ஒழிபிற்கு மதுதானே விதியாகமுடித்தல்.
அஃதாவது “புள்ளியீற்றுமுன்னுயிர் தனித்தியலாது, மெய்யொடுஞ் சிவணுமவ்வியல் கெடுத்தே” என்னும் சூத்திரத்தானுணர்க.
என்னை? இயல்பல்லாத புள்ளிமுன் னுயிர்வந்தாலும் அவ்விதி கொள்கவென முடித்தல்
உதாரணம் :- ஆலடை, ஆலாடை எனவும், அதனை எனவும், நாடுரி எனவும் வரும்.
தன்னினமுடித்த லென்பது ஒருவகையுட்சிலவற்றிற் கிலக்கணங் கூறியவிடத்துச் சொல்லாதொழிந்தனவாய்த் தொக்கதற்கும்
ஆட்சியுங் காரணமும்பற்றி யச்சூத்திரத்தினிடத் ததற்கும் வேறோரிலக்கணங் கூறிமுடித்தல்.
அஃதாவது “அ இ உ அம்மூன்றுஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரத்தானுணர்க. என்னை?
குற்றெழுத்தென்றவற்றுண் மூன்றனைச் சுட்டென்னுங் குறியவென்று கூறியவிடத்து எகரமும் வினாப்பொருளு ணர்த்துமென முடித்தல்.
மாட்டுறுப்பினவாமனக்கொளக் கூறலென்பது ஒரு சூத்திரத்துப் பொருள்கொள்ளுங்கா லகன்று பொருள்கிடப்பனவும்,
அணுகிக்கிடப் பனவுமான விருவகையையும் பொருண்முடியுமாற்றாற் கொணர்ந்துரைப்பச் செய்தல். என்னை?
“அகன்று பொருள்கிடப்பினும்… மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்” என்றாராகலின்.
மனக்கொளவென்பது கேட்டோர் மனத்துட் கொளவென்பதாம். இதற்குச் சூத்திரம்
“வடவேங்கடந்தென்குமரி…………… படிமையோனே” என்பதெனக்கொள்க.
அதற் கிளம்பூரணருரையன்றி நச்சினார்க்கினிய ரெழுதின வுரையைக் கண்டுகொள்க. அவற்றை யீண்டுரைப்பிற் பெருகும்.
உய்த்துக்கொண்டுணர்த லென்பது ஒரு சூத்திரத்தானொன்றற் கிலக்கணங்கூறியவழி யதற்குப் பொருந்தாமையுளதாகத்
தோன்றின் அதனையு மதற்குப் பொருந்தினவழியாகக் கூட்டுதல். அஃதாவது
ஏழாவ துயிர்மயங்கியலிற் “பனியெனவரூஉங்காலவேற்றுமைக், கத்து மின்னுஞ் சாரியையாகும்” என்பதன்கண்ணுணர்க.
என்னை? பனியத்துக்கொண்டான், பனியின்கட்சென்றான், பனியிற்சென்றான் என வரும்.
அவற்றுள் இன்பெற்றுழி முன்னர்க்கூறிய நாழிக்காயம், உரியக் காயம் என்பதுபோல
வல்லெழுத்து மிகாது வீழ்க்க என்பதற்குப் பொருந்த வுய்த்துணர்தல்.
தீபகவகையாற் சிறப்புக்கூறலென்பது குணந் தொழில் சாதி பொருள் என்னு நான்கனுள் ஒன்றைக்குறித்தவொருசெல்
செய்யுளிடத்து முதலிடைகடையென்னு மூன்றிடத்தினுள் ஓரிடத்தாகி யாதியினின்ற தந்தத்தளவுமோடவும் இடைநின்றது முன்னும்பின்னுமோடவும்,
இறுதிநின்ற திடையு முதலுமோடவுங் கவின்பெறக் கூறுதல். என்னை?
“குணந்தொழில் சாதி பொருள்குறித்தொரு சொல், லொருவயினின்றும் பலவயிற்பொருடரிற், றீபகஞ்செய்யுண்மூவிடத்தியலும்”
என்பது அணியியலாகலினுணர்க. அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும்.
சொல்லினெச்சஞ்சொல்லியாங்குணர்த்த லென்பது
“பெயர்வினையும்மை சொற்பிரிப்பென வொழியிசை, யெதிர்மறையிசையெனுஞ்சொல் லொழிபொன்பது” மென்னுஞ்
சொல்லெச்சங்களைக்கண்டு ஆங்காங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடலாம்.
அன்றியும் தொல்காப்பியர் நோக்கம் பற்றிப் பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்டவெனினுமாம்.
அவற்றிற்கெல்லா முதாரண மீண்டுரைப்பிற் பெருகும். அவையும் வந்துழிக் கண்டுகொள்க.
“என், றமைத்ததினகப்படவமையாதனவுஞ், சுருங்கக் கூறிய தொடர்பினைநாடி, யொருங்கமைத்துணர்த்துதலுரவோர்கடனே” என்பது,
(என்றென்பது-எண்ணிடைச்சொல். ) ஆதலா லங்ஙனங்கூறிய முப்பத்திரண்டாக அமைத்ததி னமையாதனவாமவற்றையுஞ்
சுருங்கக் கூறலென்னு மழகுநோக்கியும், முன்னோர் தந்திரவுத்தி முப்பத்திரண்டெனக் கொண்ட வரையறை
யிகவாமைக்கூறியதாகநோக்கி மிதனகத்தமைந்தனவாக வுணர்த்துதல் அறிவுடையோர்க்கு முறைமை யென்றவாறு.
அமையாதனவாவன பலவுள. அவற்றுள்ளுஞ் சில வருமாறு. வேண்டாது கூறிவேண்டியது முடித்தல், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி
வகுத்தல், பொருளிடையிடுதல் என்பன.
அவையாவன :- “ஏனையுயிரேயுயர் திணைமருங்கிற், றாம்விளிகொள்ளாவென்மனார்புலவர்” என்னுஞ் சூத்திரத்தானும்,
“அளபெடைமிகூஉமிகரவிறுபெய, ரியற்கையவாகுஞ் செயற்கையவென்ப” என்னுஞ் சூத்திரத்தானும்,
“ஒருமைசுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக்காகுமிடனுமாருண்டே” என்னுஞ் சூத்திரத்தானு முணர்க.
இவற்றுள் முன்னைய விரண்டும் விளிமரபு. மற்றையது எச்சவியல்.
அவற்றொடும் “ஆற்றொழுக்கரிமாநோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்ச்சிநிரனிறை” யென்பனவு
மொருசாராசிரிய ருத்தியுளமைத்தாரெனக் குறித்ததாம்.
அன்றியும், ஒன்றற்கிலக்கணங்கூறும்வழி யொருசூத்திரத்துட் பலவுத்திவருவனவு முளவென்னுநோக்கத்தாற் கூறியதூஉமாம்.
அதற்குதாரணம் :- “எல்லாமொழிக்குமுயிர் வருவழியே, யுடம்படுமெய்யினுருவு கொளல்வரையார்” என்பதனாலுமுணர்க.
என்னை? மூவகைப்பட்ட மொழிக்கு முயிர்முதன் மொழிவருமிடத்து இடை யுடம்படுமெய்யாகிய வடிவுகோடல் நீக்காரென்புழி
யுடம்படுமெய் யென்றாரல்ல தவை யிவையெனக் கூறா ரவற்றை யுரையிற்கோடலென்று மவை யகரமும், வகரமும் எனவும்,
அவற்றுள் இ ஈ ஐ வழியவ்வும் அல்லனவருவழி வகரமும் வரும் எனக்கோடலானும் ஒன்றினமுடித்த
லென்னுமுத்தியான் விகாரப்பட்ட மொழிக்கண்ணு முடம்படுமெய் கொள்ளப்படுமெனக் கூறியதற் குதாரணம்
மரவடி, ஆயிருதிணையெனவும் இரண்டுத்திவந்தவாற்றானறிக. தந்திரவுத்திமுற்றும்.
26.அடிவரையுளவாயடிவரையிலவாம்
பாட்டினும்பாவின்றெழுகிளவியினுங்
காட்டியவெழுநிலத்தனவாய்க்கழறிய
பொருளொடுகலந்துபுரைதீரொலிசெறிந்
தெண்ணத்தகைசாலீராறடிநிமிர்
பண்ணத்தியினும்பயில்வனவாகும்.
(எ-ன்) இதுவும் அந்நூலிற்கோ ரொழிபுகூறுதனுதலிற்று.
(இ-ள்) குறளடி முதலாய வைவகையடியானும் வரையறையுள வாம்பாட்டினாலும், அடிவரையறையிலவாம் பாட்டினாலும் பாவின்றி
யொழுகலாறுடைய பலசொற்றொடராலுங் கற்றோர்காட்டப்பட்ட வெழு நிலத்தெழுந்த செய்யுணடைத்தாயும்
அவற்றுட்பாட்டிற்குக் கூறிய பொருளோடுங்கூடிக் குற்றமற்ற ஓசைசெறியப்பட்டுப் புலவரானெண்ணும் படிக்குத் தலைமை
சான்ற பன்னிரண்டெனலாய நாற்சீரடியின் மிகுந்துங் குறைந்தும் வரும் பாவினத்தோடும் பயில்வனவாம் நூல்களென்றவாறு.
எழுநிலமாவன:- பாட்டும், நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்புமொழியும்.
அவற்றுள் அடிவரையுளபாட்டாவன :- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்பன.
அடிவரையிலவாவன:- நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி யெனக்கொள்க.
என்னை? “எழுநிலத்தெழுந்த செய்யுட்டெரியி, னடிவரையில்லனவாறெனமொழிப” எனவும்,
“அவை தாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, வேது நுதலிய முதுமொழியான,
மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” என்பவற்றானு முணர்க.
அன்றியும் இவற்றிற்கு முன்னர்ப் பாட்டுரைநூலேயென்னுஞ் சூத்திரத்தானுமுணர்க. எழு நிலத்தெழுந்த வென்பது வரையறைப் பண்புப்பெயர்.
பண்ணத்தி யென்பது பாவினம். பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்று பெயராயிற்று.
இவை இளம்பூரணர் முதலாயினாரொருசா ராசிரியர் நோக்கம். நச்சினார்க்கினியர் நோக்கமுமுணர்ந்துகொள்க.
27.விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு
மதியாலுரைத்ததும்வழங்கன்ஞாபகமா
விரிந்தநூல்களுள்வேறுவேறினமாய்த்
தெரிந்தவியல்களைச்செம்மையிற்றமிதமி
வெள்ளையினகவலின்விளம்பலுமரபே.
(எ-ன்) இதுவும் அந்நூற்குக் கூறிக் கூறாத வொழி பெதிரது போற்றலென்னுமுத்தியாற் கூறுதனுதலிற்று.
(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட விலக்கண நூல்களை அகவலின் வெள்ளையி னறைகவென்று முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை, ஆசிரியவிருத்த மென்னும் பாவினத்தாற்
பின் பிலக்கண நூல்செய்தோ ரிலக்கணங்களைக் கூறியதுங் கற்றோராலெடுக்கப்பட் லெடுக்கப்பட் டுலகின்கண்ணே
வழங்குதன்ஞாபகமாக விரிந்த நூல்களுள்ளும் பலவேறினமாக வாராய்ந்து பிரிக்கப்படும் பலவியல்களுள்ளுமோரியலை
முதலே வெண்பாவிற்கூறி, யதன்பின்னர்வரு மேனையியல் களையகவலானு மழகிதாய்த் தமிதமிகூறுவது மரபாமென்றவாறு.
அவை யாப்பருங்கலக்காரிகை, கயாகர நிகண்டு, சூடாமணி நிகண்டென்க.
இலக்கணமு மென்றவும்மை யெச்சவும்மையாதலாற் கதைதொடர்ந்த விலக்கியங்களுள்ளும்
வேறுவேறு பாவாகத் தமிதமிகூறலு மரபென்றவாறு. அவை சிலப்பதிகாரத்துள் மங்கலவாழ்த்துக்காதை மயங்கிசைக் கொச்சகக்கலியினும்,
அந்திமாலைச் சிறப்புச்செய்காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை இவை நிலைமண்டிலவாசிரியத்தும்,
கனாத்திறமுரைத்த காதை கலிவெண்பாவிலும் வந்தவாறுகாண்க. ஒழிந்தனவு மிவ்வாறுவந்தமை யாங்காங்குக் காண்க.
28. இருவகைநூன்மரபிவையெனமொழிப
(எ-ன்) இதுவும் அந்நூலினைத் தொகைவகைவிரிப்படுத்தி யொழிபுகூறுதனுதலிற்று.
(இ-ள்) நூலெனத் தொகையா னொன்றாய்நின்றவது இலக்கண விலக்கியமென வகையானிரண்டாம்.
நூலினது விரியின்மரபிவையெனக் கூறுவர் அகத்தியன் முதலிய தொல்லாசிரியரென்றவாறு. நூன்மரபு முற்றும்.
29. புரப்போன்மரபினைப்புகலுங்காலைக்
குலனுங்குணனுங்குரவரைப்பேணு
நலனுங்கடவுளைநயத்தலுங்கருணையும்
புலனவித்தொழுகலும்பொறையுந்தோற்றமு
முலகியலறிந்துயிர்க்குறுதிகோடலுங்
கற்றவர்காமுறவாழ்தலுங்காந்தியு
மதிநிகர்கல்வியுங்கதிர்நிகர்வனவாம்
வாய்மையுந்தூய்மையும்வழுவுதலின்றாய்
வாடாக்கற்பகமணமலிபொற்பூக்
கோடாச்செங்கேற்கொற்றவனிதியறை
வான்சுவைமருந்தாயிரவாய்ச்சேடனிற்
கற்றனயாவுங்கழகத்துதவும்
பெற்றியன்மறந்தும்பிறன்பழிகூறான்
சதிருடையேனெனத்தற்புகழ்ந்தறியான்
முதுமொழியிலக்கணவிலக்கியமுறையே
புதுமொழிபுணர்க்கும்புலமையோனே.
(எ-ன்) வைத்தமுறையானே நுவல்வோன்றன்மையுணர்-ற்று.
(இ-ள்) நுவல்வோன் – நூனுவல்வோன், எனவே ஆசிரியனாம். நூனுவல்வோனிலக்கணத்தைக் கூறுமிடத்துக்
குலமுதல் தூய்மை யீறாகவெண்ணப்பட்ட பதினாலினுள்ளு மொன்றும் வழுவுதலிலனுமாகிக்,
கற்பகமணமலிபொற்பூமுதலிய மூன்றனையுஞ் சேடனையுமொப்பவனுமாகிக், கற்றனகழகத்துதவும்பெற்றி,
பிறன்பழிகூறாமை, தற்புகழாமை மூன்று முடையனுமாகி, முந்து நூல்கூறியபடியே யிலக்கண விலக்கியமிரண்டும்
புதுமொழியாகப் புணர்க்கும் புலமையுமுடையோனாமென்றவாறு.
முதுமொழி – முந்து நூல். கற்பகமணமலி பொற்பூமுதலிய மூன்றுஞ், சேடனு மூவமையாதற்கேது முறையே மேற்காட்டுதும்.
இது பொழிப்புரை. ஒழிந்தவகல முரையிற் கொள்க.
30-ஆய்ந்தமைவுடையகல்வியுங்கவியும்
வாய்ந்ததற்குவமைமணமலிபொற்பூ.
(எ-ன்) முறையே மேற்காட்டுதுமென்ற நான்கனுள் மணமலி பொற்பூவை யொத்ததற்கேது வுணர்-ற்று.
(இ-ள்) வாடாதபொற்பூ முந்துநூல்களை யாராய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமெய்தியதற் குவமையாமென்றவாறு.
வாடாக்கற்பக மென்பது சூத்திரத்தில்லையாலோவெனின், தந்துகொணர்ந்துரைத்த லென்னுமுத்தியாற் கூறப்பட்டது.
அமைவு – நிறைவு. பொற்பூ – கல்வி. மணம் – கவியெனக் கொள்க.
31–அறன்றருபலபொருளான்றமைவுடைமையும்
பிறர்நிதியறையிற்பெருகியசெல்வமு
மளப்பருந்தன்மையுமவரவர்தாந்தினங்
கொளக்குறைவில்லதுகொற்றீவனிதியறை.
(எ-ன்) கொற்றவனிதியறையொத்தற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) அறத்தினாலுண்டாக்கப்பட்ட பலபொருள்களுநிறைவெய்துதலும், பிறர்நிதியறையினும் பெருகிய
செல்வவளனு, மொருவராலளத்தற்கரிய பெற்றியும், வறியோர்தாமே தினமும்வேண்டுவன தினமுங் கொள்ளா
நிற்கக் குறைவில்லாமையுஞ் செங்கோற்கொற்றவனிதியறைக் குண்டாய குறியென்ற வாறு.
எனவே, இவனுளத்து அறமுதலிய நாற்பொருளாங்கல்வி நிறைவுடைமை பிற ராராய்வின் மேம்பட்ட கல்வி
நிறைவுடைமை யெனவும், இவன் கல்விநிறைவுடைமை யளத்தற்கரியதென்பதூஉம், பிறரிவனிடத்து வித்தையைக்
கொள்ளக் கொள்ளக் குறையா தென்பதூஉ முய்த்துவமைகொள்ள நின்றமையுணர்க. இவை குறிப்புவமை.
32.உண்ணத்தெவிட்டாவுரிசையுமஃகா
வண்மையுந்தண்மையும்பயப்பதுமருந்தே.
(எ-ன்) வான்சுவைமருந்தொத்தற் கேதுவுணர்-ற்று.
(இ-ள்) அமிர்தமானது தன்னையுண்பவ ருண்ணவுண்ணத் தெவிட்டாவினிமையும், வற்றாவளமையும், குளிர்ச்சியும்
பயப்பதாமென்றவாறு. எனவே, அவன் கல்வியுங் கவியுங் கேட்போர் செவியாலுட் கொள்ள வுவட்டாதென்பது
மக்கல்விகவி கொள்வார்கொள்ளுந்தோறுங் குறைவின்றி நிறைவெய்துந்தன்மையாயிருக்குமென்பது
முவமையாலுய்த்துக் கொள்ள நின்றவா றுணர்க. அலங்க மிதுவு மது.
33.பாயிரந்தோய்ந்து பருப்பொருளின்றி
நுண்பொருள்பயக்குநூல்பலவாங்காங்
குலப்பின்மாணாக்கர்க்கோர்பகன்மயர்வறச்
செலச்சொலற்குவமையாயிரவாய்ச்சேடன்.
(எ-ன்) ஆயிரவாய்ச்சேட னுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.
(இ-ள்) சிறப்புப்பாயிரத்தோடுங்கூடிப் பருப்பொருளின்றி நுண்ணிய பொருள்களைக் கூறுவனவாம்
பல நூற்பொருள்களைக் குறைவில்லாத மாணாக்கர்பலர்க்கு மொருகாலத் தொருங் கிருடீரச் செலச்
சொல்லுதற் காயிரவாய்ச்சேட னுவமையா மென்றவாறு. இவர் கற்கப்படுவோர்.
34.மடியழுக்காறுவஞ்சகம்வெகுளி
யுணராததையுணர்ந்ததின்மேற்கோட
றம்மைப்புகழ்வதிற்றான்பிறரிகழ்தல்
கற்றவர்புனைந்தகவியினுட்சார்ந்த
குற்றமொன்றுளதேற்குணனமைத்தறியான்
செவ்வியின்மலர்ந்துநாறாச்செம்மலர்
வெவ்விடவரவுதன்வாய்க்கொள்விழுமணி
பொதுமகள்பாற்கொளப்பொருந்தியபோகஞ்
சிறியவன்றன்பாற்செறிதருபொருளெனுங்
கல்வியனாரியனாங்கடனிலனே.
(எ-ன்) கற்கப்படாதோர்குண முணர்-ற்று.
(இ-ள்) மடிமுதலாகக் கூறப்பட்ட நான்குங் கல்லாமைமேற் கொண்டொழுகலுந் தம்மைப்புகழ்வதோடும்
பிறர் குற்றமற்ற கல்வியையுங் கவியையு மிகழ்தலுங் கற்றோராற்புணர்க்கப்பட்ட செய்யுட்கண்ணுஞ் சார்ந்த குற்றஞ்
சிறிதுளவாமெனி லதனைக் குணனாகவமையாதது முடையனாகி யவற்றோடு நாறாச்செம்மலர் முதலிய நான்கும்
போலும் கல்வியையுடையவ னாரியனாங்கடனில னென்றவாறு.
கடன் – முறை. நாறாச் செம்மலர் முதலிய நான்குமொப்பென்பதற்கேது மேற்காட்டுதும். தம்மையென்னும் பன்மை யிழிபின்கண் மயங்கிற்று.
35.பல்காற்சொல்லியுந்தெற்றெனப்பயன்கொள
நல்காவாக்கதுநாறாமலரே.
(எ-ன்) நாறாச்செம்மல ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) ஒருசெய்யுளுக்குப்பொருள் பலகாற்கூறியுங் கேட்போ ருள்ளத்துத் துணிவுறச் செலச்சொல்லாவாக்கிற்குப்
பருவத்து மலர்ந்தும் பரிமளமெய்தாத மல ருவமையாமென்றவாறு. பருவத்தின் மலர்ந்து பரிமளமெய்தாத மலர் – முருக்கமலர்.
36.உகுமெனிற்கோடலல்லது வந்துகொள்
பகுதியின்றாகும்பாம்பின்வாய்மணியே.
(எ-ன்) பாம்பின்வாய்மணி யொப்பென்பதற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) பாம்பின்வாய்மணி பாம்பு தானேயுகுக்குமெனிற்கொள்வதல்லது இப்பொழுது வேண்டுமென விரும்பினோர்
விரும்பினபடியே யக்காலத்திற் கொள்ளும்பகுதி யில்லையாமென்றவாறு.
எனவே, அதுபோலவ் வாசிரியரிடத்திற் கல்வியுமவர்தாமேதரிற் கொள்வதல்லது கற்க விரும்புமாணாக்கர்க்கு விரும்பிய
காலத்து விரும்பினபடியே கொள்ளும் பகுதியின்றென்ப துய்த்துணரநின்றவாறு காண்க.
37.பொருளளவையில்வரும்பொதுமகணலனே.
(எ-ன்) பொதுமகளிடத்துநல மொப்பென்பதற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) பொருட்பரத்தையரிடத் துண்டானநலன் புமான்கள் கொடுத்த பொருளின தளவெவ்வள வவ்வளவைக்கொப்ப
வெய்து மென்றவாறு. எனவே, அவ்வின்பம்போல வவ்வாசிரியனிடத்துண்டான கல்வியு மாணாக்கர்கொடுத்த
பொருளளவைக்கொப்பக் கொள்ளப்படுமென வுய்த்துணரநின்றவாறு காண்க.
38–அறத்தமர்பசித்துழந்தலமரவுலகிற்
பிறர்க்குணவெதிர்செலும்பேதைகைப்பொருளே.
(எ-ன்) சிறியவன்பாற் செறிதருபொரு ளொப்பென்பதற்கேதுவுணர்ற்று.
(இ-ள்) பேதையரிடத்துண்டான பெரும்பொருளின்ப துன்பத்திற்குரியரா யுதவுந் தமராயுள்ளார் மிகவும்
பசித்துத் துன்பமுற்று மறுக்கமெய்தவும் அவர்க்குதவாது துன்பமுறுகாலத்துச் சிறிது முதவுதலில்லாத
வேதிலாருண்ணும்படிக் கவர்பசிக் கவர்கேட்குமுன்னெதிர் கொள்ளுமென்றவாறு.
எனவே, அப்பொருள்போல வவ்வாசிரியரிடத்துக் கல்வியுந் தம்மை வழிபடு மாணாக்கர்க்கெய்தாது
வழி படாமாணாக்கர்க் கெய்துவதொன்றாமென வுய்த்துணரநின்றவாறு
காண்க. இவை மூன்று சூத்திரமுங் குறிப்புவமை. இவர் கற்கப்படாதோர்.
39.புரத்தலினியல்பேபுகலுங்காலை
யதற்கமையாண்டின்மாணாக்கனையெதிருபு
கடவுளைவாழ்த்திக்காலமுமிடனுந்
திடனுறக்குறித்துமங்கலத் திசைநோக்கி
யிருந்துனக்கிவையியல்பென்னவுள்ளுறுத்தித்
திருந்தியசிந்தையிற்செம்முகமலர்ந்து
நுவலத்தகுநூனுதலியதிறத்தினைத்
தவலருஞ்சிறப்பிற்றான்முதற்கொளுத்திப்
பொழிப்பாதியவாய்ப்புகன்றவாய்மையின்
விடத்தகுவெகுளியின்விரைவிலனாகி
நாளுநாளுநவிறொறுநவிறொறு
மஞ்சிறைப்பறவையினணைந்துறத்தழுவியும்
வெஞ்சிறைப்படுபுனன்மீன்போனோக்கியு
மகன்றனனாமெனினாமைபோன்றுன்னியும்
புனிற்றாவெனவவன்புலந்தனின்முன்னியுங்
கொளத்தகுமுணர்வின்குறியறிந்தனனாத்
தானெனலாக்கியதன்மைகண்டுலகம்
வேட்டைவாளியின்விழுமியனெனமனக்
கோட்டமொன்றின்றிக்கொடுக்குமதென்ப.
(எ-ன்) நூனுவல்வத னியல்புணர்-ற்று.
(இ-ள்) நூனுவல்வத னிலக்கணத்தைக் கூறுமிடத்துக் கல்வி தொடங்க நூலமைத்தவையாண் டேழாண்டென்னும்
பருவத்தினற் காலத்தோடு மதி திதி முதலிய நாற்காலமுங் கழகமுந் திடனாகக் குறித்துக் குணதிசை வடதிசையென்னு
மங்கலத்திசைகளைநோக்கி யிருந்து வழிபடுகடவுளை வாழ்த்தி வித்தைகொள்ளுமிடத்தியல்பு நினக்கிவையென
வவன்கருத்துறப்படுத்தித் தன்னோடொன்றிய சிந்தையொடு முகமலர்ந்து முதலே கூறத்தகு நூல்கருதிய
கூறுபாட்டைக் கெடுதலில்லாத சிறப்புவிதியாற் கருத்துறப்படுத்தி விடத்தகும் வெகுளிபோல விரைவுமிலனாகிக்
கொளத்தகுமுணர்வின் குறியையறிந்து பொழிப்பகல நுட்ப மென்னு முரைநடையா னாளுநாளும்
நவிலுந்தோறு நவிலுந்தோறும் பறவைபோலணைத்துத் தழுவியு மீன்போனோக்கியும் விட்டு நீங்கிய காலத்தும்
ஆமைபோன் றுளத்தானினைந்து மீன்றணிமைப் போதினிலா போலவனிருக்கும் புலத்துச் சென்றுந் தானென்றுஞ்
சொல்லப்படுவதாகிய பெற்றிமையைக் கண்டு பெரியோர் வேட்டைவாளியின் விழுமியனென்று கூறும்படிக்
கழுக்காறின்றிக் கொடுப்பதாமென்றவாறு.
இச்சூத்திரத்திற்கிங்ஙன மாட்டுறுப்பாகப் புணர்த்தலிந் நூலாசிரியர் கருத்தென்றுணர்க.
40.ஆரியன்றிருமகனையுறல்கடிந்த
கூரியமுதன்மைமாணாக்கன்குலமகன்
றன்மகன்மன்மகன்மந்திரத்தலைவ
னன்மகனிருநிதிநனிதமிபுரப்போ
னருத்தியின்வழிபடுபவனுரைநுழைந்துகொள்
கருத்தினனிவர்கள்கற்கப்படுவோர்.
(எ-ன்) இனிக்கொள்வோர் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரு மென விருவகையர்.
அவருள்ளுங் கற்பிக்கப்படுவோரெண்மர். அவ ரிவரென்பதுணர்-ற்று.
(இ-ள்) எண்மருட் கூரியமுதன்மைமாணாக்கனாவான்- தன்னொடு மொருங்கு கற்ற வொருபுடை
மாணாக்கருட்சேட்டன். இருநிதிநனிதமிபுரப்போன் பிறமாணாக்கர்க்குப் பங்கென்னாது தனியே கொடுப்போன்.
41.பளிங்குடனோதிமம்பரவைகொண்மூவெனத்
தெளிந்தநுண்ணுணர்வுறுந்தெள்ளியோரே.
(எ-ன்) அவர்தன்மையுணர்ற்று.
(இ-ள்) இதற்குரை வேண்டுவதில்லை. இவைநாலு மவர்க் குவமை யாதற் கேது மேற்காட்டுதும்.
42.அழுக்கின்றாதலடுத்தவைதனதாக்
கோடலென்றிரண்டும்பளிங்கின்குணமே.
(எ-ன்) பளிங் கவர்குணத்திற் குவமையாதற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) நின்மலமாய் விளங்குதலுடன் அடுத்த பொருள்களின் குணங்களைத் தனதுகுணமாகக் கொண்டிருத்த
லென்னுமிரண்டும் பளிங்கின் குணமா மென்றவாறு.
எனவே, அதுபோலக் களங்கமற்று விளங்கிய நுண்ணுணர்வா லாசிரியன்கொடுத்த பலவேறு வகைப்பட்ட
கல்விகளையெல்லா முணர்விலூட்டிக் கற்ற கல்வியைப் புறத்தே தோற்றுவிப்பனென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.
43.நீர்தெரித்தமிர்துணுநீர்மையினோதிம
மோரிருபான்மைக்குவமையதாகும்.
(எ-ன்) அன்னம் அவரறிவிற் குவமையாதற் கேதுவுணர்-ற்று.
(இ-ள்) பாலையும் புனலையுங் கலந்துவைத்தாற் புனலைநீக்கிப் பாலைப் பருகுந்தன்மை
யிரண்டினா லோதிம மவரிடத்துண்டானவோ ரிரண்டு பகுதிக் குவமையாமென்றவாறு.
எனவே, அதுபோல வவரும் பலவேறு வகைப்பட்ட கல்வியுள் அசாரத்தை நீக்கிச் சாரமான கல்வியை
யுட்கொள்வரென் றுவமையுய்த்துணர நின்றவாறு காண்க.
44.பகிரதிமுதலியபன்னதியுட்புக
வுகுதலின்றாய்த்தன்னுட்கொளுமுவாவே.
(எ-ன்) பரவை யுவமையென்பதற் கேதுவுணர்-ற்று.
(இ-ள்) கடல், கங்கைமுதலாகிய பல நதிகளும் தன்னுட்புகா நிற்பவு மவற்றைப் புறத்தே கக்குதலின்றித்
தன்னகத் தடக்கிக்கொள்ளு மென்றவாறு. எனவே, அக்கடல்போல வவருணர்வும் ஆசிரியன் அறிவிக்க
வுட்கொண்ட வெல்லாக்கல்வியையும் புறத்தே தப்பவிடா துட்கொள்ளுமென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.
45.படிந்துவாறுத்துணப்படுபுனல்யாண்டும்
படர்ந்து பஃறுளியிற்பயன்றருமுகிலே.
(எ-ன்) கொண்மூ வுவமையென்பதற் கேது வுணர்-ற்று.
(இ-ள்) மேகஞ் சமுத்திரத்திற்படிந்து உவரறுத்துண்டு விளைவெய்திய புனலை யுலகமெங்கு
மாங்காங்குச் சென்று பலதுளியாகப் பெய் துலகத்திற்குப் பயனாமென்றவாறு. உலகம் சொல்லெச்சம்,
எனவே, அதுபோல அவர் தம்மாசிரியனிடத்து அதிகரிக்கப்பட்ட வவற்றுள் அசாரநீக்கிச் சாரமுட்கொண்டு
பரிபாலிக்கப்பட்ட தம்மிடத்துக் கல்வியையு முலகின்கண் வரைதலின்றி யாவர்மாட்டுங்கொடுப்பரென
வுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க. இவை நான்கிற்குங் குறிப்புவமை முன்புபோலக் கொள்க.
இனிக் கற்பிக்கப்படாதோ ரொருபன்மூவர். அவர்தாம்,
46.காமுகன்களியன்கடுஞ்சொலன்சினத்தன்
மடியன்றடுமாறுளத்தன்மறவியன்
றுயில்வோன்பிணக்கன்சோரன்பொய்யன்
மானவன்பிணியின்மரீஇயவனிவர்க்குநற்
றானமதாயினுஞ்சாற்றார்நூலே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க்கு வரையறை கூறுதனுதலிற்று.
(இ-ள்) காமுகன் முதலாகப் பிணியின்மரீ இயவ னீறாகப் பதின்மூன்று பெயர்க்குங் கல்வியீத னற்றானமென்று
நூல்கள் கூறிற்றாயினுஞ் சான்றோர் பெருநூ லுணர்த்தாரென்றவாறு.
பெருநூலென்ப தாட்சி பற்றிய சொல்லெச்சம். இவர் தன்மையாவன :-
47.ஆடுபந்துறுசுவரளந்தறிமுகவை
கோடின்றாங்குளனெனுங்குறியோரே.
(எ-ன்) கற்பிக்கப்படாதோர்க் குவமை யுணர்ற்று.
(இ-ள்) ஆடும் பந்து றுசுவரு மொருபதார்த்தத்தை யளந்தறி முகவையுங் கரையில்லாத
வேரியு முவமையா மிலக்கணத்தை யுடையரா மென்றவாறு. இவைநான்கு முவமையாதற் கேது மேற்காட்டுதும்.
48.ஓரிடத்துறுகுளகமைத்தறவுண்ணா
தவணவணிறைவற்றலமருமாடே.
(எ-ன்) ஆடுவமையாதற் கேது வுணர்ற்று.
(இ-ள்) ஆடு நுகரிடத்து மிகுதியாகவுண்டான குழையை நிறைய வுண்ணாது சிறிதருந்தியதனாற்
பசியடங்கா தாங்காங்குத் தெருமந்து திரியுமென்றவாறு.
எனவே, அதுபோல வவரு மொருசா ராசாரிய னிடத்துக் கற்கத்துடங்கிய முக்கியமான வொருநூலையாயினு
மவனிடத்துத் தெற்றென முற்றக்கல்லாது பல நூல்களையும் பலரிடத்துங் கற்கத்தொடங்கிச் சிறிதுசிறிது
கற்றுக் கல்விமுற்றா துழல்வரென்றுவமையுய்த்துணரநின்றவாறு காண்க.
49.எற்றியபந்தினையெதிர்செலவிடுத்தொரு
பற்றறநிற்பதுசுவரின்பண்பே.
(எ-ன்) பந்துறுசுவ ரொப்பென்பதற் கேதுவுணர்ற்று.
(இ-ள்) ஒருவர் கையாலெற்றியபந்தினைத் தன்மெய்யிற்பரிசித்ததனை யெற்றியவரெதிர் செலவிடுத்துத்
தானப்பந்தோடு பரிசித்திருக்கும் பற்றின்றி நிற்பது சுவரின் குணமாமென்றவாறு.
எனவே, அதுபோ லவரு மாசாரியன் றமது மனத்திலே பற்றவுரைக்கப்பட்ட கல்வியையு மனப்பற்றின்றி
வறியமனதாயிருப்பரென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.
50.அளந்தகத்தடக்கியபொருள்களையாங்கவண்
முற்றப்புறத்துகன்முகவையின்குணமே.
(எ-ன்) முகவை யொப்பென்பதற் கேது வுணர்-ற்று.
(இ-ள்) அளந்தறிவதாகிய பதார்த்தங்களை யொருவர்பெய்யத் தன்னகத் தடங்கியபொருள்களை
முழுதும் புறத்தே யுகுவது முகவையின்குணமா மென்றவாறு. முகவை நாழிமுதலியனவாம்.
முற்றவும், புறத்துகலும் என்பனவாய்த் தொக்கவும்மை யெச்சவும்மை யாதலாற்
சில பொருள்களா யகத்தடக்கப்பட்டவற்று ளுகுங்காற்சிறி துள்ளே பற்றுவனவு முளவென்றாயிற்று.
அவை எள் பயறு உழுந்து நெல் அரிசி முதலியனவன்றிப் பால் தயிர் நெய் முதலியவாம்.
எனவே, அவரிடத்துஞ் சிறி தாசாரியனுரைத்தவற்றுட் பற்றுவ துளதென் றுவமை யுய்த்துணரநின்றவாறு காண்க.
51.பயஞ்சிறிதடக்கலிற்பயனிரம்பாதாங்
கொழும்புனல்புகுந்தகோடின்றாங்குளனே.
(எ-ன்) கோடின்றாங்குள னுவமையாதற் கேது வுணர்ற்று.
(இ-ள்) கோடின்றாங்குள மாரியாற்பெய்யப்பட்டுப் புகுந்தபுனலைப் புறம்போகவிட்டுச் சிறிது
புனலடக்குவதா லுண்பார்க்கும் போகங் கொள்வார்க்கும் பயனிரம்பாவாமென்றவாறு.
எனவே, அதுபோ லவருந் தம்மிடத் தாசாரிய னளிக்கப்பட்ட கல்வியை முற்றப்பற்றா துணர்வு சிறிதாகலின்,
புறம்போகவிட்டுக் கல்வியிற்சிறியரெனப்பட்டாராய்த் தமக்கும் பிறர்க்கு மினிமைப்பயனிரம்பாத
புன்புலவராவரென் றுவமை யுய்த்துணர நின்றவாறு காண்க.
இவை நான்கு சூத்திரத்தானு முன்பு போலக் குறிப்புவமை கொள்க.
இவ்விருவர்க்கும் “அன்னங்கிளியே நன்னிறநெய்யரி, யானையானே றென்றிவைபோலக், கூறிக்கொள்பகுணனுடையோரே” எனவும்,
“அன்னமாவே மண்ணொடுகிளியே, யில்லிக்குடமாடெருமைநெய்யரி, யன்னர்தலையிடை கடைமாணாக்கர்” எனவும்
முன்னோர் கூறிய சூத்திரங்களானு முவமை யுய்த்துணர்ந்து கொள்க.
52.குரங்கெறிவிளங்காய்கொள்பவர்போல்வார்
பழம்பகைமறைத்துப்பணிபவராகிக்
கூடாவொழுக்கிற்கொள்பவர்கல்விச்
சால்பிலராகித்தலைமைவந்தடுத்தோர்
கரந்தங்கொருவரைக்கற்கவிட்டுணர்வான்
வருபவர்தமக்கும்வழங்கார்நூலே.
(எ-ன்) இதுவுங் கற்பிக்கப்படாதோருட் கூறாதொழிந்தோரை யுணர்ற்று.
(இ-ள்) கொள்வதற்கரிய விளங்கனியை யுண்ணவிரும்பி, அவ்விளவி லிருக்குங் குரங்கைக் கற்கொண்டெறிந்து
அக்குரங்கெறியும் விளங்கனியைக் கொள்பவரைப்போல வுபாயத்தாற் கல்விகோடற்கு வருவார்க்கும்,
பழம்பகையைத் தோன்றாதுமறைத்ததற்குக் கூடாவொழுக்கத்தினோடும் புறத்துற்ற நட்பினராகியும் நிலத்தில் வீழ்ந்து
பணிதன் முதலியன செய்து முபாயமாகக் கல்விகோடற்கு வருவார்க்கும், கல்வியாற் பூரணமிலராயும்
அறிவிலாதாராற் சிறப்பெய்தினோர் பிற சான்றோருழை யுடையார்முன் னில்லார்போலேக் கற்றும்
வெளிப்பட வந்துநின்று கல்லாது மாண்பிறந்தமானத்தாற் பிறரை யவரிடத்துக் கரந்துவிட்டவரேவலால்
வருவார்க்கும் சான்றோர் நூற்பொருள் வழங்காரென்றவாறு. வழங்குதல் வித்தைகொடுத்தல்.
நூல்-ஆகுபெயர். அவை இலக்கண விலக்கியம்
இனிக் களங்கடியப்படுவார் பலர். அவ ரிவரெனல்,
53.ஆசாரமில்லாரழுக்காறுள்ளார்நகுவார்
கூசாதுமற்றொன்றுகூறுவார்–தேசிகன்சொற்
கற்றொன்றுறாதார்கழகத்துறிலிருந்தா
ரெற்றென்றுரையாதிரார்.
என்பதனா லுணர்க. எற்றென்பது கையாற்புடைத்தலுங் காலாலுதைத்தலுமாம்.
இனிக் கோடன்மரபு வருமாறு :-
54.கொள்வோன்கொள்கடன்கூறுங்காலைக்
கடையாமத்திடையெழுந்துளகடன்கழித்
தாரியன்மாளிகைவாயில்சென்றெய்திக்
காலமுமிடனுங்கருதுபுநின்றாங்
கெவணெவணோக்கினனவணுளனாகி
வணக்கமுமொடுக்கமும்வாய்ந்தயனிற்ப
வருகவென்றழைத்தலுமருகுசென்றிறைஞ்சலு
மருத்தியினிருத்தியென்றறைதலுமிருந்தாங்
குரையெனவுரைத்துரைத்துரனுறத்தோய்தரப்
பொழிப்பேயகலநுட்பமெச்சமெனப்
பழிப்பின்றாமுரைபகர்தலுந்தெற்றென
வுணர்ந்தபின்பொழிகெனவொழிதலுமவன்றிறத்
தோவாதுதவுவதொல்லும்வகையா
னேவாதியற்றியவின்பமெய்தியபின்
பகலினுமிரவினும்பயின்றுபின்முன்ன
ரகலானாகியவன்பினனாதலுந்
துயில்வுழித்தைவருந்துணைத்தாளினைத்துறந்
தொல்லையிற்றுயின்றேழுந்தொழுகுதலன்றே.
இவற்றானுணர்க.
இதற்குரை வேண்டுவதில்லை.
“எத்திறனாசானுவக்கு மத்திற, மறத்திற்றிரியாப்படர்ச்சிவழிபாடே” என்பதுங்கூட்டி யுணர்க.
55.கேட்டவைகேட்டவைநிரந்தரம்பாடம்
போற்றலினேட்டிற்றானேபொறித்தலு
முரைநுழைந்துணர்ந்தவொண்பொருளையுள்ளுறுத்தலு
மயலற்றொருபுடைபயின்மாணாக்கரி
னையமெய்தியதையமகற்றலு
மெய்யுணர்வினிலுறப்பிறர்க்கவைவிளம்பலு
மெய்தியதிழவாததற்கிலக்கணமே.
(எ-ன்) கற்றகல்வி யிழவாததற் குபாயமுணர்ற்று.
இதன்பொருள் வெளிப்படை. இதனுள் உரைநுழைதலென்பது உரைமுகத்து நுண்ணிதா யாசிரியன்
காட்டக்கண்ட அரும்பதங்களை மனத்தான் மறவாது தரித்தல். இவ்வாறுகோடலால் மாணாக்கன் முற்ற வுணர்ந்தானாமாறு.
“ஆசானுரைத்ததமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றிலனாகும்,”
“அவ்வினையாளரொடுபயில்வகையொருகால்-செவ்விதினுரைப்பவவ்விருகாலு-மையறுபுலமை மாண்புநனி யுடைத்தே”
என்னுஞ் சூத்திரங்களானு முணர்க.
56.தோய்ந்தவையன்றியுந்தோயாதவற்றை
யாய்ந்தெழுகாலத்ததன்பயனெனலாய்
விழுமியதிறத்தினுள்விழுமியதொன்றாஞ்
சொல்லொடுசொல்லினைத்தொடுத்தலுந்தொலையாக்
கல்வியிற்பயிறலுங்கடனாகும்மே.
(எ-ன்) முன்னர் நூனுவல்வோனாகிய வாசிரியன் வாடாக்கற்பக மணமலிபொற்பூப்போல
வாய்ந்தமைவுடைய கல்வியுங் கவியுமுடைய னாதல்வேண்டுமென்றா ரவ்வாரியன்போல
மாணாக்கனுங் கல்வியுங் கவியுமுடையனாதற் குபாய முணர்-ற்று.
(இ-ள்) கற்றநூலன்றிக் கல்லாதவற்றையு மாராயுங்காலத்துக் கல்வியாலாய விழுமிய கூறுபாட்டையுடைய
கலை பலவற்றுள்ளும் விழுமிய பயனென் றுலகங்கூறப்படுவதாஞ் சத்தங்களைத்தொடுத்துச்
சாதிப்பதூஉம் தொலையாக் கல்வியுடன் சாதித்துவருவதூஉ முறையா மென்றவாறு.
57.பாவினையொலிபெறப்படனஞ்செய்திடு
நாவினனாகிநாற்கவிப்புலவோர்
புதுமொழிபுணர்ப்புழிப்பொறிப்பவனாகியு
மனப்படுமொருபொருண்மதித்தவரொருமொழி
யெடுத்ததற்கியைபுறவெதிரெதிர்பன்மொழி
தொடுப்பதும்பெயர்வினைகோப்புணப்பிறிதடி
தொடுப்பதுந்தொடைபலதொடர்ந்தொருபாவாய்
முடிப்பதுங்குறிக்கொளன்முதற்காரணமே.
(எ-ன்) சத்தஞ்சாதித்தற்கு முதற்காரண முணர்ற்று.
(இ-ள்) புலவர்பலரும் பாடிய பாப் பாவினங்களை யவ்வவபாவிற் கமைத்த வொலிமுறையே
படனஞ்செய்திடும் வாக்கினனாகியும், அந் நாற்கவிப்புலவர் புதுமொழிபுணர்ப்புழி யவர்க்குப் பட்டோலை
பொறிப்பவனாகியும், ஒருபொருளைக் குறித்தவர் முதலேயோர் சொல்லையடுத்தலு மதன்மேற் பன்மொழி
யவ்வடிக்குப் பொருந்தக் கொளுவுதலும், அதன் மேற் பலவடியையுந் தொடுத்தலும்,
அடிதொடர்ந்தா லொருதொடையினாதல் பலதொடையினாதல் ஒருபாவாக்கிப் பெயராதல் வினைபாதல்
கோப்புண முற்றமுடிப்பது முதலாயினவற்றை மனத்துட் குறிக்கொளலுஞ் சத்தந்தொடுத்தற்கு
முதற்காரணமா மென்றவாறு. ஒழிந்த வகலமுரையிற்கொள்க.
58.சொற்பொருளணிநலன்றோயாதாயினு
மடியாதெடுத்தடிமடக்குதலின்றா
யாப்பினதுறுப்பிழுக்காதிறுதியில்வினை
கோப்புணமுடித்தலதன்முதற்குறியே.
(எ-ன்) இதுவும் அச்சத்தஞ்சாதித்தற்கு முதற்குறி யுணர்ற்று.
குறியாவ திலக்கணம். உறுப்பு – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யென்னு மாறுறுப்பும்.
நலனென்பது கேட்டோர்க்கின்பங் கொடுத்தல். தோயாதது – கூடாதது. ஒழிந்த அகல முரையிற்கொள்க.
59.அருமணிநிரல்வைத்தன்னசொன்னல
னொளியதனுட்சிறந்தன்னபொருணல
னழகதற்காங்கமைந்தன்னவணிநல
னுரனுடைப்பழம்பாட்டுணர்வுழியுணர்ந்தோர்
வரனுடைப்பாட்டுணர்வாய்மையின்வருமே.
(எ-ன்) அங்ஙன முன்னர்க்கூறிய முதற்குறிப்பும் குறிக்கொள்பவன் கூறுஞ் சத்தங்களினிடத்துச்
சொன்னலனும் பொருணலனு மவ் விரண்டினாலுமான வணிநலனு மெய்துதற் குபாய முணர்-ற்று.
உரனுடைப்பழம்பாட்டென்பன சங்கச்செய்யுள். ஒழிந்த அகல முரையிற்கொள்க.
பொதுப்பாயிர முற்றும்
—————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply