ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/
ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/
இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்—

ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை
நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீ ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி-கைங்கர்யங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால்
பல தெய்வீகத் தன்மைகள்-ஒற்றுமைகள்புலப்படுகின்றன –

1.ஸ்ரீ ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,ஸ்ரீ பெரிய திருமலைநம்பிகள்’ஸ்ரீ இளையாழ்வார்’ என்று பெயரிட்டார்.
ஸ்ரீ மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள்’ஸ்ரீஅழகியமணவாளன்’என்று பெயரிட்டார்.

2.ஸ்ரீ இளையாழ்வார்,தம் ஸ்ரீ வைணவ வாழ்க்கை நெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இருப்பதை உணர்ந்து துறவறம் மேற்கொண்டார்.
ஸ்ரீ காஞ்சி தேவப்பெருமாளிடம் காஷாயம் பெற்று’ஸ்ரீ எதிராஜர்’ ஆனார்.
ஸ்ரீ அழகிய மணவாளர் லெளகீக வாழ்க்கையின் தீட்டு முதலான தோஷங்கள் தம் கைங்கர்யங்களுக்கு இடையூறாக இருப்பதால் துறவறம் மேற் கொண்டார்.
தம் ஆசார்யர் ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளையின் சந்நியாசி சீடர் ,ஸ்ரீ சடகோப யதி யிடம், ஸ்ரீ ஆழ்வார் திருநகரியில் துறவு பூண்டார்.’ஸ்ரீ சடகோப முனி’ ஆனார்.

3.ஸ்ரீ ராமானுஜர் அவரது மானசீக ஆசார்யர் ஆளவந்தாரின் ஆசைப்படி,ஆசார்யர் ஸ்ரீ திருவரங்கப் பெருமாள் அரையரால் ஸ்ரீரங்கம் அழைத்து வரப்பட்டு,ஸ்ரீ வைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
ஸ்ரீ மாமுனிகள் தம் ஆசார்யர் திருவாய்மொழிப் பிள்ளையின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

4.ஸ்ரீரங்கம் வந்த ஸ்ரீராமானுஜரை தம்முடைய தகுதிப் பெயரான “ஸ்ரீ உடையவர்”(அனைத்து லீலா விபூதிகளையும்,நித்ய விபூதியையும் உடையவர்)என்னும் பெயரால் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் அழைத்தார்.
ஸ்ரீரங்கம் வந்த மாமுனிகளை-சடகோபமுனியை,தம் பெயரான” அழகியமணவாளன்”என்னும் திருநாமத்தால் அழைத்தார்,
ஸ்ரீரங்கநாதர்.(மாமுனிகளின் இயற்பெயரே அழகியமணவாளன்;ஆனாலும்,துறவுபூண்டபின்’சடகோபமுனி’எனனும் பெயர்பெற்றார்.
ஆனால் நம்பெருமாள் அழகியமணவாளன் என்னும் பெயரிட்டே அழைத்தார்.அந்தப் பெயராலேயே மணவாள மாமுனிகள் என்னும் பேறு பெற்றார்).

5.ஸ்ரீ உடையவருக்கு, சேரன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு கோவில் மணியகாரரை நியமித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
அந்த சேரன்மடத்தில் தான் உடையவர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலம் முழுதும் வாசம் செய்தார்.(வடக்கு உத்திர வீதியில் இருக்கும் இன்றைய ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடம்).
ஸ்ரீ மாமுனிகளுக்கு,பல்லவராயன் மடத்தை இருப்பிடமாகத் தருமாறு நியமித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.
ஸ்ரீ மாமுனிகள் தம் அந்திமக்காலம் வரை அந்தத் திருமாளிகையில் தான் இருந்தார்.(தெற்கு உத்திர வீதியில் இருக்கும் மணவாள மாமுனிகள் சந்நிதி).

6.ஸ்ரீ ராமானுஜரிடம்சங்கும், ஆழியும் பெற்று அவரைத் தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் ஸ்ரீ திருவேங்கடவர்
(ஸ்ரீ திருக்குறுங்குடி நம்பியும் உபதேசம் பெற்றும், திருமண்காப்பு சேஷம் தரித்தும் ஸ்ரீ ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்).
ஸ்ரீ திருவேங்கடவர் ஸ்ரீ திருமலை கோவில் வளாகத்தில் தம் ஆசார்யர் ராமானுஜருக்கு மட்டுமே, சந்நிதி தந்து ஏற்றம் அளித்துள்ளார்.
ஸ்ரீ திருவேங்கடவர் அனந்தாழ்வானுக்கு அருளிய தனியனில் “ஸ்ரீமத் ராமானுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்”என்று
ஸ்ரீ அனந்தாழ்வானை ராமானுஜரின் பொன்னடி என்று போற்றுகிறார்.

ஸ்ரீரங்கநாதர்-ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ மணவாளமாமுனிகளிடம்,திருவாய்மொழி ஈடு காலட்சேபம் கேட்டு,தம் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்.
ஆசார்யருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம், தீபக்யாதிகுணார்ணவம், யதீந்த்ரப்ரவணம்,
வந்தே ரம்ய ஜாமாதர முநிம்” என்னும் பிரசித்தி பெற்ற தனியனைச் சமர்ப்பித்தார்.
இங்கும் ‘ஸ்ரீ யதீந்தரப்ரவணர்’ என்று ராமானுஜர் மீது மாமுனிகள் வைத்திருக்கும் பக்தியைக் கொண்டாடுகிறார்.
ஆசார்யர் மாமுனிகளுக்கு, தம்முடைய சொத்தான ஸ்ரீ சேஷ பீடத்தையே,தந்து ஏற்றம் அளித்தார் ஸ்ரீ நம்பெருமாள்.

7.ஸ்ரீ ராமானுஜர்,திருவேங்கடவர் சந்நிதியில்”வேதார்த்த ஸங்க்ரஹம்” என்னும் உபநிஷத்துகளின் சாரத்தை இயற்றி அருளினார்.ஸ்ரீ மாமுனிகள்,
ஸ்ரீ திருவேங்கடவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடச் செய்தார். தம் சீடர் ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா ஸ்வாமிகளிடம் நியமிக்க
அவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களே,
“கெளசல்யா ஸுப்ரஜாராமா, பூர்வா ஸந்த்யா”என்று தொடங்கும் ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் ஆகும்.

8ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும் விரிவுரைகளாக”ஸ்ரீபாஷ்யம்” முதலான கிரந்தங்களை இயற்றினார்.
ஸ்ரீ மாமுனிகள்(ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின்) ரஹஸ்ய கிரந்தங்களுக்கு விரிவுரைகள் இயற்றினார்.

9.ஸ்ரீ ராமானுஜர்,தம் மானசீக ஆசார்யர் ஸ்ரீ ஆளவந்தாரின் விருப்பத்துக்கிணங்க, ஸ்ரீ திருவாய்மொழிக்கு விரிவான உரை எழுதச் செய்தார்
(ஸ்ரீ திருக்குருகைப் பிள்ளானின் ஆறாயிரப்படி வ்யாக்யானம்).
ஸ்ரீ மாமுனிகள் தம் ஆசார்யர் ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளையின் நியமனத்துக்கு ஏற்ப ஸ்ரீ திருவாய்மொழி ஈடு காலட்சேபம்செய்வதையே
(ஸ்ரீ நம்பெருமாளுக்கும் கூட) முக்கியமான கைங்கர்யமாகச் செய்து வந்தார்.

10.ஸ்ரீ பெரிய கோவில் ஜீயர், என்று,ஸ்ரீ பெரிய கோவில் பொறுப்பு அதிகாரியாக இருந்த ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார்
ஸ்ரீ ராமானுஜரைச் சரணடைந்து அவர் சீடரானார். ஸ்ரீ பெரிய கோவில் சாவியை ராமானுஜரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீ உடையவரைப் போற்றும் பிரபந்ந காயத்ரி என்று போற்றப்படும்”ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதி” அருளித் தந்தார்.

ஸ்ரீ பெரிய கோவிலில் முக்கிய கைங்கர்யங்களைச் செய்து வந்த,ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீ மாமுனிகளைச் சரணடைந்து,
ஆசார்யராக ஏற்றுக்கொண்டார் -ஸ்ரீ மாமுனிகள் மீது”மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு” பாடினார்.

11.ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தைப் பரப்ப 74 சீடர்களை நியமித்து அவர்களைச் ‘சிம்மாசனாதிபதிகள்’ ஆக்கினார்.
ஸ்ரீ மணவாள மாமுனிகள் 8 பிரதான சீடர்களை நியமித்து அவர்களை ‘அஷ்டதிக்கஜங்கள்’ ஆக்கினார்.

12.ஸ்ரீ ராமானுஜரும்,ஸ்ரீ மாமுனிகளும் தங்களை,ஆதிசேஷ அவதாரங்கள் என்று சில வைபவங்கள் மூலம் உணர்த்தினர்.

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரம பதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே –ஸ்ரீ அப்புள்ளார் அருளிச் செய்த ஸ்ரீசம்பிரதாய சந்திரிகை1–

13.ஸ்ரீ ராமானுஜர் பெரும்பாலும் ‘ஸ்ரீ திருப்பாவை’யை அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பார்.
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ மாமுனிகள் இருவருமே ‘ஸ்ரீ த்வய மந்த்ரம்’அனுஸந்தானம் செய்து கொண்டே இருப்பர்.

14.ஸ்ரீ ராமானுஜர்,ஸ்ரீ திருமாலிருஞ்சோலை ஸ்ரீ அழகருக்கு,நூறு தடா அக்கார வடிசலும்,வெண்ணெயும் சமர்ப்பித்து விட்டு
ஸ்ரீவில்லிபுத்தார் சென்ற போது,ஸ்ரீ ஆண்டாள் தம் நிலையிலிருந்து சற்றே முன்னே வந்து “நம் அண்ணாவோ”என்று விழித்தார்.
ஸ்ரீ ஆண்டாளுக்கு அண்ணனான உடையவர் ‘ஸ்ரீ கோவில் அண்ணன்–ஸ்ரீ கோதாக்ரஜர்’என்று போற்றப்பட்டார்.

மார்கழி மாத நீராட்டு உற்சவத்துக்கு,ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற ஸ்ரீ மாமுனிகள், ஏழுநாள் நீராட்டு உற்சவம் முடிந்து தான் சென்று சேர முடிந்தது.
நீராட்டு உற்சவம் சேவிக்க முடியவில்லையே,என்று ஏங்கிய ஸ்ரீமாமுனிகளுக்காக, எட்டாம் நாளன்றும்-தை முதல் நாள்-நீராட்டு
சேவை சாதித்தார் ஸ்ரீ கோதை நாச்சியார். அந்த வைபவம் இன்றும் தை முதல்நாள் நடைபெறுகிறது.

15.ஸ்ரீ ராமானுஜர் தம் அந்திம திசை வரை, தம் சீடர்களுக்கு நல் வார்த்தைகளை உபதேசம் செய்து கொண்டேயிருந்தார்.
ஸ்ரீ மாமுனிகளும் காலட்சேபம்/கிரந்தங்களை இயற்றுதல் ஆகியவற்றை இறுதி வரை செய்து கொண்டேயிருந்தார்.

16.ஸ்ரீ ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ,அவருடைய திருமேனிகள் இரண்டை நிர்மாணித்த பொழுது,
அவற்றுக்குத் தாமே உகந்து மங்களாசாசனம் செய்து அருளினார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீபெரும்புதூரில் நாம் சேவிக்கும் “தான் உகந்த திருமேனி”.
மற்றொன்று ஸ்ரீ திருநாராயணபுரத்தில்(ஸ்ரீ மேல்கோட்டை) எழுந்தருளியுள்ள “தமர் உகந்த திருமேனி”

ஸ்ரீ மாமுனிகளும், தாம் வாழ்ந்த காலத்திலேயே தம் திருமேனிகள் இரண்டுக்கு மங்களாசாசனம் செய்து அருளினார்.
தம் சீடர்களில் ஒருவரான ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணாவின் வேண்டுதலுக்கு இணங்க,ஸ்ரீ மாமுனிகள் தாம் உபயோகித்த
ஸ்ரீ ராமானுஜம் என்னும் சொம்பை உருக்கி இரண்டு திருமேனிகள் செய்யப் பணித்தார்.
அவற்றில் ஒன்று ஸ்ரீ சிங்கப் பெருமாள் கோவில் (பூந்தமல்லி) ஸ்ரீ முதலியாண்டான் திருமாளிகையில் எழுந்தருளப் பண்ணப்பட்டுள்ளது.
இன்னொரு திருமேனியை ஸ்ரீ நாங்குநேரி வானமாமலை மடத்தில் சேவிக்கலாம்.
(முதல் அஷ்டதிக்கஜமும்,ஸ்ரீ வானமாமலை மடத்தின் முதல் ஜீயருமான ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயருக்குத் தந்தருளியது).

17.ஸ்ரீ ராமாநுஜர் அவதாரம் செய்து, வேதத்துக்குத் தவறான அர்த்தம் கற்பித்த வந்த புறச்சமய வாதிகளையும்,
குதிர்ஷ்டிகளையும் வாதில் வென்றும்,கிரந்தங்களை இயற்றியும் ஸ்ரீமந்நாராயணின் விசிஷ்டாத்வைத நெறியை நன்றாக நிலை நாட்டினார்.
74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து அவர்கள் வம்சத்தார் மூலம் என்றென்றும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் செழித்து வளர வழிவகை செய்தார்.

12/13 ஆம் நூற்றாண்டுகளில் முஸ்லீம் படையெடுப்புகளால், இந்து மத சம்பிரதாயங்களும்,ஸ்ரீ கோவில்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டது.அந்தக் கால கட்டத்தில் தான், 1370 ஆம் ஆண்டு ஸ்ரீ மாமுனிகள் அவதரித்தார்.
அவர் செய்த ரஹஸ்யக் கிரந்த வியாக்யானங்களும், திருவாய்மொழி காலட்சேபங் களும் பல வித்வான்களையும்
சாஸ்த்ர விற்பன்னர்களையும் அவருக்குச் சீடர்களாக்கின.
அவர்கள் மூலம் ஸ்ரீ வைணவம் பெரிதும் வளர்ந்தது.திவ்ய தேசங்களில் கைங்கர்யம் செழித்தது.
ஸ்ரீ மாமுனிகளால் ஸ்ரீ உடையவர் காலத்தில் இருந்த மேன்மையை மீண்டும் அடைந்தது வைணவம்!!

18.ஸ்ரீ ராமானுஜர் மனத்திலும், ஸ்ரீ மாமுனிகள் மனத்திலும் இருந்து அருளும் பெருமான்:

ஸ்ரீ அமுதனார், ஸ்ரீ இராமாநுச நூற்றந்தாதியில்
“இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்,மாலிருஞ்சோலை என்னும்,
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மோடும் வந்து,
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்றவன் வந்து இருப்பிடம்”என்று
ஸ்ரீ பரவாசுதேவரானாலும்,ஸ்ரீ திருவேங்கடவரானாலும்,ஸ்ரீ அழகரானாலும் அவரவர் தம் இருப்பிடங்களுடனே வந்து,
ஸ்ரீ ராமானுஜர் மனதில் இருந்து அருள்வார்கள் என்று பாடுகிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணா,ஸ்ரீவேங்கடேச மங்களாசாசனத்தில்,
“ஸ்ரீமத் ஸுந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸிநே!
ஸர்வலோக நிவாஸாய ஸ்ரீனிவாஸாய மங்களம்!!”
(ஸ்ரீ மணவாள மாமுனிகள் உளத்திருந்து பேருலகக் கணம் புரந்து,களித்தருளும் ஸ்ரீ வேங்கடவா மங்களங்கள்) என்று பாடுகிறார்.

———–

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்-திருமதி பிரேமா நந்தகுமார்

சங்கரர் திறந்த வழி அறிவு சார்ந்தது என்றாலும் பெருவாரியான மக்களால் அதை அடைய முடியாமல் போனது.
இதற்கு முக்கியமானக் காரணம் சாதீயம் பற்றிய வரைமுறைகள்தான்.
அவ்வழியில் சாதாரணமானவர்களுக்கு மிகச் சிறிய இடம்தான் ஒதுக்கப்படுகிறது.
அதில் வடமொழியை மாத்திரமே உபயோகிப்பதால், அதுவும் ஒரு தடையாக இருக்கிறது.
ராமானுஜரது தத்துவமோ அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருக்கிறது.
ஆன்மிக ஆற்றல் முன்பு சாதித் தடைகள் விடுபட்டுப் போகின்றன.
அன்றாடப் பேச்சுமொழியை உபயோகித்து மக்களை வேதநெறிக்கு அழைத்து வருகிறது.
ராமானுஜர் (1017-1137) நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார்.
நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார்.

அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை.
பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார்.
அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.

ராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு.
தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது.
ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும்
எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர்.
இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா?
ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல.
தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார்.
ஓர் எடுத்துக்காட்டு.
காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பார்ப்பனரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா
தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.

சுவாமிகள் எழுதும்போது, சங்கரர் மாபெரும் அறிஞர்.
ஆனால் அவருக்கு ராமானுஜர் போல விசாலமான இதயம் இருந்ததா என்பது கேள்விக்குறி.
ஸ்ரீ ராமானுஜரின் இதயம் இன்னம் பெரியது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வருந்தினார். அவர்களுக்கு உதவ முனைந்தார்.
இறைவனை உருவம் மூலம் வழிபடுவதால் மனநிறைவு பெறும் மக்களுக்காகப் புது வழிபாட்டு முறைகளை ராமானுஜர் தோற்றுவித்தார்.
அதேசமயம், பிராமணனிலிருந்து பறையர் வரை இறைவனை அடையக் கூடிய உயர்ந்த வழிகளையும் முன்வைத்தார்.
இதுவே ராமானுஜரின் சாதனை. அவரது சாதனை வட இந்தியாவில் பரவியது.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ராமானுஜர், பக்தர்களில் தலையானவர், சைதன்ய மகாபிரபு.

அமெரிக்காவில் இருந்தபோது சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தை ஊன்றிப் படித்தார்.
பிரம்ம சூத்திரங்களுக்கு வடமொழியில் இயற்றப்பட்டிருக்கும் இந்த அற்புதமான உரையை அவருக்கு அளசிங்கப் பெருமாள் அனுப்பிவைத்தார்.
அதில் மனம் ஒன்றிய சுவாமிகள், இந்த உரைக்கு ஆங்கில ஆக்கம் செய்யப்படவேண்டுமென்று விரும்பினார்.
அதன்படியே பேராசிரியர் ரங்காச்சாரியாரும் திரு. வரதராஜ அய்யங்காரும் மொழிபெயர்த்துச் சுவாமிகள் கட்டளைப்படி
அளசிங்கப்பெருமாள் நடத்திவந்த ‘பிரும்மவாதின்’ பத்திரிகை வெளியீடாக 1899-இல் அது வெளிவந்தது. அற்புதமான வெளியீடு.
இன்றுகூட இந்நூலின் பைண்டிங் உறுதியாக இருக்கிறது.
என் தந்தையார் பழைய புத்தகக்கடையில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதை வாங்கி இருக்கிறார்.
என்னுடைய பிறந்த வீட்டுச் சீர் என்றே சொல்லலாம்.

ஸ்ரீ ராமானுஜரிடம் சுவாமிகளுக்கு இருந்த ஈடுபாடு பற்றி நன்கறிந்தவர் ராமநாதபுரம் அரசர்,
ராஜா முத்துவிஜய பாஸ்கரசாமி சேதுபதி அவர்கள். அவர் இந்த வெளியீட்டிற்கு நிதியுதவி செய்துள்ளார்.
திலகர் நடத்திவந்த தி மராட்டா பத்திரிகை தனது மார்ச் 11, 1900 இதழில் இதற்கு நல்லதொரு விமரிசனம் வெளியிட்டது.
முதன் முதலாக ராமானுஜரது ஸ்ரீபாஷ்ய உரையை ஆங்கிலத்தில் வெளியிடச் செய்து,
விசிஷ்டாத்வைதத் தத்துவம் பற்றி மேலை நாடுகளில் ஆய்வு செய்யும் பேரறிஞர்களுக்கு உதவி செய்தவர்
சுவாமிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

சிருஷ்டியை வேதாந்த பரமாகப் பார்க்கும்போது, சுவாமிகள் ஒரு அத்துவைதி.
அதேசமயம் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும், கீதைக்கும் (இவை மூன்றும் பிரஸ்தான த்ரயம் எனப்படுபவை)
இருந்த பல வடமொழி உரைகளைப் படித்து, ஆழமாகச் சிந்தித்தார்.
அவர் ராமனுஜரைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தைக்கூடப் புரிந்து கொள்ளும்படி எழுதுவார்:
ராமானுஜர், இறைவனுக்கு சைதன்ய நிலை உண்டு என்கிறார்.
முழு அத்துவைதிகள் இறைவனுக்கு எப்படிப்பட்ட நிலையும் இல்லை என்கிறார்கள்.
சத் (உள்ளது)திற்கு, நாமறியும் வகையிலே பொருளேதுமில்லை என்பர்.
ராமானுஜரோ இறைவன் சைதன்னிய அறிவே வடிவானவன்,
வேறுபாடுகள் அற்ற இச் சைதன்னியம், வேறுபடுத்தப்படும்போது உலகமாக ஆகிறது.

குமாரில பட்டர், ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் என்று அனைத்துச் சனாதன தர்மச் சான்றோர்கள்
சனாதன தர்மத்தைக் காப்பாற்றியதுமன்றி, இப்பழமையான தர்மம் புது சிகரங்களை எட்ட வழிகளும் வகுத்தனர்.
சரித்திரப் பிரக்ஞை நிறைந்த சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் நெறி ஏன் வேகமாக நாடெங்கும் பரவியது என்று சிந்தித்திருக்கிறார்.

கண்ணையும், மனத்தையும் கவரும் தெய்வ வழிபாடுகள் ஒரு காரணமே.
திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உத்சவம், தேருக்கு வடம் பிடித்தல் முதலியவை அனைவரையும் ஈர்த்தன.
மேலும், பெருமாள் கோவில் என்றால், பொங்கல் போன்ற பிரசாதங்களும் ஒரு கவர்ச்சியான மகிழ்ச்சியே.
அனைத்திற்கும் மேலான ஒன்றும் இருந்தது என்கிறார் சுவாமிகள்.
சுவாமி விவேகானந்தரின் சரிதத்தைப் படிக்கும்போது அவருக்கு வடமொழி சுலோகங்களைச் சொல்வது பிடிக்கும் என்று தெரிகிறது.
பல வடமொழி சுலோகங்கள் இயற்றி இருக்கிறார். அவர் வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தார்.
பாணினியின் இலக்கணத்தை முழுமையாகக் கற்றவர். வடமொழியில் கடிதங்கள் எழுதுவார்.

ஆயினும், அவர் தம்புராவை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தால், அதிகமாக வங்க மொழியில் உள்ள
சியாமா சங்கீதம், பிரம்மோ சங்கீதம் பாடல்களையும் ரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழிப் பாடல்களையும் பாடுவதில் இன்பம் கண்டார்.
அவ்வப்பொழுது வங்கமொழிப் பாடல்கள் பகவான் ராமகிருஷ்ணரைச் சமாதி நிலைக்கு ஏற்றிட, அவர் நடனமாடுவார்.
உடன் மற்றவர்களும் ஆடுவார்கள். சுவாமிகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்.
ஆதிசங்கரர் தமது எழுத்து, சொற்பொழிவு, துதிகள் அனைத்திற்கும் வடமொழியையே கையாண்டார்.
மக்களின் பேச்சு மொழியான மலையாளம், தமிழ் போன்றவற்றை உபயோகிக்கவில்லை.
ஸ்ரீ ராமானுஜரோ தடங்கலின்றி ஆழ்வார்களது திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களைத் தமது பொழிவுகளில் உபயோகித்தார்.

அவரது முந்தைய ஆசாரியர்கள் தொடங்கி வைத்த திருவாய்மொழி -திருமொழி திருநாட்களை மீண்டும் விஸ்தரித்து
அனைத்துக் கோவில்களிலும் நடத்தியதால், மக்களிடம் ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய ஆர்வம் பொங்கி எழுந்தது.
வடமொழி வேதம்; தமிழ் மறை. ஆன்மிகத்தின் சிகரங்களை எட்டிய நாட்டின் வளமான பண்பாட்டினை
இவ்விரண்டு வற்றா ஜீவ நதிகளும் வளர்த்தன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபடவில்லை.
இணைந்த நதிகள். தமிழ்மறை – வடமொழி வேதத்திலிருந்து மலர்ந்தவை.

வடமொழி வல்லுனராக, ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமானுஜர், திருவரங்கத்து வீதிகளில் பிக்ஷை எடுக்கப் போகும்போது
ஆண்டாளது திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அனுசந்தித்தவாறு சென்றதால், அவரை திருப்பாவை ஜீயர் என்று மக்கள் அழைத்தார்கள்.
இப்படிப் பழகுமொழியினைச் சமயத்துடனும் ஆன்மிகத்துடனும் இணைத்ததே ஸ்ரீ ராமானுஜரது மிகச்சிறந்த கொடை என்று சுவாமிகள் நினைத்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனைத் தோற்றுவித்தபோது, சுவாமிகள் மக்களுக்கு ஜாதிப் பாகுபாடு பற்றிய
ஒரு சிறந்த செய்தியைத் தெரிவிக்க எண்ணினார்.
1898-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்று ஐம்பது பிராமணரல்லாத ஆண்களுக்குப் பூணூல் போட்டு,
காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். இது மிகத் துணிச்சலான செயல்.
இன்றிலிருந்து நீங்கள் மறைகளை ஓதலாம் என்று கூறி, அவர்களது தலைமேல் ஸ்ரீ பாஷ்யப் பிரதியை வைத்து ஆசீர்வதித்தார்.
அன்று அவர்களுக்கு ராமானுஜரது சரித்திரத்தை அவர் சொல்லியிருக்கலாம்.
தீண்டத்தகாதவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு, நீங்களும் கோவிலுள் சென்று வணங்கலாம் என்ற
உடையவரது மாண்பினை விளக்கியிருக்கலாம். அரங்கனைப் பற்றிப் பாடிய திருப்பாணாழ்வார் குறித்தும் பேசியிருக்கலாம்.

சுவாமிகள் தமது சொற்பொழிவுகளில் அநேகமுறை ஸ்ரீ ராமானுஜரது சரித்திரத்தை எடுத்துக்காட்டுகிறார்.
அவர் அடிக்கடி உடையவர் பற்றிப் பேசியதால், வங்க மக்களுக்கு இவ்வாச்சாரியர் மேல் மிகுந்த பிடிப்பு உண்டாயிற்று.
அவர்கள் விருப்பத்திற்கிணங்க, சென்னையில் பல ஆண்டுகள் வசித்த சுவாமி இராமகிருஷ்ணானந்தர்
ஸ்ரீ ராமானுஜரின் சரிதத்தை விவரமாக எழுதி வெளியிட்டார்.
இந்த நூல் தற்சமயம் வங்க இலக்கியத்தின் ஒரு பொற்சுடராகக் கருதப்படுகிறது.

———-

ஸ்ரீ எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

—————

ஸ்ரீ மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்:

செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடும் நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடும் நாள்
மந்தமதிப் புவிமானிடர் தங்களை வானில் உயர்த்திடும் நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடும் நாள்
கந்தமலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடும் நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடும் நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப்பரன் அவதாரம் செய்திடும் நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனும் நாளே

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்றும் வாழியே
எப்புவியும் சீசைலம் ஏத்த வந்தோன் வாழியே
ஏராரும் எதிராசர் என உதித்தோன் வாழியே
முப்புரி நூல் மணி வடமும் முக்கோல் தரித்தோன் வாழியே
மூதறிவன் மணவாள மாமுனிவன் வாழியே

அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.

————-

வாழி பரகாலன் -தனியனிலே எம்பெருமானார் பரகாலனுக்கு உண்டே

வாழ -வாழியே -வாழி -மூன்று விதமும் மா முனிகளுக்கு மட்டுமே
அடியார்கள் வாழ
வாழி திருவாய் மொழிப்பிள்ளை
செய்ய தாமரை வாழியே இத்யாதி
திரு நாட்டுக்கு எழுந்து அருளும் பொழுதும் வாழியே இவருக்கு மட்டுமே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading