ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1-
பதவுரை
ஆற்றில் இருந்து–யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு
விளையாடுவோங்களை–விளையாட நின்ற எங்கள் மேல்
சேற்றால் எறிந்து–சேற்றை விட்டெறிந்து
வளை–எங்களுடைய கை வளைகளையும்
துகில்–புடவைகளையும்
கைக் கொண்டு–(தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு
காற்றில்–காற்றிலுங் காட்டில்
கடியன் ஆய்–மிக்க வேகமுடையவனாய்
ஓடி–(அங்கு நின்றும்) ஓடி வந்து
அகம் புக்கு–(தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு
(வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து)
மாற்றமும்–ஒரு வாய்ச் சொல்லும்
தாரானாய்–அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால்
இன்று முற்றும்–இப்போது முடியா நின்றோம்;
வளைத் திறம்–(தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக
பேசானால்–(தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால்
இன்று முற்றும்.
விளக்க உரை
இவன் நினைத்தபடி தீம்பு செய்ய வொண்ணாதபடி பலருடைய போக்கு வரத்துள்ள இடத்திலே நாங்களிருந்து விளையாடினால்
அங்குந் தான் வந்து தீமை செய்து விட்டு ஓடி வந்து ஒளிந்து கொண்டதுமன்றியில் ஒரு வார்த்தையும் சொல்லாதொழிகின்ற
உன் பிள்ளையின் தீம்பு நிமித்தமாக நாங்கள் உயிரை யிழக்கப் புகா நின்றோமென்று
சில ஆய்ப் பெண்கள் யசோதை பக்கலிலே வந்து முறைப்படுகின்றனரென்க.
கண்ண பிரான், பிறரறியாதபடி கையால் தொட்டுச் சில விலாஸங்கள் பண்ணினானாகில் ஒரு குறையுமில்லை;
பிறரறிந்து ‘இதுவென்?’ என்று கேட்கும்படிச் சேற்றை யிட்டெறிந்தானே யென்று வருந்து கின்றனர் போலும்,
வளையையும் துகிலையும் தாராதொழிந்தாலும் வாயில் நின்றும் ஒரு முத்து உதிர்த்தானாகில் உயிர் தரித்திருப்பர்கள் போலும்.
முற்றும் –முற்றுதும்’ என்பதன் குறை. முற்றுதும் -தன்மைப் பன்மை வினைமுற்று. உயிரை இழந்து கொண்டேயிருக்கிறோம் என்று கருத்து,
————
குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ
எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2-
பதவுரை
குண்டலம்–கர்ண பூஷணங்களானவை
தாழ–(தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும்
குழல்–திருக் குழல்களானவை
தாழ–(அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும்
நாண்–திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது
தாழ–(திருவுந்தி யளவும்) தாழந்தசையவும்
எண் திசையோரும்–எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும்
இறைஞ்சி தொழுது–நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி
ஏத்த–ஸ்தோத்ரம் பண்ணவும்
(இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்)
வண்டு அமர் பூ குழலார்–வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய
(ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த)
துகில்–புடவைகளை
கைக் கொண்டு–(தனது)கைகளால் வாரிக் கொண்டு
விண் தோய் மரத்தானால்–ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால்
இன்று முற்றும்;
வேண்டவும்–(எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும்
தாரானால்–(அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால்
இன்று முற்றும்;
விளக்க உரை
கண்ணபிரான், இடைச்சிகள் கரையிற் களைந்து வைத்திருந்த புடவைகளை தான் கைக் கொள்ளும் போது
குனிந்து எடுக்க வேண்டியிருந்ததால் குண்டலமுங் குழலும் நாணும் தாழப் பெற்றன.
நாண்-கழுத்துக்கு அலங்காரமாக அணிந்து கொண்டுள்ளதொரு கநக கண்டிகை.
“உய்யுலகு படைத்துண்ட மணி வயிற்றினாய்ப் பரம்பரனாயிருந்துள்ளவன் கர்ம வஸ்யரைப் போல் இங்ஙனே வந்து பிறந்துமல்லாமல்
இவ்வாறு இடைப் பெண்களோடு இட்டீடுகொண்டு விளையாடவும் பெறுவதே! இதென்ன ஸெளசீல்யம் !” என்று
பலரும் புகழா நிற்பர் என்ற கருத்தைக் காட்டும் இரண்டாமடி.
‘இறைஞ்சி’ என்றாலும் ‘தொழுது’ என்றாலும் ‘வணங்கி’ என்றே பொருளாம்.
இங்கு ‘இறைஞ்சி’ என்பதனால் மாநஸமான வணக்கத்தையும்,
‘தொழுது’ என்பதனால் காயிகமான வணக்கத்தையும் சொல்லுகிறதென்று கொள்ளலாம்.
விண் தோய் மரம்-ஆகாசத்தளவும் ஓங்கி உயர்ந்துள்ள மரமென்றபடி. எங்களுடைய குழலைக் கண்டு மகிழ்ந்து கூடவிருந்து
அநுபவிக்க பெறாமல் குரங்கு போல் மரத்தின் மேலேறி கிடப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோற்ற ‘வண்டமர் பூங்குழலார்’ என்கிறார்கள்
————–
தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3-
பதவுரை
தடம் படு–இடமுடைத்தான [விசாலமான]
தாமரைப் பொய்கை–தாமரைப் பொய்கையை
கலக்கி–உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று)
விடம் படு–விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின
நாகத்தை–காளிய ஸர்ப்பத்தை
வால் பற்றி ஈர்த்து–வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு)
படம்படு–படமெடுக்கப்பெற்று
பை–மெத்தென்றிருந்த
தலை மேல்–(அந் நாகத்தின்) தலை மேல்
எழப் பாய்ந்திட்டு–கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று)
உடம்பை–(தன்) திரு மேனியை
அசைத்ததனால்–அசைத்து கூத்தாடின கண்ணபிரானால்
இன்று முற்றும்;
(அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்)
உச்சியில்–(அவனுடைய) படத்தின் மீது
நின்றானாள்–நின்றருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
விளக்க உரை
இடையர்களுக்கு பசுக்களும் விடாய் தீர நீரைப் பருக வொண்ணாத படி தாமரை பொய்கையில் நெடு நாளாய் கிடந்த
காளிய நாகத்தின் கொழுப்படங்கின படியை அநுஸந்தித்த ஆய்ச்சிகள் மகிழ வேண்டியிருக்க அது செய்யாமல்
‘இன்று முற்றும்’ என்பனென் னென்னில்; இப்படி எங்கள் பக்கல் மாத்திரம் தீம்பு செய்யத் தலைப்பட்டானே இது எங்கள் பாவமோ?
இக் கஷ்டங்களை யாம் பொருத்து உயிர் தறிப்பது மிகவும் அரிது என்று வயிறெரிந்து கூறுகின்றனரெனக் கொள்க. விடம்-விஷம்.
‘பைம்பொன்’ என்ற சொல் பசுமை+பொன் என பிரித்தாற்போல, பைந்தலை என்கிற இச் சொல்லும்,
பசுமை+தலை எனப் பிரிகின்றதென்று நினைக்க வேண்டா; பை-என்பது மெத்தெனவு, அழகு;
பாம்பின் தடம் /முதலிய பல பொருட்களை குறிப்பதொரு தனி சொல் என்க.
‘இவன் இப் பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொள்ளப் போகிறானித்தனை’ என்று நடு நடுங்கி அஞ்சி கிடந்த
அனுகூலர் மனமகிழ உடம்பசைந்து கூத்தாடினபடி.
————-
தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4-
பதவுரை
தேனுகன்–தேநுகாஸுரனுடைய
ஆவி–உயிரை
செகுத்து–முடிக்க நினைத்த அத் தேனுகனை
பனங்கனி–(ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக)
எறிந்திட்ட–(அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த
தடம் பெருந் தோளினால்–மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து)
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து–தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து
ஆன் நிரை–பசுக்களின் திரளை
காத்தானால்–ரக்ஷித்தருளின கண்ணபிரானால்
இன்று முற்றும்
அவை–அப் பசுக் கூட்டத்தை
இன்று முற்றும்
விளக்க உரை
தேநுகன்-கழுதை வடிவங்கொண்டு கண்ணனை நலிய வந்த அசுரன்;
இவ்வரலாற்றை “வானவர் தாம் மகிழ” (1-5-4) என்ற பாட்டின் உரையிற் காண்க. செகுத்து-செகுக்க; எச்சத்திரிபு.
பனை+கனி, பனங்கனி; “பனை முன் வலிவரின் ஐ போயமும்” என்ற சிறப்பு விதி காண்க. தான் -அசை.
‘ஆனிரை காத்தானால்’ என்பதனால் அநிஷ்ட நிவர்த்தனமும்,
‘அவை உய்யக் கொண்டானால்’ என்பதனால் இஷ்ட ப்ராபனமும் சொல்லப்படுகின்றது;
அதாவது- வந்து ஆபத்தை அகற்றி, வயிறு நிரம்பப் புல்லுந்தண்ணீருங் கொடுக்கை.
—————
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு
வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5-
பதவுரை
ஆய்ச்சியர் சேரி–இடைச் சேரியிலே
(இடைச்சிகள் கடைவதாக)
அளை–(மத்தை நாட்டி) உடைத்த
தயிர்–தயிரையும்
பால்–(காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும்
உண்டு–அமுது செய்து
(அவ் வளவோடு திருப்தி யடையாமல்)
பேர்ந்து–பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே)
அவர்–அவ் லிடைச்சிகள்
(ஒளிந்திருந்து)
கண்டு–(இவன் திருடுகின்ற போதில்) கண்டு
பிடிக்க–(இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள
பிடி யுண்ட–(அவர்கள் கையில்) பிடிபட்டு
(அதற்கு தப்ப மாட்டாமல்)
வெண்ணை–வெண்ணெயை
கொள்ள மாட்டாது–(தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல்
அங்கு–அவர்கள் வீட்டில்
ஆப்புண்டு இருந்தானால்–கட்டுண்டிருந்த கண்ணபிரானால்
இன்று முற்றும்
அடியுண்ட அமுதினால்–(அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால்
இன்று முற்றும்
விளக்க உரை
’பழநாளைத் திருடன் ஒருநாளைக்ககப்படுவான்’ என்னும் பழமொழியை இரண்டாமடியில் நினைக்க.
ஆலைத் தயிர்-தன் ஆவலின் அளவுக்கேற்ப தடாவினில் தன் கையில் உள்ள போக விட்டு அளைகைக்கு உரிய தயிர் என்னவுமாம்.
வேய்ந் தடந்தோளினார்-ஸர்வ சக்தனான ஸர்வேச்வரனுக்கு இடைச்சிகள் கையில் பிடியுண்டு ஆப்புண்டு தப்பிப் போதல்
அரிதன்றே யாயினும் அங்ஙன் தப்பிப் போகாமல், அவர்கள் படுத்தின பாட்டுக்கெல்லாம் இசைத்திருந்தது
அவ்விடைச்சிகளின் வேய்ந்தடந் தோளினழகைக் கண்டு கொண்டிருக்கைக்காகவென்க.
கொள்மாட்டாது-கொள்ளமாட்டாது; கொள்-முதனிலை.
——————
தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6-
பதவுரை
(காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே)
தள்ளி தளர்நடை இட்டு–தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு
(நடக்க வேண்டும்படியான)
இளம் பிள்ளையாய்–இளங்குழந்தையாய்
(இருக்கச் செய்தே)
கள்ளத்தினால்–(தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே
வந்த–(தன்னைக் கொல்ல)வந்த
பேய்ச்சி அவளை–பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை
உள்ளத்தின் உள்ளே உற நோக்கி–(’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து
(பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே)
முலை–அம் முலையை
உயிர் துள்ள சுவைத்ததனால்–(அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
துவக்கு அற–(அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி
உண்டானால்–(அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
விளக்க உரை
கண்ணபிரான் தரையிலே காலூன்றி நடக்க மாட்டாத இளங்குழந்தையாய் இருக்கச் செய்தேயே அநாயாஸமாக
விரோதி நிரஸ்நம் பண்ணினவனாயிருந்து வைத்து, பருவம் முற்றமுற்ற ஆச்ரிதைகளான எங்களுக்குத் தீமை செய்ய
தலைப்படுவதே என்று வயிறெரிந்து முறைப்படுத்தப் படுகின்றனர்.
உள்ளத்தின் உள்ளே-இவள் நம்மை நலிய வருகின்றாள் என்று-தான் தெரிந்து கொண்டதை வெளிப்படுத்தினாள்,
வந்த பூதனை அஞ்சி ஓடிப் போய் விடுவாளென்று உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கினான்.
’சுவைத்தான்’ என்ற சொல் நயத்தினால்-விஷந்தடவின அம் முலையைத் தானுண்ணும் போது
மாம்பழக்கதுப்பு சப்புமா போலே ரஸ்யமாக உறிஞ்சியுண்டான் என்பது போதரும்;
விஷமுண்டால் சிறிது வருத்தமாயினும் உண்டாகக் கூடுமன்றோ வென்று சங்கித்து, அக் கண்ண பிரானுக்கு
அது லேசமுமில்லை யென்பதைக் காட்டும் “துவக்கற வுண்டானால்“ என்பது.
—————
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று
மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை
ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7-
பதவுரை
மா வலி–மஹாபலியினுடைய
வேள்வியில்–யாக பூமியிலே
மாண் உரு ஆய் சென்று–பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி
மூ அடி தா என்று–(என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று
இரந்து–யாசித்துப் பெற்ற
இம் மண்ணினை–இந்தப்பூமியை
(அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே)
ஓர் அடி இட்டு–(பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து)
இரண்டாம் அடி தன்னிலே–இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே
தாலி அடி இட்டானால்–மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால்
இன்று முற்றும்
(தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி)
தரணி அளந்தானால்–லோகத்தை அளந்தவனாலே
இன்று முற்றும்.
விளக்க உரை
கண்ணபிரான் தன்னை அழியுமாறும் அடியார்களின் வேண்டுகோளைத் தலைக் கட்டித் தருமவனாயிருந்து வைத்து
எங்கள் பக்கலிலே தீமை செய்ய ஒருப்பட்டது என்னோ! என்று முறைப்படுகின்றனர்.
தந்திருவடிகளின் மென்மையை நோக்காமல் காடு மேடுகளை அளந்தருளினவன் அத் திருவடிகளின் ஆயாஸந்தீர நாங்கள்
அவற்றைப் பிடிக்கின்றோமென்றால் அதற்கிசைந்து திருவடிகளைத் தந்தருளலாகாதோ! என்ற மனக்குறையை நுண்ணிதினுணர்க.
தாவடி இட்டானால்- தாவி அடியிட்டானால்; தொகுத்தல் விகாரம். தாவு அட்ட – தாவுகின்ற அடி என்று உரைப்பாருமுளர்.
தரணி-பூமியைச் சொல்லக் கடவ இச் சொல்- இங்குப் பொதுப்படையாக உலகங்களைக் குறிக்கும். இலக்கணையால்.
—————-
தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8-
பதவுரை
தாழை–(கரையிலே) தாழைகளையும்
தண் ஆம்பல்–(உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய
தடம் பெரும்–மிகவும் பெரிய
பொய்கை வாய்–தடாகத்தினுள்ளே
வாழும்–வாழ்ந்து கொண்டிருந்த
முதலை–முதலையின் வாயாகிய
வலைப்பட்டு–வலையிலே அகப்பட்டுக் கொண்டு
வாதிப்பு உண்–துன்பமடைந்த
வேழம்–ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயர்–வருத்தம்
கெட–தீரும்படியாக
விண்ணோர் பெருமான் ஆய்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய்
(அப்பொய்கைக் கரையிலே சென்று)
ஆழி–சக்ராயுதத்தாலே
(முதலையைத் துணிந்து)
பணி கொண்டானால்–(கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
அதற்கு–அந்த யானையின் திறத்தில்
அருள் செய்தானால்–(இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
விளக்க உரை
கண்ணபிரான் கஜேந்திராழ்வானாகிற ஒரு மிருகத்துக்காக அந்தப் புரத்தையும் அகன்று அரை குலையத் தலை குலைய
நெடுந்தூரமோடிக் காரியஞ்செய்தவனாயிருந்து வைத்து, அருகிலுள்ள எங்களை இவ்வாறு அகற்றுவதே!
இதென்ன கொடுமை! என்று முறைப்படுகின்றனர். பொய்கைவாய்-பொய்கையிலே; வாய்-ஏழனுருபு.
‘நன் சாப மோக்ஷத்துக்கு ஓரானை வருவது எப்போதோ’ என்று இதே நினைவாக அம் முதலை அப் பொய்கையினுள்ளே
உறைந்திருந்ததனால் ‘வாழும் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது;
நற்கதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்குமிருப்பை வாழ்ச்சியாகச் சொல்லக் கடவது இறே.
முதலை என்னுஞ்சொல் இலக்கணையால் அதன் வாயை உணர்த்திற்று.
—————
வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9-
பதவுரை
(கடலில் நீரை முகந்து கொண்டு)
வானத்து–ஆகாசத்திலே
எழுந்து–கிளம்பின
மழை முகில் போல்–வர்ஷிக்கப் புக்க மேகம் போல
(கறுத்த நிறத்தை யுடைய)
ஏனத்து உரு ஆய்–ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து)
கானத்து–காடு நிலங்களில்
எங்கும்–எல்லாவிடத்திலும் (திரிந்து)
மேய்ந்து–(கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து
களித்து–செருக்கடைந்து
விளையாடி–விளையாடி,
(பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று)
இடந்த–(அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த
இம் மண்ணினை–இந்தப் பூமியை
தானத்தே–யதாஸ்தாநத்தில்
வைத்தானால்–(கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால்
இன்று முற்றும்;
தரணி–(இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை
இடந்தானால்–கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால்
இன்று முற்றும்;
விளக்க உரை
’வானத்தெழுந்த மழைமுகில்போல் எனத்துருவாய் தரணி இடந்தானால் இன்று முற்றும்;
இடந்த விம்மண்ணினைத் தானத்தே வைத்துக் கானத்து எங்கும் மேய்ந்து களித்து விளையாடினானால் இன்று முற்றும்’ என்றும்
இரண்டு வாக்கியார்த்தமாக்கிப் பொருள்கொள்ளுதல் நன்று;
வைத்தானால் என்ற விடத்துள்ள மூன்றாம் வேற்றுமை யுருபைப் பிரித்து விளையாடி என்ற வினையெச்சத்தோடு கூட்டி உரைத்தவாறு.
முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக் கொண்டு கடலில் மூழ்கிப் போன ஹிரண்யாக்ஷனைத் திருமால்
தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் மஹாவராஹமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்கோட்டாற் குத்தியெடுத்துக்
கொண்டு வந்து பழையபடி வித்தருளினன் என்ற வரலாற்றை அநுஸந்தித்து இப்படி பிரளயாபந்நையான பூமியை எடுத்தவன்
எங்களை விரஹப்ரளயத்தே தள்ளி வருத்தா நிற்பானே! என்று வயிறெரிகின்றனர்.
[இப்பொழுது நடக்கிற சுவேதவராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
திருமால் பிரளயப் பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹ ரூபம் கொண்டருளிக்
கோட்டுநுனியாலே பூமியை எடுத்துவந்தனனென்றும் அதுபற்றி இக்கல்பத்துக்கு
வராஹகல்பமென்று பெயராயிற்று என்றும் புராண வரலாறு உண்டு.] கானம்-காநகம்
————–
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10-
பதவுரை
நல் மங்கைமார்கள் தாம்–(பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள்
அம் கமலம்–அழகிய செந்தாமரைப் பூப்போன்ற
கண்ணன் தன்னை–கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக
அங்கு வந்து–அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து
அசோதைக்கு–(அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே
முற்பட்ட–(தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன
அவர் சொல்லை–அவ் விடைச்சிகளின் சொல்லை,
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வார்
சொல்–அருளிச் செய்த
இவை–இப் பாசுரங்களை
இங்கு–இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே)
வல்லவர்க்கு–ஓத வல்லவர்களுக்கு
ஒன்று ஏதம்–ஒரு வகைக் குற்றமும்
இல்லை–இல்லையாம்.
விளக்க உரை
இப்பாட்டால்-இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ் சொல்லித் தலைகட்டுகிறார்.
மங்கை நல்லார்கள்-நல்ல மங்கைமார்கள் என மாற்றி யுரைக்கப் பட்டது.
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply