ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -2-8–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது வாகும் அழகனே காப்பிட வாராய்–2-8-1-

பதவுரை

சந்திரன்–சந்த்ரனானவன்
மாளிகை சேரும்–வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற
சதுரர்கள் வெள்ளறை–ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றவனே!
அழகனே–அழகு உடையவனே!
இந்திரனோடு–இந்திரனும்
பிரமன்–ப்ரஹ்மாவும்
ஈசன்–ருத்ரனும்
இமையவர்–மற்றுமுள்ள தேவர்களும்
எல்லாம்–(ஆகிய) யாவரும்
மா மந்திரம் மலர் கொண்டு–சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு
உவர் ஆய் வந்து–(மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து
மறைந்து நின்றார்–மறைந்து நின்றார்கள்,
இது–இக் காலம்
அம்–அழகிய
அந்தி போது ஆகும்–ஸாயம் ஸந்த்யா காலமாகும்,
(ஆகையால்)
காப்பு இட–(நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி
வாராய்–வருவாயாக.

விளக்க உரை

சந்திர மண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்ற மாளிகைகள் நிறையப் பெற்றதும் மங்களாசாஸநம் செய்ய வல்லவர்
மலிந்திருக்கப் பெற்றதுமான திருவெள்ளறையில் எழுந்தருளி யிருப்பவனே!,
எல்லாத் தேவரும் உன்னை ஸேவிக்கும்படி மந்த்ர புஷ்பங் கொண்டு வந்து மறைந்து நிற்கிறார்கள், பொழுதும் ஸந்தியா காலமாயிற்று.
உனது அழகுக்கு ஒரு குறை வாராதபடி நான் திருவந்திக்காப்பிட வரவேணுமென்பதாம்.
பகவத் ஸ்தோத்ரமாகிய வேத மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பகவானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக்
கையிலேந்தியுள்ள மலர் மந்திர மலர் எனப்பட்டது. காப்பு = ரக்ஷை.

—————

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு வெல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமேலொன்று மிலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திரு வெள்ளறை நின்றாய்
நின்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய்–2-8-2-

பதவுரை

மதிள்–மதிளரணை யுடைய
திரு வெள்ளறை–திரு வெள்ளறையிலே
நின்றாய்–நின்றருளினவனே!
மேல்–(என்) மேல்
ஒன்றும்–துன்பமும்
நேசம் இலாதாய்–அன்பில்லாதவனே!
உன்னை கூவி–உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன்–நின்று விட்டேன்;
(அதனால்)
பசு எல்லாம்–பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து–கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற–கத்துகின்றன;
(நீ)
அந்தி போது–அந்தி வேளையில்
மன்றில்–நாற் சந்தியில்
நில்வேல்–நில்லாதே;
என் தன் சொல்லு–என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய்–(உனக்கு) நல்லதாகுங்கிடாய்:
நான் உன்னை காப்பு இட வாராய்.

விளக்க உரை

பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த
பசுக்களெல்லாம் கன்றுகளுள்ள விடத்தில் வந்து சேர்ந்த பின்பும் கறப்பாரில்லாமல்
முலைக்கடுப் பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து.
‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலை யுண்ணப் பெறாமையால் கத்துகின்றன;
பசுக்கள் புறம்பே நின்று கொண்டு கன்றுகள் முலை யூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக் கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம்.
‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச் சொல்லாகவுங் கொள்வர்.
நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம்.

————–

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரப்பப் போய் அடிசிலுமுண் டிலை ஆள்வாய்
முப்போதும் வானவ ரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய்–2-8-3-

பதவுரை

ஆள்வாய்–என்னை ஆளப் பிறந்தவனே!
முப்போதும்–­மூன்று காலத்திலும்
வானவர்–தேவர்கள்
ஏத்தும்–ஸ்தோத்திரஞ்செய்கின்ற
முனிவர்கள் வெள்ளறை–(உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே
நின்றாய்–நிற்பவனே! (நீ)
செப்பு ஒது–பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த
மெல் முலையார்கள்–மெல்லிய முலையை யுடைய ஸ்திகள்
(விளையாட்டாகச் செய்த)
சிறு சோறும்–மணற் சோற்றையும்
(சிறு)இல்லும்–மணல் வீட்டையும்
சிதைத்திட்டு–அழித்து விட்டு (நிற்க)
அப்போது–அக் காலத்தில்
நான்–நான்
உரப்ப–கோபித்துச் சொல்ல
(பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்)
போய்–அப்பாற்போய்
அடிசிலும்–சோற்றையும்
உண்டிலை–உண்ணாமலிருந்திட்டாய்;
இப்போது–இந்த மையத்திலே
நான் ஒன்றும் செய்யேன்–நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன்;
எம்பிரான் சாப்பிட வாராய்.

விளக்க உரை

சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து
அப் பெண்களோடே வலிவிற் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான்
உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோ வென்று அஞ்சி நீ ஓடிப் போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்;
இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள்.

ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு
என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு.

முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம்.

——-

கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப் படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலைய தொப்பாய் வள்ளலே காப்பிட வாராய்-2-8-4-

பதவுரை

கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!;
கண்டாரோடே–கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய்–தீம்பு செய்பவனே!
வண்ணம்–திருமேனி நிறம்
வேலை அது–கடலின் நிறத்தை
ஒப்பாய்–ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே–உதாரனே!
எண் அரு–எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர்–இப் பிள்ளைகள்
வந்திட்டு–வந்திருந்து
மணல் கொடு–மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி–கண்ணில் தூவி விட்டு
(அதனோடு நில்லாமல்)
காலினால் பாய்ந்தனை–காலினாலும் உதைத்தாய்;
என்று என்று–என்று பலதரஞ்சொல்லி
(நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார்–முறையிடா நின்றார்கள்;
(ஆதலால் அங்கே போவதை விட்டு)
காப்பு இட வாராய்.

விளக்க உரை

‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும்,
நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி
இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்;
ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள்.
கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல்
யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு.
‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது – நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது
உனது வடிவழகு என்றபடி.
வேலையது = அது – முதல் வேற்றுமைச் சொல்லுருபு.

————–

பல்லாயிரவர் இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான் நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்–2-8-5-

பதவுரை

இ ஊரில்–(பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே
தீமைகள் செய்வார்–தீம்புகளைச் செய்பவர்களாகிய
பிள்ளைகள்–சிறுவர்கள்
பல் ஆயிரவர்–அனேக ஆயிரக் கணக்கானவர்கள்;
எல்லாம்–அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம்
உன் மேல் அன்றி–உன் மேலல்லாமல்
(வேறொருவர் மேலும்)
போகாது–ஏறாது;
(இப்படியிருப்பதால் அங்கே போகாமல்)
எம்பிரான்! நீ இங்கே வாராய்;
நல்லார்கள்–நல்லவர்கள் வாழ்கிற
வெள்ளறை(யில்) நின்றாய்! ;
ஞானம் சுடரே–ஞான வொளியை யுடையவனே!
உன் மேனி–உன் திருமேனியை
சொல் ஆர் நின்று ஏத்தி–சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து
வாழ்த்தி–மங்களாசாஸநஞ்செய்து
சொப்பட–நன்றாக
காப்பு இட வாராய்.

விளக்க உரை

பஞ்சலக்ஷங் குடியுள்ள இவ்வூரிலோ தீம்புசெய்யும் பிள்ளைகள் பலருண்டு;
அப்படியிருக்கவும், அவர்கள் தாம் தாம் செய்யுந் தீம்பை உன்மேலே யேற்றிவிடுகிறார்கள்.
ஆதலால் உன் மேலே குற்றத்தைச் சுமத்துகின்ற அவர்களை விட்டிட்டு, உன்னை அன்புடன் வாழ்த்திக் காப்பிடும்படி
உன்மேல் பரிவுள்ளவர்களிருக்கின்ற இவ்விடத்திற்கு வரவேணுமென்பதாம்.

எம்பெருமானுடைய திவ்யாத்ம ஸ்வரூபம் ஸ்வயம் ப்ரகாசமாய் ஜ்ஞாநமயமாயிருப்பதால் ‘ஞானச்சுடரே, என்கிறார்.
எல்லாம் போகாது – ஒருமைப் பன்மை மயக்கம்.

——————

கஞ்சங் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம் மயிர்ப் பேயை
வஞ்சிப் பதற்கு விடுத்தா னென்பது ஓர் வார்த்தையும்
உண்டு மஞ்சு தவழ் மணி மாட மதிள் திரு வெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய்–2-8-6-

பதவுரை

மஞ்ச தவழ்–மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம்–ரத்ந மயமான வீடுகளையும்
மதிள்–மதிளையுமுடைய
திருவெள்ளறை(யில்) நின்றாய்! ;
கஞ்சன்–‘கம்ஸனானவன்
நின் மேல்–உன் மேலே,
கறுக்கொண்டு–கோபங்கொண்டு
கரு நிறம்–கரு நிறத்தையும்
செம் மயிர்–செம் பட்ட மயிரையுமுடைய
பேயை–பூதனையை
வஞ்சிப்பதற்கு–(உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான்–அனுப்பினான்,
என்பது–என்பதான
ஓர் வார்த்தையும்–ஒரு சொல்லும்
உண்டு–கேட்டிருப்பதுண்டு,
(ஆதலால்)
நீ அங்கு நிற்க–நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன்–நான் அஞ்சா நின்றேன்;
அழகனே! காப்பு இட வாராய்

விளக்க உரை

கம்ஸன் ஆகாச வாணி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப் போது அழித்து வருகையில்
உனது யோக நித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது அக் கன்னிகை
‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய்
உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய் மகளாகிய பூதனையை ஏவினானென்று லோக ப்ரவாதமிருக்கிறது;
ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது;
ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம்.

————–

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை யரசே நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி யுடை வெள்ளறை நின்றாய்
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்–2-8-7-

பதவுரை

கள்ளம்–வஞ்சனை யுடைய
சகடும்–சகடாஸுரனையும்
மருதும்–யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய–(வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த–(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே–பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ-நீ
பேயை–பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை–முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு–உள்ள படி
ஒன்றும் அறியேன்–ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;
இது–இப்போது
பள்ளி கொள் போது ஆகும்–படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே! காப்பு இட வாராய்.

விளக்க உரை

‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு
இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக.
பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம்,
ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள்.

—————–

இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே
செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்பக் கபாலி காண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்–2-8-8-

பதவுரை

(உன் குண சேஷ்டிதங்களால்)
இன்பம் அதனை–பரமாநந்தத்தை
உயர்த்தாய்–(எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே!
இமையவர்க்கு-தேவர்க்கு
என்றும்–எந்நாளும்
அரியாய்–அருமையானவனே!
கும்பம்–மஸ்தகத்தையுடைய
களிறு–குவலயாபீடத்தை
அட்ட–கொன்ற
கோவே–ஸ்வாமியே!
கொடு–கொடுமை தங்கிய
கஞ்சன்–கம்ஸனுடைய
நெஞ்சினில்–மநஸ்ஸிலே
கூற்றே–யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;
செல்லத்தினால் வளர்–செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்–குழந்தாய்!
அங்கு–நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்–(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கவல்ல
கபாலி காண்–துர்க்கையாகும்;
(ஆகையால் அங்கு நில்லாமல்)
கடிது ஓடி–மிகவும் விரைந்தோடி
காப்பு இட வாராய்.

விளக்க உரை

அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தை விட்டு நான் காப்பிடும்படி விரைந்து வர வேணுமென்பதாம். \
கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து
கையில் கபாலங்கொண்டு பிச்சை யெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால்
அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.

————-

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய்-2-8-9-

பதவுரை

இருக்கொடு–(புருஷ ஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக் கொண்டு
நீர்–தீர்த்தத்தை
சங்கில்–சங்கத்திலே
கொண்டிட்டு–கொணர்ந்து
எழில்–விலக்ஷணரான
மறையோர்–ப்ராஹ்மணர்
(உனக்கு ரக்ஷையிடுவதற்கு)
வந்து நின்றார்–வந்து நிற்கிறார்கள்;
நம்பி–தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று–நாற்சந்தியிலே நின்று
தருக்கேல்–செருக்கித் திரியாதே;
சில நாள்–சில காலம்
தாய் சொல்லு–தாய் வார்த்தையை
கொள்ளாய்–கேட்பாயாக;
தேசு உடை–தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! ;
இன்று–இப்போது
நான்–நான்
திரு காப்பு–அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த–உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு–உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன்–ஏற்றுவேன்;
(இதைக்காண)
வாராய்–கடுக வருவாயாக.

விளக்க உரை

“உனக்கு ரக்ஷை யிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று
யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப் போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷை யிடும்படி வராவிட்டாலும்
நாற் சந்தியிலே செருக்குடன் விளையாடித் திரிதல் கூடாது. அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும்.
தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷை யிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தை விட்டு வரவேணும், என்கிறாள்.
இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது.

——————-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறை யானை
மாதர்க் குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே–2-8-10-

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த–ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை–யசோதைப் பிராட்டி
மகன் தன்னை–தன் புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட–ரக்ஷை யிட அழைத்த
மாற்றம்–வார்த்தையை
போது அமர்–தாமரைப் பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வம் கொழுந்து–செல்வத்திற்கு உரியவனாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர்–ஸம்ச்லேஷிக்கப் பெற்ற
திரு வெள்ளறையானை–திரு வெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி-,
(எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே)
வேதம் பயன்–வேத தாத்பர்யமாக
கொள்ள வல்ல–அறிய வல்ல
விட்டு சித்தன்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
மாலை–பாமாலையினுடைய
பாதம் பயன்–ஓரடி கற்றதனாலாகிய பயனை
கொள்ள வல்ல–அடைய வல்ல
பக்தர் உள்ளார்–பக்தராக உள்ளவரது
வினை–வினைகளெல்லாம்
போம்–கழிந்து விடும்.

விளக்க உரை

ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத் துணை மஹிமை கூறிய முகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்ல முடியாதென்பதைக்
கைமுதிக ந்யாயத்தால் பெறவைத்தார். (பாதப்பயனித்யாதி.)
ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக் கொள்ளக் கடவ
பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம்.

———

அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன் கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய்.

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading