ஆனிரை மேய்க்க நீ போதி அரு மருந்தாவ தறியாய்
கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப
தேனி லினிய பிரானே செண்பகப் பூச் சூட்ட வாராய்-2-7-1-
பதவுரை
தேனில்–தேனைக் காட்டிலும்
இனிய–போக்யனாயிருக்கிற
பிரானே–ப்ரபுவே!
பற்றாதார் எல்லாம்–பகைவரெல்லாரும்
சிரிப்ப–பரிஹஸிக்கும்படி
பானையில் பாலை பருகி–(கறந்த) பானையிலே யுள்ள பச்சைப் பாலைக் குடித்து
(பின்பு)
உன்–உன்னுடைய
கரிய–ச்யாமமான
திருமேனி–அழகிய திருமேனி
வாட–வாடும்படி
கானகம் எல்லாம் திரிந்து–காட்டிடம் முழுதும் திரிந்து கொண்டு
ஆநிரை–பசுக்களின் திரளை
மேய்க்க–மேய்ப்பதற்கு
நீ போதி–நீ போகிறாய்;
அரு மருந்து ஆவது–(நீ உன்னை) பெறுதற்கரிய தேவாம்ருதம் போன்றவனாதலை
அறியாய்–அறிகிறாயில்லை;
(இனி நீ கன்று மேய்ப்பதை விட்டிட்டு)
செண்பகம் பூ–செண்பகப் பூவை
சூட்ட–(கான்) சூட்டும்படி
வாராய்–வருவாயாக
விளக்க உரை
“இந்த கிருஷ்ணன் எங்கள் வீட்டில் கைப்பானையிலிருந்த பாலைக் குடித்துப் போனான்” என்று உகவாதார் சொல்லும்படி
கறந்த பானையிலிருந்த பச்சைப் பாலைப் பருகுமவனான பித்தனாய் இருந்தாலும் தேனைவிட இனியவனாயிருப்பவனே!
உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிவது தவிர்ந்து
செண்பகப்பூவை நான் சூட்டும்படி வரவேணுமென்றவாறு.
அருமருந்தாவதறியாய் – இவ்வுலகத்தில் உள்ளார்க்குப் பிறவி நோயறுக்கும் மருந்துமாய் பரம பதத்தில் உள்ளார்க்குப்
போக மகிழ்ச்சிக்கு மருந்துமாய் நீயிருப்பதை அறிகிலை காண்.
பற்றாதார் சிரிப்ப – பற்றுமவர்கள் (அன்பர்கள்) இவன் செயலுக்கு உகப்பர் போலும்.
தேனில் – ஐந்தாம் வேற்றுமை.
—————-
கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய் உல கேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச் சூட்ட வாராய்–2-7-2-
பதவுரை
கண்கள்–கண்களானவை
உன்னை கண்டால்–உன்னைப் பார்த்தால்
கரு உடை மேகங்கள்–கர்ப்பத்தை யுடைய (நீர் கொண்ட) மேகங்களை
கண்டால்–பார்த்தால் (அதை)
ஒக்கும்–ஒத்துக் குளிர்கின்ற
உரு உடையாய்–வடிவை யுடையவனே!
உலகு ஏழும்–ஏழுலகங்களும்
உண்டாக–ஸத்தை பெறும்படி
வந்து பிறந்தாய்–திருவவதரித்தவனே!
திரு உடையாள்–(உன்னை) ஸம்பத்தாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–நாயகனே!
திரு அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
மணம்–வாஸனை
மருவி கமழ்கின்ற–நீங்காமலிருந்து பரிமளிக்கிற
மல்லிகைப் பூ–மல்லிகைப் பூவை
சூட்ட வாராய்-.
விளக்க உரை
நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே!
உலகங்களுக்கு ஸத்தை யுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!;
திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே!
இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம்
‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்:
(அதுக்கு மேலே) கண்கள் உருவுடையதாய் – கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.
———–
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திரு வேங்கடத்து எந்தாய்
பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்ட வாராய்–2-7-3-
பதவுரை
மச்சொடு மாளிகை ஏறி–நடு நலையிலும் மேல் நிலையிலும் ஏறிப் போய்
மாதர்கள் தம் இடம் புக்கு–பெண்களிருக்கிற இடத்திலே புகுந்து
கச்சொடு–(அவர்களுடைய முலைகளின் மேலிருந்த) கச்சுக்களையும்
பட்டை–பட்டாடைகளையும்
கிழித்து–கிழித்து விட்டு
காம்பு துகில் அவை–(மற்றும் அப் பெண்கள் உடுத்துள்ள) கரை கட்டின சேலையையும்
கீறி–கிழித்துப் போட்டு
(இப்படியே)
நிச்சலும்–ப்ரதி நித்யம்
தீமைகள்–துஷ்ட சேஷ்டைகளை
செய்வாய்–செய்பவனே!
நீள் திருவேங்கடத்து–உயர்ந்த திருமலையில் எழுந்தருளியிருக்கிற
எந்தாய்–ஸ்வாமியே!
பச்சை–பசு நிறமுள்ள
தமனகத்தோடு–மருக்கொழுந்தையும்
பாதிரிப்பூ–பாதிரிப்பூவையும்
சூட்டவாராய்-.
விளக்க உரை
மேல் மாடங்களில் ஏகாந்தமாக வாழ்கின்ற பெண்களிடத்திலும் சென்று அவர்களுடைய கச்சுகளையும் பட்டாடைகளையும்
கரை கட்டின சேலைகளையும் கிழித்துத் தீம்பு செய்வதை விட்டிட்டுப் பூச்சூட வரவேணுமென்பதாம்.
கச்சு – ‘கஞ்சுகம்’ என்ற வடசொற்சிதைவு
துகிலவை = அவை முதல் வேற்றுமைச் சொல்லுருபு.
நிச்சல் – ‘நித்யம்’ என்ற வடசொல் விகாரம். தமநிகம் – வடசொல்.
————
தெருவின் கண் நின்று இள வாய்ச்சி மார்களைத் தீமை செய்யாதே
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற் கன்று போலே
உருவ மழகிய நிம்பீ உகந்திவை சூட்ட நீ வாராய்–2-7-4-
பதவுரை
புருவம்–புருவங்களையும்
கரு குழல்–கரு நிறமான கூந்தலையும்
பெற்றி–(இவ் விரண்டிற்கும் இடையிலுள்ள) நெற்றியையும் கொண்டு
பொலிந்த–விளங்குகின்ற
முகில் கன்று போலே–மேகக் கன்று போலே
உருவம் அழகிய–வடிவமழகிய
நம்பி–சிறந்தோனே! (நீ)
தெருவின் கண் நின்று–தெருவிலே நின்று கொண்டு
இள ஆய்ச்சி மார்களை–இடைச் சிறுமிகளை
தீமை செய்யாதே–தீம்பு செய்யாமலிரு;
மருவும்–மருவையும்
தமனகமும்–தமநிகத்தையும் (சேர்த்துக் கட்டின)
சீர் மாலை–அழகிய மாலைகள்
மணம் கமழ்கின்ற–வாஸனை வீசுகின்றன;
இவை–இவற்றை
உகந்து–மகிழ்ச்சி கொண்டு
சூட்ட நீ வாராய்-.
விளக்க உரை
நீ தெருவிலே நின்று அவ் விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப் பெண்களைத் தீம்பு செய்து திரியாமல்
மருவையும் தமனகத்தையுஞ் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் பழுது படாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள்.
எம்பெருமானுக்கு ஏற்ற உவமைப் பொருள் கிடையாமையால் “புருவங் கருங்குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று” என
இல் பொருளுவமை கூறப்பட்டது.
கமழ்கின்ற – ‘அன்’ சாரியை பெறாத முற்று
————–
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பொசித்தாய்
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரிலெழுந்த செங்கழு நீர் சூட்ட வாராய்–2-7-5-
பதவுரை
புள்ளினை–பகாஸுரனை
வாய் பிளந்திட்டாய்–வாய் கிழித்துப் பொகட்டவனே!
பொரு–யுத்தோந்முகமான
கரியின்–குவலயாபீடத்தின்
கொம்பு–கொம்பை
ஒசித்தாய்–பறித்தவனே!
கள்ளம் அரக்கியை மூக்கொடு–வஞ்சனை யுடைய ராக்ஷஸியாகிய சூர்ப்பணகையின் மூக்கையும்
காவலனை–(அவளுக்குப்) பாதுகாவலாயிருந்த ராவணனுடைய
தலை–தலையையும்
கொண்டாய்–அறுத்தவனே!
நீ–(இப்படிப்பட்ட) நீ
வெண்ணெய்–வெண்ணெயை
அள்ளி விழுங்க–வாரி விழுங்க
அஞ்சாது–சிறிதும் பயப்படாமல்
அடியேன்–(‘எப்போது குழந்தை பிறந்து வெண்ணெய் விழுங்கப் போகிறது?’ என்றிருந்த) நான்
அடித்தேன்–அடித்தேன்;
(அப்பிழையைப் பொறுத்து)
தெள்ளிய–தெளிவான
நீரில்–நீரிலே
எழுந்த–உண்டான
செங்கழுநீர்–செங்கழுநீரை
சூட்டவாராய்-.
விளக்க உரை
கொக்கின் வாயைக் கீண்டொழித்தவனே! நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு
நான் வெறுமனே யிருக்க வேண்டியதாயிருந்தும் நீ வெண்ணெணை வாரி உட்கொண்டதைக் கண்டு
‘இவன் இப்படியே வேறு வீடுகளிற் போய்ச் செய்தால் பழி வருமே’ என்று நினைத்து அஞ்சாமல் அடித்து விட்டேன்;
அவஸரப் பட்டு நான் செய்தவிதைப் பொறுத்துச் செங்கழுநீர்ப்பூச் சூடவா என்கிறாள்.
புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய ஸௌகுமார்யத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதாயிருக்க
அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வரவேணுமென்பதாகவுங் கொள்ளலாம்.
அடியேன் = ஸ்ரீக்ருஷ்ணனுடைய வீரத்திலீடுபட்டுச் சொல்லுகிற சொல்:” மரபுவழுவமைதி;
அடித்த பின்பு அநுதாபங்கொண்டு அடியேன் என்றாளெனினுமாம்.
—————-
எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பி
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால் கொடு பாய்ந்தாய்
தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச் சூட்ட வாராய்–2-7-6-
பதவுரை
நம்பி–சிறந்தோனே!
(நப்பின்னையை மணம் புணர்வதற்காக)
எருதுகளோடு–ஏழு ரிஷபங்களுடன்
பொருதி–போர் செய்யா நின்றாய்;
ஏதும்–எதிலும் (ஒன்றிலும்)
உலோபாய் காண்–விருப்பமில்லாதவனாயிரா நின்றாய்;
கருதிய–(கம்ஸன் உன் மேல் செய்ய) நினைத்த
தீமைகள்–தீம்புகளை
செய்த–(நீ அவன் மேற்) செய்து
கம்ஸனை–அந்தக் கம்ஸனை
கால் கொடு–காலினால் (காலைக் கொண்டு)
பாய்ந்தாய்–பாய்ந்தவனே!
(அக்ரூரர் மூலமா யழைக்கப் பட்டுக் கம்ஸனரண்மனைக்குப் போம் போது)
தெருவின் கண்–தெருவிலே
தீமைகள் செய்து–தீமைகளைச் செய்து கொண்டு போய்
சிக்கென–வலிமையாக
மல்லர்களோடு–(சாணூர முஷ்டிகரென்னும்) மல்லர்களுடனே
பொருது வருகின்ற–போர் செய்து வந்த
பொன்னே–பொன் போலருமையானவனே!
புன்னைப் பூ சூட்ட வாராய்-.
விளக்க உரை
பொருதி = முன்னிலை யொருமை நிகழ்கால வினைமுற்று.
(எருதுகளோடே பொருதது) காலாந்தரமாயிருக்கச் செய்தேயும் தற்காலம் போலே ப்ரகாசிக்கையாலே
‘பொருதி’ என்று வர்த்தமாகமாகச் சொல்லுகிறது என்ற பெரிய ஜீயர் உரை நோக்கத் தக்கது.
உலோபாய் = வடமொழியின் திரிபாகிய ‘உலோபம்’ என்பதனடியாக வந்த எதிர்மறை முற்று.
உடம்பைப் பேணுதல் உயிரைப் பேணுதல் ஒன்றும் செய்யாதிரா நின்றாய் என்று கருத்து.
போம் வழியில் வண்ணானைக் கொன்று வஸ்த்ரங்களைப் பறித்துக் கொண்டமை கம்ஸனுடைய வில்லை முறித்தமை
குவலயாபீடத்தைக் கொன்றமை முதலியன – இங்கு தெருவின் கண் செய்த தீமைகளாகும்.
கண் – ஏழனுருபு.
—————–
குடங்களெடுத் தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே
மடங்கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்லஎன் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்த எம் கோவே குருக்கத்திப் பூச் சூட்ட வாராய்–2-7-7-
பதவுரை
குடங்கள்–பல குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர்வெறிந்து
(இப்படி)
கூத்து ஆட–குடக் கூத்தை யாடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுடைய
எம் கோவே–எம்முடைய தலைவனே
மடம் கொள்–மடப்பமென்ற குணத்தை யுடைய
மதி முகத்தாரை–சந்த்ரன் போன்ற முகத்தை யுடைய பெண்களை
மால் செய்ய வல்ல–மயக்க வல்ல
என் மைந்தா–எனது புத்திரனே!
முன்–நரஸிம்ஹாவதாரத்திலே
இரணியன் நெஞ்சை–ஹிரண்யாஸுரனுடைய மார்பை
இடந்திட்டு–(திரு வுகிரால் ) ஊன்ற வைத்து
இரு பிளவு ஆக-இரண்டு பிளவாகப் போம்படி
தீண்டாய்–பிளந்தவனே!
குடந்தை–திருக் குடந்தையில்
கிடந்த–பள்ளி கொள்ளுகிற
எம் கோவே–எமது தலைவனே!
குருக்கத்திப் பூ சூட்டவாராய்.
விளக்க உரை
நரஸிம்ஹாவதாரம் முதலிய மற்றுமுள்ள விபவாவதாரங்கள் செய்தவனும் திருக்குடந்தை முதலிய திவ்ய தேசங்களில்
வாழ்பவனும் இக் கண்ணபிரானே யென்பது இதில் விளங்கும்.
குடக்கூத்து – ப்ராஹ்மணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால்
அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்கு வீடாக அவர்களாடுவதொரு கூத்து;
இதனைத் தலையிலே அடுக்குங் குடமிருக்க இருதோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலுங் குடங்களை யேந்தி
ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து என்பர்;
இதனைப் பதினோராடலிலொன்றெனறும் அறுவகைக் கூத்திலொன்றென்றுங் கூறி
“குடத்தாடல் குன்றெடுத்தோனாடலலனுக் கடைக்குபவைந் துறுப் பாய்ந்து” என்று
மேற்கோளுங்காட்டினர் சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார்.
—————–
சீமாலிகன வனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்–2-7-8-
பதவுரை
சீ மாலிகன் அவனோடு–மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு
தோழமை கொள்ளவும்–ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும்
வல்லாய்–வல்லவனாய்
அவனை–அந்த மாலிகனை
நீ-நீ
சாம் ஆறு எண்ணி–செத்து போம் வழியையும் ஆலோசித்து
சக்கரத்தால்–சக்ராயுதத்தினால்
தலை கொண்டாய்–தலையையுமறுத்தாய்;
ஆம் ஆறு–நடத்த வேண்டியவைகளை
அறியும்–அறிய வல்ல
பிரானே–ப்ரபுவே!
அணி–அழகிய
அரங்கத்தே–கோயிலிலே
கிடந்தாய்–பள்ளி கொண்டிருப்பவனே!
என்னை-எனக்கு
விளக்க உரை
மாலிகன் என்பான் ஒருவன் கண்ணபிரானுக்கு உயிர்த் தோழனாய் அப்பிரானிடத்திற் பலவகை ஆயுதங்களையும் பயின்று
ஒருவர்க்கு மஞ்சாமல் அஹங்காரியாய் ஸாதுஜகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருக்க,
கண்ணபிரான் ‘நண்பனாகிய இவனை நாம் கொல்வது தகாதே! என்னசெய்யலாம்? என்று வ்யாகுலப்பட்டு,
ஒருநாள் அவனை நோக்கி ‘நீ இப்படி செய்வது தகாது‘ என்ன, ஆஸுர ப்ரக்ருதியான அந்த மாலிகன் தன் வாயில் வந்தபடி பிதற்றி
‘நீ எல்லா ஆயுதங்களையும் எனக்குக் கற்பித்தும் சக்ராயுதப் பயிற்சி மாத்திரம் செய்விக்கவில்லையே‘ என்று கண்ணன் மேற்குறைகூற,
‘இதில் பழகுவது உனக்கு முடியாது எனக்கே அஸாதாரணமானது‘ என்ன,
‘என்னால் முடியாதது மொன்றுண்டோ? நீ அவச்யம் அதைக் கற்பிக்க வேணும்‘ என்று அவன் நிர்ப்பந்திக்க,
கண்ணன் இது தான் தக்க ஸமயம்‘ என்று திருவுள்ளத்திற்கொண்டு சக்ராயுதத்தை யெடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி
மேலெறிந்து கையிலேற்க, ‘இது எனக்கு அரிதோ‘ என்று மாலிகன் சொல்ல,
‘இது உனக்கு அரிதே‘ என்று கண்ணன் சொல்லவும் அதை அவன் கேளாமல் அச் சக்ராயுதத்தை வாங்கிச் சுழற்றி நிற்க,
அச் சக்கரம் சுழன்று வருவதற்கு இடம் போதாமையாலே அதன் வீச்சு இவன் கையிற் பிடிபடாமல் இவன் தலையை
அரிந்து விட்டதென்பது இப்பாட்டில் குறித்த கதை.
இவ்வரலாறு எந்தப் புராணத்திலுள்ளதென்று ஆராய்ந்து பார்த்தும் பல பெரியோர்களைக் கேட்டும்
ஆகரம் அறியப் பெற்றிலேன் வந்த விடத்திற்கண்டுகொள்க.
தத் ஸர்வம் தர்ம வீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி“ என்று ஸ்ரீ – சதுர்முகன் வரத்தினால் வால்மீகி முனிவர் பகவதவதார
வ்ருத்தாந்தங்களைத் தாமாக ஸாக்ஷத்கரித்தது போலே ஆழ்வாரும் மயர்வற மதிகல மருளப் பெற்றுத் தாமாக ஸாக்ஷாத்கரித்தவற்றில்
இவ்வரலாறு ஒன்று என்பர் பெரியோர்,
இப்பிரபந்த்த்தின் ஈற்றுத் திருமொழியின் ஆறாம் பாசுரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளை
தாமும் இதை ஸ்பஷ்டமாக அருளிச்செய்துளர்.
‘மாலிகன்‘ என்பதே அவன்பெயர், மேன்மைப் பொருளைத் தரும் ‘ஸ்ரீ‘ என்ற சொல் ‘சீ‘ எனத் திரிந்து வந்து
சீமாலிகன் எனக் கிடக்கிறது. க்ருஷ்ண ஸ்நேஹத்தால் வந்த மேன்மையுண்டே அவனக்கு,
அவனைக் கொல்வது ஆவச்யகமான போது ‘தோழினைக் கொன்றான்‘ என்னும் பழி தனக்கு வாராமல்
‘தன்னாலே தான் முடிந்தான்‘ என்று உலகத்தார் சொல்லும்படி கண்ண பிரான் மாலிகனை உபாயமாகக் கொன்றன்னென்பார்
‘சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்‘ என்றார்.
“தோழமைக்கொள்ளவும்“ என்னற உம்மை எதிரது தழுவியதாய், தலை கொள்ளவும் என்பதைக் காட்டும்.
——————-
அண்டத் தமரர்கள் சூழ அத்தாணி யுள்ளங்கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை யுகக்கக் கரு முகைப் பூச் சூட்ட வாராய்–2-7-9-
பதவுரை
அத்தாணியுள்–அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள்–தேவர்கள்
சூழ–சூழ்ந்திருக்க
அங்கு–அவர்கள் நடுவில்
அண்டத்து–பரம பதத்தில்
இருத்தாய்–வீற்றிருப்பவனே!
தொண்டர்கள்–அடியார்களுடைய
நெஞ்சில்–ஹ்ருதயத்தில்
உறைவாய்–வஸிப்பவனே!
தூ மலரான்–பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா–கொழுநனே!
(பிரளய காலத்தில்)
உலகினை ஏழும்–ஏழு உலகங்களையும்
உண்டிட்டு–உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில்–ஒராவிலையில்
துயில் கொண்டாய்–யோக நித்திரையைக் கொண்டவனே!
நான்–நான்
உன்னை கண்டு–(நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க–மகிழும்படி
கருமுகைப் பூ–இருவாட்சிப் பூவை சூட்டவாராய்
விளக்க உரை
பரமபதத்திலே ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருப்பவனே! அவ்விருப்பைக் காட்டிலும் மிக விரும்பி
அன்பர்களின் நெஞ்சிலே யெழுந்தருளியிருப்பவனே! லக்ஷ்மீநாதனே! உலகங்களைப் பிரளயங் கொள்ளாதபடி
வயிற்றிலே கொண்டு காப்பவனே! மாலையும் மயிர்முடியுமாக உன்னை
நான் கண்டு களிக்குமாறு கருமுகைப்பூச் சூடவரவேணு மென்கிறாள்.
—————
செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இரு வாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா வென்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை
பண்பகர் வில்லி புத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே–2-7-10-
பதவுரை
செண்பகம்–செண்பகப் பூவும்
மல்லிகையோடு–மல்லிகைப் பூவும்
செங்கழுநீர்–செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி–இருவாட்சிப் பூவும்
(ஆகிய)
எண் பகர்–(இன்ன தின்னதென்று) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும்–மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன்–கொண்டு வந்தேன்;
இன்று–இப்போது
இவை சூட்ட–இப் பூக்களைச் சூட்டும்படி
வா–வருவாயாக,
என்று–என்று
பகர் மண் கொண்டானை–பகர்ந்த மண்ணைக் கொண்டவனை
ஆய்ச்சி–யசோதை
மகிழ்ந்து–மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த–சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர்–ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன-அருளிச் செய்த
இம்மாலை–இந்தச் சொல்மாலையும்
பத்தே–ஒருபத்தே!
விளக்க உரை
இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய்
போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே – ஏகாரம் – இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று
இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும்.
எண்பகர் – சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம்.
கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது.
பகர்மண் – வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது,
‘வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க.
ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து.
உரைசெய்த – பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை.
உரை செய்தவற்றைப் பட்டர் பிரான் சொன்ன இம்மாலையென்க.
——
அடிவரவு – ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன்.
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply