பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட் கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக் காக்காய் மாதவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-1-
பதவுரை
அக்காக்காய்–காக்கையே!
பின்னை–நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை–நாயகனும்
பேரில்–திருப் பேர்களிலே
கிடந்தானை–பள்ளி கொண்டிருப்பவனும்
முன்னை–(பகவதநுபவத்தில்) முதல்வரான
அமரர்–நித்ய ஸுரிகளுக்கு
முதல்–தலைவனும்
(அந்த நித்ய ஸுரிகளின் ஸத்தைக்கும் தாரகாதிகளுக்கும்)
தனி வித்தினை–ஒப்பற்ற காரணமாயிருப்பவனும்
என்னையும்–என்னையும்
எங்கள் குடி முழுது–எங்களுடைய குடியிலுள்ளாரெல்லாரையும்
ஆட் கொண்ட–அடிமை கொண்ட
மன்னனை–தலைவனுமாகிய கண்ணனுக்கு
வந்து–(நீ) வந்து
குழல் வாராய்–கூந்தல் வாருவாயாக
அக்காக்காய்–காக்கையே!
மாதவன் தன்-ஸ்ரீயபதியான இவனுக்கு
குழல் வாராய்-
விளக்க உரை
காக்கை வந்து கத்தும் போது குழந்தைகள் பராக்காயிருக்குமாதலால், அப்போது தலை வாருதல் ஸுகமாய் முடியுமென்பது பற்றி,
அக் காரியத்தைக் காக்கையின் மேலேற்றிக் ‘குழல்வாராய் அக்காக்காய்’ என்றாள் என்க.
‘அக்காக்காய்!’ என்று காக்கையை விளித்துக் குழந்தைகளுக்குக் குழல் வாரி முடித்தால், உலக வழக்கத்திலிருப்பது காண்க.
‘முதல்’ என்றதனோடும் இரண்டனுருபு கூட்டுக. வித்து – ஸீஜம். எனவே, ஆதி காரணம்.
பேர் – திருப்பேர்நிகர், சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று.
—————-
பேயின் முலை யுண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயா மலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாக வந்து குழல் வாராய் அக் காக்காய் தூ மணி வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-2-
பதவுரை
அக்காக்காய்!-
இவன்–இப் பிள்ளை
முன்னம்–முன்பு
பேயின் முலை–பூதனையின் முலையை
உண்ட–(அவளுயிரோடுங்) குடித்த
பிள்ளை–பிள்ளை காண்
(அன்றியும்)
மாயம்–வஞ்சனை யுள்ள
சகடும்-சகடத்தையும்
மருதும்–யமளார்ஜுகங்களையும்
இறுத்தவன்–முறித்தவன்
காயா மலர் வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை உடையவன்
கண்ணன்–‘க்ருஷ்ணன்’ என்னும் பேரை யுடையவன்
கரு குழல்–கரு நிறமான கூந்தலை
வந்து–(நீ) வந்து
தூய்து ஆக குழல் வாராய்–நின்றாக வாருவாயாக.
தூ மணி–பழிப்பற்ற நீல மணி போன்ற
வண்ணன்–நிறத்தை யுடைய இவனுக்கு குழல் வாராய் –
விளக்க உரை
தூய்தாக – தலையிற் சிக்குப்படாமல் மழமழவென்றிருக்கும்படி,
“குழல்வாராய்” என்ற தொடர் – ஒரு சொல் நீர்மைத்தாய் வாருதல் என்ற தொழிலை மாத்திரம் உணர்த்தும்.
ஆதலால், ‘கருங்குழல் குழல்வாராய்’ என்றது. (புநிருக்தி தோஷமில்லை என்க.)
————
திண்ணக் கலத்தில் திரை யுறி மேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர் தம்
கண்ணனை வந்து குழல் வாராய் அக் காக்காய் கார் முகில் வண்ணன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-3-
பதவுரை
அக்காக்காய்!-
திரை–பின்னுதலை யுடைய
உறி மேல் வைத்த–(பெரிய) உறி மேல் வைத்த
திண்ணம் கலத்து–த்ருடமான பாத்ரத்திலுள்ள
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்கி–உட் கொண்டு
விரைய–விரைவாக (ஓடி வந்து)
உறங்கிடும்–பொய் யுறக்க முறங்குகின்ற
அண்ணல்–ஸ்வாமியும்
அமரர்–நி்த்ய ஸுரிகளுக்கு
பெருமானை–நிர்வாஹகனும்
ஆயர் தம் கண்ணனை–இடையர்களுக்குக் கண் போன்றவனுமான இவனை
வந்து குழல் வாராய் –
அக்காக்காய்!-
கார் முகில்–காள மேகம் போன்ற
வண்ணன்–நிறத்தை யுடையனான இவனுடைய
குழல் வாராய் –
விளக்க உரை
திண்ணம்- ‘அம்’ விகுதி பெற்ற பண்புப் பெயர். கலம் – ‘கலசம்’ என்ற வடசொற் சிதைவு என்னலாம்.
“விரையனுறங்கிடும்“ என்பதும் பாடம்.
——————-
பள்ளத்தில் மேயும் பறவை யுருக் கொண்டு
கள்ள வசுரன் வருவானைத் தான் கண்டு
புள்ளிது வென்று பொதுக் கோவாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் அக் காக்காய் பேய் முலை யுண்டான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-4-
பதவுரை
அக் காக்காய்!-
பள்ளத்தில்–நீர்த் தாழ்வுகளிலே
மேயும்–இரை யெடுத்துத் திரிகின்ற
பறவை–(கொக்கு என்னும்) பஷியின்
உரு–ரூபத்தை
கொண்டு–ஏறிட்டு்க்கொண்டு
வருவான்–வருபவனாகிய
கள்ளம் அசுரனை–வஞ்சனை பொருந்திய அசுரனை (பகாஸுரனை)
தான் கண்டு–தான் பார்த்து (அவனை)
இது புள் என்று–இது பஷியே யென்று (ஸாமாந்யமாக நினைத்து)
பொதுக்கோ–விரைவாக
வாய்–(அவ் வஸுரனது) வாயை
தீ்ண்டிட்ட–கிழித்துப் போட்ட
பிள்ளையை வந்து குழல் வாராய் -அக்காக்காய்! பேய் முலை உண்டான் குழல் வாராய் -.
விளக்க உரை
யமுனைக் கரையிலே கண்ணபிரானைப் பகாஸுரன் விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப் போலே எரிக்கவே
அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில்,
கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன் என்பது – பகாஸுரவதவ்ருத்தாந்தம்.
பொதுக்கோ – பொதுக்கென. (“பிதுக்கென்று புறப்பட்டான்” என்று திரிந்து வழங்கி வருதல் காண்க.)
—————-
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திரு முடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக் காக்காய் ஆழியான் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-5-
பதவுரை
அக்காக்காய்!-
நீ–நீ
உற்றன–(உன் ஜாதிக்குத்) தகுந்த வற்றை
பேசி–சொல்லிக் கொண்டு
ஓடி–அங்குமிங்கும் பறந்து
திரியாதே–திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து–கன்றுகளின் கூட்டத்தை மேய்த்து வந்து
ஒரு கன்றினை–(அஸுரா விஷ்டமான) கன்றொன்றை
பற்றி–பிடித்து
கனிக்கு–(அஸுரா விஷ்டமான) விளாம் பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த–(குணிலாக) வீசின
பரமன்–பரம புருஷனுடைய
திருமுடி–அழகிய தலை முடியை
அற்றைக்கும் வந்து–அவ்வக்காலும் வந்து
குழல் வாராய்–வாருவாயாக
ஆழியான் தன்–சக்ராயுதபாணியான இவனுடைய
குழல் வாராய் –
விளக்க உரை
முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம்.
அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும்.
அதன் மேல், கு – சாரியை.
ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்” என்றவிடத்துக் கருத்தை நினைக்க.
—————-
கிழக்கில் குடி மன்னர் கேடிலா தாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் வாழி யதனால்
விழிக்கு மளவிலே வேரறுத் தானை
குழற்கு அணி யாகக் குழல் வாராய் அக் காக்காய் கோவிந்தன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-6-
பதவுரை
அக்காக்காய்!-
கேடு இலாதார்–(வர பலமும் புஜ பலமுமிருப்பதால் நமக்கு) அழிவில்லை யென்றுநி னைத்திருந்தவரான
கிழக்கில் குடி மன்னரை–கிழக்குத் திக்கிலுள்ள பட்டணத்திற் குடியிருந்த ராஜாக்களை
அழிப்பான்–அழிக்கும் படி
நினைந்திட்டு–எண்ணி
அவ் வாழி அதனால்–அந்தச் சக்ராயுதத்தால்
விழிக்கும் அளவிலே–கண் மூடித் திறக்கின்ற காலத்திற்குள்
வேர் அறுத்தானை–ஸ மூலமாக அழித்தவனுடைய
குழற்கு–கூந்தலுக்கு
அணி ஆக–அழகு உண்டாம்படி குழல் வாராய்
கோவிந்தன்–(இந்த) கோவிந்தனுடைய
தண் குழல்–குளிர்ந்த (சிறந்த) குழலை
வாராய்–வாருவாயாக.
விளக்க உரை
கிழக்கிற் குடி மன்னர் – ப்ராக்ஜ்யோதிஷ புர வாஸிகளான நிரகாஸுரன் முதலானார்.
அவ்வாழி – அ – உலகறிசுட்டு. ப்ரஸித்தியைக் காட்டும்.
இனி, கேடு இலாதாரை – (விஷ்ணு பக்தராதலால்) அழிவில்லாதவரான இந்த்ராதிகளை,
அழிப்பான் நினைந்திட்ட கிழக்கிற் குடிமன்னர் விழிக்குமளவிலே (அவரை) வேரறுத்தான் என்றும் உரைப்பர்.
அழிப்பான் – எதிர்கால வினையெச்சம்.
—————
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகமர்
வண்டொத் திருண்ட குழல் வாராய் அக் காக்காய் மாயவன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-7-
பதவுரை
அக்காக்காய்!-
பிண்டம் திரளையும்–(பித்ருக்களை உத்தேசித்து இடும்) பிண்டத்தின் உருண்டையையும்
பேய்க்கு இட்ட-பிசாசங்களுக்குப் போகட்ட
நீர் சோறும்–நீரையுடைய சோற்றையும்
உண்டற்கு–உண்ணுதற்கு
வேண்டி–விரும்பி
நீ ஓடி திரியாதே–நீ பறந்தோடித் திரியவே வேண்டா
அண்டத்து–மேலுலகத்திலுள்ள
அமரர்–தேவர்களுக்கு
பெருமான்–தலைவனாகிய இக் கண்ண பிரானுடைய
அழகு அமர்–அழகு பொருந்திய
வண்டு ஒத்து இருண்ட–வண்டைப் போல் கருநிறமான
குழல் வாராய் –
மாயவன் தன்–ஆச்சர்யச் செயல்களை யுடைய இவனுடைய
குழல் வாராய் –
விளக்க உரை
தந்தை தாய் முதலானார் இறந்த திதியில் செய்யும் க்ராத்தத்தில் பித்ராதி தேவதைகளை உத்தேசித்துப் பிண்ட
வுருண்டையைக் காகத்தை அழைத்து இடுவதும், பிசாசம் முதலியவற்றைக் குறித்து ஜலத்தோடு கூடிய சோற்றைப்
பலி கொடுத்தலும் வழக்கமென்க.
இப்படி கண்ட சோற்றுக்கும் அலைந்து திரியாமல் இவனுடைய குழலை வார வரவேணுமென்றதாயிற்று.
——————–
உந்தி யெழுந்த உருவ மலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக் காக்காய் தாமோதரன் தன் குழல் வாராய் அக் காக்காய்–2-5-8-
பதவுரை
அக்காக்காய்!-
உந்தி–(தனது) திருநாபியிலே
எழுந்த–உண்டான
உருவம்–ஸுருபத்தையுடைய
மலர் தன்னில்–தாமரைப் பூவிலே
சந்தம்–சந்தஸ்ஸை நிரூபகமாக வுடைய
சதுமுகன் தன்னை–நான்முகனை
படைத்தவன்–ஸ்ருஷ்டித்த இவனுடைய
புளி அட்டி கொந்தம் குழலை–புளிப் பழத்தை யிட்டுத் தேய்த்ததனால் நெறிப்பை யுடைய கூந்தலை
தந்தத்தின் சீப்பால்–தந்தத்தினாற் செய்த சீப்பாலே
குறந்து–சிக்கு விடுத்து
குழல் வாராய்–வாருவாயாக
அக்காக்காய்! தாமோதரன் தன் குழல் வாராய்!-
விளக்க உரை
கீழ் “வெண்ணெயளைந்த குணுங்கும்” என்ற திருமொழியில் கூறியபடி யசோதைப் பிராட்டி ஸ்ரீக்ருஷ்ணனை
எண்ணெய் தேய்த்துப் புளிப்பழமிட்டு நீராட்டியதனால், அப்படி நீராடின ஸ்ரீக்ருஷ்ணனுடைய கூந்தல் நெறித்திருக்கும்.
ஆதலால், யசோதையானவள் ‘காக்கையே! நெறிப்புப் போம்படி எண்ணெய் தடவித் தந்தச் சீப்பினால் தலைவார வேணும்’ என்கிறாள்.
‘புழுகட்டி’ என்றும் பாடம். புழுகு – புனுகு எண்ணெய். அதைத் தடவிக் குழல் வாராய் என முடிபு காண்க.
——————–
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன் இவ் வுலகினை முற்றும் அளந்தவன் பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து
பின்னே யிருந்து குழல் வாராய் அக் காக்காய்
பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்–2-5-9-
பதவுரை
அக்காக்காய்!-
முன்–வாமநாவதார காலத்தில்
மன்னன் தன்–அஸுரராஜனான மஹாபலியினுடைய
தேவிமார்–மனைவியர்கள்
கண்டு–(தன்னுடைய) வடிவைக் கண்டு
மகிழ்வு எய்த–மகிழ்ச்சி யடையும்படி
(மஹாபலியினிடத்திற்போய் ‘கொள்வன் நான் மாவலி)’ என்று மூவடி மண் இரந்து பெற்றுப் பின்பு த்ரிவிக்ரமனாய்)
இ உலகினை முற்றும்–இந்த வுலகங்கள் முழுவதையும்
அளந்தவன்–அளந்து கொண்ட இவனுடைய
பொன் முடியினை–அழகிய தலையை
பூஅணை மேல் வைத்து–புஷ்பத்தினாலாகிய படுக்கையில் வைத்து
பின்னே இருந்து–(இவனது) பின்புறத்திலே இருந்து கொண்டு
குழல் வாராய்!- அக்காக்காய்!-
பேர் ஆயிரத்தான்–ஸஹஸ்ர நாமங்களை யுடைய இவனுக்கு
குழல் வாராய் –
விளக்க உரை
எல்லா இந்திரியங்களையும் ஆகர்ஷிக்க வல்ல வாமந வடிவையும், பிரமசாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும் –
மழலைச் சொல் சொல்லும் அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனராம்.
பொன்னின் = இன் – சாரியை. பூ அணை – புஷ்பம்போல் ம்ருதுவான படுக்கை யென்றுமாம்.
——————–
கண்டார் பழியாமே அக் காக்காய் கார் வண்ணன்
வண்டார் குழல் வார வா வென்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதிள் வில்லி புத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே–2-5-10-
பதவுரை
அக் காக்காய்–‘காக்கையே!
கண்டார்–பார்த்தவர்கள்
பழியாமே–பழியாதபடி
கார் வண்ணன்–காள மேகம் போன்ற நிறமுடைய கண்ணனுடைய
வண்டு ஆர் குழல்–வண்டை ஒத்த கரிய கூந்தலை
வார–வாரும்படி
வா–வருவாயாக’
என்ற–என்று சொன்ன
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியின்
சொல்–சொல்லை (க்குறித்த) –
விண் தோய்–ஆகாசத்தை அளாவுகின்ற
மதிள்–மதிளை யுடைய
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டன்–பெரியாழ்வாருடைய
சொல்–அருளிச் செயல்களை
கொண்டாடி–சிலாகித்து
பாட–பாடப் பெற்றால்
வினை தாம்–ஸுக்ருத துஷ்க்ருதங்களிரண்டும்
குறுகா–சேராவாம்.
விளக்க உரை
(கண்டார்பழியாமே.) நீராடிய பின்பு தலையை விரித்துக் கொண்டிருந்தால், கண்டவர்கள் எல்லாம் பழிப்பர்களிறே.
நல் வினையும் தீவினை போலவே ஸம்ஸாரத்தில் பந்தத்தைத் தந்து பொன் விலங்கு போலுதலால்.
முமுகூஷுக்கள் இரும்பு வில்லை யொத்த பாபத்தை நீக்குவது போலவே புண்யத்தையும் நீக்க வேண்டுமென்பது கருதி
‘குறுகாவினை தாமே’ எனப் பன்மையாக அருளிச் செய்தன ரென்க.
——–
அடிவரவு:– பின்னை பேய் திண்ணம் பள்ளத்தில் கற்று கிழக்கில் பி்ண்டம் உந்தி மன்னன் கண்டார் வேலி.
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply