வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்-2-4-1-
பதவுரை
வெண்ணெய் அளைந்த–வெண்ணெ யளைந்ததனாலான
குணுங்கும்–மொச்சை நாற்றத்தையும்
விளையாடு புழுதியும்–விளையாடுவதினாற் படிந்த புழுதியையும்
கொண்டு–(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்)
இவ் விரா–இன்றை இரவில்
தேய்த்து கிடக்க–(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட)
உன்னை–உன்னை
திண்ணென–நிச்சயமாக
நான் ஒட்டேன்–நான் ஸம்மதிக்க மாட்டேன்,
எண்ணெய்–(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும
புளி பழம்–புளிப் பழத்தையும்
கொண்டு–ஸித்தமாக வைத்துக் கொண்டு
இங்கு–இங்கே
எத்தனை போதும்–எவ்வளவு காலமாக (வெகு காலமாக)
இருந்தேன்–(உன் வரவை எதிர்பார்த்து) இரா நின்றேன்,
நண்ணல் அரிய பிரானே–(ஒருவராலும ஸ்வ யத்நத்தால்) கிட்டக் கூடாத ஸ்வாமியே’
நாரணா–நாராயணனே’
நீராட–நீராடுவதற்கு
வாராய்–வர வேணும்.
விளக்க உரை
கண்ணபிரான் * தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம்
அவ் வெண்ணெய் பட்டு மொச்சை நாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன் மேல் புழுதியும் படியும,
இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவு தின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம்,
இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராட வழைக்கின்றனளென்க,
விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க,
‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க.
புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர்,
சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
—————–
கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்–2-4-2-
பதவுரை
நின்ற–நிலையாய் நின்ற
மராமரம்–(ஊடுருவ அம்பெய்து) சாய்த்தவனே’
கன்றுகள்–பசுவின் கன்றுகள்
ஓட–வெருண்டோடும்படி
செவியில்–(அக் கன்றுகளின்) காதில்
கட்டெறும்பு பிடித்து இட்டால்–கட்டெறும்பைப் பிடித்துப் போட்டால்
(அதனால் அக் கன்றுகள் வெருண்டு)
தென்றி–சிதறிப் போய்
கெடும் ஆகில்–(கண்டு பிடிக்க முடியாதபடி) ஓடிப் போய் விட்டால்,
(பின்பு நீ,)
வெண்ணெய்–வெண்ணையை
திரட்டி–திரட்டி
விழுங்குமா– விழுங்கும்படியை
காண்பேன்–பார்ப்பேன்,
(வெண்ணெயே உனக்கு உண்ணக் கிடைக்கா தென்றபடி)
இன்று–இந்த நாள்
நீ பிறந்த–நீ அவதரித்த
திரு ஓணம்–ச்ரவண நஷத்ரமாகும் – (ஆகையால்)
நீ–நீ
நீர் ஆடவேண்டும் –எம்பிரான்’ ஓடாதே வாராய் –
விளக்க உரை
கன்று உண்டானால் பசு கறக்கலாம், பசுவைக் கறந்தால் பாலுண்டாகும், பாலுண்டானால் வெண்ணெயுண்டாகும்,
ஆகவே, வெண்ணெய் வேணுமென்றால், கன்றுகள் அவசியம் வேணும்,
அக் கன்றுகள் வெருண்டோடுவதைக் காண்கைக்காக நீ அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப் பிடித்துப் புகவிட்டால்
அவை காண முடியாதபடி ஓடிப்போய் விடுமே’ பின்பு உனக்கு இஷ்டமான வெண்ணெய் கிடைக்கும்படி யெங்ஙனே?
என்பது முதலிரண்டடிகளின் கருத்து.
‘வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்’ என்ற தொடர் வெண்ணெய் விழுங்கக் கிடைக்காது என்ற கருத்தைக் காட்டும்,
இது ஒருவகை எதிர்மறை இலக்கணை,
ஆ – ‘ஆறு’ என்பதன் விகாரம்.
(மராமரம் சாய்த்தாய்.) ராமாவதாரத்தில் ரிச்யமூகபர்வதத்தில் ஸுக்ரீவனுக்குத் தன் வலியின் மிகுதியைக் காட்ட
ஏழு மராமரங்களை ஒருங்கே எய்தவனென்ற வரலாறு காண்க.
—————-
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சன மாட நீ வாராய்–2-4-3-
பதவுரை
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை–முலையை
(அவளுடைய உயிரோடும்)
உண்ண–(நீ) உண்டு விட
கண்டு–(அதைப்) பார்த்தும்
(நான் அஞ்சி ஓட வேண்டி யிருக்க, அங்ஙனம் செய்யாமல்)
பின்னையும் என் நெஞ்சம் நில்லாது–பின்பும் என் மனங்கேளாமல்
ஆய்ச்சியர் எல்லாரும்–இடைச்சிகள் எல்லாரும்
கூடி–ஒன்று கூடி
அழைக்கவும்–கூப்பாடு போட்டுக் கதறவும்
நான்–(உன் மேல் அன்பு கொண்ட) நான்
முலை தந்தேன்–முலை (உண்ணக்) கொடுத்தேன்
நெல்லியொடு–நெல்லியை யிட்டு
காய்ச்சின–காய்ச்சின
நீர்–வெந்நீரை
கடாரத்தில்–சருவத்தில்
பூரித்து வைத்தேன்–நிறைத்து வைத்திருக்கிறேன்
வாய்த்த–பொருந்திய
புகழ்–யசஸ்ஸையும்
மணி–நீல மணி போன்ற
வண்ணா–நிறத்தையுமுடைய கண்ணனே!
மஞ்சனம் ஆட–நீராட
நீ வாராய் –
விளக்க உரை
‘உனக்கு முலை கொடுத்த பேய்ச்சி பட்ட பாட்டை நானறிந்து வைத்தும், நாமும் அப்பாடுபட வேண்டி வரப் போகிறதே
என்று அஞ்சி ஓட வேண்டி இருக்க அது செய்யாமல், மற்றும் அச்சமுறுத்துகிற இடைச்சிகளின் பேச்சையும் கேளாமல்
உனக்கு நான் முலை தந்தது அன்பினாலன்றோ? அதற்கிணங்க நீ நான் சொல்லிற்றைக் கேட்கவேண்டவோ‘ என்கிறாள்.
நெல்லி – நெல்லியிலை. காய்ச்சின நீரோடு நெல்லி – நெல்லியோடு காய்ச்சின நீர் என உருபு பிரித்துக் கூட்டப்பட்டது.
கடாரம் – கடாஹம். பூரித்த – வடமொழித் தாது வடியாப் பிறந்த வினையெச்சம்.
———————-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்–2-4-4-
பதவுரை
கஞ்சன்–கம்ஸனுடைய
புணர்ப்பினில்–கபடமான ஆலோசனையினாலே
வந்த–(நலிவதாக) வந்த
கடிய–(அஸுரா வேசத்தாலே) க்ரூரமான
சகடம்–சகடத்தை
உதைத்து–(திருவடிகளால்) உதைத்து முறித்து விட்டு,
வஞ்சகம்–வஞ்சனை யுள்ள
பேய் மகள்–பூதனை யானவள்
துஞ்ச–முடியும்படி
முலை–(அவளுடைய) முலையிலே
வாய் வைத்த–வாயை வைத்த
பிரானே–உபகாரகனே!
(உன் மேனி நிறம் பெறும்படி சாத்துவதற்கு உரிய)
மஞ்சளும்–மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்–(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்–பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்–(கண்களிலிடும்) மையையும்
கொண்டு வைத்தேன் —
அழகனே! நீராட வாராய் –
விளக்க உரை
உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள்.
உனது அழகு கெடாதபடி நீ நீராட வேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.
————-
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம்பிரான் இங்கே வாராய்–2-4-5-
பதவுரை
நம்பி–(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு–பொற் கலசம் போன்ற
இள மெல் முலையார்கள்–இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி–(உன் மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்–பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்–பாலிலே
அக்காரம்–வெல்லக் கட்டியை
கலந்து–சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்–அப்பத்தையும்
கலந்த–(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி–சிற்றுண்டியையும்
சொப்பட–நன்றாக
நான் சுட்டு வைத்தேன்
(நீ அவற்றை)
தின்னல் உறுதி ஏல்–தின்ன விரும்பினாயாகில்
சொப்பட–நன்றாக
நீர் ஆட வேண்டும்
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்சலி
இங்கே வாராய் –
விளக்க உரை
‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில்
வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி.
“ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி.
புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.
—————
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடலோத நீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்–2-4-6-
பதவுரை
எண்ணெய் குடத்தை–எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி–உருட்டிவிட்டு
இள பிள்ளை–(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி–கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி–(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை–கண் இமையை
புரட்டி விழித்து–தலை கீழாக மாற்றி (அப் பூச்சி காட்டி) விழித்து
கழை கண்டு–பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்–செய்து வருகிற
பிரானே–ஸ்வதந்த்ரனே!
கனிகள்–(நில்ல) பழங்களை
உண்ண–(நீ) உண்ணும்படி
தருவன்–(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி–கோஷியா நின்ற
கடல்–கடலினுடைய
ஓதம்–அலைகளை யுடைய
நீர் போலே–ஜலம் போலே
வண்ணம் அழகிய–திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ–உத்தம புருஷனே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –
விளக்க உரை
அகத்திலுள்ளார் எல்லாரும் அந்ய பரரம்படியாக முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன
எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி –
தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக் கிள்ளி,
ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி.
கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை
மாறி விழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.
—————
கறந்த நற் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம் பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சன மாட நீ வாராய்–2-4-7-
பதவுரை
எம்பிரானே-!
கறந்த–(அந்தந்த காலங்களில்) கறந்த
நல் பாலும்–நல்ல பாலையும்
தயிரும்–தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய்–(தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக–(நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன்-கண்டறியேன்
சிறந்த நல் தாய்–‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
அலர் தூற்றும்–பழி சொல்லுகின்றாளே
என்பதனால்–என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே–அயலா ரெதிரில்
மறந்தும்–ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன்–(உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்
மஞ்சனம் ஆட நீ வாராய்-
விளக்க உரை
(சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி
இவன் மேல் பழி தூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன் மேல்
பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.
———————
கன்றினை வாலோலை கட்டிக் கனிகளுதிர எறிந்து
பின் தொடர்ந் தோடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன் திறத் தேனல்லன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள்
நின்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்–2-4-8-
பதவுரை
கன்றினை–கன்றினுடைய
வால்–வாலிலே
ஓலை கட்டி–ஓலையைக் கட்டி
(கன்றை)–(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்ல வந்த ஒரு) கன்றை
(எறி குணிலாகக் கொண்டு, அஸுராவேசமுள்ள விளா மரத்தின்)
கனிகள்–பழங்கள்
உதிர–(கீழே) உதிர்ந்து விழும்படி
எறிந்து–வீசி
பின்–பின்பு
ஓடி தொடர்ந்து–ஓடிப் போய்
ஓர் பாம்பை-(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை
பிடித்துக் கொண்டு–பிடித்துக் கொண்டு
ஆட்டினாய் போலும்–ஆட்டினவனோதான் (நீ);
நம்பி–ஒன்றிலும் குறைவில்லாதவனே!
(நான்)
நின் திறத்தேன் அல்லேன் –உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன்
(அது கிடக்கட்டும்;)
நீ பிறந்த–நீ அவதரித்த
நல் திரு நாள்–திரு நஷத்திரமாகும் (இந் நாள்);
(ஆகையால்)
நீ நின்று நீர் ஆடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய்
விளக்க உரை
கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,
’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம்,
[நன் இத்யாதி,] ‘அத்தைச் செய்தான் இத்தைச் செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது,
உன்னுடைய தன்மையை நினைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.
———————
பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன் மேனி
காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சன மாட நீ வாராய்–2-4-9-
பதவுரை
பூணி–பசுக்கள் கட்டிய
தொழுவினில்–கொட்டகையிலே
புக்கு–நுழைந்து
புழுதி அளைந்த–புழுதி மண்ணிலளைந்து அதனால் மாசு படிந்த
பொன் மேனி–(உனது) அழகிய உடம்பை
காண–பார்ப்பதற்கு
பெரிதும்–மிகவும்
உகப்பன்–(நான்) விரும்புவேன்
ஆகிலும்–ஆனாலும்
கண்டார்–(உன்னைப்) பார்ப்பவர்கள்
பழிப்பர்–‘(இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கி்ன்றது’ என்று என்னை) ஏசுவார்கள்
(அன்றியும்)
எத்தனையும் நாண் இலாதாய்–சிறிதும் லஜ்ஜை யென்பதில்லாதவனே!
நப்பின்னை–நப்பின்னையானவள்
காணில்–நீ இப்படியிருப்பதைக் கண்டால்
சிரிக்கும்–சிரிப்பாள்
என் மாணிக்கமே! (என்) மணியே!
மஞ்சனம் ஆட நீ வாராய் –
விளக்க உரை
நீ ஜாதிக்குத் தக்கபடி மாட்டுத் தொழுவிற் புகுந்து புழுதியளைந்து அழுக்குடம்புடனே இருந்தாலும், உனது மேனி பொன்னுக்குப்
புழுதியேறினாற்போலக் குழந்தைப் பருவத்தினால் விளங்குதலால் அதைக் காண்பது எனக்கு மிகவும் விருப்பமே, என்றாலும்
‘இவள் பிள்ளை வளர்ப்பது அழகாயிருக்கிறது!’ என்று கண்டவர்கள் எல்லாரும் என்னைச் சிரிப்பார்களே, தவிரவும்,
நப்பின்னையும் உன்னைப் பரிஹாஸம் பண்ணுவாளே, ஆகையால் இப்போது இருப்பது போல
நீ வெட்கமற்று நில்லாமல் உடனே நீராட வரவேணுமென்கிறாள். …
————–
கார்மலி மேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து
வார்மலி கொங்கை யசோதை மஞ்சன மாட்டிய வாற்றை
பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாது மிலரே–2-4-10-
பதவுரை
கார்–காளமேகத்திற் காட்டிலும்
மலி–சிறந்த
மேனி நிறத்து–திரு மேனி நிறத்தை யுடைய
கண்ண பிரானை–கண்ண பிரானை
உகந்து–விரும்பி
வார்மலி–கச்சுக்கு அடங்காமல் விம்முகின்ற
கொங்கை–ஸ்தனங்களையுடைய
அசோதை–யசோதைப் பிராட்டி
மஞ்சனம் ஆட்டிய–நீராட்டின
ஆற்றை–ப்ரகாரத்தை,-
பார்–பூமியிலே
மலி–சிறந்த
தொல்–பழமையான
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
கோன்–நிர்வாஹகரான
பட்டர் பிரான்–பெரியாழ்வார்
சொன்ன–அருளிச் செய்த
சீர்மலி–அழகு நறைந்த
செந்தமிழ்–செந்தமிழாலாகிய
பாடல்–(இப்) பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
யாதும்–சிறிதும்
தீவினை இலர்–பாவமில்லாதவராவர்.
விளக்க உரை
‘‘உகந்து ஆட்டிய ஆற்றைச் சொன்ன பாடல் வல்லார் தீவினையிலர்’ என்று முடிபு காண்க.
——-
அடிவரவு – வெண்ணெய் கன்று பேய்ச்சி கஞ்சன் அப்பம் எண்ணெய் கறந்த கன்றினை பூணி கார் பின்னை.
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply