போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை யுண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்–2-3-1-
பதவுரை
பாடு உடைய–பெருமையை உடைய
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிராநின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோவென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.
விளக்க உரை
கண்ணபிரானே! உன்னை ரக்ஷிப்பதில் ஸமர்த்தரான் உன் தகப்பனாரும் ‘பசுக்களின் பின்னே போய் வருகிறேன்;
வருகிறவரையில் நீ பிள்ளையைக் காப்பாற்றிக் கொண்டிரு’ என்று சொல்லிச் சென்று இன்னும் வரவில்லை.
கம்ஸனோ உன்மேல் கறுக்கொண்டிருப்பதனால் எந்த ஸமயத்தில் யாரை அனுப்புவனோ என்ன செய்வனோ ஒன்றுந் தெரியவில்லை;
உபாயமறிந்து காப்பாற்றவல்ல வேறொருவரும் இங்கில்லை; நீயோ பயமறியாமல் எங்குந் திரிகின்றாய்;
பல பிள்ளைகளுடன் நான் திரிந்து கொண்டிருந்தால் என்னை யாரறிவாரென்று நீ நினைக்கவேண்டா;
(கடல் வண்ணா!) உன் வடிவழகே உன்னைக்கோட் சொல்லிக்கொடுக்குமே.
மேலும் பிள்ளைகளோடே விளையாடுமிடங்களில் திரிகின்றாய்; இப்படியெல்லாம் ஓடிப்போகாமல் கிட்டவா;
உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாடிப் பெண்டுகளெல்லாரும் வந்திருக்கிறார்கள்;
நான் அவர்கட்குக் கொடுக்க வெற்றிலை பாக்கு எல்லாம் ஸித்தப்படுத்தி வைத்திருக்கிறேன் – என்று சொல்லி யழைக்கிறாள் யசோதை –
‘போய்’ என்பதை மிகுதிக்கு வாசகமாகக் கொண்டு ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷணத்திலே மிகவும் கோபமுடையவனாய்
“கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்” என்கிறபடியே நீ பிறந்தவன்று தொடங்கித் தமது வேலாயுதத்தைக் கூர்மையாகத்
தீட்டிக்கொண்டு நீ படுக்குந் தொட்டிற்கீழே ஓரெறும்பு ஊர்ந்தாலும் சிங்கத்தின்மேற் சீறுமாபோலே சீறி
உன்னைக் காப்பாற்றுவதில் மிகவும் ச்ரத்தையையுடையனான என்றும் பொருளாம்.
திரிதி – முன்னிலை யொருமை வினைமுற்று. அடை – இலை = வெற்றிலை; காய் – பாக்கு.
—————-
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா–2-3-2-
பதவுரை
நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.
விளக்க உரை
கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் – இப்பாட்டில்.
காது குத்தி நூல் திரியை இட்டுக் காது பெருக்கிய பின்பு காதணிகளையிடுதல் இயல்பு.
அழகும் = உம் – இசை நிறை.
“கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு – கர்ண பூஷணம்.
—————–
வையமெல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியை யிடுவன் நீ வேண்டிய தெல்லாம் தருவன்
உய்ய இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடராயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சிய ருள்ளத்து மாதவனே இங்கே வாராய்–2-3-3-
பதவுரை
உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.
விளக்க உரை
நீ இப்போது திரியையிட்டுக் கொண்டால் பின்பு பொற் கடிப்பு மாத்திரமல்ல மிகச் சிறந்த மகா குண்டலங்களையும் அணியலாம்;
காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்;
நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள்.
வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியை யிடுவேன்’ என்றாள்.
—————–
வண நன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி
குண நன் றுடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நின் றழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுண நன் றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்–2-3-4-
பதவுரை
இ கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.
விளக்க உரை
கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வாராமையாலே மற்றை யிடைப்பிள்ளைகள் காது பெருக்கிக் காதணிகளை
யணிந்திருப்பதைக் காட்டி அப் பிள்ளைகளைக் கொண்டாடிச் சொல்லி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக்
காது பெருக்கிக் கொள்ள வேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை யணிந்தால் நானுனக்கு
நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்;
அப்பா! உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சியழைக்கிறாள்.
வணம் – ‘வண்ணம்’ என்பதின் தொகுத்தல். வயிரக்கடிப்பு – வஜ்ரகுண்டலம்.
கோபாலர் + பிள்ளைகள் = கோபாலபிள்ளைகள்; “சில விகாரமா முயர்திணை”.
சுணம் – “சுணங்கு” என்பதன் விகாரமென்பர்; முலைமேல் தோன்றும் நிறவேறுபாடு; பசலைநிறம்.
சோத்தம் – ஸ்தோத்ரம் என்ற வடசொற் சிதைவு என்னலாம்;
இதற்கு – “அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச்
சொல்லுவதற்கு சப்தவிசேஷம்” என்பது பெரிய ஜீயருரை.
———————
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழ லாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங் கொண்டிடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய்–2-3-5-
பதவுரை
பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).
விளக்க உரை
கண்ணபிரான் ‘நேற்று நீ என்னை அழைக்கையில் நான் வர, அப்போது வந்ததைக் குணமாகக் கொள்ளாமல்
என்னை அடித்தவளன்றோ நீ’ என்ன; யசோதை நீ பெண்களுடன் தனியிடத்திலே குரவையாடி வந்தால்
அதை நான் எப்படி குணமாகக் கொள்ளக்கூடு மென்கிறாளென்க.
பேர்த்தும் – புநி! புநி!; இது சிறிது இது சிறிது என்றுசொல்லி யசோதை கொடுக்கும் அப்பங்களைக் கண்ணன் தள்ளிவிடவும்
பின்னும் அவன் விரும்பும்படி பெரிய பெரிய அப்பங்களைக் கொடுப்பேனென்று கருத்து.
குரவைக் கூத்தாவது – ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாகத் தோன்றி நின்று கைகோத்தாடல்;
இதைத் தான் ராஸக்ரீடை என்பது என்பர் – ஸம்ப்ரதாயிக ஆர்யவ்ருத்தர்.
சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க்காப்பியத்தில் ஆய்ச்சியர் குரவையும் என்றவிடத்து அடியார்க்கு நல்லாருரையில்,
“குரவை யென்பது கூறுங்காலைச் செய்தோர் செய்த காமமும் விறலு மெய்தவுரைக்கு மியல்பிற்றென்ப எனவும் துரவை யென்ப”
தெழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்தந்நிலை கொட்பநன் றாடலாகும் எனவுஞ் சொன்னாராகலின்
இதுவும் ஆய்ச்சியரிடத்து நிகழ்தலான் ஆய்ச்சியர் குரவையெனக் கூத்தாற் பெற்ற பெயர் என்று உரைத்தவாறு காண்க.
“குரவையென்பது கைகோத்தாடல்” என்று ஸாமாந்யமாகச் சொன்னான் ஒரு தமிழன்.
————–
விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றறிந்தேன்
புண்ணேது மில்லை உன் காது மறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே–2-3-6-
பதவுரை
விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.
விளக்க உரை
காதில் கடிப்பிட வேணுமென்று யசோதை அழைத்துக் கொண்டிருக்கவும் கண்ணன் வராதிருந்தது மல்லாமல்
மண்ணையும் தின்றானாக அதற்காக அவள் கோபங்கொண்டு அவனை யடிக்க அப்போது அவன் தனது வாயைத் திறந்து கொண்டு
ஆகாயமுழுதும் தொனி பரவும்படி அழ அது கண்டு யசோதை ‘இவன் எவ்வளவு மண் தின்றிருப்பன்’ என்பதை
வாயிலுள்ள மண் சுவட்டைக் கொண்டு தெரிந்து கொள்வோமென்று அவன் வாயை விரும்பிப் பார்க்கையில்
அவன் வாயினுள்ளே உலகங்களை யெல்லாம் முன் போலக் கண்டு
‘இவனை நமது மகனென்றெண்ணி அடித்தோமே! இவன் ஸர்வேச்வரனன்றோ’ என்று அஞ்சி யிருக்க கண்ணன் தன்னை யசோதை
இப்படி வேறாக எண்ணினதைப் பொறாமல் அதனை அவள் மறந்து தன் பிள்ளை யென்றே கொண்டு தழுவும்படி ஸமீபித்து நிற்க
அப்போது அவள் காதில் கடிப்பை யிடும்படி முயல, கண்ணன் அது கண்டு அம்மா! என் காது குத்தியதனால் புண்ணாயிருக்கிறது நோகும்;
ஆதலால் அது எனக்கு வேண்டா என்று மறுக்க யசோதை ‘உன் காதில் புண் ஒன்றுமில்லை ஆறிவிட்டது;
இந்தக் குண்டலத்தை இடும் போது உன் காது சற்று மறியும்; அதை மாத்திரம் பொறுத்துக் கொள்ள வேணும்’ என்று சொல்ல
கண்ணன் அதற்கு இசைந்து நிற்க யசோதை அவனைப் பலபடியாகக் கொண்டாடக் கடிப்பிடும் போது உண்டாகும் நோவைப் பொறுப்பதற்காக
முலை யுண்ண வேணுமென்று விரும்புகின்றாள்.
நோக்கி – நோக்க : எச்சத்திரிபு.
அஞ்சி – ‘இவனை நம் மகனென்றெண்ணி யடித்தோமே; இவன்றானிப் போது நாராயணனாயிரா நின்றானே’ என்று அஞ்சினளென்க.
‘மது’ என்ற அஸுரனைக் கொன்றவன். “என்றிருந்தேன்” என்பது மொருபாடம்.
ஆகாசம் சப்த குணகமாதலால் “விண்ணெல்லாம் கேட்க” என்றது.
————————
முலை யேதும் வேண்டேனென் றோடி நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந் திட்டு
மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய்
சிலை யொன்று இறுத்தாய் திரி விக்கிரமா திரு வாயர் பாடிப் பிரானே
தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே–2-3-7-
பதவுரை
முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?
விளக்க உரை
கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலை யுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலை யுண்ணத் தொடங்க
அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து
‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச் சென்று
காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்து விட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்து கொண்டு
காதில் கடிப்பை இடப் போகையில் அவன் இசையாமலிருக்க யசோதை யானவள் ‘அப்பா! உன் மேல் ஒரு குற்றமுமில்லை;
தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது
என்னுடைய குற்றமே காண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.
—————
என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–2-3-8-
பதவுரை
(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )
விளக்க உரை
கண்ணன் யசோதையை நோக்கி “தலைநிலாப்போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே” என்று
நீ உன்னை வெறுத்துச் சொல்லுவது – நீ சொன்னதை நான் கேட்கவில்லை யென்று என் மேலுள்ள குற்றத்தை நினைத்தன்றோ?
என்ன அதற்கு யசோதை ‘பின்னை யார் குற்றம்?’ என்ன கண்ணன் ‘உன் மீதுங் குற்றமில்லையோ?’ என்ற
யசோதை ‘நானுன்னை என்ன செய்தேன்?’ என்ன; கண்ணன் ‘நான் மண் திண்ணாதிருக்கையில் மண் தின்றதாகப் பழியை
யேறிட்டு என்மேல் அன்புடையாள் போல என்னைப் பிடித்துக் கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதாவென்று பார்த்து
அது இல்லாதிருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லி யடித்து அவ்வளவோடு நில்லாமல்
‘பாருங்கோள் பெண்காள்! இவன் மண் திண்ணும்படியை’ என்று எல்லார்க்கும் நீ காட்டவில்லையோ’ என்ன
யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் போது போகின்றது ஆச்ரிதருடைய ஆர்த்தியைத் தீர்க்குமவனே!
உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்ன
கண்ணன் ‘நீ என்னை ஸ்தோத்ரம் பண்ண வேண்டா என்னைப் பிடித்தல் அடித்தல் செய்வதில்லை யென்று உறுதியாக
ஒரு வார்த்தை சொல்’ என்ன
யசோதை ‘நான் திரியிடும்படி நீ இசைந்துவா பின்பு அங்ஙனமே ஸத்யம் பண்ணித்தருகிறேன்’ என்கிறாள்.
சொல்லவும் வேண்டா – நெஞ்சினால் நினைத்ததே சாலவழகிது இதனை வாய் கொண்டு வெளிப்படச் சொல்லவும் வேணுமோ? என்றவாறு.
—————-
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று
கையைப் பிடித்துக் கரை யுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா உன் காது தூரும்
கையில் திரியை யிடுகிடாய் இந் நின்ற காரிகையார் சிரி யாமே–2-3-9-
பதவுரை
சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.
விளக்க உரை
கண்ணன் யசோதையை நோக்கி ‘உன் பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவளன்றோ?’ என்ன;
யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்ததுண்டோ?’ என்ன
கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினானென்று யாரோ சொல்ல அதை உண்மையென்று நம்பி என் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு போய் என்னை எல்லாரும் பார்த்துப் பரிஹஸிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்து நிற்க
யசோதை ‘நீ இப்படியெல்லாம் நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தால் உன் காதுகள் தூர்ந்துவிடுமே;
தவிரவும் உன் பக்கல் அன்பினால் உன்னை விட்டுப் போக மாட்டாமல் நிற்கிற இந்தப் பெண்கள்
‘சொணைக் காது கூழைக் காது’ என்று சொல்லி உன்னை ஏகாதபடி உன் காதைப் பெருக்க இத்திரியை யணிந்துகொள்ள வேணும்’
என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள்.
சொல்லுவார் என்றது – கொள்ளத்தகாத பேச்சையுடையவர் என்ற கருத்தைக் காட்டும்.
தொடுப்பு – (ஒருவரையும் கேளாமல்) தொடுதல் ; எனவே களவாம்: ‘பு’ விகுதிபெற்ற தொழிற்பெயர்.
கிடாய் – முன்னிலையசைச் சொல்.
———–
காரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்? காதுகள் வீங்கி யெறியில்
தாரியா தாகில் தலை நொந் திடுமென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே
சேரியிற் பிள்ளைகளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி
ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என் தன் கண்ணே–2-3-10-
பதவுரை
காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்தபோது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவுகொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’
விளக்க உரை
நீயும் இடைச்சேரியில் உள்ள பிள்ளைகளைப் போலக் காது பெருக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது, குறிப்பெச்சம்.
தாரியாதாகில் – நீட்டல் விகாரம், தரியாதாகில் – நீ குழந்தையாய் இருக்கும் போதே உன் காதைக் குத்தித் திரி இட்டிருக்க வேணும்,
அப்போது, ஐயோ’ சிறிய குழந்தையாயிற்றே’ காது குத்தினால் ஒருக்கால் குழந்தைக்குத் தலைவலி உண்டாகுமோ என்று
அஞ்சிக் குத்தாமல் விட்டது என்னுடைய குற்றம் அன்றோ என்று வெறுத்துச் சொல்லுகிறாளென்க.
காண்டி – முன்னிலை ஒருமை வினைமுற்று.
—————–
கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடி கமழ் பூங் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்க ளமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய்–2-3-11-
பதவுரை
குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –
விளக்க உரை
‘கண்ணைக் குளிரக் கலந்து’ என்கிறவித்தால் – சக்ஷு ப்ரீதி (தாரா மைத்ரீ) எனப்படுங் கண் கலவியைச் சொல்லுகிறதென்க.
கண்ணை என்பதில், ஐகாரத்தை அசையாகக் கொண்டு, கடிகமழ் பூங்குழலார்கள கண்குளிர்ச்சி அடைய
உன் உடம்பு முழுதும் பொருந்தப் பார்த்து (உன்னோடு கலக்கும் படிகளை யெண்ண, அவர்களுடைய அந்த) எண்ணத்தின்படியே
எப்போதும் அவர்களுக்கு போக்யனாயிருக்கும் பெருமானே’ என்று உரைத்தலும் ஏற்கும்.
பண்ணைக் கிழிய = பண் – செவ்வை, அது குலையும்படி ஸந்திபந்தங்கள் சிதறும்படி.
—————-
வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்–2-3-12-
பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –
————-
வார் காது தாழப் பெருக்கி யமைத்து மகரக் குழையிட வேண்டி
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடி யாரே–2-3-13-
பதவுரை
அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இடவிரும்பி
திருமாலை–ச்ரிய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச்சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய வழமையான யசஸ்ஸையுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்.
விளக்க உரை
வார் – உரிச்சொல். அந்தாதி- அந்தத்தை ஆதியாக உடையது, அன்மொழித்தொகை, வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி,
அந்தாதியாவது – முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும அடியாயினும்
அடுத்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது.
சொற்றொடர் நிலைச் செய்யுள் பொருட் தொடர் நிலைச் செய்யுள் என்ற வகையில், இது சொற்றொடர்நிலை.
“செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே” என்றார் தண்டி யலங்காரத்தும்.
அச்யுதன் – (ஆச்ரிதரை) நழுவவிடாதவனென்றுமாம்,
திருநாமங்கள் பன்னிரண்டாதலால், பாசுரங்களும் பன்னிரண்டாயின பயனுரைத்த பாட்டு ஒன்று,
——————-
அடி வரவு – போய் வண்ணம் வையம் வணம் சோத்தம் விண் முலை என் மெய் காரிகை கண்ணை வா வார் வெண்ணெயளைந்த,
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply