பழந்தமிழர் கண்ட ஸ்ரீ வேதாந்தக் கருமணி – February 15, 2011 By ஸ்ரீ கந்தர்வன்–

முன்னுரை:

நம் உள்ளம் கவர் திருவமர் மார்பனைத் தொன்றுதொட்டு தமிழர்கள் பாடி வணங்கி வரும் முறை பற்றியும்
திருமால் சமய மரபின் தொன்மையைப் பற்றியும் விளக்க எழுந்த முயற்சி இது.
சங்க கால இலக்கியம் தொட்டு, ஆழ்வார் பாசுரங்கள், இடைக்காலக் காப்பிய நூல்கள் ஆகியவற்றைத் துணை கொண்டு
பல செய்திகளைக் காண்போம். இக்கட்டுரைத் தொடரில் வேதாந்த/பக்தி ரீதியிலான அனுபவ/அறிவு பூர்வமான
விளக்கங்களுடன் பல அரிய செய்திகளை அலசுவதையும் ஒரு இலக்காகக் கொள்வோம்.
சில உதாரணங்கள்:

உபநிடதங்களில் வரும் பல தத்துவங்களை விளக்கும் களஞ்சியமாக இப்பாடல்கள் அமைந்தமை.
பழந்தமிழர் சமயம் வேத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையே என்பது.
வேதத்தின் கர்ம காண்டமாகிய பூர்வ பாகம், ஞான காண்டமாகிய உத்தர பாகம் (உபநிடதங்கள்), இதிகாசம், புராணம், கீதை
ஆகியவற்றிலிருந்து பல செய்திகள் மாறாமல் சங்க இலக்கியங்களில் வருகின்றன.
ஆகையால், இந்தியர்களுக்குப் பொதுவான இந்து மதநம்பிக்கைகளும் பழந்தமிழர் மரபுடன் சுருதி சேர்ந்து
வேதாந்த-பக்தி மார்க்கம் எனும் இன்னிசைப் பிரவாகமாக வருவதையும் காணலாம்.

ஆழ்வார்கள் செய்தருளிய பாசுரங்களுக்கும், பிறகு கம்பர், புகழேந்திப் புலவர், வில்லிப்புத்தூராழ்வார் முதலானோர்
காவியங்களுக்கும் சங்கப் பாடல்களில் பல முன்னோடியாக இருந்தமையையும் காணலாம்.
இவற்றிலிருந்து நம் பண்டைய தமிழர் பண்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்ச்சியாகப்
பேணப்பட்டு வந்தமையும் தெளிவாகிறது.

சமய நம்பிக்கைகள் குறித்த வரலாற்றாராய்ச்சிச் செய்திகள்.
இன்று வடமொழியிலுள்ள சாஸ்திர-பாஷ்ய நூல்களில் தேர்ச்சி பெற்று ஈடுபாடு உடையவர்கள் தமிழிலக்கியங்களைப் பற்றி ஆராய்வதில்லை.
அதே போல், தமிழ்மொழியில் அமைந்த சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், சமயப் பாடல்களிலும் ஈடுபாடு கொண்ட
தமிழறிஞர்களுக்குப் பொதுவாகப் பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஈடுபாடு காணப்படுவதில்லை.
ஆங்காங்கு விதிவிலக்குகள் காணப்படினும், இன்று பொது மேடைகளில் பரவலாக நாம் காணும் நிலை இது.
பாண்டித்யத்தில் கதிரவனுக்கெதிர் மின்மினி போன்ற நிலையில் இருந்தாலும் எனக்குத் தமிழ், சமஸ்கிருத இலக்கியம்
இரண்டிலும் அதிக ஈடுபாடும் ஆர்வமும் உண்டு. இத் தகு ஆர்வத்தின் வெளிப்பாடே இச் சிறு முயற்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இத்தொடரின் முதற்பகுதியாகிய இக்கட்டுரைக்கு நாம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடலானது,
பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

இப்பாடலில், உலகத்திற்குக் காரணப் பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக,
சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும்,
ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும்,
கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.

இவ்வுருவகமானது வேதப் பகுதியாகிய “முண்டக உபநிடதத்தில்” உள்ளதை அடியொற்றியே வருகிறது.
அவ்வுபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் முதல் பகுதியில், “அனைத்துக்கும் மேலான பரம புருஷனிடமிருந்தே
நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கிளம்புவனபோல் எல்லாம் பிறந்து இறுதியில் அவனிடத்தேயே ஒடுங்குகின்றன”
என்னும் செய்தி விளக்கப்படுகிறது. அவனே அனைத்துக்கும் உட்பொருளாக உள்ளுறைந்து ஆள்வதையும்,
அவன் பிரபஞ்சமனைத்தையும் சரீரமாகக் கொண்டமையையும் விளக்கும் வண்ணம் பின்வருமாறு வேதம் உரைக்கிறது:

“அக்னிர் மூர்தா சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ திச’: ச்’ரோத்ரே வாக்விவ்ருதாச்’ச வேதா:
வாயு: ப்ராணோ ஹ்ருதயம் விச்’வம் அஸ்ய பத்ப்யாம் ப்ருதிவீ ஹி ஏஷ ஸர்வபூத-அந்தராத்மா”[முண்டக உபநிடதம், 2.1.4]

இம்மந்திரத்தில் நெருப்பைப் பரமனது முகமாகவும், திங்களையும் சூரியனையும் கண்களாகவும்,
திசைகளைச் செவிகளாகவும், வேதத்தை அவன் வாய்மொழியாகவும், ஞாலத்தைச் சூழ்ந்து வீசும் வாயுவை அவன் மூச்சுக்காற்றாகவும்,
பிரபஞ்சத்தை அவன் இதயமாகவும் கூறி, அவன் பாதங்களிடத்தே பூமி பிறந்ததாகவும் உருவகப்படுத்தி இம்மந்திரம் கூறுகிறது.
தொன்றுதொட்டு வடமொழியிலும் தமிழிலும் திருமாலைக் குறித்து வழங்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற உருவகம் இது.
ஆதி சங்கரர் தம் உபநிடத உரையில் இவ்விடத்திற்கு,
“இதில் சொல்லப்படுபவர் விஷ்ணுவாகிய அனந்தன். சரீரத்தை உடையவர்களில் முதன்மையானவர்.
மூவுலகையும் தம் உடலாகக் கொண்டிருப்பவர். அனைத்து உயிர்களுக்கும் உயிராக — அந்தராத்மாவாகத் திகழ்பவர்”
[“ஏஷ தேவோ விஷ்ணுர் அனந்த: ப்ரதம ச’ரீரீ த்ரைலோக்ய தேஹோபாதி: ஸர்வேஷாம் பூதானாம் அந்தராத்மா”] என்று பாஷ்யமிட்டுள்ளார்.

ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்திலும் ஸ்ரீ சங்கரர் இம்மந்திரம் குறித்த விசாரம் செய்துள்ளார்
(சாரீரக மீமாம்ச பாஷ்யம், 1.2.25). “வேதத்தின் முடிவாக, உபநிடதங்களின் கருப்பொருளாக நிற்பது
பிரபஞ்சம் அனைத்துக்கும் காரணமாகவும் கர்த்தாவாகவும் விளங்குவதாகிய, உண்மைப்பொருளாகிய, பரம்பொருளே” என்று
சங்கரர் பாஷ்யத்தின் முதலத்தியாயத்தில் நிலைநாட்டியுள்ளார்.
“ஒன்றுக்கொன்று முரண்பட்டுப் பேசுவது போல் தோன்றும் சுருதி வாக்கியங்களைப் புஷ்பங்களென்று எடுத்துக் கொண்டால்,
ப்ரஹ்ம சூத்திர கர்த்தாவாகிய வியாசர் செய்திருப்பது அவற்றை நூலால் கோர்த்து சீர்ப்படுத்தி,
முரண்பாடு சிறிதும் இல்லாத மாலையாகத் தொடுத்துத் தந்திருப்பது” என்பது சங்கரர் கூறும் விளக்கம்
(‘சூத்திரம்’ என்ற வடமொழிச் சொல் ‘நாண்’ எனும் பொருளை உடையது). இப்படி ப்ரஹ்ம சூத்திரம் விசாரத்திற்குப்
பல சுருதி வாக்கியங்களை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், ஆங்காங்கு ஸ்ம்ருதிகளாகிய இதிகாச-புராண-ரிஷி
வாக்கியங்களிலிருந்தும் உதாகரித்துச் செல்வதாக பாஷ்யகாரர்கள் பலர் விளக்கி வந்துள்ளனர்.
அவற்றில் ஒன்று தான் மேலெடுக்கப்பட்ட முண்டகோபநிடத மந்திரம்.

பரம்பொருளே பிரபஞ்சம் அனைத்துக்கும் உபாதான-நிமித்த காரணங்களாகவும்,
சர்வ-அந்தர்யாமியாகவும் விளங்குவதையே இவ்வுபநிடத மந்திரம் உணர்த்துகிறது என்பது உரை எழுதிய
ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலானோர் கொள்கை.
“சர்வாந்தர்யாமி” என்பதற்கு “அனைத்தையும் உள்ளுறைந்து ஆள்பவன்” என்று பொருள்.
“உபாதான-நிமித்த காரணங்கள்” பற்றி எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
“பானைக்கு மண் உபாதான காரணம்; குயவன் நிமித்த காரணம்” என்ற உதாரணம் போதும்.

இவ்விடத்தில் இரண்டு சந்தேகங்கள் எழக்கூடும்:
(1) முதல் சந்தேகமானது — உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டும் ஒரே பொருளாக இருக்க முடியுமா?
அப்படி இருப்பதைப் பார்ப்பதில்லையே? குயவன் பானை செய்வதைப் பார்க்கின்றோம்.
ஆனால், குயவனே பானை ஆவதில்லை; களிமண் குயவன் உதவி இல்லாமல் தானாகவே பானை ஆவதில்லை.
(2) இரண்டாவதாக — பரம்பொருள் பிரபஞ்சமாகவே பரிணமித்தது என்று கூறிவிட்டால், பரம்பொருளை மாறுதல் அடைந்து
அழியும் தத்துவம் போலக் கூற வேண்டுமே? அப்படி இல்லாமல் அதை
“என்றென்றும் இருப்பது”, “காலத்தால் மாறுபடாதது”, “காலத்திற்கு அப்பாற்பட்டது” என்று மறையாகிய வேதம் கூறுகிறதே?

இச் சந்தேகங்களுக்கான தீர்ப்பை எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால், மயிலை உதாரணமாகக் கொள்ளலாம்.
மயில் கார்மேகத்தைக் கண்டவுடன் தோகை விரித்தாடுகிறது.
இந்தத் தோகை விரித்தாடும் நடனத்தையும் அதே மயில் தான் உருவாக்குகிறது. அக்காட்சியை உருவாக்க அம்மயிலானது,
பானை செய்ய குயவன் உபயோகிக்கும் களிமண் போலவோ, நாற்காலி-மேசை செய்ய தச்சர் உபயோகிக்கும் மரம் போலவோ
தனக்கு வெளியே கிடக்கும் எந்த ஒரு பொருளையும் உபயோகிப்பதில்லை;
மயில் தன்னையே அந்நிலைக்கு மாற்றிக் கொள்ளுகிறது என்று கூறுகிறோம்.
இவ்வாறு, பரம்பொருளுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை “மயிலுக்கும் தோகைக்கும் உள்ள தொடர்பு போல”
என்று விளகினால், பரம்பொருளே பிரபஞ்சத்தின் உபாதான-நிமித்த காரணங்கள் இரண்டுமே என்று கூறுவதில் பிழை இல்லை.

மயிலின் தோகை விரிந்த நிலை போன்றதே இன்று காணும் பிரபஞ்சத்தின் ஸ்தூல நிலை.
நாட்டியம் முடிந்த பின் தோகையை உள்வாங்கிக் கொண்ட நிலையே பிரபஞ்சம் அழிந்து பிரளயத்தில் கிடக்கும் சூட்சும நிலை.
தோகையை விரித்து ஆடுவதாலோ, தோகையை உள்வாங்கிக் கொள்வதனாலோ
“மயில் மாறுதல் அடைந்துள்ளது” என்றோ, “மயில் அழிந்து விட்டது” என்றோ எவ்வாறு நாம் கூறுவதில்லையோ,
அவ்வாறே பரம்பொருளின் அங்கமாக பிரபஞ்சம் நாம-ரூபங்களுடன் விரிந்து கிடக்கும் நிலையில்
“பரம்பொருள் மாற்றம் அடைந்துவிட்டது” என்றோ,
பிரளயத்தின்போது நாம-ரூபங்கள் அழிந்த நிலையில் “பரம்பொருள் அழிந்துவிட்டது” என்றோ கூறுவதில்லை.

இதைப் போன்றே திருச்சந்த விருத்தத்தில் திருமழிசையாழ்வார் கடலுக்கும் அலைக்கும் உள்ள தொடர்பை வைத்து
ப்ரஹ்மத்திற்கும் பிரபஞ்சத்தில் சராசரங்களுக்கும் உள்ள தொடர்பைப் பின்வரும் பாசுரத்தில் விளக்குகிறார்:
“தன்னுளே திரைத்தெழுந் தரங்க வெண் டடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவுந் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மை நின் கணின்றதே.”–[திருச்சந்த விருத்தம், 10]

இத்தகைய காரிய-காரண தொடர்ச்சியிலும் பரம் பொருள் விகாரமடையாமல் என்றென்றும் நிலைத்து நிற்கும்
தத்துவமாக விளங்குவதற்கு எடுத்துக்காட்டாக பொன்னையும் ஆபரணத்தையும் கூறுவர்.
பொன் ஆபரணத்திற்குக் காரணப் பொருள். ஆபரணம் பொன்னைக் காரணப் பொருளாக உடையதால்
அது ’காரியங்கள்’ எனும் குழுவில் அடங்கிவிடுகிறது.
ஆபரணமான பிறகும் பொன் பொன்னாகவே இருக்கிறது, ஈயமாகவோ பித்தளையாகவோ மாற்றம் அடைவதில்லை.
அவ்வாறே பிரபஞ்சமாக விரிந்து நின்றாலும், அதற்குக் காரணப் பொருளும் அந்தராத்மாவ்வுமாகிய பரம் பொருள் விகாரமடைவதில்லை.

இத் தத்துவத்தைக் ஸ்ரீ கம்பர் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் நமக்கு அறிவிக்கிறார்.
அவ்விடத்தில் நரசிங்கப் பிரானைக் குறித்து நான்முகனார் இவ்வண்ணம் கூறுகிறார்:

“நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே !
பொன்னுளே தோன்றியது ஓர் பொற் கலனே போல்கின்றேன்.”-[ஸ்ரீ கம்பராமாயணம்: இரணியன் வதைப்படலம், 160]

இது பின்வரும் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் பாசுரத்தை நினைவூட்டுகிறது.
இதுவும் ஸ்ரீ நரசிங்கப்பிரானைக் குறித்தே பாடியிருப்பது:

“தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர்த் தோள் மாலே — உகத்தில்
ஒரு நான்று நீயுயர்த்தி உள் வாங்கி நீயே
அரு நான்கு மானா யறி”–[நான்முகன் திருவந்தாதி, 5]

இப்பாடலில் “அரு நான்கும் ஆனாய்” என்றவிடத்திற்கான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள வியாக்கியானத்தில்,
“தேவ திர்யங் மனுஷ்ய ஸ்தாவராதிகளிலே அந்தராத்மதயா ப்ரகாசித்து நின்ற”
(அதாவது, தேவர்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் உள்ளுறையும் ஆன்மாவாக நின்ற)
என்று காணப்படுகிறது.

முன்பே சங்கப்புலவர்களும் மாயோனை,

“அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ” –[பரிபாடல், 3]

“ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே:
அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,”–[பரிபாடல், 13]

என்று ஜகத் காரணப் பொருளாகப் பாடியுள்ளனர்.

நிற்க. பிரபஞ்சத்துக்கு உயிராய் உள்ள இறைவனின் நிலையை “சரீர-சரீரி பாவம்- என்று
மற்றொரு விதமாக வேதாந்திகள் கூறுவர். அதாவது, பிரபஞ்சத்தைச் சரீரமாக உடையவனாதலால் இறைவன் “சரீரி” ஆகிறான்.
நாம் மேற்கண்ட முண்டக உபநிடத பாஷ்யத்தில் சங்கரர் “சரீரத்தை உடையவர்களுள் முதன்மையானவர்” என்று விளக்குகிறார்.

ஆகையால் சூரியனையும் சந்திரனையும் பரம்பொருளுக்குக் கண்களாகவும், தரணியைப் பாதமாகவும்,
திக்குகளைச் செவியாகவும், அண்டவெளியை உடலாகவும் சுருதி வாக்கியம் உருவகப்படுத்துதுவதன் நோக்கம்
“பரம்பொருள் உலகனைத்துக்கும் உட்பொருளாக, அந்தராத்மாவாக, உயிருக்கு உயிராக இருப்பதை உணர்த்தவேயன்றி,
விகாரமடையும் குணத்தை உடையது என்பதைக் கற்பிப்பதற்கல்ல” என்று சங்கரர் பாஷ்யத்தில் விளக்கியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் பின்வரும் இதிகாச-புராண வாக்கியங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.
அவற்றில் நமக்குச் சில ஆர்வமூட்டும் செய்திகள் கிடைக்கின்றன:

“யஸ்ய-அக்னிர்-ஆஸ்யம் த்யௌர்-மூர்தா4 கம் நாபிச்’-சரணௌ க்ஷிதி: |
ஸூர்யச்’-சக்ஷு: திச’: ச்’ரோத்ரம் தஸ்மை லோகாத்மனே நம: ||”

[“யாருக்குத் தீ முகமாகவும், சுவர்க்கம் தலையாகவும், ஆகாயம் வயிறாகவும், காலாக பூமியும், கதிரவன் கண்ணாகவும்,
திசை செவியாகவும் விளங்குமோ, உலகத்தைத் தாங்கும் உயிரான அவனுக்கு வணக்கங்கள்.” — மகாபாரதம், 12.47.44]

இது ஐந்தாம் வேதமாகிய மகாபாரதத்தின் பனிரண்டாம் பருவமான சாந்தி பருவத்தின் தொடக்கத்தில் வருகிறது.
இவ்வத்தியாயத்தில் ஸ்ரீ பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கையில் ஸ்ரீ கண்ணனை நோக்கி நீண்ட ஸ்துதி ஒன்று பாடுகிறார்.
ஸ்ரீ பீஷ்மர் தன்னைக் கூவி அழைத்ததைத் தன் ஒப்பற்ற ஞானத்தின் மூலம் அறிந்த பகவானாகிய ஹரி,
பாண்டவர்களை அழைத்துக்கொண்டு போர்க்களம் செல்கிறார். அதன் பிறகே ஸ்ரீ பீஷ்மர் நாரணனுடைய அருளால்
அம்புப்படுக்கையில் கிடந்த நிலையிலும் அயர்ச்சியடையாமல் ஸ்ரீ தருமனுக்கும் மற்ற பாண்டவர்களுக்கும்
ராஜ தர்மம் முதலியன பற்றிய பல அறிவுரைகளைச் செய்கிறார். இப்படி ஸ்ரீ கண்ணன் பாண்டவர்களுடன் ஸ்ரீ பீஷ்மரைக்
காணச் செல்லக் காரணமாய் இருந்த ஸ்ரீ பீஷ்மர் ஸ்துதியிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு வரிகளே மேற்கண்டவை.
வெறும் மிகைப்படுத்தப்பட்ட வாழ்த்தாக அமையாமல், இதிகாச-புராணங்களில் வரும் மற்ற ஸ்துதிகளைப் போலவே
இப்பகுதி முழுதும் தத்துவ ஆழம் மிக்க வரிகளாக அமைந்துள்ளன.

இவ்வரிகள் இன்னொரு முக்கியமான செய்தியிக்கு எடுத்துக்காட்டாக சங்கரர் நமக்கு அறிவிக்கிறார்
(ப்ரஹ்ம சூத்திர பாஷ்யத்தில் 1.2.25). அதாவது, “ஸ்ம்ருதிகளில் உள்ள வாக்கியங்கள் மூல சுருதிகளை
ஆதாரமாகக் கொண்டவையாக இருந்தால், அவை அச் சுருதி வாக்கியங்களைத் தெளிய உரைப்பதாகக் கொள்ளலாம்” என்பது.
இவ்வாறு அமைந்துள்ள ஸ்ம்ருதி வாக்கியங்களை “வேத உபப்பிரம்மணம்” என்று கூறுவர்.
ஆகையால், மேற்கண்ட மகாபாரதச் சுலோகம் முண்டகோபநிடத மந்திரத்தை விளக்குவதாகக் கொள்ள வேண்டும்.
இதனை அடிப்படையாக வைத்துத்தான் சங்கப் புலவரும் நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்து பாடியுள்ளார் என்பதும் தெரிகிறது.

சங்கரர் எடுக்கும் மற்றொரு மேற்கோள் இன்றைய பிரம்மாண்ட புராண அத்தியாயம் ஒன்றில் உள்ளது:

“த்யாம் மூர்தானம் யஸ்ய விப்ரா வதந்தி கம் வை நாபிம் சந்த்ர-ஸூர்யௌ ச நேத்ரே |
திச’: ச்’ரோத்ரே வித்3தி4 பாதௌ க்ஷிதிம் ச ஸோ(அ)சிந்த்யாத்மா ஸர்வபூதப்ரணேதா ||”

[வேதமறிந்த ஞானிகள் யாருடைய உச்சந்தலையை சுவர்க்கமாகவும், ஆகாயத்தை உதரமாகவும்,
சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திசைகளைச் செவிகளாகவும் பாதங்களை பூமியாகவும் அறிவரோ,
அந்த அறிவுக்கெட்டாத பரமாத்மா அனைத்து உயிர்களுக்கும் தலைவன் ஆவான். — ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம், 1.5.107]

ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணத்தில் இவ்வரிகளைக் கொண்ட பிரகரணமும் சிருஷ்டியை விளக்குவதாகும்.
ஸ்ரீ சங்கரரால் ஸ்ரீ கீதை விளக்கவுரையில் மங்கள சுலோகமாக எடுக்கப்பட்ட
“நாராயண: பரோ அவ்யக்தாத்” எனத் தொடங்கும் வரிகளும் இதே அத்தியாயத்தில் மேலெடுக்கப்பட்ட வரிகளுக்கு
மிக அண்மையில் காணப்படுகின்றன. இது தவிர, மற்றொரு இடத்திலும் (சூத்திர பாஷ்யம், 2.1.1) இப்புராணத்தில்
காணப்படும் வேறொரு வரியை ஸ்ரீ சங்கரர் மேற்கோள் காட்டியிருப்பதிலிருந்து
இப்புராணத்தில் உள்ள பகுதிகள் பிரமாணமாகக் கையாளப்பட்டமை தெரிகிறது.

திருமாலை இப்படிப் பாடும் மரபு வேதாந்தத்தை ஒட்டி வருகின்றது என்பதற்கு சமஸ்கிருத நூல்களிலிருந்து
மேலும் பல அரிய மேற்கோள்களையும் காணலாம்.
உதாரணமாக ஆதிகவி ஸ்ரீ வால்மீகி முனிவரின் ஸ்ரீ இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் ஸ்ரீ சீதையை மீட்டு வரும்
தருணத்தில் நான்முகக் கடவுள் முகமாக தேவர்கள் அனைவரும் ஸ்ரீ இராமனை பக்தியுடன் பாடும் பகுதி வருகிறது.
இப்பகுதியும் பரம் பொருளின் பரத்வ நிலையைப் பாடும் பல ஆழ்ந்த வேத வாக்கியங்களை
அடியொற்றிய வண்ணம் அமைந்துள்ளது. அதில் நான்முகனார்,

“அச்’விநௌ சாபி தே கரணௌ சந்த்ர ஸூர்யௌ ச சக்ஷுஷீ”
“ஜகத் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தைர்யம் தே வஸுதா தலம்”[ஸ்ரீ இராமாயணம், யுத்த காண்டம், 6.105.7, 6.105.23]
என்று ஸ்ரீ பெருமாளின் கண்களைச் சூரிய-சந்திரர்களாகவும், திடமான நிலையை பூமியாகவும்,
அவன் செவிகளை அச்வினி தேவதைகளாகவும் பாடியபிறகு உலகனைத்தும் அவனுக்கு சரீரமாகவும் பாடியுள்ளார் ஸ்ரீ பிரம்மா.

இம்மரபை ஒட்டியே அமர கோசத்திலும் ஸ்ரீ விஷ்ணு பெயர்களில் ஒன்றாக “விச்’வம்பர” என்ற பதமும் படிக்கப்படுகிறது.
இதற்கு “பிரபஞ்சத்தைத் தாங்கி நிற்பவன்” என்று பொருள்.

நாம் எடுத்துக் கொண்டிருக்கும் நற்றிணை கடவுள் வாழ்த்துப் பாடலின் கருத்தை முழுமையாகக் கொண்ட
வடமொழிச் சுலோகம் ஒன்று இன்று அனைவராலும் ஓதப்படுகிறது.
“தோடகாசாரியார்” என்ற ஆதி சங்கரர் வழி வந்த வேதாந்தியரின்
“ச்’ருதி ஸார ஸமுத்தரணம்” என்ற நூலில் மங்கள சுலோகமாக வருகிறது–

“பூ: பாதௌ யஸ்ய கம் சோதரமஸுரநில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாசா’: சி’ரோ த்யௌர்முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தவ்யமப்தி: |
அந்த:ஸ்தம் யஸ்ய விச்’வம் ஸுர-நர-கக-கோ-போகி-கந்தர்வ-தைத்யை: சித்ரம்
ரம்ரம்யதே தம் த்ரிபுவனவபுஷம் விஷ்ணுமீச’ம் நமாமி ||”

[“பூமியைப் பாதங்களாகவும், ஆகாயத்தை வயிறாகவும், வாயுமண்டலத்தை மூச்சாகவும்,
சந்திரனையும் சூரியனையும் கண்களாகவும், திக்குகளைச் செவிகளாகவும், வானுலகை உச்சந்தலையாகவும்,
அக்னியை வாயாகவும், ஆழ்கடலைக் குடலாகவும், எவன் கொண்டுள்ளானோ,
எவனுள்ளே தேவரும், மானுடரும், புள்ளும், அரவும், கந்தருவரும், அசுரர்களும் இயங்கி விளையாடுகிறார்களோ,
மூவுலகையும் தன் உடலாகக் கொண்ட ஸ்ரீ விஷ்ணுவாகிய அந்த சர்வேஸ்வரனை வணங்குகிறேன்.” — ச்ருதிஸாரஸமுத்தரணம், 179]

இஸ் ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தில் தியான சுலோகங்களில் ஒன்றாக இன்று வாசிக்கப்படுகிறது.
நற்றிணையின் பாயிரத்தில் “மாநிலஞ் சேவடியாய்” என்பது மேற்கண்ட தியான சுலோகத்தில்
“பூ: பாதௌ” என்றும், “விசும்பு மெய்யாக” என்பது “கம் சோதரம்” என்றும்,
“பசுங்கதிர் மதியொடு சுடர்க்கண் ணாக” என்றது “சந்த்ர ஸூர்யௌ ச நேத்ர” என்றும் வருவதைக் காணலாம்.

“இயன்றவெல்லாம் பயின்று அகத்து அடக்கிய” என்ற சரீர-சரீரி அடிப்படையிலான தொடர்பும் விரிவாக
“யஸ்ய விச்’வம் ஸுர-நர-கக-கோ-போகி-கந்தர்வ-தைத்யை: சித்ரம் ரம்ரம்யதே” என்றும் வருவதைக் காணலாம்.

இது “ஸர்வம் கலு இதம் ப்ரஹ்மா” என்ற சாந்தோக்ய உபநிடதத்தில் (மூன்றாம் அத்தியாயம், பதிநான்காவது பகுதியில் உள்ள)
“சாண்டில்ய விதயை” வாக்கியத்தையும் ஒட்டி வருகிறது.
அதே அர்த்தத்தைப் புருஷ ஸூக்தமும் “புருஷ ஏவேதம் ஸர்வம்” என்ற மந்திரத்தில் உணர்த்துகிறது.

தைத்திரீய நாராயணீய உபநிஷதும்,

“யச் ச கிஞ்சிஜ் ஜகத் ஸர்வம் த்ருச்’யதே ச்’ரூயதேபி வா
அந்தர் பஹிச்’ ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:”

[பிரபஞ்சத்தில் காணப்படுவது கேட்கப்படுவது எல்லாவற்றையும் உள்ளிருந்தும் வெளியிலும்
சூழ்ந்து ஸ்ரீ நாராயணன் நிலைத்து நிற்கிறான்.]என்று இயம்பிற்று.

இங்ஙனம் பிரபஞ்சம் அனைத்தையும் இறைவனுக்குச் சரீரமாகக் கூறுவதால் அனைத்துயிர்களும் அவனுக்கு உடைமையாகின்றன.
இத்தகையதொரு சித்தாந்தத்தில் பரஸ்பர சகோதரத்துவக் கண்ணோட்டத்திற்கே இடமுண்டு.
இவ்வர்த்தத்தை நாம் பகவத் கீதை மூலமாக அறியலாம்:

“மற்றோ ரிடத்து மறமற்று மித்திரனா
யுற்றான் கருணை யுறுமமதை — செற்றா
னகங்கார மற்றா னமர் பொறையன றுக்கஞ்
சுகங்காணி லொப்பான் றுணிந்து.” [ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 12.13]

இப்படி ஸ்ரீ கீதாச்சாரியனாகிய ஸ்ரீ கண்ணன் சொல்லுமிடத்தே, “இவரை நினைவில் வைத்துக் கொண்டுத்
தன் இச் சுலோகத்தைச் செய்துள்ளானோ” என்று வியக்கும் வண்ணம் வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ பிரகலாதாழ்வான்.
தன்னுடைய ஸ்ரீ விஷ்ணு பக்தியைப் பொறாத தன் தன்தை பலவாறு துன்பப்படுத்தியும் ஸ்ரீ பிரகலாதன் இத்தகைய
துவேஷமற்ற தூய சிந்தையுடன் திடமாக இருந்தார். அனைத்து உயிர்களையும் தனக்குச் சினேகிதராக,
மிக விரும்பத்தக்கவர்களாகவே பாவித்தார்.
“தூய ஸ்ரீ விஷ்ணு பக்திக்கு இது இன்றியமையாத அங்கம்” என்ற கொள்கையை ஸ்திரமாகப் பற்றி யிருந்தார்.

உலகனைத்தும் ஸ்ரீ திருமாலுடைய தோற்றமன்றி வேறில்லை. அவனே அனைத்துடனும் ஒன்றி நிற்பவன்.
ஆகையால் ஞானிகள் உலகனைத்தையும் தம்மைக் காட்டிலும் வேறாக நினைக்காமல், அனைத்தையும் தாமாகப் பாவிப்பர்.
ஆகையால், நம்முடைய குலத்தில் வேரூன்றியிருக்கும் குரோத குணத்தை விலக்குவோம்.
இதன் மூலம் நாம் நித்தியமான, சுத்தமான, ஆனந்தமான ஆன்ம ஸித்தியை அடையலாம்.”

“அனைத்துயிர்களையும் சமமாக பாவிப்பீர்கள் அசுரர்களே! இத்தகைய சமத்துவ பாவமே அச்சுதனை ஆராதிக்கும் முறையாகும்”
[விஷ்ணு புராணம், 1.17.82-90]என்னும் ஸ்ரீ பிரகலாதன் கூற்றைக் காணலாம்.
இக்காரணத்தால் ஸ்ரீ கம்பர்,
“தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்” [கம்பராமாயணம்: இரணியன் வதைப் படலம், 82]என்று
பிரகலாதனை அடைமொழியிட்டுப் பாடியுள்ளார்.
“வைஷ்ணவ ஜனதோ” எனத் தொடங்கும் குஜராத்தி மொழிப் பாடலின் கருத்தும் இத்துடன் உடன்படுவதை உணரலாம்.
“பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் அந்தராத்மா அச்சுதனே, அனைத்தும் அவன் சரீரமே” என்று பார்க்கையில்,
“ஒரு சிலர் மாத்திரம் வேண்டியவர்கள், ஏனையோர் வேண்டாதவர்கள்” என்றோ,
“இவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமக்கு நம் ஜாதிக்காரன் ஒழுங்காக இருந்தால் போதும்”
முதலான பாகுபாடுகளுக்கும் சுயநல புத்திக்கும் இடமில்லை.

நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலில்,பாடலின் கடைசி இரண்டு வரிகளான
“வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”
இவை முகில்வண்ணனை வேத முதற் பொருளாக அறிவித்து, அவனைச் சக்கரப்படை ஏந்தியவனாக
அடையாளம் காட்டும் வரிகளாம்.
“வேத முதல்வன்” என்று திருமாலைக் கூறியதற்குப் மறைவழியும், தத்துவார்த்தமாகவும்,
புராணச் செய்தி வழியும், உலகவழக்குப்படியும் பல விதமாக விளக்கம் காண இயலும்.
இத்தொடரில் வந்துள்ள முதற்பகுதியைப் போலவே, வரப்போகும் மற்ற பகுதிகளைப் போலவே,
இவ்வனுபவங்களுக்கான அடிப்படை மரபினைச் சங்கநூலிலும் இடைக்காலக் காப்பியங்களிலும் கண்டுவிட்டு
தகுந்த இடத்தில் சமஸ்கிருத நூல்களிலும் மூலத்தைக் காணலாம்.

(1) “வேதம் கூறும் முழு முதற் பொருள்”:

பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நற்றிணை உரைநூலில் “வேத முதல்வன்” என்ற இடத்திற்கு,
“வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள் குற்றந்தீர விளங்கிய திகிரியை யுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறா நிற்பர்;
ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு” என்னும் விளக்கம் காணப்படுகிறது.

இக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் திருமால் பிரபஞ்சத்தின் காரணப் பொருளாக அறிவிக்கப்பட்டார்.
பின்பு வேதத்தில் கூறப்பட்ட பரப்ப்ரஹ்மம் என்று அறிவிக்கப்பட்டார்.
ப்ரஹ்ம சூத்திரமும் இங்ஙனமே பரம்பொருளை அறிவிக்கின்றது.
முதல் சூத்திரத்தில், “இனி பரம்பொருளை அறிவோம்” (“அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸ:”) என்று அறிவித்து
இரண்டாம் சூத்திரத்தில், “எதனிடமிருந்து பிரபஞ்சத்தின் தோற்றம் முதலானவை ஏற்படுகின்றனவோ” (“ஜன்மாதி3 அஸ்ய யத:”) என்றும்,
மூன்றாவது சூத்திரத்தில், “மறை மூலம் அறியப்படுகிறது” (“சா’ஸ்த்ர யோனித்வாத்”) என்றும் இலக்கணம் கூறிற்று.

நான்மறைகளின் முடிவாகத் திருமால் அறியப்படுவதால் “வேதாந்த வேத்யன்” என்று அவனை அழைப்பதுண்டு
(வேத்3ய: = அறியப்படுபவன்). இப்படி அவனை “மறைவழியாக அறியப்படுபவன்” என்று அறிவிக்கக் காரணமென்?
“இதிகாச-புராணங்களிலும், ஸ்மிருதிகளிலும் அறியப்படுபவன்” என்று கூறலாமெனின்,
அந்நூற்கள் பொய்யா மறையாகிய வேதத்தை, அதாவது “சுருதிகளைச்” சார்ந்தே நிற்பவையேயன்றி,
தனித்து நிற்பவையாகா. சுருதியாகிய வேதம் ஒன்றே எதையும் சாராமல் தனித்து நிற்கும் பிரமாணமாகும்.

அத்துடன், வேதமென்பது பரமனுடைய வாய்மொழியே என்று வேதமே அறைகிறது.
அயல் நாட்டவர் ஒருவர் நம் தாய்மொழியிலேயே நமக்கு வணக்கம் கூறினால் மகிழ்கின்றோமே,
அது போல வேதத்தின் வழி அவனை அறிவதால் பரமனுக்கு உகப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு தாய் தன்னுடைய குழந்தை “அம்மா”” என்று தான் பேசும் மொழியிலேயே என்று
அழைப்பதைக் கேட்பதால் எவ்வளவு ஆனந்தப்படுகிறாள்? அதுபோலவே,

“புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!
அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்;”[– பரிபாடல், 13]

“‘அன்னை நீ; அத்தன் நீயே;அல்லவை எல்லாம் நீயே;”[– கம்பராமாயணம், IV, வருணனை வழி வேண்டு படலம், 72]

“தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாயாகின், ஐய!”[—- கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 54]

என்று அனைவரும் இசைந்தபடி, பிரபஞ்சம் அனைத்துக்கும் தாயாகக் கூறப்படும் பரமனுடைய குழந்தைகள்
அவன் சொந்த மொழியாகிய வேதத்தின் வழியிலேயே அறிந்து வணங்குவதில் அவனுக்குப் பேரானந்தம். ஆகையால்,
“வேத முதல்வன்” என்று கூறுதலின் சிறப்பு விளங்கிற்று.
இதைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோரும் நன்கறிந்தனர் என்பதை,

“மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து”

“பதினாயிரம் கை முது மொழி முதல்வ”

“முன்னை மரபின் முது மொழி முதல்வ”[– பரிபாடல், 3] என்று பாடியதிலிருந்து காணலாம்.
இதிலிருந்து, நற்றிணைப் பாயிரப்பாடலானது சங்க காலத்திற்குச் சற்று பின்பே எட்டுத் தொகை நூற்கள் தொகுக்கப்பட்ட
காலத்தில் தான் சேர்க்கப்பட்டது எனினும், பழந்தமிழர் மரபைக் காட்டும் சங்கநூல் கூறும் செய்தியையே
எதிரொலிக்கின்றது என்னும் கருத்துடன் இசைவதற்கு இடமுள்ளது.

ஸ்ரீ கீதாச்சாரியனாகிய ஸ்ரீ கண்ணனும், “வேதைச்’ ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்3ய:”
[அனைத்து வேதங்களாலும் அறிவிக்கப்படுபவன் யானே — ஸ்ரீ பகவத் கீதை 15.15] என்று கூறுகிறான்.
“அனைத்து வேதங்களும் இவனையே கூறுகின்றன என்று எப்படி சொல்ல முடியும்?
இந்திரனும், அக்னியும், வருணனும், வாயுவும் கூட தான் வேதத்தில் படிக்கப்படுகின்றனரே?” என்ற கேள்வியை எழுப்ப,
வங்கதேசத்து அத்வைத தத்துவ ஞானியும், பரம பக்தருமாகிய மதுசூதன சரஸ்வதியின் உரையில் பதில் கிடைக்கிறது:

“(ஸ்ரீ கண்ணன் கூறுகிறான்) வேதத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் படிக்கப்படுகின்றனராயினும்,
உண்மையில் மறையானது அவர்களுக்கு உள்ளுறையும் ஆத்மாவாக இருக்கும் என்னையே கூறுகின்றது. ஏனெனில்,
‘இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிம் ஆஹுரதோ2 திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மாந்.
ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி அக்நிம் யமம் மாதரிச்’வாநமாஹு:’ என்று மந்திரமும்,
’ஏஷ உஹ்யேவ ஸர்வே தேவா:’ என்று உபநிடதமும் கூறுகிறது” [– கூடார்த்த தீபிகை, ஸ்ரீ கீதை 15.15-க்கு உரை].

ஸ்ரீ திருமாலின் ஆயிரம் பெயர்களுக்குச் சங்கரர் உரையில், “ச’ப்தச’:” (#912), “கதித:” (#848), “மந்த்ர:” (#280)
என்ற நாமங்களுக்கான விளக்கங்களும் இக்கருத்தையே கூறுகின்றன.
இவையனைத்தும் பரம்பொருளுக்கு மறை கூறும் இலக்கணமாகும்.
சங்கரருடைய கீதையுரைக்கு ‘டீகை’ இட்ட ஆனந்தகிரியும் மேலெடுக்கப்பட்ட 15.15-ஆம் சுலோகத்தின் கீழ்
“வேதத்தால் அறியப்படும் பரம்பொருள் பகவான் அன்றி வேறா என்ற சந்தேகம் தீரும்படி ஸ்ரீ கண்ணன் உரைக்கின்றான்”
என்று விளக்கியுள்ளார்.

மறைமுடிவாகிய உபநிடதம் பரமனையே சொல்ல வருகின்றது என்ற செய்தியை ஸ்ரீ கம்பரும்,
“சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை;”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 98]

“‘முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன்பெருந் தன்மை தான் தெரி
மறைகளின் தலைகள், “மன்பெரும் பரமார்த்தம்” என்று உரைக்கின்ற மாற்றம்,
அன்ப! நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா. “[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 100]
என்று பல இடங்களில் பாடியுள்ளார். இவ்விளக்கம் தொடர்பாகவே, பரமனுடைய
“கோவிந்தன்” (#539) என்ற நாமத்திற்குச் சங்கரர் சஹஸ்ரநாம உரையில் “‘கோ’ என்பதை ‘மொழி/பதம்’ என்ற
பொருளுடையதாய் எடுக்கலாம். ஆகையால, ‘கோவிந்தன்’ என்பதற்கு ‘பதங்களால் அறியப்படுபவன்’,
அதாவது வேதாந்த வார்த்தைகளால் அறியப்படுபவன் என்று பொருள் கொள்ளலாம்.” என்று விளக்கம் கூறியுள்ளார்.
இக் கருத்தையே “அந்தணர் மாட்டு அந்தி வைத்த மந்திரம்” என்று திரு நெடுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வாரும்,
அதைப் பின்பற்றி வருவதைப் போல,
“அன்னவூர்தியை முதலாம் அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறி நின்றார் நினையாரோ.”[– ஸ்ரீ கம்பராமாயணம், III, விராதன் வதைப் படலம், 55]
என்று கம்பரும் பாடியுள்ளதைக் காண்க
(அந்தணர் மாடு = அந்தணர்களுடைய ஒரே செல்வமாகிய வேதம், அந்தணர் மாட்டு அந்தி = வேதாந்தம்).

(2) “வேதத்தின் முதலில் ஓதப்படும் ஓங்காரத்தின் உட்பொருள்”:
வேதத்திற்கும் மூலமாய் அமைந்துள்ள ஓங்கார அட்சரமே திருமாலின் வடிவம் என்று மறைகள் அறிவிக்கின்றன.
அத்துடன், வேதம் ஓதும்போது முதலிலும் முடிவிலும், “அரி ஓம்” என்று பரமனின் பெயரை ஓம்காரத்தோடு
ஒரே வேற்றுமையில் படிப்பது உலகவழக்கு. ஆகையால், வேதத்திற்கு முதலில் ஓதப்படுவதால்
‘வேத முதல்வன்’ என்று முகில் வண்ணனைப் பாடுவதாகவும் கொள்ளலாம்.

இச்செய்தியைக் கம்பரும்,
‘ஓங்காரப் பொருள் தேருவோர் தாம் உன்னை உணர்வோர்;
ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்;
“ஓங்காரப் பொருள் ஆம்”, “அன்று” என்று,ஊழி கண்டாலும்
ஓங்காரப் பொருளே பொருள் என்கிலா உரவோர்.’[– கம்ப ராமாயணம், VI, மீட்சிப் படலம், 110]
என்று பாடியுள்ளார்.
ஆதியிலும் அந்தத்திலும் ஓதப்படும் ஓங்காரத்திற்கு உயிராய் நிற்பவன் பரமனே என்று
ஸ்ரீ நாராயணீய உபநிஷதத்தில்,
“யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித: |
தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய ய: பர: ஸ மஹேச்’வர: ||”[– தைத்திரீய ஆரண்யகம், 10.10.6]
எனும் மந்திரம் செப்புகிறது.

இம்மந்திரத்தை ‘ஸ்ரீதரர்’ என்பவர் தாம் எழுதிய பிராசீனமான பாகவத வியாக்கியானத்தில் பின்வரும் சுலோகத்திற்கு
மூல வேதப் பிரமாணமாகவும் எடுத்துள்ளார். இச்சுலோகமும் நாம் கூறும் கருத்தைக் கூறுகின்றது:
“பிண்டே வாயு-அக்னி-ஸம்சு’த்தே ஹ்ருத்-பத்ம-ஸ்தம் பராம் மம |
அண்வீம் ஜீவ-கலாம் த்4யாயேன் நாதாந்தே ஸித்த பாவிதாம் ||”
[என்னுடைய சூட்சும ரூபத்தை பக்தன் தன்னுடைய சுத்தீகரிக்கப்பட்ட உடலின் நடுவில், இதயத்தில்,
உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமாகத் தியானிக்க வேண்டும். பரமனது இந்த வடிவத்தை ஆன்ம ஞானம் பெற்ற
முனிவர்கள் ஓங்காரத்தின் அசைவின் இறுதியில் தியானிப்பர் — ஸ்ரீமத் பாகவதம், 11.27.23]

ஸ்ரீ கீதையிலும் ஸ்ரீ கண்ணன் இவ்வர்த்தத்தை எட்டாவது அத்தியாயத்தில் (8.13) உரைத்தான்.
மேலெடுக்கப்பட்ட ஸ்ரீ நாராயணீய மந்திரம் கூறும் பொருளையே ஸ்ரீ கம்பர் பிரகலாதன் வாய் மொழியாகக் கூறியுள்ளார்:

“‘சுருதி ஆதியில் தொடங்கு உறும் எல்லையில் சொன்ன ஒருவன், யாவர்க்கும் நாயகன்,
திருப்பெயர், உணரக் கருதக் கேட்டிடக் கட்டுரைத்து இடர்க் கடல் கடக்க உரிய மற்று இதின் நல்லது ஒன்று
இல்’ என உரைத்தான்.”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், VI, இரணியன் வதைப் படலம், 40]
“ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால், தூமமும் கனலும் போல்
தொடர்ந்த தோற்றத்தான்.”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76]

ஸ்ரீ திவ்யகவி பிள்ளை பெருமாள் ஐயங்காரும்,
“பூங்கா விரிப்புனற் கோவில் உள்ளே மிக்க போகமெலாம்
யாங்காண யோகத்துயில் கொள்வார் மெல்லெயும் போய்
நீங்காதுலகத் துயிர்க் குயிராகி நீயாமகனாய்
ஓங்கார மாயமாய் நின்ற ஒண் சுடரே.”[– ஸ்ரீ திருவரங்க மாலை] என்று ஸ்ரீ அஷ்டபிரபந்த நூலொன்றில் பாடியுள்ளார்.

(3) “வேதத்தை அருளிய முதல்வன்”:
இது புராணக்கதை கூறும் செய்தியின் அடிப்படையில் எழுந்த விளக்கம்.
கல்பத்தின் தொடக்கத்தில் ‘மது’ ‘கைடபன்’ என்று இரு அரக்கர்கள் வேதத்தைப் பிரமனிடமிருந்து அபகரித்து மறைத்தனர் என்பதும், பெருமாள் பரிமுகனாக (ஹயக்ரீவ) அவதாரம் எடுத்து வேதத்தை மீட்டு வந்தார் என்பதும், அன்னமாக உருவெடுத்து (ஹம்ஸாவதாரம்) சிறகடித்து பிரளய நீர் வரண்டு போக, நான்முகனாருக்கு அதை ஓதுவித்தார் என்பதும் புராணங்கள் கூறுபவை. ஆக, வேதத்தை அருளிச்செய்த முதல்வன் என்பதாலும், “வேத முதல்வன்” என்னும் அடைமொழி பொருந்தும். இதனாலேயே மணிவண்ணனை “வாய்மொழிப் புலவ” என்றும் “தொல் இயல் புலவ” என்றும் பரிபாடலில் (முதல், மூன்றாம் பாடல்களில்) பழந்தமிழர் பாடினர். இவைகளில் வரும் “புலவ” என்ற பதத்தை இரண்டு விதமாகப் பொருள் கொண்டு “வேதத்தைப் புலப்படுத்துகிறவன்” என்றும் “வேதத்தாற் புலப்படுபவன்” என்றும் விளக்கம் கூற இடமிருக்கிறது. அன்னமாய் அவதரித்து உயிர்கள் உய்யும்பொருட்டு மறைகளை வெளிப்படுத்திய இப் புராணக்கதையை ஒட்டி,

“‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்’ எனவும்,”[– பரிபாடல், 2]
என்று சங்ககாலத்தவரும்,

”அன்னமாய் நூல் பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே”,
“அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த”[– ஸ்ரீ பெரிய திருமொழி, 9.4.2, 11.4.8]
“புள்ளதாகி வேத நான்கு மோதினாய தன்றியும்”[– ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 19]என்று ஆழ்வார்களும்,

“அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ, அவை உன்னை முன்னம் ஆர் ஓதுவித்தார்? எல்லாரும் முடிந்தாரோ?
பின்னம் ஆய் ஒன்றாதல்,பிரிந்தேயோ? பிரியாதோ? என்ன மா மாயம் இவை ஏனமாய் மண் இடந்தாய்! ”
[– ஸ்ரீ கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், விராதன் வதைப் படலம், 59]என்று கம்பரும் பாடியுள்ளனர்.

இச்செய்தி வேதத்தின் ஞான காண்டமாகிய உபநிடதத்திலும்–
“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ச்’ச ப்ரஹிணோதி தஸ்மை |
தம் ஹ தேவம்-ஆத்மபுத்தி-ப்ரகாச’ம் முமுக்ஷுர்வை ச’ரணமஹம் ப்ரபத்யே ||”
[எவன் ஆதியில் பிரமனைப் படைத்து அவனுக்கு வேதத்தை ஓதுவித்தானோ, அந்தத் தேவனை, ஆன்மாவிற்கும்
அறிவிற்கும் ஒளிதருபவனாய்த் திகழும் அவனை வீடுபேற்றினை விரும்பும் நான் சரணடைகிறேன் — சுவேதாச்வதார உபநிடதம், 6.18.]
என்னும் இடத்தில் விளக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கான சாங்கர பாடியத்தில்,
“குருதம:” (#210) மற்றும் “ஸுமுக” (#456) என்ற இடங்களில் வருகிறது.

இக்கட்டுரையில் இதுவரை கண்ட சான்றுகளிலிருந்து இன்னொரு செய்தியும் புலப்படுகிறது.
“வாய்மொழிப் புலவ”, “தொல் இயல் புலவ”, “முதுமொழி முதல்வ”, “மாயா வாய்மொழி” என்று
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதிலிருந்து, அக்காலத் தமிழ் மக்கள்
“வேதமானது காலத்தால் வரையறுக்கப்படாதது” என்றும்,
“ஒருவராலும் புதிதாகப் படைக்கப்படாதது” என்றும் அதனுடைய “அபௌருஷேய” நிலையின் மீது அசையாத நம்பிக்கை
வைத்திருந்த ஆத்திகர்களே என்று தெரிகிறது.
இன்று வரை தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வரும் இந்துப் பண்பாட்டின் தத்துவவியலைச் சேர்ந்த துல்லியமான விவரங்களிலும்
ஊறியிருந்த விப்ரர்களாக அக்காலத்துத் தமிழ்ச் சான்றோர்கள் விளங்கியிருந்தனர் என்றால் மிகையாகாது.

(4) “உற்சவத்தில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவன்”:
இது அனுபவபூர்வமான, லௌகீகமான, உலக வழக்கு விஷயமான விளக்கமாகும்.
திவ்ய தேசமாகட்டும், வேறெந்த பெருமாள் கோயிலாகட்டும், கருவறைமுன் சென்று அருள்பெற சக்தி இல்லாத மக்களுக்கும்
அவனருள் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நடக்கும் திருவிழாக்களில் உற்சவர் ரூபமாக
எழுந்தருளச் செய்து பெருமாளை ஊர்வலமாகக் கொண்டு வருவது அனைவருமறிந்த வழக்காகும்.
அப்போது உற்சவருக்குப் பின் வேத முழக்கம் செய்யும் அந்தணர்கள் அவரைத் தொடர்ந்து வருவதுண்டு.
இவ்வழக்கை வைத்தும் “வேத முதல்வன்” என்று திருமாலைக் கூறலாம்.

இதற்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு எனில், இத்தகைய உற்சவங்கள் மிகப் பழமையான காலத்திலிருந்து
நடந்து வந்திருக்கிறது என்று எண்ணுமளவிற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு என்பதே.
அகநானூற்றில் (137-ஆம் பாடல்) “பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்…தீயில் அடுப்பின் அரங்கம் போல” என்று
அரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த புலவரும்,
“விழவுடை விழுச்சீர் வேங்கடம்” (61-ஆம் பாடல்) என்று வேறொரு புலவர் கூறுவதிலிருந்தும்,
திருவரங்கத்தில் பங்குனி உத்திரம் மற்றும் திருமலையில் பெரிய விழாக்களும் அந்நாளில்
சிறப்புடன் கொண்டாடப்பட்டு வந்ததைக் காட்டுகின்றன.
திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா பற்றிய மிகத்தெளிவான குறிப்பும் ‘இறையனார்’ என்னும் சங்கம்
மறுவிய காலப் புலவருடைய ‘அகப்பொருளில்’ காணலாம்:
“ஊர் துஞ்சாமை என்பது — ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடில்லையாமாகவும் இடையீடாம் என்பது;
அவை மதுரை ஆவணி யவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்தரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்,
இவை போல்வன பிறவும் எல்லாம் அப் பெற்றியான பொழுது இடையீடாம் என்பது”[– களவியல், 16-ஆம் சூத்திரம்].

இப்படிப்பட்ட திருவிழாக்களில் வேத முழக்கத்திற்கு முன்னே செல்பவனாகப் பல தமிழ்ப்புலவர்கள் தொன்று தொட்டு
மாயவனை வாழ்த்தி யுள்ளனர். அவை அனைத்தும் கற்பனை வளம் மிக்கதாயும் காணப்படுகின்றன.
இவர்கள் வரிசையில் முதலில் வருபவர் புகழேந்திப் புலவர்:
“மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயும் காணலாம் – மால்யானை
முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப
வந்தருளும் செந்தா மரை.”[– நளவெண்பா, 334 (கலிநீங்கு காண்டம்)]என்ற பாடலில்,
“கண்ணனை வேத முழக்கத்திற்கு முன் செல்பவனாயும், ஆநிறைகளைப் பின்தொடர்பவனாயும் காணலாம்” என்று
அழகு கொஞ்சும் வரிகளில் பாடியுள்ளார். (காலி = ஆநிறை).

அடுத்ததாக வில்லி புத்தூராழ்வார்,

“உரலும் வேதமும் தொடர, நந்தகோனுடன் அசோதை கண்டு உருக, வாழ்வு கூர்
தரணிமீது செங் கையும் மா முழந் தாளும் வைத்து வைத்து, ஆடும் மாயனார்,
விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தெனத் தவழ்ந்தருளி, மீளவும்
புரியும் நீள் கடைக் கண்ணும் வண்ணமும் போற்றுவார்கள் மெய் புளகம் ஏறுமே. “[– ஸ்ரீ வில்லிபாரதம், ஏழாம் போர்ச் சருக்கம், கடவுள் வாழ்த்து]
எனும் கற்பனை வளம் மிக்க வரிகளில்,
“யசோதை கட்டிய உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் செல்ல அவ்வுரலும் வேதமும்
அவனைப் பின்தொடர்ந்து சென்றன” என்று பாடியுள்ளார்.

மேலும்,
“படர்ந்து கானகம் திரிந்து, மீண்டு, அன்புடன் பணிந்த பஞ்சவர்க்காக,
கடந்த ஞானியர், கடவுளர், காண்கலாக் கழல் இணை சிவப்பு ஏற,
தொடர்ந்து நான்மறை பின் செல, பன்னக துவசன் மா நகர்த் தூது
நடந்த நாயகன் கரு முகில்வண்ணம் என் நயனம் விட்டு அகலாதே.”[– ஸ்ரீ வில்லிபாரதம் : படை எழுச்சிச் சருக்கம் : கடவுள் வாழ்த்து]
என்னும் வரிகளில்,
“கண்ணன் பாண்டவர்களுக்குத் தூது நடந்த பொழுது வேத முழக்கம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது” என்று
பாடுவது இளங்கோவடிகளுடைய ஆய்ச்சியர்கள் பாடிய முறையைப் பின்பற்றி வருகிறது:
“தொடர்ந் தாரண முழங்கப் பஞ்சவர்க்கு தூது நடந்தானை ஏத்தாத நா வென்ன நாவே!
நாராயணா வென்னா நா வென்ன நாவே!!”[– சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை]

இறுதியாக, இதில் மற்றொரு வியக்கவைக்கும் தகவல் உண்டு. இப்படி உற்சவராக எழுந்தருளி வீதி உலா வரும்பொழுது
வடமொழி வேதம் அவன் பின்னே செல்ல, தமிழ்மறையாகிய ஆழ்வார் பாசுரங்கள் அவனுக்கு முன்னே ஒலிக்கும்!
நமது பாரம்பரிய வைணவ ஆசிரியர்களே சமஸ்கிருத வேதத்திற்கும் பெருமாளுக்கும் முன்பு
தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முதலிடம் கொடுக்கும் மரபை உருவாக்கியவர்கள்!
அவ்வாசாரியார்கள், “பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி யாதலால் உபாசனையில் தமிழர் மரபுக்கு
முதன்மை தருவதே கண்ணனை உகப்பிக்கும் வழி” என்பதை நன்கு அறிந்தவர்களாவர்.

————————

வேதங்களின் சிகரங்களாகிய உபநிடதங்கள் பிரபஞ்ச சிருஷ்டியை விளக்கும் இடங்களில்,
அச் சிருஷ்டிக்கு முதற்காரணமாகிய ’அவ்யக்தம்’, ‘மூலப் பிரகிருதி’, ‘தமஸ்’ எனப் பலவாகக் கூறப்படும் மாயையானது
ஆதியில் பரம்பொருளுடன் ஒன்றியிருந்த நிலையைக் கூறுகின்றன.
சிருஷ்டிக் காலம் தொடங்கிய பின் ஜடப் பொருளாகிய அம்மாயையிலிருந்து ’மகான்’, ’அகங்காரம்’ என்னும்
தத்துவங்கள் தோன்றின என்றும், அகங்காரத்திலிருந்து ஆகாயம், ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு,
நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து மண் என்னும் பஞ்சபூதங்களாகப் பரிணமித்தன என்றும் கூறும்.
உபநிடதங்கள் கூறிய வழி பிரபஞ்சம் விரிவதற்கு முன் இருந்த நிலையையும், முறையே பஞ்ச பூதங்கள் தோன்றிய வரிசையையும்
’கீரந்தையார்’ என்னும் சங்கப் புலவர் பாடிய இரண்டாம் பரிபாடலில் கீழ்க்கண்ட வரிகள் விளக்குகின்றன:

“தொல் முறை இயற்கையின் மதியொ. … … … … … … … மரபிற்று ஆக,பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,கரு வளர் வானத்து இசையின் தோன்றி,உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” [— பரிபாடல், 2:1-12]
என்பன அவை. இதில் முதலிரண்டு வரிகள் இப்பொழுது உள்ள தொகுப்பில் முழுமையாகக் கிடைக்கவில்லை யெனிலும்,
“மண்ணுலகமும் பசும் பொன்னுலகமும் பாழ்பட, ஒன்றுக்கொன்று மாறி வருதலாகிய பழைய இயல்பினையுடைய
மதியமும் ஞாயிறுங்கெடுதலால் அழகிழந்த இயல்பிற்றாக விசும்புகெட்ட ஊழிகள் முறைமையாகக் கழிந்தனவாக” என்னும்
பரிமேலழகர் உரையிலிருந்து இவ்வரிகளின் செய்தி நமக்குக் கிடைக்கிறது
(விசும்பு = வானம், ஆகாயம்).

ஊழி கழிந்த இந்நிலையை கேரள தேசப் பண்டிதராகிய ஸ்ரீ நாராயண பட்டரும் ஸ்ரீ நாராயணீயத்தில்,
“வ்யக்தாவ்யக்தம் ந கிஞ்சித்-அபவத்-ப்ராக்-ப்ராக்ருத-ப்ரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்யருத்த விக்ருதௌ த்வய்-யாகதாயாம் லயம் |
நோ ம்ருத்யுச்’ச ததா(அ)ம்ருதம் ச ஸமபூன்னாஹ்னோ ந ராத்ரே: ஸ்திதி:
தத்ரைக: த்வம் அசி’ஷ்யதா கில பரானந்த ப்ரகாசா’த்மனா ||”– — ஸ்ரீமத் நாராயணீயம், 5.1]
[பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது.
அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக் கொண்டு நேராகவோ,
அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை.
பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய். — ]என்னும் பாடலால் குறிப்பிடுகிறார்.
(இங்கு ’மாயை’ என்றும், வேறு சில நூற்களில் ’தமஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ள மூலப் பிரக்ருதியின்
இலக்கணமும் பெயரும் நவீன விஞானிகளால் கூறப்படும் “Dark matter” என்பதன் இலக்கணத்தோடும் பெயரோடும்
ஓரளவு உடன்படுவது சிலருக்கு ஆர்வமூட்டலாம். தமஸ் என்பதற்கு இருள் என்றும் பொருள் உண்டு.)

————–

ஸ்ரீ வராகக் கற்பம்
இனி அடுத்து வரும் வரிகளில் கீரந்தையார் சிருஷ்டி குறித்துப் புராணங்களில்
கூறப்படும் செய்தி யொன்றைச் சுருக்கமாக எடுத்துள்ளார். ஊழியின் தொடக்கத்தில் படிப்படியாகப் பஞ்ச பூதங்கள்
முறையாகத் தோன்றிய பிறகு, நான்முகக் கடவுளை நாரணன் பிறப்பித்தான். அதன் பிறகு, நான்முகக் கடவுள்
நாரணன் துணை கொண்டு மரீசி முதலான பிரஜாபதிகளையும் சுயம்பு மனுவையும் (ஸ்வாயம்புவ மநு) படைத்தார்.
காச்யப பிரஜாபதியின் ஒரு மனைவியாகிய அதிதிக்குத் தேவர்களும், மற்றொரு மனைவியாகிய திதிக்கு அசுரர்களும் பிறந்தனர்.
சுயம்பு மனுவும் பிரஜாபதிகளும் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடரும் வேளையில் அசுரர்களுள் ஒருவனாகிய
இரணியாட்சன் பூமியைக் கடலுக்குள் ஆழ்த்தி ஒளித்து வைத்தான்.
நிலம் மறைந்ததால் மேற்கொண்டு பிராணிகளின் சிருஷ்டி தடுக்கப்பட்டது. கல்பத்தின் தொடக்கமாகிய அக்காலத்தில்
ஸ்ரீ வாசுதேவன் வெண்ணிற வராகமாய் அவதரித்து அசுரனை வென்று மூழ்கியிருந்த நிலத்தைத் தன் கொம்பிலே
உயர்த்தி மீட்டான் என்பது பல புராணங்களில் வரும் செய்தி.
ஸ்ரீ வராக அவதாரம் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கு ஸ்ரீ யஜுர் வேதத்திலும் காணப்படுகிறது.

ஒரு கல்பமானது நான்முகனாகிய பிரம்மாவுடைய ஒரு நாள். இது பத்தாயிரம் கலியுகக் காலங்களுக்குச் சமமாகும்.
கல்பத்தின் தொடக்கத்தில் திருமால் வெண்ணிற ஸ்ரீ வராக வுருக் கொண்டவதரித்து உலகம் காத்ததால்
இக்கல்பத்திற்குச் “ஸ்ரீ சுவேத வராக கல்பம்” என்று பெயர். வைதீக ஒழுக்கத்தில் சங்கல்பம் செய்யும்பொழுது
“ச்’வேத வராஹ கல்பே” என்று கூறும் வழக்கும் இன்றுவரை கடைபிடித்து வரப்படுகிறது.
சங்க காலமாகிய அந்நாளிலேயே இப்பெயர் வழங்கப்பட்டு வந்திருப்பதைப் பரிபாடல்
கீழ்க்கண்ட வரிகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளது:

“நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும், மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ் வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒருவினை உணர்த்தலின்,
முதுமைக்கு ஊழி யாவரும் உணரா;ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.”[— பரிபாடல், 2:13-19]

“மகா பிரளயம் முடிந்தபிறகு ‘நெய்தல்’, ‘குவளை’, ‘ஆம்பல்’, ‘சங்கு’, ‘கமலம்’, ‘வெள்ளம்’ என்றெல்லாம்
கல்ப காலங்களுக்குப் பெயரிடப்பட்ட வண்ணமே, இப்பொழுது நிகழும் கல்பத்தின் பெயரானது நீ ஸ்ரீவராக வுருவெடுத்து
ஸ்ரீ மண் மடந்தையை மீட்டு வந்த ஒரே ஒரு செயலைக் குறிக்கும் எனப் பார்க்கும்போது,
எண்ணற்ற அருஞ்செயல்களைப் புரிந்துள்ள உனது காலத்தை எத்தனை கல்ப காலங்களாலும் அளவிட முடியாது எனத் தெரிகிறது.
ஆகையால் உன் முதுமையை எவராலும் உணர இயலாது.” என்பது இவ்வரிகளின் பொருள்.

இதன் மூலம் மாயோன் அழிவற்று விளங்கி நிற்கும் பரம்பொருளே என்னும் கொள்கையையும்
அவன் அவதாரச் சிறப்பையும் காட்டுகிறார் சங்கப்புலவர்.
இக்கருத்தையே ஸ்ரீ ஆதி சங்கரருடைய சீடரான ஸ்ரீ சுரேஷ்வரர் ஸ்ரீ பிருகதாரண்யக வார்த்திகத்தில்
“முதியவனாகவும் அழிவற்றவனாகவும் விளங்கும் திருமால்”
(“புராண: சா’ச்’வதோ விஷ்ணு:” — 1.4.135, 2.1.268;
“புராண: சா’ச்’வதோ அசிந்த்ய:” — 4.4.1288-1289) என்று கூறியுள்ளார்.

கம்பரின் புலமையும் ஞானமும்
இங்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் பரிபாடலில், தத்துவ விளக்கங்களுக்கு இடையே
கீரந்தையார் நகைச் சுவையாகப் பாடும் பாடற் பகுதி ஒன்று வருகிறது:

“ஓங்குயர் வானின் வாங்குவிற் புரையும் பூணணி கவைஇய வாரணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதிமறுச் செய்யோள் சேர்ந்தநின் மாசில் அகலம்
வளர்திரை மண்ணிய கிளர்பொறி நாப்பண் வைவான் மருப்பின் களிறுமணன் அயர்பு
புள்ளி நிலனும் புரைபடல் அரிதென உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று”-— பரிபாடல், 2:28-35

[திருமாலே! மிக உயர்ந்த விசும்பிடத்தே இடப்பட்ட வளைந்த இந்திர வில்லையொத்த பல்வேறுநிற ஔிகளையுடையதும்,
பூணப்படுவனவாகிய பிற அணிகலன்களாலே அகத்திடப்பட்டதுமாகிய உன் மார்பானது, நெடிய அழகிய
முத்துமாலைகளாலே இயற்றப்பட்ட ‘நித்தில மதாணி’ என்னும் அழகிய திங்களுக்குற்ற மறுவைப் போன்று
இலத்சுமிப் பிராட்டியைக் கொண்ட உன் குற்றமற்ற மார்பானது,
‘ஆதி வராகமாகப் பூமியை நீ மணந்தாய்’ என்று கூறுவோர் கூற்றுடன் தகுமோ? தகாது. ]

‘திருமகள் உன் மார்பில் இருக்க, நீ பூமிப் பிராட்டியை மணந்தாய் என்னும் கூற்று தகாது’ என்று நகைச்சுவையாக,
வஞ்சிப்புகழ்ச்சியணியில் பாடியுள்ளார். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரோ,
‘(வாமன அவதாரத்தில்) அளந்தும், (வராக அவதாரத்தில்) நீரிலிருந்து தூக்கி எடுத்தும்,
(பிரளய காலத்தில்) தன்னுள்ளே மறைத்து வைத்தும், (சிருஷ்டிக் காலத்தில் மீண்டும்) வெளிப்படுத்தியும்,
மிகப் பெரிய திருத் தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய்’ பூதேவியிடம் பெருமாள் கொண்டுள்ள அன்பை வருணிக்கிறார்:

கிடந்திருந்து நின்றளந்து கேழலாய்க் கீழ் புக்
கிடந்திடும், தன்னுள் கரக்குமுமிழும்,
தடம் பெருந்தோளாரத் தழுவும் பாரென்னும்
மடந்தையை, மால் செய்கின்ற மாலார்க் காண்பாரே.[— ஸ்ரீ திருவாய்மொழி, 2.8.7]

பரிபாடலில் உள்ள விளையாட்டான புகழ்ச்சியை ஸ்ரீ திருவாய்மொழியில் ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய விதத்துடன்
இணைத்து ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் பின்வரும் பாடலில் பாடுகிறார்:

“அரவாகிச் சுமத்தியால் அயில்எயிற்றின் ஏந்துதியால்
ஒருவாயின் விழுங்குதியால் ஓரடியால் ஔித்தியால்
திருவான நிலமகளை இஃதறிந்தாற் சீறாளோ!
மருவாருந் துழாயலங்கன் மணிமார்பின் வைகுவாள்”
[பாதாள லோகத்தில் அனந்தன் என்னும் பெயருடன் பாம்பு உருவம் கொண்டு பூமியைத் தாங்கி நிற்கிறாய்.
ஸ்ரீ வராக மூர்த்தியாகிக் கொம்பிலே உலகத்தைத் தாங்குகிறாய். பிரளய காலத்தில் விழுங்கி ’ஞாலமுண்டவன்’ எனப் புகழ் பெற்றாய்.
ஸ்ரீ வாமன அவதாரத்தில் ஒரே அடியால் பூமியை உன் திருவடிக்கீழ் ஒளியச் செய்தாய்.
நீ பூமிப் பிராட்டி மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதை உன் திருமார்பில் வீற்றிருக்கும்
ஸ்ரீ திருமகள் அறிந்தால் சினம் கொள்ள மாட்டாளோ? — ஸ்ரீ கம்பராமாயணம்: III, விராதன் வதைப் படலம், 58]

இவ்வாறு பலவிடங்களில் கவிச் சக்கரவர்த்தியாகிய ஸ்ரீ கம்பர் சங்கத் தமிழர் மரபையும்,
ஆழ்வார்கள் வழி மொழிந்ததையும், வேத வேதாந்த இதிகாச-புராண செய்திகளையும் இணைத்தே
தம் காவியத்தில் பல பாடல்களைப் படைத்துள்ளார்.
ஸ்ரீ வைணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீ கம்பருக்கு இருந்த ஈடுபாட்டினையும் இவற்றிலிருந்து நாம் அறிகின்றோம்.
மேலும் பல உதாரணங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.

———–

வேள்விகளுக்கு நாயகன்
ஸ்ரீ ராகவப் பெருமானின் வீரச் செயலைக் கண்டு மகிழ்ந்த யோகிகளும் முனிவர்களும்,
வேதத்தில் பூர்வ பாகத்தில் கூறப்பட்ட வேள்விகளெல்லாம் திருமால் சொரூபமே என்றும்,
வேள்விகளை வியாபித்து நின்று பலன்களை அளிப்பவனும் அவனே என்றும் பாடுவதாக
ஸ்ரீ பராசர பகவான் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் காட்டுகிறார் [ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.4.31-34].
இவ்வாழ்த்து ஸ்ரீ மகாபாரதப் பகுதியாகக் கருதப்படும் ஸ்ரீ ஹரி வம்சத்திலும் ஸ்ரீ வராக அவதாரம் படிக்கப்படும் இடத்தில் உள்ளது.
ஸ்ரீ ‘யக்ஞ வராகப் பெருமாள்’, ’ஸ்ரீ யக்ஞ மூர்த்தி’ என்ற பெயர்களும் திருமாலுக்கு இதனால் ஏற்படுகின்றன.
உலகவழக்கிலும் ’யக்ஞ நாராயணன்’ என்ற பெயரையும் சிலர் சூட்டிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
சுருதிகளின் சாரமாகிய ஸ்ரீ பகவத் கீதையிலும் கண்ணனும்,
“அதியஜ்ஞோ அஹம் ஏவ” [அதியக்ஞம் எனப்படுவதும் நானே — பகவத் கீதை, 8.4] என்றான்.
இவ்விடத்திற்கு ஸ்ரீ சங்கரர் பாஷ்யத்தில் “யஜ்ஞோ வை விஷ்ணு:”
[வேள்வியைக் குறிக்கும் யக்ஞ சப்தம் விஷ்ணுவே — யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதை, 1.7.4] என்ற
வேத வாக்கைச் சான்றாக எடுத்துள்ளார்.
பல இடங்களில் ஸ்ரீ கண்ணன் இதை மேலும் வலியுறுத்துகிறான் (4.24, 9.16).

ஸ்ரீ கேழலாய் உருவெடுத்து ஊழிக் காலத்தில் உலகம் காத்தவனை வேள்வி நாயகனாகச் சங்கப் புலவரும்
ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வருவதைப் போல ஸ்ரீ வராக வவதாரத்தை விளக்கும் பகுதியிலேயே பாடுகிறார்:
“செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஔி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,நின் உருபுடன் உண்டி;பிறர் உடம்படுவாரா நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.”
[சிவந்த வாயை உடைய கருடனைக் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! வேள்வியாசிரியன் கூறும்
மறைமொழி நினது உருவமாகும்; வேள்வித் தூண் நீயே ஆகலான், அதன்கட் பிணிக்கப்படும் விலங்கு நினது உணவாகும்;
அவ் வேள்வியின் கண் வேத முறைப்படி அந்தணர் வளர்க்கும் வேள்வித்தீ நீ அவ் வந்தணர்
கண்கூடாகக் காணும் பொருட்டுத் தோன்றும் வெளிப்பாடாகும் — பரிபாடல், 2:60-68]

இச் செய்தியையே ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும்,

“வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே.”[ — ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 34]என்றும்,
ஸ்ரீ வால்மிகி முனிவர்,
“த்வம் யஜ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓம்கார: பராத்பர: |
ப்ரபவம் நிதனம் வா தே நோ விது: கோ பவானிதி ||”
[“நீயே யக்ஞமூர்த்தி. ’வஷட்’ என்னும் (வேள்வி நடத்துபவரால் உச்சரிக்கப்படும்) சொல் நீயே. நீயே ஓங்காரம்.
மேலானவைகளுக்கும் மேலானவன் நீயே. உன்னுடைய முதலும் முடிவும் எவரும் அறியார்.” — ஸ்ரீ வால்மிகி இராமாயணம், 6.117.20]
என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்ரீ கம்பரும்
‘மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத, எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ;இரண்டும் ஒக்கின்ற பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி!
[— ஸ்ரீ கம்பராமாயணம்: III, கவந்தன் வதைப் படலம், 47]
என்னும் விருத்தத்தில் வேள்விகளெல்லாம் ஸ்ரீ திருமால் சொரூபம் என்று பாடுகிறார்
(பரமேட்டி = பரம்பொருள்; ’பரமேஷ்டி’ எனும் வடமொழிச் சொல் திரிபு).

திருமாலின் ஆயிரம் பெயர்களை அறிவிக்கும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அத்தியாயத்திலும்,
வேள்வி முதல்வனாக ஸ்ரீ பரந்தாமனைப் பல நாமங்களில் படிக்கப்பட்டது.
இந்நாமங்களுக்கு ஸ்ரீ சங்கரர் எழுதியுள்ள உரையிலிருந்து சுருக்கமான விளக்கங்கள் பின்வருபவை.
பரிபாடல் வரிகளுக்கும் இவ்வுரைப்பகுதிகளுக்கும் உள்ள ஒற்றுமை தெளிவாக விளங்குகிறது:
இஷ்ட: (308-வது நாமம்) — வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.
ஹவிர்ஹரி: (359) — யாகத்தில் அக்கினியில் இடப்படும் அவிப்பாகத்தை (ஹவிர்பாகத்தை) எடுத்துக் கொள்பவன்.
யஜ்ஞ (445, 971) — வேள்விகளின் சொரூபமாக இருப்பவன்; வேள்வி ரூபத்தில் எல்லா தேவர்களையும் போஷிப்பவன்.
யஜ்ஞபுக் (979) — வேள்விகளில் வழங்கப்படும் அவியுணவை நுகர்பவன்.
யஜ்ஞாங்க: (974) — வராகமூர்த்தி ரூபத்தில் வேள்விகளை அங்கமாகக் கொண்டவன்.

இத்தகைய விளக்கங்களுக்கெல்லாம் அடித்தளமாக விளங்கும் தத்துவம் என்னவென்றால்,
ஸ்ரீ நாரணனே அனைத்துயிர்களுக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவனே என்பதாம்.
அங்ஙனமே, அந்தந்த தேவதைகளைக் குறித்துச் செய்யப்படும் யாகங்கள் எல்லாம் எல்லா தேவர்களுக்கும் உயிராய்,
அவர்களுக்கு உள்ளிருந்து நியமிப்பவனாக விளங்கும் ஸ்ரீ மாயவனைக் குறித்ததே என்பதாகும்.
ஸ்ரீ கண்ணன் இதை ஸ்ரீ கீதையில் தெளிவாக விளக்குகிறான். இதை,

“ஆங்கனைத்து வேள்விகளுக்கு மாராத் தியனானே
பாங்கதனி னானே பலங்கொடுப்பே — னீங்கென்னை
யிவ்வா றறியா ரிதனாலத் தத்துவத்தின்
அவ்வா நழுவுவர்சார் வற்று.”[ — ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 9.24]
என்ற ஸ்ரீ அழகிய மணவாள ஜீயரின் தமிழ் வெண்பாவிலிருந்து அறியலாம் (ஆராத்தியன் = வணங்கப்படுபவன்).
மிகவும் கடினப்பட்டுப் பொருளீட்டி யாகங்களைச் செய்தே கண்ணனை வழிபடவேண்டும் என்பதும் இல்லை;
அவன் எளிதில் அடையக்கூடியவன். அவரவர்களுக்கு இயன்ற ஒரு இலையையோ, மலரையோ, கனியையோ,
அல்லது மிஞ்சிப் போனால் சிறிது தண்ணீரையோ பக்தர்கள் தூய மனத்துடன் அவனுக்குச் சமர்ப்பித்தால்
மிகப்பெரிய பேறாகிய வீட்டின்பத்தைக் கண்ணன் தருகிறான் என்பதை,

“பத்ரேஷு புஷ்பேஷு பலேஷு தோயேஷு அக்ரீத லப்யேஷு ஸதைவ ஸத்ஸு
பக்தி-ஏக லப்யே புருஷே புராணே முக்த்யை கிமர்தம் க்ரியதே ந யத்ன”
[பத்திரம் (இலை), புஷ்பம், பழம், தண்ணீர் முதலானவைகளைக் கொண்டு பக்தி செய்வதாலேயே எளிதில்
அடையப்படுபவனாக அந்த புராண புருஷன் இருக்க, மோட்சத்தைப் பெறும் முயற்சியில் ஏனோ இறங்குவதில்லை!]
என்ற ஸ்ரீ மகாபாரத வசனம் கூறுகிறது.

ஸ்ரீ கீதையிலேயே ஸ்ரீ கண்ணனும்,

“பத்திரமும் பூவும் பழமும் புனலுமெனக்
கொத்தியலும் பத்தி யுடனுதவி — சுத்திய
தூமனத்தான் றன்ததனைத் துய்ப்பனவ னப்பத்தி
யாமனத்த தென்றுநா னார்ந்து.”[ — ஸ்ரீ பகவத் கீதை வெண்பா, 9.26]என்று உரைத்துள்ளான்.

இன்னுமொரு செய்தி இங்கு நோக்கத்தக்கதாகும். விஷ்ணுவுக்கும் வேள்விக்கும் உள்ள தொடர்பை வைத்து
சில அதிசயமான விளக்கங்களை வேதாந்த ஆச்சாரியர்கள் அளித்துள்ளனர்.
ஸ்ரீ கீதையில் (3.9), “யக்ஞத்திற்காகச் (வேள்விக்காகச்) செய்யப்படும் வினைகளைத் தவிர மற்ற கர்மங்கள்
ஒருவனைப் பிறவிக்கடலில் ஆழ்த்துபவை” என்று உள்ளது.
இங்கு ஸ்ரீ ஆதி சங்கரர், “யக்ஞம் என்று இங்கு சொல்லுவது பகவானாகிய ஸ்ரீ விஷ்ணுவையே.
’யஜ்ஞோ வை விஷ்ணு:’ என்று வேதம் கூறுகின்றதன்றோ. ஆகையால், பகவானை அடையும்/ஆராதிக்கும் பொருட்டு
செய்யப்படும் கர்மங்களைத் தவிர மற்றவை சம்சாரத்தில் ஆழ்த்தும்.” என்றே வியாக்கியானம் செய்துள்ளார்!
பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆனந்தகிரி என்னும் பண்டைய அத்வைத சம்பிரதாய ஆசாரியாரும்
“யக்ஞம் முழுமை பெறுவதன் பொருட்டு செய்யப்படும் கன்ம வினைகள் ஞானியைச் சம்சாரக் கடலில் ஆழ்த்துவதில்லை”
என்று தொடங்கும் 4.23-ஆம் ஸ்ரீ கீதை வாக்கியத்திற்கு,
“யக்ஞம் என்ற பதத்தால் குறிக்கப்படும் பகவான் ஸ்ரீ நாராயணனை, ஸ்ரீ விஷ்ணுவை, உகப்பிக்கச் செய்யப்படும் வினைகள்”
என்று தமது பாஷ்ய டீகையில் வழங்கியிருப்பதும் நோக்கத் தக்கது.
‘இறைவனை உகப்பிப்பதைத் தவிர தாழ்ந்த மற்ற பலன்களில் ஈடுபடாமல் கடமைகளை செய்து
மக்கள் நற்கதி ஏந்தவேண்டும்’ என்பதே அவர்கள் நோக்கம்.

———————-

“மா நிலம் இயலா முதல் முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய் மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!”[– பரிபாடல், 3]

சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களின் மேற்கண்ட கூற்றில், நம் ஹிந்து சனாதன தருமத்தில் சிருஷ்டி குறித்த
முக்கிய நம்பிக்கை ஒன்று இடம்பெறுகிறது. “மகா பிரளயம் முடிந்த பிறகு ஆதிக் கல்பத்திலே
பெரிய அளவதாகிய பூமி தோன்றுவதற்கு முன் பிரளய நீரின் நடுவே, வாய்மொழியாகிய வேதத்தை
உரைக்கும் பிரம்ம தேவருடன் ஒரு தாமரை மலர் தோன்றியது. மகரந்தப் பொகுட்டை உடைய அப் பெரிய தாமரை மலரை
உந்தியில் கொண்ட திருமாலது திருச் சக்கரப் படையே (இந்த உலகனைத்திற்கும்) நிழலாகிறது” என்பது இவ்வரிகள் வரையும் படிமம்.

திருமகள் கொழுநனுடைய திருநாபியிலிருந்து ஊழிக் காலங்களின் தொடக்கத்தில் ஒரு தாமரை மலர் தோன்றியதென்பதும்
அதில் நான்முகனாராகிய பிரம்ம தேவர் படைக்கப்பட்டார் என்பதும் தொன்றுதொட்டு நம் வேதங்களிலும் இதிகாச-புராணங்களிலும்
வழங்கப்பட்டு வரும் செய்தியாகும். கலையுலகம் ஓங்கியிருந்த காலங்களில் பாரதநாடெங்கிலும்,
தென்கிழக்காசிய நாடுகளிலும், சிற்பிகளும் ஓவியக் கலைஞர்களும் இப் படிமத்தைத் தம் ஆக்கங்களில் பதித்துள்ளனர்.
மேலும், இவ்விதிகாசத்தைச் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்களும் அறிந்திருந்தனர் என்பது மேற்கண்ட பாடல் வரிகள் காட்டும் செய்தி.

திருவுந்தித் தாமரையை நினைவுப்படுத்தவே ‘பத்மனாபன்’ முதலான நாமங்களும் அவனுக்கு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் ’பத்மனாப சுவாமி’ என்ற பெயருடன், “கிடந்த திருக்கோலத்துடன்” கோயில் கொண்டுள்ள
திருவுருவைப் பற்றிச் சேர வேந்தர்களைக் குறித்த ’பதிற்றுப்பத்து’ என்ற சங்கநூலிலேயே உள்ளது;
விரிவாக வேறொரு கட்டுரையில் காண்போம். இப்பொழுது பொதுவாகத் திருநாபிக் கமலம் கூறும் தத்துவத்தைச்
சங்க இலக்கியம் விளக்கும் விதத்தையும், அது வடமொழி நூல்களோடும் ஒத்திருப்பதையும் காண்போம்.

வேதப்பகுதியிலேயே நான்முகன் உட்பட உலகமெல்லாம் ஸ்ரீ நாரணனின் திருநாபிக் கமலத்தில் உண்டாயிற்று
என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளதாக ஆசாரியார்களும் உரைகளில் குறிப்பிடுகின்றனர்:

“அஜஸ்ய நாபாவத்யேகம் அர்பிதம் யஸ்மின் விச்’வானி புவனானி தஸ்து:”
என்பது ரிக்வேதத்தில் விஸ்வகர்மா சூக்தத்தில் (10-வது மண்டலம், 82-வது சூக்தம்) வரும் மந்திரம்.
“பிறப்பில்லாதவனுடைய நாபியிலே ஒன்று உண்டானது. அதில் உலகனைத்தும் நிலைபெற்றன.” என்பது இதன் பொருள்.
சிருஷ்டியை விளக்கும் மிக முக்கியமான சூக்தத்தில் இம்மந்திரம் வருகிறது.
ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர் தாம் பண்ணிய ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில், அத்தியாயத்தின் மூலப்பகுதியில்
“அப்ரமேயோ ஹ்ருஷீகேச’: பத்மநாபோ (அ)மரப்ரபு:”
எனுமிடத்தில் வரும் ’பத்மனாபன்’ என்ற நாமத்திற்கு, “சர்வ ஜகத் காரணமாகிய தாமரை மலர் எவன் நாபியில் இருக்கிறதோ,
அவன் பத்மனாபன்” என்ற விளக்கத்தைக் கூறி அங்கேயே மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தைப் பிரமாணமாக எடுத்துள்ளார்.

ஆதி சங்கரரின் இவ் வேத விளக்கத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் ஸ்ரீ மகாபாரதத்தில் ஒரு சுலோகம் வருகிறது.
அம்புப் படுக்கையில் கிடந்த வண்ணம் ஸ்ரீ பீஷ்மர் ஸ்ரீ கண்ணனுக்குச் செய்த வாழ்த்து பற்றி முதல் பகுதியில் கண்டோம்.
அவ்வாழ்த்தில் பலவிடங்கள் வேத உபப்பிரம்மணமாக (அதாவது, வேதத்தின் பொருளைத் ஐயமற உரைப்பதாக)
வருவதைப் பற்றியும் பார்த்தோம். நாம் எடுக்கப்போகும் இச்சுலோகமும் அப்படித்தான் —
மேற்கண்ட விஸ்வகர்மா சூக்த மந்திரத்தின் பொருளை விளக்குகிறது:

“அஜஸ்ய நாபாவத்யேகம் யஸ்மின் விச்’வம் ப்ரதிஷ்டிதம் |
புஷ்கரம் புஷ்கராக்ஷஸ்ய தஸ்மை பத்மாத்மனே நம: ||”[– ஸ்ரீ மகாபாரதம், 12.47.40]

“பிறப்பில்லாத தாமரைக்கண்ணனுடைய நாபியிலிருந்து தோன்றிய தாமரை உலகத்திற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிற்று.
அந்தத் தாமரை வடிவில் உள்ள அவனுக்கு வணக்கங்கள்” என்பது இதன் பொருள்.
இச் சுலோகம் சொல் அமைப்பிலேயே வேத மந்திரத்துடன் ஒத்திருப்பதும் நோக்கத்தக்கது.

அதே வேதமந்திரத்தை விளக்கும் பின்வரும் ஸ்கந்த புராணச் சுலோகமானது,
த்வைத மத ஆசாரியாராகிய மத்வரால் ப்ரஹ்ம சூத்திர விளக்கவுரையில் பிரமாணமாக எடுக்கப்பட்டுள்ளது:

“அஜஸ்ய நாபா4விதி யஸ்ய நாபேர்பூச்ச்ருதே: புஷ்கரம் லோகஸாரம் |
தஸ்மை நமோ விஸ்தஸஸ்த விச்’வபூதயே விஷ்ணவே லோககர்த்ரே ||”

[பிரபஞ்சத்தை உள்ளடக்கிய தாமரையானது, ’அஜஸ்ய நாபௌ’ (பிறப்பற்ற பெருமான் திருவுந்தியிலே)
எனத் தொடங்கும் வேத வாக்கியத்தாலே எவனுடைய நாபியிலிருந்து உண்டானதாக அறியப்படுகிறதோ,
வெளிக் காணும் எல்லா உலகையும் செல்வமாகக் கொண்ட உலகங்களுக்குக் காரணமான
அந்த ஸ்ரீ விஷ்ணுவுக்கு நமஸ்காரம். — ஸ்ரீ ப்ரஹ்ம சூத்திர மாத்வ பாஷ்யம் 1.1.1]

இவ்விளக்கங்களுடன் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர்கள் பாடும் பின்வரும் வரிகளையும் ஒப்பிட்டுப் படிக்கலாம்:

“பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரி கமல வுந்தியுடை விண்ணவனை”[– சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், ஆய்ச்சியர் குரவை]

இவ்வாறு பிரமனையும் படைத்த திருமாலின் உந்தித் தாமரை மலர் பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகிப் பெரிதாகக் காணப்பட்டது.
இந் நினைவாலேயே, இவ்வுலகில் பிரம்மாண்டமாக அழகுடன் விரிந்து காணப்படுவனவற்றிற்கும்
அம் மலரையே உவமையாகக் கூறினர் சங்கப் புலவர்கள்:

1) பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப்படையில், ஸ்ரீ காஞ்சி நகரத்திற்கு
ஸ்ரீ திருமாலின் உந்தித் தாமரை உவமையாகக் கூறப்பட்டது:

“நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ்,
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்,
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி”[– பெரும்பாணாற்றுப்படை, 401-405]

(நெடியோன் = திருமால், கொப்பூழ் = வயிறு, பொகுட்டு = பூவின் இடையில் காணப்படும் மகரந்தக் கூட்டம்)

2) இதுபோலவே, மதுரையைப் பற்றிய பரிபாடல் திரட்டுப் பகுதியும் இதே உவமையைக் கூறிற்று:

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.”[– பரிபாடல் திரட்டு, 7]

இப்பாடலைப் பாடிய புலவர், தாம் வாழும் ஊரான மதுரையைத் திருமாலின் திருவுந்தியிலே தோன்றி
மலர்ந்த தாமரைப் பூவுடன் ஒப்பிடுகிறார். அந்நகரத்தில் உள்ள தெருக்கள் பிரமனைத் தாங்கும்
அத்தாமரை மலரின் இதழ்களைப் போல வரிசையாக உள்ளனவாம். பாண்டியநாட்டு ராஜதானியாகிய
அந்நகரத்தின் நடுவே உள்ள அரச அரண்மனையானது அப்பூவின் நடுவில் உள்ள பொன்னிற மகரந்தப் பொகுட்டினை ஒத்ததாம்.
அந்நகரிலுள்ள மக்கள் மகரந்தப் பொடித் துகள்களைப் போல காணப்பட்டனராம்.
அம்மன்னனைப் பாடிப் பரிசில்பெற வருகின்ற புலவர்கள் மலரில் காணப்படும் மகரந்தத்தையும் தேனையும்
பருகப் பறந்து வரும் வண்டுகளைப் போல காணப்பட்டனராம்.

அத்துடன், அத் தாமரை மலரின் கண் தோன்றிய பிரமனது வாயில் பிறந்த நான்கு வேதங்களையும்,
அவ்வூரில் வாழ்ந்து வந்த அந்தணர்கள் அதிகாலையில் பாராயணம் பண்ணுகிறார்களென்று
மேற் கண்ட சங்கநூற் பாடல் வரிகள் கூறுகின்றன.
இவ்விடத்தில், “பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்து நான்கு வேதங்கள் பிறந்தன” எனும்
புராணச் செய்தியையும் காணலாம் [ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.5.48; ஸ்ரீ பாகவத புராணம், 3.12.34-37].

இப்படி உவமைகள் போய்க் கொண்டிருக்க, ஸ்ரீ திருமாலின் அவயவங்களுக்கு எதை அளவையாகச் சொல்ல?
வேறிடத்தில் புலவர்கள்,

“‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழொடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;”
[மாயக்கண்ணனே! ’இவரைப் போல நீ இருக்கிறாய், இத்தகைய தொழில்களை உடையாய்’ என்று கூறும்
வண்ணம் வேறு ஒன்றைக் காணாமையால், உயிர்கட்கு முதல்வனாகிய – பீதாம்பரம் அணிந்த –
வலக்கையில் சக்கரம் கொண்ட உன்னையே, உனக்கு உவமையாகக் கூறுவோம். — பரிபாடல், 1]
என்று “அவனுக்கு அவனே உவமையாவான்” கூறுகையால்,
“நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை
அன்ன நாட்டத்து அளப்பரியவை;”
[பெருமானே! உன்னிடத்தே தோன்றிய அடர்த்தியான இதழ்களைக் கொண்டுள்ள தாமரையைப் போன்ற
அழகிய கண்களை உடையாய் — பரிபாடல், 4] என்றனர்.

விஸ்வகர்மா சூக்தம் தவிர இன்னும் சில வேத வாக்கியங்கள்
நான்முகனைப் படைத்த உந்தித் தாமரையின் தத்துவத்தைக் கூறுகின்றன.
விரிவிற்கந்சி ஒரு உதாரணத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
கொப்பூழ்த் தாமரை பற்றிய குறிப்பு மூல மறைநூலாகிய வடமொழி வேதத்திலேயே உள்ளமையால்,
“வேதமாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரை” என்றும் பழந்தமிழ்ப் பெரும்புலவர் பாடியுள்ளனர்:

“‘வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும்
நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை.”
[திருமாலே! வேத/உபநிடதங்களாகிய ஓடைநீரில் மலர்ந்த தாமரைப்பூவினுள் பிறந்தவனும்,
அவன் தந்தையும் நீயே என்று அந்தணர்கள் ஓதும் மறை மொழிகிறது — பரிபாடல், 3]
மேற்கண்ட வரிகளில் நான்முகக் கடவுளாகிய பிரமனைத் திருமாலுடன் அபேதமாகப் படிக்கப்படுவதும் நோக்கத்தக்கது.
முதற் பரிபாடலிலும் இதே பொருளையுடைய வரியொன்று உள்ளது.
’உலகத்தில் காணப்படும் காரியப் பொருள்களனைத்தும் திருமாலே.
நிகழ்வதெல்லாம் அவ் விறைவனின் லீலைகளே’ என்று படித்துவிட்டு இறுதியில்,
“நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ”
[நன்மை முழுதும் பொருந்திய குற்றமற்ற மெய்யுணர்வினை அளிக்கும் வேதமும்,
மலரின் மேலிருப்பவனாகிய பிரமனும், அப் பிரமனுடைய தொழிலாகிய படைப்புத்தொழிலும் நீயே — பரிபாடல், 1:45-46]
என்று சங்கப் புலவர்கள் பாடுகிறார்கள்.

ஸ்ரீ கம்பரும்,

“‘ஆதிப் பிரமனும் நீ!
ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு
அப்பால் உண்டாகிலும் நீ!
சோதிச் சுடர்ப் பிழம்பும் நீ ‘
என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால் வெள்காரோ
வேறு உள்ளார்?”[– ஸ்ரீ கம்ப ராமாயணம், ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம், 45]என்றார்.
இன்னொரு விதமாகப் பார்த்தால், மேற்கண்ட வரிகள் பிரபஞ்ச சிருஷ்டியில்
காரியப் பொருளுக்கும் காரணப் பொருளுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன.
திருமால் காரண நிலை; நான்முகன் முதலான சித்துக்களாகிய ஆத்மாக்களையும், அசித்துக்களாகிய ஜடப்பொருள்களையும்
அடக்கியுள்ள பிரபஞ்சமானது காரிய நிலை. பொதுவாகப் பார்த்தால் காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருப்பதாலும்,
குறிப்பாகப் பார்த்தால் நாரணனே பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்து உயிருக்கு உயிராய் இருப்பதாலும்
காரியமாகிய பிரமனைக் காரணமாகிய திருமாலோடு அபேதமாக,
“தாமரைப் பூவினுட் பிறந்தோனும் தாதையும் நீ” என்று பரிபாடல் வரிகள் இயம்பின.
இப்படிப் பொருள் கொள்ளாமல் நேரிடையாக திருமாலும் பிரமனும் எல்லா வகையிலும் ஐக்கியம் என்று கொண்டால்,
பரம்பொருளின் அருளுக்கு உட்பட்டவராகவும், காரியநிலையிலுள்ள ஒருவராகவும் பிரமனைக் குறித்து வரும்
பற்பல வேத வாக்கியங்கள் அர்த்தமற்றுப் போய்விடும்;
காரணப் பொருளுக்கே உண்டான தனிப்பட்ட குணங்கள் பரம் பொருளுக்கு உண்டு எனும்
வேத வாக்கியங்கள் கேள்விக் குறிகளாகி விடும்.

நான்முகனைப் படைக்கும் திருமாலது தனிப் பெருமையை,
“பிரமனையும் படைத்த ஆதி கர்த்தாவே!”, “’பிதாமஹ’ என்று சொல்லப்படும் பிரமனுக்கும்
தந்தையாகிய உன்னை ’பிரபிதாமஹ’ என்று சொல்லலாம்” [– கீதை, 11.37,11.39]
என்று அர்ஜுனனும் கீதையில் கண்ணனைத் துதிக்கையில் செப்பினான்.
ஸ்ரீ கௌசல்யா தேவியை வர்ணிக்கும் பொழுது ஸ்ரீ கம்பர்,
“இருந்த அந்தணனோடு எல்லாம் ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை”[– ஸ்ரீ கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், தைலம் ஆட்டுப் படலம், 62]
என்று பாடுகிறார் (இருந்த அந்தணன் = நான்முகக் கடவுள்).

ஸ்ரீ திராவிட வேதமாகிய பிரபந்தத்திலும்,

தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக”[– ஸ்ரீ திருவாசிரியம், 1] என்று ஸ்ரீ நம்மாழ்வாரும்,

“பூவலர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற,
கோவலர் கோவிந்தனை” [– ஸ்ரீ பெரிய திருமொழி, 9.9.1 ]என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்,

“என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்”[– ஸ்ரீ நாச்சியார் திருமொழி, 102]
என்று ஸ்ரீ ஆண்டாளும்,
இன்னும் பல ஆழ்வார்களும், இப்பெருமையைப் பாடியுள்ளனர்.

படைக்கும் கடவுளாக பிரமனையும் படைத்தவனாகக் காணப்படுவதால் ஸ்ரீ திருமால் சகல காரணங்களுக்கும்
காரணனாகிறான். இக்காரணத்தால்,

“நமோ நமஸ்தே அகில காரணாய
நிஷ்காரணாய அத்புத காரணாய”[– ஸ்ரீமத் பாகவதம், 8.3.15]

என்று ஸ்ரீ கஜேந்திராழ்வான் முதலைப் பிடியிலிருந்து விடுபட “ஆதி மூலமே” என்று ஸ்ரீ கண்ணனை அழைக்கும் போது கூறுகிறான்.
உலகத்திலுள்ள காரணப் பொருள்கள் எல்லாவற்றுக்கும், அந்தந்த பொருட்களுக்கு மேலான ஒரு காரணப்பொருள் காணப்படுகிறது:
குடத்துக்குக் காரணம் மண்ணும் குயவனும், ஆனால் அம்மண்ணுக்கும் குயவனுக்கும் வேறு காரணப்பொருள் இருக்கிறது.
இப்படி காரிய-காரண தொடர்ச்சி போய்க்கொண்டிருக்க, ஒரே ஒரு காரணப்பொருள் மாத்திரம் தனக்கு மேல்
ஒரு காரணம் இல்லாதபடி தனித்து நிற்கிறார் (‘நிஷ்காரணாய’).
அவர் எல்லாவற்றுக்கும் மூல காரணமாகிறார் (‘அகில காரண காரணாய’).
இப்பெருமைகள் வேறெந்த காரணப் பொருளுக்கும் காணப் படாமையால்,
அவரே ’அற்புத காரணன்’ (‘அத்புத காரணாய’) என்று ஸ்ரீ கஜேந்திரனால் அழைக்கப்படும் ஸ்ரீ திருமால்.

——————-

தெய்வ வடிவத்தை ஆலயங்களில் வழிபடுவது நம் பாரத நாடெங்கிலும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரப்படும் வழக்கமாகும்.
அங்கு பிரதிட்டையான விக்கிரகத்தை ‘வெறும் கல்’ என்றோ, ‘எண்ணங்களைச் சீர்ப்படுத்திக் குவிக்கத் தேவையானால்
உபயோகிக்கத்தகதொரு வெறும் கருவி’ என்றோ, ‘பக்குவமடையாத ஆன்மாக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட படிநிலை’ என்றோ பார்க்காமல்,
‘தெய்வம் தன் அடியவர்களுக்காக எடுத்துக்கொண்டிருக்கும் எளிய வடிவம்’ என்ற கண்ணோட்டத்துடன் அணுகுவதே
சான்றோர்களால் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.
ஸ்ரீ ஆதி சங்கரரும் ப்ரஹ்ம சூத்திர உரையில் ஸ்ரீ பாஞ்சராத்திர அதிகரணத்தில் (2.2.42-2.2.45 சூத்திரங்கள்)
“இறைவனை அபிகமனம் (கோயிலுக்குச் செல்லுதல்) முதலான வழிமுறைகளால் ஆராதனம் செய்வது
அனைவர்க்கும் ஏற்கத்தக்கதே; இது சுருதி-ஸ்மிருதி சித்தமாகும்” என்று கூறியுள்ளார்.

இசுலாமியக் கொடுங்கோல் மன்னர்கள் நம் கோயில்களைச் சூறையாடுவதையும், நம் சனாதன தருமத்தை அழிப்பதையும்
நோக்கமாகக் கொண்டு படையெடுப்புகள் நிகழ்த்தியது அனைவரும் அறிந்த வரலாறு.
அத் தருணங்களில் சான்றோர்கள் பலர் மூல மூர்த்திகளையும் உற்சவ மூர்த்திகளையும் காப்பாற்ற உயிரையே பணயம் வைத்தனர்;
பெரும் அல்லல்களையும் சந்தித்தனர். “வெறும் கற் சிலை. இது போனால் வேறு செய்து கொள்ளலாம்” என்ற
கொள்கையை உடையவர்களாக இருந்திருந்தால், அப் பெரியோர்கள் அத் தியாகங்களைச் செய்திருப்பார்களா
என்பது அனைவரும் சிந்திக்கத்தக்கது.

தத்துவ ஆழம் மிக்கதும் மிகுந்த இன்பம் தரக்கூடியதுமாகிய உருவ வழிபாட்டின் அருமை பெருமைகள்
அன்னிய மதத்தவர்கள் மனதிற்கு எட்டாக்கனி; கருத்துச் செறிவும், பிரமிக்கத்தக்க அழகும், பண்பட்ட கலையுணர்வும் சேர்ந்த
இந்நம்பிக்கையின் மேன்மையை உணர வாய்ப்பும் இல்லாமல்,
அதனை ‘அறிவற்ற பழங்குடிக் கலாச்சாரம்’ என்றெல்லாம் தூற்றுகின்றனர் அந்தோ! இத்தகைய சாரமற்ற, கலாரசனையற்ற,
தூற்றுதல்களுக்கெல்லாம் மாறாக, வேத, வேதாந்த, இதிகாச-புராணங்களில் வல்லவர்களாக விளங்கிய
நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஆலயங்கள் மீது எத்தகைய உயர்ந்த அபிமானத்தை வைத்திருந்தனர் என்பதைக்
காட்டுவது இக் கட்டுரையின் ஒரு நோக்கம். இத் தொடரின் மற்ற பகுதிகளைப் போல,
சங்க காலம் தொட்டு ஸ்ரீ திருமால் சமயம் சார்ந்த செய்திகளை இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ திருமால் கோயில் கொண்டுள்ள திருமேனிகளை ‘அர்ச்சாவதாரங்கள்’ என்றே அழைக்கின்றனர்.
ஸ்ரீ திருமாலின் ஐந்து நிலைகளாகிய ‘பரம்’, ‘வியூகம்’, ‘விபவம்’, ‘அந்தர்யாமி’, ‘அர்ச்சை’ என்பனவற்றில்
ஐந்தாவதாகச் சொல்லப்படுவது. இவ்வைந்து நிலைகளையும் சுவாமி ஸ்ரீ நம்மாழ்வார்,

“விண் மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!”[ஸ்ரீ திருவாய்மொழி, 6.9.5] எனும் பாசுர வரிகளில் காட்டியுள்ளார்.
இதில் ‘விண்மீதிருப்பாய்’ என்பது பர வாசுதேவனாக ஸ்ரீ வைகுண்டத்தில் கோயில் கொண்டுள்ள பர நிலையைக் குறிக்கிறது;
‘மலைமேல் நிற்பாய்’ என்பது திருவேங்கடம் முதலான திருத்தலங்களில் அர்ச்சை நிலையைக் குறிக்கிறது;
‘கடல் சேர்ப்பாய்’ என்பது திருப்பாற்கடலில் அனந்த சயனக் கோலத்தில் உள்ள வியூக நிலையைக் குறிக்கிறது;
‘மண்மீதுழல்வாய்’ என்பது இராமன் கண்ணன் முதலான வடிவங்களைக் குறிக்கிறது; இதுவே விபவ அவதார நிலையாகும்.
‘இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்’ என்பது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து, உயிருக்குயிராய் அனைத்தையும்
ஆள்பவனாக விளங்கும் அந்தர்யாமி நிலையைக் குறிக்கிறது.

மேற்கண்ட பாசுரமும் வடமொழி வேதவாக்கியம் ஒன்றை ஒட்டியே வருகிறது. அது தைத்திரீய உபநிடதத்தின்
ஸ்ரீ நாராயணீய அனுவாகத்தில்
(சிலர் இதை ‘ஸ்ரீ மகா நாராயண உபநிஷத்’ என்றும், சிலர் ‘ஸ்ரீ யாக்ஞிக உபநிஷத்’ என்றும் அழைக்கின்றனர்) உள்ள,
“அம்பஸ்ய பாரே பு₄வனஸ்ய மத்₄யே நாகஸ்ய ப்ருஷ்டே மஹதோ மஹீயான் |
சு’க்ரேண ஜ்யோதீஹும்ஷி ஸமனுப்ரவிஷ்ட: ப்ரஜாபதிச்’ சரதி க₃ர்பே₄ அந்த: ||”–என்னும் முதல் மந்திரம்.
இம்மந்திரமானது பதத்திற்குப் பதம் மேற்கண்ட ஸ்ரீ திருவாய்மொழிப் பாசுரவரிகளுடன் உடன்படுகிறது.
ஸ்ரீ நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அழைப்பது வெறும் மிகைப்படுத்திப் புகழ்வதற்காக ஏற்பட்ட அடைமொழியன்று;
இவ்வாறு நூற்றுக் கணக்கான பாசுரங்களில் வடமொழி வேதாந்தத்தின் உட்பொருளை உண்மையிலேயே தமிழில் செய்திருக்கிறார் என்பதற்காக.

பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சையாகிய இவ்வைந்து இறைவடிவங்களில் ஒவ்வொன்றும்
சிறப்பானவை, முழுமையானவை. எனினும், அர்ச்சை நிலையானது அனைவராலும் எளிதில்
அடையத்தக்கதாக – எளிமையின் சிகரமாக இருப்பதனால் மற்ற நான்கிற்கும் இல்லாத
தனிப்பெரும் பெருமை உள்ளதாகப் பெரியோர்கள் பகர்வர். அனுபவத்திற்காகச் சில பெரியோர்கள் இப்படி விளக்கம் கூறுவர்:
(1) பிறவிப் பிணி நீங்கப் பெற்று முக்தி நிலையை ஏந்தியவர்கள் வாழும் ஸ்ரீ பரம பதத்தில், பிறவி நோய்க்கு மருந்தாகிய
ஸ்ரீ திருமால் ஸ்ரீ பர வாசுதேவனாகக் கோயில் கொண்டிருப்பது, வற்றாத கடலுக்கு நீர்ப்பாசனம் செய்வதைப் போன்றதாம்.
(2) ஸ்ரீ பாற்கடலில் வியூக மூர்த்தியாகப் பள்ளி கொண்டிருக்கும் வடிவமானது நல்வினைப் பயன்களால்
உயர்பதவி ஏந்தியுள்ள தேவர்கள், முனிவர்கள் முதலானோர்க்கு மட்டும் அடையக்கூடியது.
(3) அந்தர்யாமி நிலையானது எங்கும் வியாபித்திருக்கும் தன்மையாகும். இந்நிலையானது நமக்கு மிக அருகில் –
ஏன், நமது இதயத்திலேயே – இருந்தாலும், அதுவும் யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் முனிவர்களுக்குமே எட்டக் கூடியது.
“முழுமதி முகத்தவனின் வடிவழகையும் கம்பீரத்தையும் தம் இதயத்தாமரை தன்னில் கண்டு பிரம்மானந்தத்தை அடையும்
மகானுபாவர்களுக்கு எனது வணக்கங்கள்” என்று தியாகப் பிரம்மம் பாடுவதிலிருந்து
அந்த அந்தர்யாமி நிலையும் சாமானியர்களுக்கு எட்டாக்கனி என்றே விளங்குகிறது.
(4) விபவ அவதாரம் என்பது ஸ்ரீ இராம ஸ்ரீ கிருஷ்ணாதி அவதாரங்களைக் குறிக்கும்.
என்றைக்கோ பெருக்கெடுத்து ஓடியிருந்தாலும் இன்றைக்கு நாம் நேரிடையாகப் பயனடையாதபடி வற்றியுள்ள காட்டாறு போன்று,
வேறு யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு மாத்திரமன்றோ விபவாவதாரத்தை நேரில் கண்டு கூடிக் குலாவும் அனுபவமும் கிட்டியது!
(5) அர்ச்சை நிலை என்பது இன்று வரையிலும் என்றென்றும் அனைவருக்கும் காட்சி தரும் மிக எளிய நிலையாகும்.
ஸ்ரீ இராமன், ஸ்ரீ கண்ணன் போன்ற அவதாரங்கள் என்றைக்கோ ஓடிய காட்டாறு என்றால்,
பல்வேறு தலங்களில் நமக்கென்று காட்சி தரும் அர்ச்சாவதாரங்களானவை அக்காட்டாற்றின் மடுக்களில்
இன்றைக்குத் தேங்கியிருந்து பல விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் கோடைக்காலமாகிய கலியுகத்தில்
குளிர்ச்சி தரும் ஊற்றுநீர் போன்றதாகும்.
ஆகையால், பரப் ப்ரஹ்மத்தின் பரிபூரணமான வடிவம் இந்த அர்ச்சை மூர்த்தி வடிவமே என்பது பெரியோர்கள் துணிவு.

“எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருளைக் கோயில் கருவறையில் ஒரு சிறிய உருவமாகக் காண நினைப்பது சரியா?”
என்ற ஐயம் பலருக்கு எழக் கூடும். பரம் பொருள் தன் சொரூபத்திற்கு – இலக்கணத்திற்கு ஏற்றவாறு எங்கும் நீக்கமற
முழுமையுடன் நிறைந்திருப்பதற்கு “பொதுப் படர்தல்” என்று பெயர்.
எங்கும் நிறைந்துள்ள பொழுதும் மெய்யடியவர்கள் கல்லிலும் மரத்திலும் உலோகத்திலும் தாம் விரும்பும் மூர்த்தியை
அமைத்து வழிபட விரும்பும் பொழுது அவ்வுருவில் இறைவன் மறுபடியும் தன் கலியாண குணங்களுடன் இறங்கி வந்து,
அதை சுத்த சத்துவமாக மாற்றித் திருமேனியாகவும் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு “சிறப்புப் படர்தல்” என்ற பெயருண்டு.
“பொதுப் படர்தல்” வகையைச் சேர்ந்தவைகளுக்கு முக் குணங்களின் தாக்கமும் அதனால் விளையும் குறைபாடுகளும் உண்டு;
ஆயினும் “அங்கும் பரம் பொருள் உள்ளது” என்ற மனோபாவத்துடன் அவ்வப் பொருள்களுக்கு ஏற்றவாறு
தக்க மரியாதையைத் தருவது அவசியமே. ஆயினும், வழிபடத்தக்க – பூஜிக்கத்தக்க உருவங்கள் என்பது
“சிறப்புப் படர்தல்” வகையைச் சேர்ந்தவையே; அவற்றிற்கு முக் குணங்களின் சம்பந்தமில்லை.
(வட மொழியில் இவ்விரண்டு வகையான படர்தலுக்கும் “சாமானிய வியாப்தி“, “விசிஷ்ட வியாப்தி” என்று பெயர்.
இவ்விளக்கம் இக்குறும்படத்திலுள்ள சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்டது.)

ஸ்ரீ கோயில்களில் உள்ள அர்ச்சை வடிவங்கள் சுத்த சத்துவ மயமானவையே என்ற நம்பிக்கை
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மட்டும் அல்ல.
ஸ்ரீ நாராயண பட்டரும் ஸ்ரீ நாராயணீயத்தின் முதலிரண்டு சுலோகங்களில் இதை வலியுறுத்தியுள்ளார்:

“ஸாந்த்₃ரானந்தா₃வபோ₃தா₄த்மகம் அனுபமிதம் காலதே₃சா’வதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃ம-ச’த-ஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமானம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்த்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்-தாவத்₃-பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவனபுரே ஹந்த பா₄க்யம் ஜனானாம் ||”–ஸ்ரீ நாராயணீயம், 1.1-

[நிறைந்த ஆனந்த மயமானதும், ஞான மயமானதும், ஒப்பில்லாததும், இடம், காலம் முதலிய வரையறை களுக்குள் உட்படாததும்,
இரு வினைகளால் விளையும் களங்கங்களிலிருந்து என்றைக்கும் விடுபட்டதும், நூறாயிரம் வேத வாக்கியங்களாலும் தெளிந்து
அறிய வொண்ணாததும், வீட்டின்பத்தை அளிக்க வல்லதுமாகிய ஸ்ரீ ப்ரஹ்ம தத்துவமானது எளியோர்க்கும் கிட்டும்படியாக,
கண் கூடாக, ஸ்ரீ குருவாயூரில் நின்று மிளிர்கிறது. என்ன பாக்கியம் செய்தோம் ஜனங்களாகிய நாம்! — ]

ஸ்ரீ நாராயணீயத்திற்கு உரை எழுதிய ‘ஸ்ரீ தேச மங்கள வாரியார்’ என்பவர் முதல் சுலோகத்திற்கு விளக்கம் எழுதும் பொழுது
ஸ்ரீ குருவாயூரில் உள்ள அர்ச்சை விக்கிரகத்தைப் “ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்ய,
ஸ்ரீ குருவாயூரில் மிகத் தெளிந்த சுத்த சத்துவ மயமான திருமேனியுடன், சகல ஜனங்களின் கண்களுக்கும் எட்டும்படியாக
இறங்கி வந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இத்தகைய அபிமானத்துடன் ஸ்ரீ திருமாலை ஸ்ரீ கோயில்களில் பிரதிட்டை செய்து பழந்தமிழர்கள் ஆராதித்து
வந்துள்ளமை சங்க இலக்கியங்கள் கூறும் செய்தி.

“அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே”[– பரிபாடல், 4:66-71] என்பன சங்க இலக்கியத்தில் உள்ள வரிகள்.
ஸ்ரீ திருமால் வெவ்வேறு பெயர்களுடன் அடியவர்கள் விரும்பும் வண்ணம் ஸ்ரீ கோயில் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

இதில் “நல் யாற்று நடுவும்” என்னும் பகுதி ஸ்ரீ ரங்கத்தையும்,
“கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பது ஸ்ரீ திருவேங்கடத்தையும் (ஸ்ரீ திருப்பதி) குறிப்பதாகச் சில அறிஞர்கள் கொள்வர்.
பரிமேலழகர் உரையில் “ஆற்றிடைக் குறையும்” என்று காணப்படுகிறது (குறை = சிறிய தீவு).
“கால் வழக்கு அறு நிலைக் குன்றம்” என்பதற்கு “காலத்தால் சேர்க்கப்பட்ட முன்வினைகளை அறுத்து
முக்தி நிலையை அளிக்கும் குன்றம்” என்று பொருள் கொண்டால் திருவேங்கடத்தையும் குறிக்கிறது எனலாம்.

ஸ்ரீ கம்பரும்,
‘கோடு உறு மால் வரை யதனைக் குறுகுதிரேல், உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்;’[– ஸ்ரீ கிட்கிந்தா காண்டம், நாட விட்ட படலம், 29]
என்ற பாடலில் ஸ்ரீ சுக்கிரீவன் வானரர்களைச் சீதையைத் தேடுமாறு அனுப்பும் பொழுது,
“நீங்கள் ஸ்ரீ திருவேங்கட மலைக்கு மாத்திரம் போகாதீர்கள். அங்கு சென்றால் முக்தி நிலை கிடைத்து விடும்.
நீங்கள் அந்நிலையைப் பெற்று விட்டால் ஸ்ரீ சீதையை யார் தேடுவது?” என்று நகைச்சுவையாகப் பாடுகிறாரன்றோ.

மேலும், ‘பனம்பாரனார்’ என்னும் பழந்தமிழ்ப் புலவர் பாடியுள்ள தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தில்
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்” என்று வருமிடத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியரும்,

“நிலங் கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை”
என்று விளக்கியுள்ளமையும் நோக்கத்தக்கது.
இங்கு ஸ்ரீ திருமால் ஸ்ரீ வாமன அவதாரத்தில் மகாபலியிடம் சென்று உலகனைத்தையும் ஈரடியால் அளந்த புராணத்தை
“நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்” எனும் சொற்களால் நினைவூட்டுகிறார்.

இத்தொடரின் இரண்டாம் பகுதியில் ஸ்ரீ உறையூரில் பங்குனி உத்திர விழா நடந்து வந்ததைப் பற்றியும்
சங்க நூல் குறிப்புகள் இரண்டைக் கண்டோம். இத்தகைய சான்றுகளில் சற்றே ஊகித்துத் தான் ஸ்ரீ திருமால் ஸ்ரீ கோயில்
கொண்டுள்ள தலங்களைக் குறிப்பதாக அறிகிறோம். ஆகையால் இது பற்றி நியாயமான கருத்து வேற்றுமையும் ஐயங்களும் எழலாம்.
எனினும் சிலப்பதிகாரத்தில் மிகத் தெளிவாக இவ்விரு தலங்களில் வழிபாடு சிறப்புற்று இருந்தமைக்குச் சான்று கிடைக்கிறது.

மதுரைக் காண்டத்தின் காடு காண் காதையில் கோவலன் மாங்காடு சென்றிருந்த பொழுது அங்கு வடநாட்டைச் சேர்ந்த
முதிய வைதிகர் ஒருவரைக் கோவலன் சந்திக்கிறான். அவரை “எதற்குத் தென்னகம் வந்தீர்?” என்று கோவலன் வினவ, அதற்கவர்:

“‘நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்ததுபோல,
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல்
பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த,
விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தி,
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்” [ — சிலப்பதிகாரம், 11.35-41]

(துருத்தி = ஆற்றின் நடுவில் உள்ள தீவு; திரு அமர் மார்பன் = இலக்குமி தேவியார் அமர்ந்திருக்கும் திருமார்பை உடையவன்;
கிடந்த = சயனித்த)என்ற வரிகளில் தான் ஸ்ரீ திருவரங்கத்தில் ஸ்ரீ திருமால் பள்ளி கொண்ட கோலத்தையும்,

“வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை-
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி,
இரு மருங்கு ஓங்கிய இடை நிலைத் தானத்து,
மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு,
நல் நிற மேகம் நின்றது போல-
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி,
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு,
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்-
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன்” [ — சிலப்பதிகாரம், 11.42-55]
(பகை அணங்கு ஆழி = பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் சக்கரப்படை; மின்னுக் கோடி = மின்னல்)
என்ற வரிகளில் ஸ்ரீ திருவேங்கடத்தில் அவன் நின்ற கோலத்தையும் கண்குளிரக் காண்பதற்காகவே தமிழகம் வந்திருப்பதாகக் கூறுகிறார்.

“மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு நல் நிற மேகம் நின்றது போல” என்னும் வரிகளில்,

“நீல தோயத₃ மத்₄யஸ்த₂ வித்₃யுல்லேகைவ பா₄ஸ்வர:” [ — ஸ்ரீ நாராயண சூக்தம்]
என்று வேதம் ஸ்ரீ திருமாலுக்குக் கூறும் உவமையைத் தமிழாக்கம் செய்கிறார் இளங்கோ.

மேற்கண்ட சிலப்பதிகாரப் பாடல் வரிகளிலிருந்து ஆலய வழிபாடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கும்
முன்பிருந்தே பெரிதாகச் சிதறல் சிதைவுகள் ஏதுமில்லாமல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளமைக்குத்
தெளிவான சான்று கிடைக்கிறது. இத்தகைய சங்க கால / சங்கம் மருவிய கால இலக்கியச் சான்றுகள் மேலும்
சிலவற்றை விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்.

———————-

ஸ்ரீ திருவரங்கம், ஸ்ரீ திருமலை ஆகிய இரண்டு தலங்களோடு மாத்திரம் அல்லாமல், தமிழகத்தில் மேலும் பல
ஸ்ரீ வைணவத் திருத்தலங்கள் சங்ககாலத்திலேயே பிரபலமான வழிபாட்டுத் தலங்களாக விளங்கியிருந்தன. அத் தலங்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.

ஸ்ரீ திருமாலிருஞ்சோலை (மாலிருங்குன்றம்):
ஸ்ரீ திருமாலிருஞ்சோலை–பேச்சு வழக்கில் “ஸ்ரீ அழகர் கோயில்” எனும் புகழ் பெற்ற ஸ்ரீ திருமாலிருஞ்சோலையானது,
பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் பழமையிலும் பெருமையிலும் குறைவிலாத் தலமாகும்.
சங்ககாலத்தில் இத்தலத்தில் ஸ்ரீ பலராமனுக்கும் கோயில் இருந்ததாகப் பரிபாடலிலிருந்து அறிகிறோம்.
இம்மலையும் அதைச் சார்ந்த கோயிலும் தொன்றூதொட்டு இன்றுவரை மக்களை ஈர்த்திருக்கிறது.
இது பல இலக்கியக் குறிப்புகளிலிருந்து புலனாகிறது. டாக்டர். வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் அவர்கள் எழுதிய
“108 ஸ்ரீ வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில் உள்ள குறிப்புகளின் மூலம் இதை அறியலாம்-
இது தவிர ஸ்ரீ இராமானுஜரின் பிரதான சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வானும் 132 சுலோகங்களைக் கொண்ட பெரிய நூலாகிய
“ஸ்ரீ சுந்தர பாஹு ஸ்தவம்” என்ற வடமொழி ஸ்தோத்திரத்தையும் படைத்திருக்கிறார்.

இக் கோயிலைப் பற்றிச் சங்கப் புலவர்களும் பாடியுள்ளனர். பதினைந்தாம் பரிபாடல் இத்தலத்தைப் பற்றிப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது.
இப்பகுதியில்,
“மலைகளிலே புகழ் வாய்ந்த, பழம் புலவர்களால் பாடப்பெற்ற மலைகள் பல உள்ளன.
அவற்றுள் மனிதர்களுக்குப் பல பயன்களைத் தரும் மலைகள் சிலவே உள்ளன.
அவற்றுள் தெய்வங்கள் விரும்பும் மலைகள் இன்னும் சில. அச் சிலவற்றுள், பலதேவனையும் திருமாலையும் தாங்கி
நிற்கின்ற மாலிருங்குன்றம் சிறந்ததாகும்” [– பரிபாடல், 15:1-14] என்று இத் தலத்தின் சிறப்பு பாடப்படுகிறது.

தமிழகத்தின் வட எல்லையின் தலையாய திருத்தலம் ஸ்ரீ திருவேங்கட மலை என்றால்,
அதற்கு ஈடாகத் தெற்கே ஸ்ரீ திருமாலிருஞ்சோலைமலை உள்ளது.

“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர் நல்லோர்“
என்று ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியில் ஸ்ரீ திருவரங்கத்தமுதனாரும் அருளிச் செய்தார்.
பண்டைய தமிழிலக்கியங்களின்படி இவ்விரு மலைகளுக்கும் வேறொரு ஒற்றுமையுமுண்டு:

“வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின்
நெறிகொள் படிவத்தோய் நீயும் – பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து இடரெல்லாம் நீங்க
அருளீயும் ஆழி யவன்.“புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம், 42
முறைமை கொண்ட வேடத்தை உடையோய்! நீயும் நறுமணைத்தை உடையதாகிய – ஒலிக்கும் அருவிகளால்
பொலிவு பெற்ற ஸ்ரீ திருவேங்கடத்திற்குப் போவாயானால், ஐம்பொறிகளால் உண்டாகும் தீவினைகளெல்லாம்
நீங்கப்பெற்று ஸ்ரீ திருவாழியாகிய சக்கரப்படையை ஏந்தும் ஸ்ரீ திருமாலின் அருளைப் பெறுவாய் —
என்று தீவினைகளையெல்லாம் நீக்கி வீடு பேறு அளிப்பதாகப் பாடப்பட்ட ஸ்ரீ வடவேங்கடத்திற்கு இணையாக,
ஸ்ரீ திருமாலிருங்குன்றமும் முக்தியளிக்கும் குன்றமாகத் தெற்கே விளங்கியிருப்பதை,

“நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.” [ — பரிபாடல், 15:15-18] என்னும் சங்கப்பாடல் வரிகள் காட்டுகின்றன.
இம்மாலிருங்குன்றமானது, திருமால் அருளாலன்றி பெறுதற்கரிய வீடுபேற்றினை, எளிதில் கிடைக்கக் கூடியதாகச் செய்யும்
சிறப்பினை உடையது என்று மேற்கண்ட வரிகளில் புலவர்கள் பாடுகின்றனர்.

“ஏவம் துர்லப்ய வஸ்துனி-அபி ஸுலபதயா ஹஸ்தலப்தே யதன்யத்
தன்வா வாசா தியா வா பஜதி பத ஜன: க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் |
ஏதே தாவத்-வயம் து ஸ்திரதரமனஸா விச்’வபீடாபஹத்யை:
நிச்’-சே’ஷாத்மானமேனம் குருபவனபுர-அதீச’ம்-ஏவ-ஆச்’ரயாம: ||“

[இத்தகைய பெறுதற்கரிய (முக்தி நிலை என்னும்) பொருளானது (அனைவரும் வந்து அருள் பெறும்படி)
எளிதில் கைக்கு எட்டும்பொழுது, அதை விட்டு (பொன்னும், பொருளும், புகழும், பதவியும் போன்ற) யாதொன்றை
உடலாலோ வாக்காலோ புத்தியாலோ மக்கள் அடைய விரும்புகிறார்களோ, அப்பொருள் கீழானதென்று விளங்குகிறது.
ஆகையால், நாம் உறுதி பூண்ட உள்ளத்துடன் அனைத்து பிறவித் துன்பங்களையும் நீக்க வல்ல
ஸ்ரீ குருவாயூர்க் கோமானாகிய ஸ்ரீ கண்ணனையே தஞ்சமாகக் கொள்வோம். — ஸ்ரீமந் நாராயணீயம், 1.2]
என்று ஸ்ரீ குருவாயூரைக் குறித்து ஸ்ரீ நாராயணபட்டர் பாடிய சுலோகத்தின் பொருளும் இங்கு ஒப்பிடத் தக்கது.

இத்தகைய பழம்பெருஞ் சிறப்பு வாய்ந்த இத் தலத்தில் “நூபுர கங்கை” என்ற புண்ணிய நதி இன்றும் உள்ளது.
முத்துசுவாமி தீட்சிதர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ள “ஸ்ரீ ஸுந்தரராஜம் பஜேஹம்” என்ற காசீராமக்ரியா (பந்துவராளி) இராகத்தில்
அமைந்துள்ள கீர்த்தனையிலும் “நூபுர கங்கா தீர்த்த ப்ரபாவ மாதவம்” என்ற வரிகள் உள்ளன.
தமிழில் இது “சிலம்பாறு” என்று வழங்கப்பெறும். “நூபுரம்” என்பதற்கு வடமொழியில் “சிலம்பு” என்று பொருள்.
ஸ்ரீ திருமால் அண்டமனைத்தையும் ஈரடியால் அளந்த பொழுது பிரம்மாவின் லோகத்தை ஒரு பாதம் வருட,
அப்பொழுது நான்முகக் கடவுள் தன் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் திருமாலின் அப் பாதத்தைக் கழுவ,
அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது.
ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. இச்சிலம்பாற்றின் பெருமையும் சங்க இலக்கியமாகிய பரிபாடலிலேயே
திருமாலிருஞ்சோலைமலை குறித்த பாடலிலேயே வருகிறது. அதில்,
“ஆதிசேடனின் அவதாரமாகவும், கண்ணனுக்கு அண்ணனாகவும் விளங்கும் பலராமனுடைய
வெண்கடம்பு மாலையைப் போல விளங்கி நின்ற சிலம்பாறு” என்று பின்வரும் வரிகள் கூறும்:

“அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்” [— பரிபாடல், 15:19-23]

சிலப்பதிகாரமும் மதுரைக்காண்டம் காடு காண் காதையில் ஸ்ரீ திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை விளக்குகிறது. அதில்,

“நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலை“ என்ற வரியில் “நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின் அகன்ற கரை” என்று
இளங்கோவும் பாடியுள்ளார். சிலம்பாற்றின் சிறப்பை இப்படிப் பல இலக்கியங்கள் பேசுகின்றன.

கள்ளழகர்
இம்மலையைப் பற்றிய மேலும் பல செய்திகளையும் கூறுகின்றது.
“108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” புத்தகம் இதை நன்றாக விவரிக்கிறது:
“ஸ்ரீ திருமாலைத் தரிசித்துவிட்டு ஸ்ரீதிருவரங்கம் செல்லும் மாடலன் என்பான் இந்த மலையில் அமைந்துள்ள
மூன்று தீர்த்தங்களைப் பற்றி வழியில் சந்தித்த கோவலன், கண்ணகி கவுந்தி அடிகள் ஆகியவரிடம் கூறுகிறான்.
‘இங்கிருந்து நீங்கள் இடப்பக்கமாக உள்ள காட்டுவழியிற் சென்றால் ஸ்ரீ திருமால் குன்றத்தை அடைவீர்கள்.
அங்கே ஒரு சுரங்க வழி இருக்கிறது. அவ்வழியிற் சென்றால் மூன்று தீர்த்தங்களைக் காணலாம்.
அவை புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்பன.
புண்ய சிரவணத்தில் நீராடினால் இந்திரனால் எழுதப்பட்ட “ஐந்திர வியாகரணம்” என்னும் நூலறிவை நீங்கள் பெறுவீர்கள்.
பவகாரிணியில் மூழ்கினால் பழம் பிறப்பைப் பற்றிய அறிவுண்டாகும்.
இட்ட சித்தியில் நீராடினால் நினைத்ததெல்லாம் கை கூடும்.’”

ஸ்ரீ மாலிருங்குன்றத்தின் சிறப்பைப் பரிபாடல் மேலும் பாடுகிறது. அவ்வரிகளின் பொருள் பின்வருமாறு:
“நீர் நிலைகளில் நறுமணம் கமழும் நீல மலர்கள் பூத்திருப்பதனாலும், அதனைச் சூழ அசோக மரங்களும்
வேங்கை மலர்களும் பூத்திருப்பதனாலும் அம்மலை ஸ்ரீ திருமாலின் தோற்றத்தைப் போலவே காட்சியளிக்கும்.
ஆகையால், ஸ்ரீ கோயிலுக்குச் சென்று தொழ இயலாதவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே
அம் மலையையாவது கண்டு தொழுங்கள்.
“அம்மலையிலே தத்தம் குட்டிகள் உடலைப் பற்றித் தழுவ குரங்குகள் ஒரு சிகரத்தில் இருந்து இன்னொரு சிகரம் வரை பாயும்.
மயில்கள் அகவ, குருக்கத்தி மரங்கள் இலையுதிர அதனின்றும் குயில்கள் கூவும்.
அம்மலையின் குகைகளிலே எழுகின்ற எதிரொலி நிற்காது.”

“கொய் வம்பு அலர் சொரியும் சோலை மா மலை”
“தண்டலை ஆர் திருமாலிருஞ் சோலை” ,
“பார்ப்புடன் கேகயம் சூழ் குளிர் சோலை மலை” என்று திவ்யகவி ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இயற்றிய
ஸ்ரீ அழகர் அந்தாதியில் உள்ள வருணிப்பு இங்கு ஒப்பிடத்தக்கது. இங்ஙனம் பரிபாடல் அம்மலையின் இயற்கை எழிலையும் வருணிக்கிறது.
“ஸர்வகந்த” என்று சாந்தோக்ய உபநிஷத் சொல்வதால் வெறும் “நீல மலர்கள்” என்று அல்லாமல்,
“நறுமணம் கமழும் நீல மலர்களே” இவ்வரிகளில் திருமாலின் திருமேனிக்கு ஒப்பாகிறது.

“புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்
வௌவற் காரிருண் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்துந் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பங் களைவோன்
அன்பது மேஎ இருங்குன் றத்தான்“

[தன் உந்தியிலே தோன்றிய தாமரை மலர் போன்ற திருக்கண்களையும், நீரைத் தாங்கிச் செல்லும் மேகத்தையும்
நீல மணியையும் ஒத்த திருமேனியையும் உடையவனாய், எல்லா உலகத்திலும் வெளிப்பட்டு, உயிர்க்கூட்டங்களின்
பிறவித் துன்பத்தை அறுக்கும் திருமால், அக்குன்றத்தே ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான் — பரிபாடல், 49-53]

இவ்விடத்தில் கண்களை வருணிக்கும்பொழுது “தஸ்ய யத: கப்யாஸம் புண்டரீகம் இவ அக்ஷிணீ” என்ற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியமும்,
திருமேனியை வருணிக்கும்பொழுது “நீல தோயத மத்யஸ்த வித்யுல்லேகைவ பாஸ்வர:” என்ற தைத்திரீய உபநிஷத் வாக்கியமும்
புலவர்களால் தமிழாக்கப்பட்டுள்ளது.
“அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (உயிர்க் கூட்டங்கள் பிறவித்துன்பம் களையப்பெற தஞ்சம் புகும் இடம்)”
என்பது “ஸ்ரீ நாராயணன்” என்ற திரு நாமத்தின் பொருளை உணர்த்துகிறது.
அங்ஙனம் பிறவியறுக்கும் ஸ்ரீ திருமாலே அம்மலையில் எழுந்தருளியுள்ளான் என்று கூறியிருப்பதும் பழந்தமிழர்கள்
‘ஸ்ரீ கோயிலில் எழுந்தருளியிருப்பவன் தெய்வமே வெறும் கற்சிலை அன்று’ என்ற கொள்கையை உடையவர்களாயிருந்ததைக் காட்டுகிறது.
“அன்பது மேஎ இருங்குன் றத்தான (ஆர்வத்தோடு எழுந்தருளியிருக்கிறான்)” என்பது மற்ற இடங்களில் பொதுவாக வியாபித்திருப்பது
போல் அல்லாமல், தன் திருக்கல்யாண குணங்களுடன் சிறப்பாக எழுந்தருளியிருப்பதைக் காட்டுகிறது.

—————-

ஸ்ரீ கூடல்/இருந்தையூர் (மதுரை):-ஸ்ரீ கூடல் அழகர்

“ஸ்ரீ திருக்கூடல்” என்று அழைக்கப்பெறும் ஸ்ரீ மதுரைக் கூடலழகர் கோயிலைப் பற்றிய செய்தியும்
சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது:

“வானார் எழிலி மழைவளம் நந்தத்
தேனார் சிமய மலையின் இழி தந்து
நான் மாடக் கூடல் எதிர் கொள்ள, ஆனா
மருந்தாகும் தீநீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வா நின்
திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுதே” [— பரிபாடல் திரட்டு, 1] என்று பரிபாடல் இத்தலம் பற்றிக் கூறும்.
இங்கு ஸ்ரீ திருமால் இருந்த (அமர்ந்த) திருக்கோலத்தில் காட்சியளிப்பதால் அந்நகரத்திற்கு “இருந்தையூர்” என்ற பெயரும்,
“இருந்தையூர் அமர்ந்த செல்வன்” என்று அவ் விறைவனுக்குப் பெயரும் ஏற்பட்டது.
இந்நகர் வாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், இயற்கை எழில், முதலிய ஸ்ரீ கூடல் மாநகரின் பல சிறப்புகளைப் பாடும்
இதே பரிபாடல், அங்கு ஆதி சேடனுக்கும் கருடனுக்கும் தனியாகக் கோயில்கள் இருந்ததாகக் கூறுகிறது.

மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தை “108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” நூலில்
ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். சுட்டப்படும் வரிகளில், சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும்
தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது:

“ஆறுகள் கூடும் துறைகளையே புனிதமான இடங்களாக கருதும் பழக்கம் நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவுவதாகும்.
வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ ஆயிற்று.
“தமிழர்களும் இவ்விதம் ஆறுகள் கூடும் இடங்கட்கு முக்கியத்துவமும் புனிதத்துவமும் அளித்தனர்.
மூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் எனவும்
இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் எனவும் தமிழர் பெயரிடலாயினர்.
தொண்டை நாட்டில் பாலாறு, சேயாறு, கம்பையாறு மூன்றும் சேரும் இடத்தை திருமுக்கூடல் என்று பெயரிட்டனர்.
நெல்லையில் தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி என்னும் கயத்தாறு, இம்மூன்றும் சேருமிடம் முக்கூடல் ஆயிற்று.
முக்கூடற் பள்ளு என்னுஞ் சிறந்த நாடகம் இவ்வூரைப் பற்றியெழுந்ததே.
“இஃதே போன்று ‘கிருதமாலா’ என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து
இவ்வூரை (மதுரை) அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் கூடல் நகராயிற்று.”

வைகையாற்றால் சூழப்பட்ட மதுரையில் எழுந்தருளியிருப்பதால் இப்பெருமானை,
“நீடுநீர் வையை நெடுமால்” என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இக்குறிப்பு, ஆய்ச்சியர் குரவை முடிந்தவுடன் மாதரி என்ற ஆயர் மகள் புஷ்பம், தூபம், சந்தனம், மாலை
முதலானவற்றால் இத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவதாக உள்ளது:

“ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவூம் புகையும் புனைசாந்தும் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறை படியப் போயினாள்.“
[— சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், துன்ப மாலை:2-7]
மேற்கண்ட பகுதியில், “நெடுமால்” எனும் இடத்திற்கு, “இருந்த வளமுடையான்” என்று அரும்பத உரையாசிரியர்
இட்டிருப்பதிலிருந்து ஸ்ரீ கூடல் மாநகரில் உள்ள ஸ்ரீ அழகர் எழுந்தருளிய கோயிலே இங்கு குறிக்கப்படுவதற்குச் சான்றாகிறது.

ஸ்ரீ மதுரைக் காஞ்சியிலும்,

“கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,” [590-591] எனும் வரிகள் ஆவணி மாதத் திருவோணத்தில்
ஸ்ரீ கூடல் அழகருக்கு விழா நடந்திருப்பதைக் கூறுவதாக அறிஞர் கொள்வர்.

———————

ஸ்ரீ திருவிதாங்கோடு (திருவனந்தபுரம்):-ஸ்ரீ பத்மநாபன்

இன்று ஸ்ரீ பத்மனாப சுவாமி கோயில் என்று வழங்கப்படும் திருத்தலம் குறித்த செய்தி சங்க இலக்கியத்தில்,
எட்டுத் தொகை நூல்களுள், மலைநாட்டு-சேர-அரசர்கள் பற்றிய பதிற்றுப் பத்தில் காணப்படுகிறது.
இவ்வாலயத்திற்கு, மக்கள் தலைமேல் கைகூப்பி நான்கு திசைகளிலிருந்தும் திறள் திறளாக வந்து
வணங்குவதாகக் கூறிவிட்டு, கோயில் கொண்டுள்ள திருமால் விக்கிரகத்தை வருணிக்கிறது:

“வண்(டு)ஊது பொலிதார்த் திருஞெமர் அகலத்துக்
கண் பொரு திகிரிக் கமழ் குரல் துழாஅய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி” [— பதிற்றுப்பத்து, 31:7-12]
(திருஞெமர் அகலம் = இலக்குமிப் பிராட்டி விரும்பும் மார்பு; திகிரி = சக்கரம்)
திருவிதாங்கோட்டு மன்னர்கள் ஈராயிரம் வருடங்களுக்கும் மேலாக ஸ்ரீ பத்மனாபனின் திருவடிகளைத் தொழுபவர்களாக
இருந்து வருவது சிலப்பதிகாரத்திலுள்ள சில வரிகள் காட்டுகின்றன.
“108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு” கூறும் சிலப்பதிகாரச் செய்தி:

“சிலப்பதிகாரம் ஸ்ரீ திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது.
சேரமன்னன் செங்குட்டுவன் வடபுலத்தின் மீது படையெடுத்துச் செல்கின்ற
போது ஆடகமாடமாகிய திருவனந்தபுரத்தில் அறிதுயலமர்ந்த மணிவண்ணன்
அணிந்த மாலையை வாங்கி செங்குட்டுவன் சூடிச்சென்று
‘தொடுத்த துழாய் முடி சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்’ என்ற
ஸ்ரீ பெரியாழ்வாரின் வாக்குப்படி சென்றான் என்பதை,
” ‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
ஆசித்தகை மையின் செல்வுழி’–என்கிறார் இளங்கோவடிகள். ஆடக மாடம் – திருவனந்தபுரம் சேடம் – மலர்மாலை.”

——————

ஸ்ரீ கச்சி மூதூர் (ஸ்ரீ திருவெஃகா/ஸ்ரீ காஞ்சிபுரம்):-ஸ்ரீ திருவெஃகா

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய ‘பெரும்பானராற்றுப்படை’ என்னும் பத்துப்பாட்டு நூலில்,
ஸ்ரீ கச்சி மூதூரில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பற்றி தெளிவாக உள்ளது.
இவ்வரிகள், ஸ்ரீ திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதற்குக் குன்றுதனில்
யானை படுத்திருப்பதை உவமையாகக் கூறுகிறது:

“நீடுகுலைக் காந்தளஞ் சிலம்பிற் களிறு படிந் தாங்குப்
பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்
வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடி
அருந்திறற் கடவுள் வாழ்த்தி…“ [– பெரும்பாணாற்றுப்படை, 372-391]

இங்ஙனம் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் ஆலயங்களில் ஸ்ரீ திருமால் வழிபாட்டின் தொன்மை வெளிப்படுகிறது.
வேதாந்தம், சிருஷ்டி, பிரபஞ்சவியல் தத்துவங்களைப் பல இடங்களில் பாடிய பண்டைத் தமிழ்ச் சான்றோர்
உருவ வழிபாட்டையும் விரும்பிக் கடைப் பிடித்திருந்தது இச் சான்றுகளிலிருந்து தெரிகிறது.

——————

பாரத தேசம் உலகிற்குத் தந்த மாமேதைகளுள் காலத்தால் மிகவும் முற்பட்டவர் ஆரியபடர் என்பவர்.
இவர் இயற்றிய கணித-வானசாஸ்திர நூல்களுள் ஒன்றான சூரிய சித்தாந்தத்தின் பன்னிரண்டாம் அத்தியாயத்தில்
அத்யாத்ம வித்தை என்ற பகுதி வருகிறது. இப்பகுதியில் தன்னை வைதிகராகவும் வேதாந்தியாகவும் காட்டிக் கொள்ளுகிறார்.
“வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர்.
ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று
நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் இவ்வுண்மையைக் கவனிக்க வேண்டும்.
அத்யாத்ம வித்தையில் உள்ள சுலோகங்கள் வேதத்தில் காணப்படும் புருஷ சூக்த மந்திரங்களை விவரிப்பதாக அமைந்துள்ளன.
வியூக மூர்த்திகளாகிய சங்கர்ஷணனும் அனிருத்தனும் பிரபஞ்சத் தோற்றத்தில் பங்கு வகிப்பதைப்
புருஷ சூக்தம் முதலான வேதப்பகுதிகள் கூறுவதாக ஆரியபடர் கூறுகிறார்

(“இங்கு காணப்படும் ஜீவராசிகளெல்லாம் பரமபுருஷனுடைய ஒரு கால் பகுதி மாத்திரமே.
அவனுடைய முக்கால் பகுதி மரணமற்ற ஒளிமயமான இடத்தில் உள்ளது” என்று

“ஏதாவாநஸ்ய மஹிமாதோ ஜ்யாயாம்ச்’ச பூருஷ:
பாதோ (அ)ஸ்யவிச்’வா பூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் தி3வி” எனும் மந்திரமும்,

“அந்தப் பரமனிடதே பிரம்மாண்டம் உண்டாயிற்று. அந்த பிரம்மாண்டத்தே நான் முகக் கடவுளாகிய பிரம்மா உண்டானார்” என்று

“தஸ்மாத் விராட் அஜாயத விராஜோ அதி பூருஷ:
ஸ ஜாதோ(அ)த்யரிச்யத பச்’சாத் பூமிமதோ புர:”எனும் மந்திரமும் கூறுவதாக
வேதத்திற்கு உரை எழுதிய உரைக்காரர்கள் கூறுவர். இவ்வர்த்தத்தையே ஆரியபடரும் இவ் அத்யாத்ம வித்தையிலும்

“ததண்டம் அபவத் தைமம் ஸர்வத்ர தமஸாவ்ருதம் |
தத்ராநிருத்த: ப்ரதமம் வ்யக்தீபூத: ஸநாதந: ||”

“த்ரிபாதம் அம்ருதம் குஹ்யம் பாதோ(அ)யம் ப்ரகடோ(அ)பவத் |
ஸோ(அ)ஹங்காரம் ஜகத்ஸ்ருஷ்ட்யை ப்ரஹ்மாணம் அஸ்ருஜத் ப்ரபு: ||”

சூரிய சித்தாந்தத்தின் இப்பகுதியின் முதல் சுலோகம் பின்வருமாறு.
“பரம்பொருளாகிய, பரம தத்துவமாகிய, பரமபுருஷனாகிய வாசுதேவன் புலன்களுக்கு எட்டாத வண்ணம்
குணங்களற்றவனாய், சாந்த சொரூபனாய், இருபத்தைந்து தத்துவங்களுக்கும் மேலானவனாக,
அழிவற்றவனாக எழுந்தருளியிருப்பவன்” என்பது இவ்வரிகளின் பொருள்:

வாஸுதேவ: பரம் ப்ரஹ்ம தந்மூர்தி: புருஷ: பர: |
அவ்யக்தோ நிர்குண: சா’ந்த: பஞ்சவிம்சா’த் பரோ(அ)வ்யய: || [– ஸூர்ய ஸித்தாந்தம், 12.12]

இச்சுலோகத்தில் வரும் “பரம்பொருளுக்குக் கீழே உள்ள இருபத்தைந்து தத்துவங்கள்” யாவை என்பதைச் சற்று விளக்குவோம்.
பிரபஞ்சத்தில் ஐம்புலன்களாலும் அறிவினாலும் அறியப்படுவன அனைத்தும் மாயையின் சம்பந்தம் உடையவை என்று வேதாந்தம் கூறுகிறது.
ஜடப்பொருள் யாவும் பஞ்சபூதங்களின் கலவையால் உருவானவை.
இப் பஞ்சபூதங்களுடன் தொடர்புள்ள உணர்வுகள் ஐந்து. அவையாவன –
ஒலி, ஊறு (அல்லது ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு), ஒளி, சுவை, மற்றும் நாற்றம் என்பவை.
வடமொழியில் இவை ‘தன்மாத்திரங்கள்’ என்று கூறப்படுவன. இப்பதத்திற்குச் ‘சுவடு’ என்று பொருள்.
இவற்றோடு ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் இயங்குவதற்குக் காரணமாகிய விசைகளைக் கூட்டினால் இருபது தத்துவங்களாகின்றன.
மனதை இருபத்தோராவது தத்துவமாக எண்ணுவது வழக்கு. இவற்றுடன் பிரபஞ்சத்துக்கெல்லாம் கருப்பொருளாகிய
மூலப்பகுதியையும் (மூலப் ப்ரக்ருதியையும்), அதிலிருந்து வெளிப்படும் ‘மஹான்’ என்ற தத்துவமும்,
அதிலிருந்து வெளிப்படும் ‘அஹங்காரம்’ என்ற தத்துவமும் சேர, மொத்தம் இருபத்தி நான்கு ஜட தத்துவங்கள்.
ஜீவான்மா இருபத்தைந்தாக, இவ்விருபத்தைந்துக்கும் மேலாக
ஸ்ரீ திருமால் இருபத்தாறாவது தத்துவமாக பரமனாக விளங்குகிறான் என்பது மரபு.

பரம்பொருள் வியாபித்துள்ள இவ் விருபத்தைந்து தத்துவங்களையும்,

“பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” [– பரிபாடல், 3:77-80]

என்று சங்க இலக்கியத்திலும் தமிழ்ச் சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்கண்ட வரிகளில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைப் பரிமேலழகர் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

‘பாழ்’ என்பது சாங்கியர்களால் ‘புருடன்’ என்று வழங்கப்படும் சீவனைக் குறிக்கும்.
‘கால் என’ என்பது ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களையும் குறிக்கும்.
‘பாகு என’ என்பது தொழிலால் பாகுபடும் வாக்கு, பாதம், கை, மல-ஜல துவாரங்கள் ஆகிய ஐந்து பொறிகளைக் குறிக்கும்.
இவை வடமொழியில் ’கர்மேந்திரியங்கள்’ எனப்படுபவை.­
‘ஒன்று என’ எனத் தொடங்கி ’ஐந்து என’ என்பவை ஒலி, தொடு உணர்வு, ஒளி/உருவம், சுவை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்வுகளைக் குறிக்கும்.
‘ஆறு என’ என்பது கண், நா, செவி, மூக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களையும் (ஜ்ஞானேந்த்ரியம்), ஆறாவதாக மனத்தையும் குறிக்கும்.
‘ஏழு என’, ‘எட்டு என’, ‘தொண்டு என’ என்பவை முறையே அகங்காரம், மகான், மற்றும் மூலப் பிரகிருதியை உணர்த்தும்.
“மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே” [– ஸ்ரீ திருவாய்மொழி, 10.7.10] என்ற ஸ்ரீ நம்மாழ்வார் பாசுரம்
இவ்விருபத்தாறு தத்துவங்களையும் இங்ஙனமே பட்டியலிட்டது.

“எண்ணிலும் வரும்” (திருவாய்மொழி, 1.10.2) என்ற இடத்திற்கு
“மனதில் நினைத்தால் வந்து நிற்பான்” என்ற விளக்கத்தோடு,
“‘ஒன்று, இரண்டு, …’ என்று எண்ணும்பொழுது ‘இருபத்தாறு’ என்று கூறுகையில்
தன்னைத் தான் பக்தன் கூப்பிடுகிறான் எனக் கருதி இறைவன் வந்து நிற்பானாம்” என்பது ஆச்சாரியார்கள் கண்ட உரை.

இவ்வாறு அனைத்துக்கும் மேலான தத்துவமாக, முழுப் பிரபஞ்சத்தையே தாங்கும் நிலையில் இருக்கும் போதிலும்,
அவனே அனைத்தின் உள்ளும் கரந்து அவற்றை ஆளும் அந்தர்யாமிப் பொருளாகவும் இருக்கிறான். இச்செய்தியை,

“திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே.” [ — ஸ்ரீ திருவாய்மொழி, 1.1.7]என்ற ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய பாசுரத்தாலே அறியலாம்.
ஆதலால், காண்பதெல்லாம் ஸ்ரீ பரம்பொருளின் தோற்றமே என்று வேதாந்தம் உரைக்கும்.
’ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்று வைதிகச் சடங்குகளின் தொடக்கத்தில் ஸ்மார்த்தர்கள் முதலானோர் ஓதுவதை நினைவூட்டுகிறது.
இச் செய்திகளை விரிவாக முதற்பகுதியிலும் கண்டோம்.
இங்ஙனம் மேற்படிக்கப்பட்ட இருபத்தைந்து தத்துவங்களிலும் அந்தர்யாமிப் பொருளுமாகி இருப்பதால்,

“பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.” [— ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 1] என்று ஸ்ரீ திருமழிசை ஆழ்வாரும் பாடியுள்ளார்.
இப்பாசுரத்தில் மற்றொரு செய்தியும் வெளிப்படுகிறது.
ஐந்து உணர்வுகளுள் ஒலி, தொடு உணர்வு, ஒளி, சுவை, நாற்றம் இவ்வைந்தும் நிலத்திற்கு உண்டு.
நாற்றத்தைத் தவிர மற்ற நான்கும் நீருக்கு உண்டு. ஐந்தில் முதல் மூன்று மாத்திரம் அக்னிக்கு உண்டு.
காற்றுக்கு ஒலி, தொடு உணர்வு மாத்திரம். ஆகாயத்திற்கு ஒலி ஒன்றோடு மாத்திரமே தொடர்புண்டு.
ஸ்ரீமத் பாகவதம், மார்க்கண்டேயம், வாயவ்யம் முதலான புராணங்களில் காணப்படும் இச்செய்தியே
ஸ்ரீ திருமழிசையாழ்வாரின் பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. சங்கத் தமிழர் வாக்கிலும்

“சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே” [– பரிபாடல், 13:14-22] என்னும் பரிபாடல் வரிகளில் இதைக் காணலாம்.

இவ்வாறு கண்ணுக்கெட்டிய பொருட்களிலும் காணாத பொருட்களிலும் உள்ளுறையும் பொருளாக இருத்தலின்,

“வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்”–பரிபாடல், 2:24-25
[நல்ல கொள்கைகளையே கொண்ட உயர்ந்தோராகிய ரிஷிகள் ஆராய்ந்த குற்றமற்ற வேதத்தின் அந்தரியாமிப் பொருளும் நீயே — ]
என்று ஸ்ரீ கண்ணனை “வேதத்தில் கூறப்பட்ட அந்தரியாமிப் பொருள்” என்றும் பழந்தமிழ்ச் சான்றோர்கள் கூறினர்.

——————-

முத்தொழிலுக்கும் அதிபதி ஸ்ரீ முகுந்தன்

சர்வ வியாபகனாக அனைத்தினுள்ளும் கரந்துறையும் அந்தரியாமிப் பொருளாக விளங்கும் இயல்புடையவனே
முத்தொழிலுக்கும் காரணமாகிய ஸ்ரீ பரப் ப்ரஹ்மம் ஆவார் என்பது வேதாந்தம்.
“இந்த சுருக்கமான உபதேசத்தைக் கேளுங்கள்: முக்காலத்திலுமுள்ள அந்த ஸ்ரீ நாராயணன் இவை யாவற்றையும்
சிருஷ்டிக் காலத்தில் படைக்கிறார். சம்கார காலத்தில் அவை யாவற்றையும் தன்னிடம் திரும்பவும் ஒடுங்கச் செய்கிறார்”
என்பது ஸ்ரீ ஆதி சங்கரரால் ப்ரஹ் சூத்திர பாஷ்யத்தில் (இரண்டாம் அத்தியாயத்தின் முதற் சூத்திர பாஷ்யத்தில்)
காட்டப்பட்ட புராண வசனம்.

இச் செய்தியைக் கூறும் பின்வரும் ஸ்ரீ கம்பராமாயணச் செய்யுள் ஸ்மார்த்தர்கள் ஆவணியவிட்டத்தில் உரைக்கும்
‘மகாசங்கல்பத்தை’
இம் மகாசங்கல்பமானது,

“ஸ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ: ஆதி நாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா ச’க்த்யா,
அப்ரியமாணஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதம் அநேக கோடி ப்ரஹ்மாண்டாநாம் மத்யே…”–என்று தொடங்குகிறது.
“ஆதி விஷ்ணுவாகிய ஆதி நாராயணனின் அறிதற்கரிய ஒப்பில்லாத சக்தியால் பிரளய மகா கடலின் நடுவில்
சுழன்று கொண்டிருக்கும் பல கோடி பேரண்டங்களின் நடுவில்” என்று பொருள்.

“நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்,
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே!” [— ஆரணிய காண்டம், கவந்தன் வதைப் படலம்]

முத் தொழில்களுக்கும் அதிபதி ஸ்ரீ முகுந்தனே எனும் செய்தியும் சங்க இலக்கியமாகிய பரிபாடலில் பல இடங்களில் இடம்பெறுகிறது.
இதனால், ஸ்ரீ நான்முகக் கடவுளும் ஸ்ரீ உருத்திர மூர்த்தியும் ஸ்ரீ திருமாலின் அம்சங்கள் என்றும்,
முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும்,

“ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;” [— பரிபாடல், 1:46-49] என்னும் வரிகளில் பெறப்படுகிறது.
(அணங்குடை அருந் திறல் மைந்துடை ஒருவன் = பகைவர்க்கு அச்சத்தைத் தரும் பேராற்றலையும் சங்கரிக்கும் தொழிலையும் உடையவன்;
மடங்கல் = உயிர்களின் ஒடுக்கம்; பூவன் = பூவின் மேலிருப்பவனாகிய பிரமன்; நாற்றம் = படைப்புத் தொழில்)

இச் செய்தியைப் புராணங்களும் ஸ்ரீ வைஷ்ணவ இலக்கியமும் கூறும்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “பூதக்ருத் பூதப்ருத்”, “ஸம்ப்ரமர்தன:”, “சதுராத்மா” என்ற நாமங்களுக்கு
ஸ்ரீ ஆதி சங்கரர் இட்ட பாஷ்யமும் இச்செய்தியையே கூறும்.
“சதுராத்மா” என்றவிடத்தில் சங்கரர் காட்டும் புராண வசனம் ஒன்று:

“ப்ரஹ்மா தக்ஷாதய: காலஸ் ததைவாகிலஜந்தவ: |
விபூதயோ ஹரேரேதா ஜகத: ஸ்ருஷ்டிஹேதவ: ||
விஷ்ணுர்மந்வாதய: கால: ஸர்வபூதானி ச த்விஜ |
ஸ்திதேர்நிமித்த பூதஸ்ய விஷ்ணோரேதா விபூதய: ||
ருத்ர: காலோ(அ)ந்தகாதயாச்’ச ஸமஸ்தாச்’சைவ ஜந்தவ: |
சதுர்தா ப்ரலயாயைதா ஜனார்தனவிபூதய: ||”–ஸ்ரீ விஷ்ணு புராணம், 1.22.31-33

ஸ்ரீ பிரமனும், ஸ்ரீ தக்ஷனும் படைத்தல் தொழிலில் ஸ்ரீ அரியின் விபூதிகள். ஸ்ரீ விஷ்ணுவும், ஸ்ரீ மனுவும் காத்தல் தொழிலில்
ஸ்ரீ விஷ்ணுவின் விபூதிகள். ஸ்ரீ உருத்திரனும், ஸ்ரீ அக்னியும் அழித்தல் தொழிலில் ஸ்ரீ ஜனார்தனனின் விபூதிகள்.
அனைத்துயிர்களும் கால தத்துவமும் முத்தொழிலிலும் ஸ்ரீ விஷ்ணுவின் விபூதிகள். இவ்வாறு முத்தொழில்களிலும்
நான்கு விபூதிகளை உடையவன் ஸ்ரீ அரி. (இங்கு ’விபூதி’ என்பது ’செல்வம், உடைமை’ என்னும் பொருளில் வருகிறது). —

ஸ்ரீ அதர்வண வேதத்தின் ‘ஸ்கம்ப ஸூக்தம்’ என்ற பகுதியில் வரும் வேத மந்திரங்கள் பிரபஞ்சத்தின்
தோற்றத்திற்கு ஆதாரமாகப் பரம்பொருளை வினாக்களின் வடிவத்தில் அழகாக வருணிக்கும்:

“எவரிடத்தில் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களிலே அக்னியும், சூரியனும், சந்திரனும், காற்றும் நிலைபெறுகின்றன?”
“எவருடைய திருமேனியில் முப்பத்தி மூன்று தேவர்களும் அடங்கியுள்ளனர்?”
“எவரிடத்தில் ஆதித்தியர்களும், உருத்திரர்களும், வசுக்களும் உறைகின்றன?” என்பன அவ் வினாக்களுட் சில.

இங்ஙனம் வேதப்பகுதி கூறும் பிரபஞ்சத்தின் தோற்றத்தையே சங்கத் தமிழர்களின் வாக்கிலும் காண்கிறோம்.
ஸ்கம்ப ஸூக்தத்தையே ஆதாரமாக வைத்துப் பழந்தமிழர்கள் இதைப் பாடியுள்ளார்களோ என்று வியக்க வைக்கின்றன இவ்வரிகள்:

“தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து” [— பரிபாடல், 3:4-11]

(ஐவர் = செவ்வாய் முதலான ஐந்து கோள்கள்; திதியின் சிறார் = தைத்யர்கள் அல்லது அசுரர்கள்.
‘திதி’ என்பவள் காசிப பிரஜாபதியின் ஒரு மனைவி; விதியின் மக்கள் = காசிப பிரஜாபதியின் மற்றொரு மனைவியாகிய
அதிதியிடம் பிறந்த பன்னிரு ஆதித்யர்கள்; மாசு இல் எண்மர் = எட்டு வசுக்கள்; பதினொரு கபிலர் = பதினொரு உருத்திரர்கள்;
தா மா இருவர் = இரண்டு அசுவினி தேவர்கள். ‘தா மா’ என்பது தாவும் மாவாகிய குதிரையைக் குறிக்கும்.
குதிரையின் சம்பந்தம் அவர்களுக்கு இருப்பதால் ‘அசுவினி தேவர்கள்’ என்று பெயர். ‘அசுவம்’ என்பது குதிரை;
மூ ஏழ் உலகம் = ‘பூ:, பு4வ:, ஸுவ:, மஹ:, ஜன:, தப:, ஸத்யம்’ எனப்படும் ஏழு மேல் உலகங்களும்,
‘அதல, விதல, ஸுதல, மஹாதல, ரஸாதல, தலாதல, பாதால’ என்னும் ஏழு கீழ் உலகங்களும்,
‘ஸப்த த்வீபங்கள்’ எனப்படும் ஏழு தீவுகளும் ஆக மொத்தம் இருபத்தோரு லோகங்களைக் குறிக்கும்.)

எங்கோ வானத்திலிருந்து கொண்டு இல்லாத ஒன்றைப் புதிதாக ஒருவர் உருவாக்குவது போன்ற
சிருஷ்டி விளக்கத்தை வேதம் ஒத்துக் கொள்வதில்லை.
“சிருஷ்டிக் காலத்தில் பரம்பொருளே பிரபஞ்சமாக விரிகிறது; ஊழிக் காலத்தின் முடிவில் பிரளயத்தில்
அப் பிரபஞ்சமும் அவனிடத்திலேயே ஒடுங்கிய நிலையை அடைகிறது” என்பதே ஸ்ரீ வேதாந்த மதம்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமக் கிரமத்தில் 54-ஆம் சுலோகம்:
“உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேச்’வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹனோ குஹ: ||”)). ஆனால் அது மட்டும் அல்ல,
“கரணம்” (படைக்க உதவும் கருவி), “காரணம்” (முதற் பொருள் மற்றும் கருப் பொருள்) என்ற பெயர்களும்
அவனுக்கு உண்டு. ஆபிரகாமியத்திற்கும் வேதாந்த மதத்திற்கும் உள்ள பெரிய வித்தியாசம் இது.

“ஒன்று ஆகி, மூலத்து உருவம் பல ஆகி,
உணர்வும் உயிரும் பிறிது ஆகி, ஊழி
சென்று ஆசறும் காலத்து அந் நிலையது ஆகி,
திறத்து உலகம்தான் ஆகி,செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக் கொழுந்தே!” என்று சரபங்கன் பிறப்பு நீங்குப் படலத்தில் இந்திரன்
வாய்மொழியாக ஸ்ரீ கம்பர் பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காரணம் பற்றியே, மூல நூற்களில் எங்கெல்லாம் பரம்பொருளைப் பற்றிய விசாரம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம்
“உலகத்தை யார் படைத்தார்” என்றோ “யார் உலகத்தை சம்கரிக்கிறார்” என்றோ கேள்வியை எழுப்பாமல்,
“எதனிடமிருந்து உயிரினங்கள் தோன்றின?” என்றும், “எதனிடத்தே அவ்வுயிர்கள் இலயமடைகின்றன?” என்றும்,
“இவ்வுலகம் எதை மூலப்பொருளாகக் கொண்டது?” என்றும் கேள்விகளை முனிவர்கள் எழுப்புகின்றனர்.
ஸ்ரீ விஷ்ணு புராணத்தின் தொடக்கத்தில் ஸ்ரீ மைத்ரேயர் ஸ்ரீ பராசர மகரிஷியிடம் இக் கேள்விகளையே கேட்கிறார்.

உதாரணமாக, ஸ்ரீ மகாபாரதத்தில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அத்யாயத்தின் தொடக்கத்தில்

“யத: ஸர்வாணி பூதாநி பவந்தி ஆதி யுகாகமே |
யஸ்மின்ச்’ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே ||

தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே: |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ச்ருணு பாப பயாபஹம்||”

[எவரிடமிருந்து அனைத்துயிர்களும் ஊழிக்காலத்தின் தொடக்கத்தில் உண்டாகின்றனவோ,
எதனிடத்தில் ஊழிக்காலத்தின் முடிவில் அவை ஒடுங்குகின்றனவோ அந்த ஸ்ரீ ஜகன்னாதனாகிய
ஸ்ரீ விஷ்ணுவின் நாமங்களைக் கேட்பாயாக.]
என்றே ஸ்ரீ பீஷ்மாசாரியார் கூறினார். இம் மரபை ஒட்டியே,
“மாயனே! நின்னால் இவை ஆக்கப்பட்டன” என்று உரைக்காமல்
“மாயனே! நின்னில் தோன்றிப் பரந்தவையே இவை” என்று பொருள் படும்படி
“மாயோய்! நின்வயின் பரந்தவை” என்று இங்கு சற்று முன் சுட்டிய பரிபாடல் வரிகளில் சங்க இலக்கியமும் உரைத்தது.

“தன்னுளே திரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல்
தன்னுளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே.” [—ஸ்ரீ திருச்சந்த விருத்தம், 10]
என்று ஸ்ரீ திருமழிசையாழ்வார் அறுதியிட்டுக் கூறியிருப்பதும் இக்கருத்தையே.

————–

பொதுவாகப் புகழ்மொழிகள் இருவகைப் படுவனவாகக் கூறுவதுண்டு.
பாடல் பெறுபவரது இயல்பான நற்குணங்களோடு நில்லாமல், அவருடைய குணங்களை மிகைப்படுத்தியும்
இயல்பிற்கும் அப்பாலான பல உயர் பண்புகளை அவர் மீது ஏற்றிப் பாடுவதும் ஒரு வகை.
இது கவிதை நயம் சிறக்கவோ, அல்லது பாடப்படுபவரை மகிழ்வித்துப் பொன்னும் பொருளும் பெறுவது போன்ற
வேறு நன்மை கருதியோ செய்யப்படும் வெற்றுப் புகழ்ச்சியே. இதற்கு மாறாக, ஒருவரிடம் இயல்பாகவே உள்ள உயர் குணங்களை
உள்ளபடியே மிகைப்படுத்தாமல் பாடுவதும் உண்டு. இத்தகைய மெய்யான புகழ்ச்சியை யதார்த்தம் அல்லது வாஸ்தவம் என்பர்.
“உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” எனும் கவியின் கூற்றையும் நன்கறிவோம்.

“திருமகள் கேள்வனைக் குறித்து யாம் பாடியிருப்பதெல்லாம் யதார்த்தமே, அவையெல்லாம் வேதத்தாலும்,
வேதத்தால் உணர்த்தப்படும் தத்துவத்தை நன்கறிந்த ஞானியராலும் அவனுக்கு இயல்பாய் உள்ளனவாகப் பாடப்பட்ட குணங்களே;
இவற்றுள் எதுவும் எமது கற்பனைப் புனைவுகளன்று” என்று பல இடங்களில் சங்கப் புலவர் தம் பாடல்களிலேயே
என்பதனைப் பின்வரும் சங்க நூல் மேற்கோள்களில் காணலாம். அப்புலவர்களின் இவ்வகைக் கூற்றுகள்
வெறும் வாய் வார்த்தை அல்ல என்பதை, அவர்கள் பாடியிருப்பதை
வேத, இதிகாச, புராண வாக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அறியலாம்.

“ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல் தாம் அப்
பாடுவார் பாடும் வகை.”-பரிபாடல், 3
[மண்ணுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களும், வானுலகத் தேவர்களும் உன்னைப் பரம்பொருளாகப்
பலவாறு விரும்பிப் பாடுகின்றனர். எமது பாடலும் அவர்களது வழியைப் பின்பற்றியே வந்தவை—]

“மூவே ழுலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்
மாயா வாய் மொழி உரை தர வலந்து”–பரிபாடல், 3
[பிரபஞ்சமும் பிரபஞ்சத்தில் உள்ள அசைவனவும் அசையாதனவும் உன்னிடமிருந்து தோன்றிப்
பரந்தவை என்று வேதம் கூறுவதால் நாங்களும் அவ்வாறே கூறினோம். — ]

“சேவலங் கொடியோய் நின் வலவயி னிறுத்து
மேவலுட் பணிந்தமை கூறும்
நாவல் அந்தணர் அருமறைப் பொருளே.”பரிபாடல், 1
[கருடக்கொடியை உடையவனே! உயிர்கள் அனைத்தும் உன் அருள் தழுவுதலுள்ளே
அமர்ந்து நின்னைப் பணிந்தமையை வேதமானது விரித்துக் கூறும். — ]

“ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்” -பரிபாடல், 3
[‘ஏ…எ…’ என்று இசையமைத்துப் பாடப்படும் சாம வேதம் கூறுவதனாலே
நாம் இவற்றை (திருமாலின் சிறப்புகளை) விளங்க அறிந்தோம் — ]-எனும் இடங்களில் இதைக் காணலாம்.

“இறைவன் உள்ளான் என்பதற்கு வேதமொன்றே பிரமாணம் (சாட்சி). பிரபஞ்சத்தின் வியப்பளிக்கும்
தோற்றத்தைப் பார்த்துவிட்டு, ‘உறுதியாக இது ஒருவனால் படைக்கப்பட்டதேயாகும்’ என்று அனுமானிப்பது சரியல்ல.”
என்பது வேதாந்தக் கொள்கை. இது ப்ரஹம ஸூத்திரங்களை இயற்றிய ஸ்ரீ பாதராயணரால் “சா’ஸ்த்ர யோநித்வாத்” (1.1.3)
எனும் ஸூத்திரத்தில் வலியுறுத்தப்பட்டது. சங்கப் புலவர்களும் இதனோடு இசைந்திருன்தனர் என்பது
“திருமாலே உலகனைத்தையும் படைத்தளித்து ஆள்பவன் என்பதனை வேதம் கூறுவதாலே அறிந்தோம்” என்று
அவர்கள் கூறுவதிலிருந்து தெரிகிறது.

சங்கத் தமிழ்ப் புலவர்கள் அனைவரும் பிறப்பால் அந்தணர்களல்லர் என்பது பெரும்பாலும் அனைவரும் இசைந்த கருத்து.
எனினும், அவர்கள் ஆழ்ந்த மறைப்பொருளை நன்கு அறிந்திருந்தனர் என்பதனைப் பரிபாடல்களில் நாம் காண முடிகிறது.
மேலும், தத்துவத்தை நிர்ணயிப்பதில் வேதமானது தனித்து நிற்கும் சாட்சி என்று அக்காலப் புலவர்கள் ஏற்றிருந்தனர்
என்பதையும் இங்கு காணலாம். (இதனை ‘ஸ்வத: ப்ராமாண்யம்’ என்பர். ஸ்வத: = எதையும் சார்ந்து நிற்காமல் தானாகவே இயங்குதல்,
ப்ராமாண்யம் = உண்மைத் தன்மை பெற்றிருத்தல்.)
இனி, வேதத்தில் உலகளந்த உத்தமனுக்குக் கூறப்பட்ட யதார்த்தப் புகழ்மொழிகளையே சங்கப் புலவர்கள்
திருமாலுக்குப் பாடியுள்ளனர் என்பதனை, அப்புலவர்கள் மொழிந்தவற்றோடு, வேதமறிந்த ரிஷிகளின் வாக்கியங்களாகிய
இதிகாச-புராணங்கள், தமிழ்ப் பிரபந்தங்கள், வேத மார்க்கத்தின் மீட்சிக்குப் பிற்காலத்தில் வழிவகுத்த வேதாந்த விளக்க நூல்கள்
ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் உணரலாம்.
இவ்வாராய்ச்சியில் ஒரு சில சான்றுகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புருடோத்தமனின் தனிச்சிறப்புகளாகப் பரவலாகப் பேசப்படுவது அவனுடைய அவதாரச் சிறப்புகள், திருமேனியழகு முதலானவை.
சங்க நூல்களில் இவை பற்றிப் பல இடங்களில் வருகின்றன. இவை அனைத்தும் அவனுடைய ‘ரூப-வைபவங்களுள்’ அடங்கும்.
இவற்றோடு மட்டுமல்லாமல், அவனுடைய இயல்பு, மேன்மை, நீர்மை ஆகியவற்றைக் காட்டும் ‘ஸ்வரூப-குணங்களை’
விவரிக்கும் பகுதிகள் பல சங்க இலக்கியத்தில் அடங்கியுள்ளன.
பரம்பொருள் இன்னதென்று ரிஷிகளாலும், மும்மத (அத்வைத, துவைத, விசிஷ்டாத்வைத) ஆச்சாரியார்களாலும் கூறப்பட்ட இலக்கணமும்,
அதற்கு அவர்கள் கையாண்ட உவமை, உருவகம், முதலான அணிகளும் பழந்தமிழ்ப் புலவர்கள் இயற்றிய அவ்வரிகளுடன்
ஒத்து வருவது அனுபவித்து இன்புறத்தக்கதொரு உண்மை. இனி, ஒவ்வொன்றாக இச்செய்திகளைக் காண்போம்.

நம்மால் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படும் வழிபாட்டு முறைகளும், அவ்வழிபாட்டில் பயன்படுத்தப்படும் தூபம், சந்தனம் முதலான
திரவியங்களும் நம் இந்து மதத்தின் தனிச்சிறப்பான அடையாளங்களாகும். அன்றாடம் நம் பூஜை அறைகளில் பயன்படுத்தப்படும்
திரவியங்களில் முக்கியமானவை மலர்களாகும். விஷ்ணுவால் அதிகம் விரும்பப்படும் மலர்கள் யாவை?
எந்தெந்த பூக்களால் பக்தர்களில் உத்தமர்கள் அவனை வழிபடுகின்றனர்?
அப் பூக்களை நாம் வெளியில் தேடி விலை கொடுத்து வாங்க வேண்டுமா? இல்லை!
அகத்திலேயே அவற்றை நீரூற்றி வளர்க்கலாம் என்பது பெரியோர்களின் கொள்கை. ஏனெனில்,
“அகிம்சை, புலனடக்கம், அனைத்து உயிர்களிடமும் இரக்கமுடைமை, பொறுமை, ஞானம், தவம், தியானம்,
வாய்மையில் நிலைநிற்றல் ஆகிய எட்டு வகை புஷ்பங்களும் ஸ்ரீ விஷ்ணுவை உகப்பிப்பவை” என்று
பின்வரும் புராண சுலோகம் கூறுகிறது:

“அஹிம்ஸா ப்ரத2மம் புஷ்பம்
புஷ்பம் இந்த்3ரிய நிக்3ரஹ:
ஸர்வபூ4த த3யா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசே’ஷத: |
ஜ்ஞானம் புஷ்பம் தப: புஷ்பம்
த்4யானம் புஷ்பம் ததை2வ ச
ஸத்யம் அஷ்டவித4ம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதிகரம் ப4வேத் ||” [–ஸ்ரீ பாத்ம புராணம்]

ஸ்ரீ பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனுக்குப் பாடிய பூச்சூட்டல் பாசுரவரி ஒன்றும் இங்கு நிலைவில் நிறுத்த வேண்டியது:

“எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றுஇவை சூட்டவாவென்று” [– ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி, 1.7.10]

இவ்வரிகளில் ‘எண் பகர் பூவும்’ என்பதற்கு, மேற்கண்ட புராண சுலோகத்தின் பொருளை நினைவிற்கொண்டு
‘அகிம்சை முதலான எட்டு புஷ்பங்கள்’ என்று உபன்யாசங்களில் சுவைபட விளக்குவதும் வழக்கில் உள்ளது.

மேற்கண்ட கருத்து சங்க நூல்களிலும் உண்டு. சங்கத் தமிழ்ச் சான்றோர்கள்
‘பரமனின் இயல்புகளை ரிஷிகளும் மற்ற ஞானியரும் எப்படி அறிந்து கொண்டனர்?’ என்ற கேள்விக்கு,
‘ஐம்பொறிகளை அடக்கி, நான்கு உயர் பண்புகளை வளர்த்து, மனதை ஒரே இடத்தில் நிலைநிறுத்துவதனால்
ஏற்படும் எண்ணக் குவியலாலே அவர்கள் அப்பரமனின் இயல்புகளை விரித்துரைத்தனர்’ என்று கூறினர்:

“ஐந்திருள் அறநீக்கி நான்கின் உள்துடைத்துத்தம்
ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரித்தனர்”பரிபாடல், 4-

[செவி முதலிய ஐம்பொறிகளாலே உண்டாகும் மயக்கமாகிய இருளைக் களைந்து, மைத்திரி முதலிய நான்கின் பயிற்சியால்
உள்ளத்தை சுத்தமாக்கி, சமாதி என்னும் ஒரே நெறியின் கண் தம்மைச் செலுத்திய அன்பர்கள்
உன்னைத் தொழுது உன் புகழை எமக்கு விரித்தனர்.]

இவ்வரிகளில் ’நான்கு’ என்று சொல்லப்பட்டதற்குப் பரிமேலழகர் கூறும் விளக்கம்:

(1) மைத்திரி – எவ்வுயிர்க்கும் நன்மையையே விரும்புதல்.
(2) கருணை – எவ்வுயிரிடத்தும் இரக்கமுடையவராய் இருத்தல்.
(3) முதிதை – இன்பதுன்பங்களைச் சமமாகக் கொண்டு எப்போதும் மகிழ்ந்திருத்தல்.
(4) இகழ்ச்சி – ஆன்ம நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருட்களில் பற்றில்லாது அவற்றை இகழ்தல்.

இப் பரிபாடல் வரிகளும் மேற்கண்ட புராணச் சுலோகத்தில் கூறப்பட்ட எட்டு நற்பண்புகளையும் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வரிகளை, ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் உரைநூல்களிலிருந்து ஒரு குறிப்புடன் சேர்த்து அனுபவிக்கலாம்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கவுரையில் அவர் ‘தாமோதரன்’ என்ற பெயருக்குக் கூறும் விளக்கங்கள் மூன்று.
இவற்றுள் ஒரு விளக்கம் நாம் அனைவரும் அறிந்தது –
ஸ்ரீ யசோதை தாம்புக் கயிற்றால் கண்ணன் உதரத்தோடு (வயிற்றோடு) சேர்த்து உரலில் கட்டியதால் ‘தாம + உதரன் = தாமோதரன்’
என்ற பெயர் அவனுக்கு உண்டாயிற்று. அவர் கூறும் மற்றொரு விளக்கம் தற்பொழுது நாம் கவனித்துக் கொண்டிருக்கும்
செய்தியோடு தொடர்புடையது. அதாவது, புலனடக்கம் முதலிய நெறிகளின் பயனால் (‘தமம்’ முதலானவற்றால்)
சுத்தீகரிக்கப்பட்ட (‘உதரமாக்கப்பட்ட’) மனதின் மூலம் அறியத்தக்கவன் ஆதலால் ‘ஸ்ரீ தாமோதரன்’ என்பது.
மகாபாரத சுலோகமொன்றும் இவ்விளக்கத்தை ஆதரிப்பதாக அவர் காட்டியுள்ளார்.
ஸ்ரீ பரந்தாமனை அறியாமல் அவன் புகழை விரித்துப்பாடுவது எங்ஙனம்? ஆகையால்,
“ஐந்திருள் அறநீக்கி … நின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர்” என்ற பரிபாடல் வரிகளுடன்
ஸ்ரீ சங்கரர் கூறும் விளக்கம் முழுதும் உடன்படுகிறது.

ஒரு நாட்டின் அரசன் செங்கோலாட்சி புரிவதென்றால் தனது பிரஜைகளில் நல்லோரைக் காப்பதுடன்
தீயோரைத் தண்டித்துத் திருத்துவதும் அவசியமாகிறது.
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்று தெய்வப்புலவராகிய திருவள்ளுவரும் கூறுகிறார்.
படியளந்த பரமனாகிய திருமாலோ அண்ட கோடிகளுக்கெல்லாம் மன்னாதி மன்னன்.
அவன் நல்லோரிடம் காட்டும் அருளும் தீயோரிடம் காட்டும் சினமும் அவனது எண்ணற்ற நற்குணங்களில் இரண்டு.
இதனை முறையே “சிஷ்ட பரிபாலனம்” என்றும் “துஷ்ட நிக்ரஹம்” என்றும் கூறுவர்.
இதனை மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அவனுக்குச் சிலர் மற்றோரைக் காட்டிலும் அதிகம் வேண்டப்பட்டவர் என்றும்,
வேறு சிலரைக் கைவிடத்தக்கவராக அவன் உள்ளங்கொண்டதாகவும் சிலர் நினைக்கக் கூடும். இவ்வையத்தை நீக்க,

“ஸமோ(அ)ஹம் ஸர்வ பூ4தேஷு ந மே த்3வேஷ்யோ அஸ்தி ந ப்ரிய:”
[அனைத்துயிர்களுக்கும் எனக்குச் சமமே. எனக்கு வேண்டப்படாதவர் என்றும்
வேண்டப்பட்டவர் என்றும் எவரும் இல்லை — பகவத் கீதை, 9.29]என்று கண்ணபிரானே கீதையில் செப்பினான்.
இவ்விடத்தில் ஆதி சங்கரர் தமது உரையில் பரந்தாமனை நெருப்புடன் ஒப்பிடுகிறார் —
நெருப்பானது தன்னருகிலிருப்போருக்கு குளிரிலிருந்து அடைக்கலம் தருகிறது, தொலைவில் உள்ளவருக்குத் தருவதில்லை.
அதற்காக நெருப்பை ஒருதலைச்சார்பு உடையதாகக் கருத இயலாதது; அருகில் வராதவர்கள் வராமையாலேயே அவதிப்படுகின்றனர்.
இறைவனின் அருளும் அத்தகையதே. இதனையே தமிழில் சங்கப் புலவர்களும்,

“கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும்
உள்வழி உடையை; இல்வழி இலையே:
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே: ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே:”–பரிபாடல், 4:49-55

[நீ கொடுமையுடையாரிடத்தே கொடுமையும் செம்மையுடையார்பால் செம்மையும் வெம்மையுடையாரிடத்து வெம்மையும்
தண்மையுடையாரிடத்துத் தண்மையும் உடையை, அவை இல்லாரிடத்தே நீயும் அப் பண்பிலையாவாய்.
இங்ஙனமன்றி, உனக்குப் பகைவரும் இல்லை; நண்பரும் இல்லை. ]

இவ்விடத்தில் பரிமேலழகர், “உயிர்களது இயல்பாலே நினக்குப் பகையும் நட்பும் உள்ளது போலத் தோன்றுகிறதே அன்றி,
உனது இயல்பாலே பகையும் நட்பும் நினக்கு இல்லை.” என்று பொருள்பட உரையாற்றினார்.
“தேவர்களுக்கு முதல்வன் நீ; அசுரர்களுக்கும் நீயே முதல்வன்; அதனால், நினக்குப் பகைவரும் நண்பரும் உளரோ”
என்று பின்வரும் பாடலில் மற்றொரு புலவர் கூறுகிறார்

அமரர்க்கு முதல்வன் நீ;
அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”: [ — பரிபாடல், 3:53-58]

ஆகையால், திருமால் காட்டும் அருளும் சினமும் அந்தந்த ஆன்மா தமக்குத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட
நிலையையே காட்டுவதன்றி ஒருபொழுதும் அவனிடத்து ஒருதலைச் சார்பைக் காட்டாது.

நிற்க. திருவின் மணாளனுக்குச் சினம் வருமெனில்,

“காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோ கு3ண ஸமுத்3ப4வ: |”
[காமமும் சினமும் ரஜோ குணத்தால் உண்டாகின்றன — ஸ்ரீ பகவத் கீதை, என்றும்,

“லோப4: ப்ரவருத்திராரம்ப4: கர்மணாமச’ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்3தே4 ப4ரதருஷப4 ||”
[அர்ஜுனா! ராஜச குணம் அதிகரிக்கும்பொழுது பிறர் பொருளை அபகரிக்க நினைக்கும் பேராசையும், பல (பயனற்ற)
காரியங்களைச் செய்ய வைக்கும் தூண்டுதலும், அமைதியின்மையும்,
பல பொருட்களின் மீது ஆசையும் பிறக்கிறது — ஸ்ரீ பகவத் கீதை, 14.12]என்றும் கீதை கூறுவதனால்,
திருமால் தீயோரிடத்துக் காட்டும் சினம் ராஜச குணத்தால் விளைகிறது என்பது தேறுமா?
முக்குணங்களின் தாக்கம் அவனுக்கும் உண்டோ?

இல்லை. பரமனுக்கு ராஜச தாமச குணங்களின் தாக்கம் அறவே இல்லை என்பது
அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைத விபாகமற அனைத்து வேதாந்த தரிசனங்களும் ஏற்பது.
அவன் ஏற்கும் திவ்ய மூர்த்திகள் அனைத்துமே உயர்ந்த பண்புகளை உடைய சுத்த சத்துவ மய மூர்த்திகளே என்பதை
ஸ்ரீ ஆதி சங்கரர் பிரம்ம சூத்திர உரை (2.3.45), சாந்தோக்ய உபநிடத உரை (8.1.5),
பகவத் கீதை (15-ஆம் அத்தியாயத்தின்) உரைகளில் கூறியுள்ளார்.
இதற்குப் பின்னணியாகப் பல வேத, இதிகாச, புராண வாக்கியங்களும் உண்டு.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவெனில்,
திருமாலுக்குத் தீயோர்கள் மீது ஏற்படும் சினம் ராஜச குணத்தின் வசத்தால் அல்ல, அதுவும் சத்துவ குணத்தின் காரியமே என்பது.
கோபமானது நல்லோர்களிடம் ஏற்பட்டாலோ தீயோர்களிடம் ஏற்படாமற் போனாலோ அது மாசு;
அதுவே தீயோர்களிடம் ஏற்பட்டு, நல்லோர்களிடம் காட்டாமல் இருந்தால் தேசு.
ஆகவே, பரமன் காட்டும் கோபமும் சுத்த சத்துவகுணத்தின் விளைவே.

ஸ்ரீ நாரதமுனியிடம் ஸ்ரீ வான்மிகி முனிவர் ஸ்ரீ இராமனின் கல்யாணகுணங்களைக் கேட்கும்பொழுது,
“ஆத்மவான் கோ ஜித க்ரோதோ த்யுதிமான் க: அநஸூயக: |
கஸ்ய பிப்யதி தேவா: ச ஜாத ரோச’ஸ்ய ஸம்யுகே ||”
[வீரமுள்ளவன் எவன்? சினத்தைக் கட்டுப்படுத்தி வென்றவனும் பிரகாசமானவனும் பொறாமையற்றவனும்
தேவர்களும் அஞ்சி ஓடும்படி சினந்து போர் புரிபவனும் எவன்? — ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம், 1:1.4]என்றே வினவினார்.
இங்கும், “சினத்தை வென்றவன் எவன்” என்று கேட்ட இடத்திலேயே,
“தேவர்களும் அஞ்சும்படியான சினத்தைக் கொண்டிருப்பவன் எவன்?” என்று கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ நாரத முனியும்,
“காலாக்னி ஸத்ருச’: க்ரோதே க்ஷமயா ப்ருத்வீ ஸம:”
[சினத்தில் அவன் பிரளய காலத்தில் எழும் கால அக்னியை ஒத்தவன்.
பொறுமையில் அவன் பூமிக்குச் சமமானவன் — ஸ்ரீ பால காண்டம், 1.18]என்றல்லவோ விடையளித்தார் !

இவ்வாறே சங்கப் புலவர்களும்
“அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;” [– பரிபாடல், 3]
முதலான வரிகளின் மூலம் திருமாலின் அருள், சினம் இரண்டையும் உயர்பண்புகளாகப் பாடியுள்ளனர்
(மறம் = வீரம், மைந்து = வன்மை).

ஸ்ரீ திருவமர் மார்பன் உயிர்களிடத்துக் காட்டும் பொறுமையை ஸ்ரீ நாரதமுனி பூமியுடன் ஒப்பிடுவதை மேற்கண்ட
ஸ்ரீ இராமாயண சுலோகத்தில் கண்டோம். யுத்த காண்டத்தில் ஸ்ரீ நான்முகக் கடவுளும்,
“ஜகத் ஸர்வம் ச’ரீரம் தே ஸ்தைர்யம் தே வஸுதாதலம் |
அக்னி: கோப: ப்ரஸாதஸ்தே ஸோம: ஸ்ரீவத்ஸலக்ஷண ||”
[திருமரு மார்பனே! உலகனைத்தும் உனக்குச் சரீரம். பூமியானது உனது பொறுமையையும் வழுவாமையையும்
கொண்டிருக்கிறது. அக்னியே உனது சினம்; உனதருள் நிலவு. — ஸ்ரீ யுத்த காண்டம், 117.26]என்று ஸ்ரீ இராமனைத் துதித்தார்.

இதனையே தமிழ்ப்படுத்தியது போல் சங்கப் புலவர்களும்,

“நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள”–பரிபாடல், 4
[உனது அழிப்புப் பண்பும் தெளிவும் சூரியனிடமும், அருளும் மென்மையும் சந்திரனிடமும்,
தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடமும் உள்ளதைக் காண்கிறோம் — ]என்று ஸ்ரீ திருமாலைப் பாடினர்.

சூரியனின் வெம்மை, சந்திரனின் குளுமை இரண்டும் பூமிக்கு இன்றியமையாதது போல,
சர்வேசுவரனாகிய ஸ்ரீ வாசுதேவன் உயிர்களிடத்துக் காட்டும் அன்பு, வன்மை இரண்டுமே உலக நடப்புக்கும்
அவ்வுயிர்களின் ஆன்ம வளர்ச்சிக்கும் அவசியம். எனவே,

“விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
அறனும், ஆர்வலர்க்கு அருளும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;”–
(ஆர்வலர் = நல்லோர், மாற்றலர் = அற வழியிலிருந்து தவறியவர்கள், அணங்கு = துன்பம்)
என்று ஸ்ரீ மாயவனைப் பாடிய சங்கப் புலவர்கள் அடுத்தபடியாக,
“அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;” [பரிபாடல், 1 ]என்றனர்.

நிற்க. முதற் பரிபாடலில் “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும்… நீ;” என்பது,

“யே ச வேதவிதோ விப்ரா: யே ச அத்யாத்மவிதோ ஜனா: |
தே வதந்தி மஹாத்மானம் க்ருஷ்ணம் தர்மம் ஸநாதனம் ||”

[வேதத்தை அறிந்த சான்றோர்களும் அத்யாத்ம வித்தையாகிய பிரம்மஞானம் அறிந்த நல்லோர்களும்,
மகாத்மாவாகிய கண்ணனே அழியாத தருமம் என்றுரைப்பர் — ஸ்ரீ மகாபாரதம், 3.86.22]
எனும் அழகிய ஸ்ரீ மகாபாரத சுலோகத்தின் தமிழாக்கம் போல அமைந்துள்ளது.
வேத வேதாந்தங்களின் ஆழ்பொருளை அறிபவர்கள், ஸ்ரீ கண்ணனைச் சரணடைவதையே உயர்ந்த தருமமாகப் பற்றுவர் அன்றோ.

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:” [– ஸ்ரீமத் ராமாயணம், 3.37.13]
என்று ஸ்ரீ தசரத புத்திரனும் தருமத்தின் வடிவாகவே கூறப்பட்டனனன்றோ?
“ஸ்ரீ கண்ணனைத் தவிர வேறொரு பலனை அடைய விரும்புவோர், அப்பலனை அடைவதற்குச் சாதகமாக அக்னி ஹோத்திரம்,
தவம், தானம் முதலானவற்றைக் கடைபிடிப்பர். சிறந்த யோகி என்று சொல்லப்படுபவன்
ஸ்ரீ கண்ணனை அடைவதற்கு ஸ்ரீ கண்ணனிடம் சரணடைவதைத் தவிர வேறு உபாயங்களைக் கைவிடுவன்.”[– ஸ்ரீ சாங்கர கீதா பாஷ்யம், 7.1]
என்னும் ஸ்ரீ ஆதி சங்கரரின் பகவத் கீதை உரை வரிகளிலிருந்தும் இதை அறிகிறோம்.

ஸ்ரீ கம்பரும்
“ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார்.”–கம்பராமாயணம், பாயிரம், 3
[அளவில்லாதவையும், அழிவில்லாதனவுமாகிய வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும்
‘ஸ்ரீ ஹரி ஓம்’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய
பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்கள். —
என்று பாடியுள்ளதும் இங்கு நினைவில் நிறுத்தத் தக்கது.

—————-

காவேரீ விரஜாதோயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ரங்கநாதோ வாஸுதேவ: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே
தமஹம் சிரஸா வந்தே ராஜானம் குலசேகரம்

ஆராதவருளமுதம் பொதிந்த கோவில்
அம்புயத்தோன் அயோத்திமன்னர்க்கீந்த கோவில்
தோளாத தனிவீரன் தொழுத கோவில்
துணையான வீடணர்க்குத் துணையாங்கோயில்
சேராத பயனையெல்லாம் சேர்க்கும் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழும் கோயில்தானே.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading