ஸ்ரீ வைணவமும் வள்ளுவமும்-January 3, 2011 By ஆர்.சௌந்தர்

வள்ளுவர் உலகிற்கு என்ன செய்தி சொல்கிறார் என்பதைவிட, குறட்களை மனப்பாடம் செய்து எழுதுவதே
திறமையென நிர்ணயிக்கப்பட்டிருந்த காலம் அது. ‘பிற’ என்று முடியும் குறளை எழுதுக, அல்லது
‘உலகு’ என்று முடியும் குறளை எழுதுக என்று எல்லா வினாத்தாள்களிலும் ஒரே மாதிரியான கேள்விகளே கேட்கப்படும்.
திருவள்ளுவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஒருவேளை அதற்கு உரை எழுதியவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்
என்று பார்க்கலாம் என்று தோன்றியது. முதலில் பரிமேலழகர் பெயர்தான் நினைவுக்கு வந்தது.
இந்தப்பெயரை நினைத்தவுடன் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை வேண்டிக்கொண்டேன். நீங்கள்தான் காப்பாத்தணும் என்று.

திருக்குறள் ஒருபொது நூல். இது எந்த சமயத்தையும் சார்ந்தது இல்லை. மாலுடன் சம்பந்தப் படுத்த வேண்டுமென்றால்,
மாலைத் தான் கேட்கவேண்டும், சரி,அது என்ன மாலை? அதுதான் திருவள்ளுவ மாலை.

மாலும் குறளாய் வந்தான். இரண்டடியால் உலகை அளந்தான். எனவே மாலும் வள்ளுவமும் ஒன்றாய் இருக்குமோ?
இந்த சந்தேகம் முன்னர் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கும் வந்ததாம்.
அதை அவர் அப்படியே ஒரு வெண்பாவாகப் பாடி வைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து

இதே கருத்தைப் பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்–என்று பாடியுள்ளார்.

வள்ளுவர் என்பது அவரது இயற்பெயரா? புத்தகத்தைத் தேடினேன்; நாயனார், தேவர், நான்முகனார் என்பன பல.
இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான், என் தம்பி முகுந்தமாலையை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.
” ஸ்ரீ வல்லபேதி,வரதேதி, தயாபரேதி . . ” அட. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே!
ஸ்ரீவல்லபா (லட்சுமிக்குப் பிரியமானவனே) என்பதைத் தமிழ்ப்படுத்தினால் திருவல்லபா அல்லது திருவள்ளுவா என்று
திரிபுடன் சொல்லி விடலாமே என்று தோன்றியது. முதல் கட்டம் வெற்றி! திருவள்ளுவரைத் திருமாலுடன் இணைத்தாகி விட்டது.
இனி அடுத்த கட்டம்.

முதல் குறளிலேயே வெற்றி. அகர முதல எழுத்தெல்லாம்- ஆஹா இது அப்படியே கீதா வாக்கியம் –
அக்ஷராணாம் அகாரோஸ்மி. எழுத்துக்களில் நான் அகாரமாய் இருக்கிறேன்.
எனவே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால் தான்.

அடுத்த குறளிலே வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’
அல்லது முற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’ என்று குறிப்பிடுமிடத்தே, ஐம்புலன்களை வென்றவன் அதாவது
ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும் திருமாலின் ஒரு திவ்யநாமம்.
ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே தனக்கு உவமை இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்;
ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9));
ஒப்பார் மிக்காரை இலையாய மாமாயன் (திருவாய்மொழி 2-3-2);
வடமொழியில் அதுல: என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு
உரை சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன்.
இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

சோம்பலை வெறுக்கும் அதிகாரம் மடியின்மை. இங்கே போய் தேடினால்,
குறள்எண் 610 பளிச்சென்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது.

மடியிலா மன்னவன் எய்தும்; அடி யளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை நேராகவே குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர்.
திருவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்ய நாமம்,

உடனே நிலையாமை என்கிற அதிகாரத்தைப் புரட்டினேன்.

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் எண்: 339)

இறப்பு துக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது
இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
. . நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
. . அன்யானி ஸன்யாதி நவானி தேஹி (2-22)

குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது கொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத் தழுவிக் கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை
என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார்.
தாமரைக் கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

அறவாழி அந்தணன் என்று வருவதைக் கொண்டு சமணர் என்பாருண்டு’. நீ என்ன சொல்கிறாய்? என்றார்.
‘ஐயா!, நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்று தானே சுட்டுகிறார்.
எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’.

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

திருக்குறளில் இலக்குமியைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துகளைத் தொகுக்கமுயன்றேன்.
ஸ்ரீ, பூ, நீளா தேவி ஸமேத விஷ்ணுவான படியாலே, தேடுதல் இம்மூவரையும் பற்றியதாக
இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
பூமாதேவியின் முக்கிய குணம் பொறுமை அல்லவா? முதலில் இந்தக் குணம் தேவை.
க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல்,
பொறையுடைமை அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார்.
பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை நாட்டுகிறார்.
இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா தொடர்ந்து வருவது நியாயந்தானே!
அதற்கும் விடை தருகிறார் ஸ்ரீ வல்லபர்.

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள்
அவர் தகுதியை அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு

முயற்சி திருவினை ஆக்குமே! மேலும் தேடிப்பார்க்கலாம் என்று புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடி கொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

அடுத்து நீளாதேவியைப் பற்றி எங்கே குறிப்பிடுகிறார்?
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார்.
நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) இணைந்து, இம்மூவரும்,
திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும்.
அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது.
இதனால் தானோ நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவ மாலையில் கிடைக்கிறது?

நீளாதேவியைப் பற்றி வள்ளுவத்தில் ஏதானும் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கையில்,
திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைத்தது.
இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு),
உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.)
அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார்,
திருக் குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்; பசுவில் சிறந்தது காமதேனு;
ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார்.
திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார்
கொப்பூழ் எழுகமலத்தே அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும், நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா மரைமேல் அயன்

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading