ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –75-செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்- இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இவர் தம்குணத்திலே வித்தராகிற படியைக் கண்டு –
நீர் இது செய்வது – ஸ்ரீ பகவத் வைலஷ்ணயத்தைக் காணும் அளவு இறே -கண்டவாறே -நீரே யதிலே தோள்
மாறுகிறீர் என்று ஸ்ரீ எம்பெருமானார்க்குக் கருத்தாக –
ஸ்ரீ எம்பெருமான் தன் அழகோடு பிரத்யஷித்து -உன்னை விடேன் -என்று இருந்தாலும்
தேவரீர் உடைய குணங்களே வந்து என்னை மொய்த்து நின்று அலையா நிற்கும் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

இப்படி இவர் தம்முடைய குண சேஷ்டிதங்களை அனுசந்தித்து வித்தராய் சொன்ன வார்த்தையை ஸ்ரீ எம்பெருமானார் கேட்டருளி –
இப்பொழுது நீர் அத்யவ அதிசயத்தாலே இப்படி எல்லாம் சொன்னீர் -ஆகிலும்
ஸ்ரீ பகவத் விஷயத்திலே சென்று -அங்கேற வைலஷண்யங்களைக் கண்டு -அவ்விடத்தில் ரசம் அறிந்தீர் ஆகில் –
இந்த ப்ராவண்யம் நிலை நிற்குமோ என்று திரு உள்ளமாய் அருள –
ஸ்ரீ சர்வேஸ்வரன் சங்கு சக்ராதி திவ்ய ஆயுத அலங்க்ர்தனாய் கொண்டு அடியேன் இருந்த இடம் தேடி வந்து
தன் வைலஷ்ண்யத்தை அடியேனுக்கு முற்றூட்டாகக் காட்டி உன்னை நான் விடுவது இல்லை என்று என் முன்னே நிற்கிலும் –
அவன் வைலஷண்யத்தில் ஈடுபடாதே தேவரீர் பக்கலில் தானே ஈடுபடும்படி –தேவரீர் உடைய கல்யாண குணங்கள் கட்டடங்க
வந்து அடியேனை சூழ்ந்து கொண்டு ஆகர்ஷியா நிற்கும் –என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இங்கனம் தம் குணங்களில் ஈடுபடுவதைக் கண்ட ஸ்ரீ எம்பெருமானார் -இவ் ஈடுபாடு ஸ்ரீ பகவானைக் காணும் கண்ணுறும்
அளவு தானே -கண்டதும் இங்கே ஈடுபாடு அங்கே மாறி விடும் அன்றோ -என்று கருதுவதாகக் கொண்டு –
ஸ்ரீ பகவான் தான் அழகு அனைத்தையும் புலப்படுத்திக் கொண்டு கண் எதிரே வந்து -உன்னை விடேன் என்று இருந்தாலும் –
தேவரீர் குணங்களே வந்து போட்டி இட்டு நாலா புறங்களிலும் சூழ்ந்து மொய்த்துக் கொண்டு
என்னை நிலை குலைந்து ஈடுபடும்படி செய்யும் -என்கிறார் .

செய்த்தலைச் சங்கம் செழு முத்த மீனும் திருவரங்கர்
கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி நம் கண் முகப்பே
மெய்த்தலைத் துன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்தலைக்கும் வந்து இராமானுசா ! வென்னை முற்று நின்றே – – 75-

பத உரை .
செய்த்தலை-வயல் ஓரங்களிலே
சங்கம் -சங்குகள்
செழு முத்தம் -செழுமை வாய்ந்த முத்துக்களை
ஈனும் -பிரசவியா நிற்கும்
திருவரங்கர் -ஸ்ரீ திருவரங்கத்திலே எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ பெரிய பெருமாள்
கைத்தலத்து -திருக் கரங்களிலே
ஆழியும் -திருச் சக்கரத்தையும்
சங்கமும் -திருச் சங்கையும்
ஏந்தி -எடுத்துக் கொண்டு
நம் கண் முகப்பே -நமது கண் எதிரிலேயே
மொய்த்து -அழகு முதலிய குணங்களினாலே மொய்த்துக் கொண்டு
அழைத்து -தேவரீர் இடம் அடியேன் ஈடுபட்டு இருக்கும் நிலையைக் குலைத்து
உன்னை விடேன் என்று -உன்னை நான் விட மாட்டேன் என்று
இருக்கிலும் -சொன்னபடியே நிலை பேராமல் இருந்தாலும்
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் புகழே -தேவரீர் உடைய திருக் குணங்களே
வந்து என்னை முற்றும் மொய்த்து நின்று -வந்து என்னை எல்லாப் பக்கங்களிலும் மொய்த்துக் கொண்டு நின்று
அலைக்கும்-ஈடுபடுத்தும்

வியாக்யானம் –

வயல் தலைகளிலே சங்குகள் ஆனவை அழகிய முத்துக்களை பிரசவியா நின்று உள்ள ஸ்ரீ கோயிலிலே நித்ய வாசம்
பண்ணுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியர்-அமலனாதி பிரான் – 7-என்கிற படியே
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான திருக் கையிலே
அணியார் ஆழியும் சங்கமும் ஏந்திக் கொண்டு -திருவாய் மொழி -3 5-8 – என்கிற படியே –
என் கண் வட்டத்திலே சாஷாத் கரித்து.தம்முடைய சௌந்தர்யாதிகளாலே தேவரீர் விஷயமாக வென்னுடைய
நிலை குலைக்கு ஈடான புத்தி பேதத்தை பண்ணி –
உன்னை நாம் விடோம் -என்று பிரதிஜ்ஜை பண்ணிக் கொண்டு ஸ்த்தாவர ப்ரதிஷ்டையாக இருக்கிலும்
தேவரீர் உடைய கல்யாண குணங்களே வந்து என்னை எங்கும் ஒக்க மொய்த்துக்
கொண்டு நின்று அஹமஹமிகயா ஸ்வ வைலஷ்ணயத்தை காட்டு ஆகர்ஷியா நிற்கும் .
ஆகையால் ஸ்ரீ பகவத் வைலஷ்ண்யம் கண்டாலும் -அதில் தோள் மாறக் கூடாது என்று கருத்து .

மொய்த்தல் -திரளுதல்
அலைத்தல்-நின்ற விடத்தில் நில்லாத படி சலிப்பித்தல்
மெய்த்தலத்து -என்று பாடமான போது
மெய்யான தலத்திலே மெய்ந்நிலத்திலே -என்றபடி –
அதாவது –
நின்னை விடேன் என்று இருக்கிற இருப்பு ஐந்த்ரஜாலிகம் போலே மெய் போலும்-பொய் அன்றிக்கே -சத்யமேயாய் இருக்கை –
சத்தியமாகவே வுன்னை விடேன் என்று கண் முகப்பே இருக்கிலும் என்றபடி ..

செய்களிலே சங்கு நிறைந்த -போக்யதை -ஸ்ரீ அரங்கனின் வண்மை சொல்ல வேணுடுமோ
சங்கமாம் பிரணவ விமானம் செழு முத்தமாய் -ஸ்ரீ முத்தனார் – வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் திருக்கையில் திவ்யாயுதங்கள்
திரி தந்தாகிலும் போலே ஸ்ரீ அமுதனார் -உருவ வெளிப்பாடு இல்லை–ஸ்ரீ அரங்கன் நான் இருக்கும்மிடம் தேடி வந்து
ஸ்ரீ ஸ்வாமி வந்து கை கொண்டது போல- முற்றூட்டாக காட்டி கொண்டு–
என் அமுதனை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா நிலை-இங்கு ஸ்ரீ அமுதனாருக்கு-
போனால் போகிறது என்று ஸ்ரீ ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்.. இவர் இங்கு அதுவும் இல்லை என்கிறார்
இதுவும் தன்னால் இல்லை-உன் கல்யாண குணங்களே என்னை சூழ்ந்து பேராமல் என்னை வைத்தது என்கிறார் ஸ்ரீ அமுதனார்–
ஆழியும் சங்கமும் ஏந்தி -நிறைய பாசுரங்களில் சங்கு சக்கரம் – நம் கண் முகப்பே -ஸ்ரீ ராமாநுஜரையும் கூட்டி என்றுமாம் –
பரதானுஜன் -ஸ்ரீ ராமானுஜன் என்று கூட சொல்லிக் கொள்ளாமல் சத்ருக்கனன் ராமானுஜன்-பரதன் –
புகழ் குணம் மொய்த்த காரணத்தால் -போலே இங்கும் –

செய்த தலைச் சங்கம் –
சூழ் புனல் அரங்கம் -என்றும்
பூகி கண்ட த்வயஸ சரசஸ் நிகக்த நீரோப கண்டாம்–என்றும் சொல்லுகிறபடியே –
திருக் காவிரியில் ஜல சம்ருத்தியாலே கோயில் சுற்றும் இருக்கிற வயல்களுக்கும் திரு நந்தவவ னங்களுக்கும் நீர் பாய்ந்தால்
அந்த வயல் தலையில் ஜலத்தோடே வந்த சங்கங்கள் அங்கே நிற்கும் இறே –அப்படிப்பட்ட சங்கங்கள் ஆனவை –

செழு மித்த மீனும் –
அழகிய முத்துக்கள் பிரவசியா நின்றுள்ள –ஜல சம்ருத்தியை உடைத்தான ப்ரவாஹத்தோடே வந்த சங்கங்கள் ஆகையாலே –
அவற்றுக்கு அழகிய முத்துக்களை ஈனுகையே ஸ்வ பாவமாயிருக்கும் இறே –
இவர் அந்த வைலஷ்ண்யத்தை சதா அனுபவித்து கொண்டு இருந்தவர் ஆகையாலே –
அத்தை இட்டே அந் நகரத்தை வர்ணிக்கிறார் காணும் –

செய்த்தலை ..முத்தம் ஈனும் –
ஈனும் -என்னும் பெயர் எச்சம் ஸ்ரீ திருவரங்கத்தொடு இயையும்-
ஈனும் ஸ்ரீ திருவரங்கத்தை உடையவர் ஸ்ரீ பெரிய பெருமாள் -என்க –
தலை-ஓரம் -ஏழனுருபு என்னலுமாம் –
செழு முத்தம்-பண்புத் தொகை -நல்ல முத்து -என்றபடி –
வெள்ளத்திலே வரும் சங்குகள் வயல்களின் வரப்பு ஓரங்களிலே ஒதுக்கப்பட்டு நல்ல முத்துக்களை அங்கே ஈனுகின்றன -என்றபடி
இதனால்-செழு நீர் திருவரங்கம் -என்றது ஆயிற்று
புள் நந்துழாமே பொருநீர்த் திருவரங்கா -திரு விருத்தம் -28 – என்று ஸ்ரீ நம் ஆழ்வார்
அலை எறியும் நீரும் சங்கமும் திருவரங்கத்தில் உள்ளதாக வருணித்து இருப்பதும் காண்க –
நந்து -சங்கு

திருவரங்கர் –
இப்படிப் பட்ட ஸ்ரீ ரங்க ஸ்தலத்துக்கு – நிர்வாஹரான ஸ்ரீ பெரிய பெருமாள் –

கைத் தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் -என்றும் –
கூரார் ஆழி வெண் சங்கம் ஏந்தி -என்றும் –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் -என்றும் சொல்லுகிறபடியே –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்கும் படியான அழகிய ஸ்ரீ திருக் கைகளிலே –
ஸ்ரீ திரு ஆழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் தரித்துக் கொண்டு இருந்தால் –
அந்த சேர்த்தி-அழகு -வாக்குக்கு நிலம் அன்று இறே –
திருக் கைகளும் திரு ஆயுதங்களும் தட்டு மாறி ஒன்றுக்கு ஓன்று பரபாகமாய் காணும் இருப்பது –
இப்படி அணியார் ஆழியும் சங்கமும் ஏந்திக் கொண்டு தர்சநீயராய் –

என் கண் முகப்பே –
என் கண் வட்டத்திலே –சாஷாத்கரித்து- மொய்த் தலைத்து –தம்முடைய சௌந்திரயாதிகளாலே
தேவரீர் விஷயமான என்னுடைய அத்யாவச்யத்தை குலைக்கைக்கு ஈடான புத்தி பேதத்தை பிறப்பித்தும்-
நின்ற இடத்தில் நில்லாத படி துடிப்பித்தும் —

கண் முகப்பே வீடேன் என்று இருப்பினும் –
தாம் ஈடுபடாத ஸ்ரீ எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் திருவரங்கத்தை அமுதனார் இங்கனம் வருணித்து இருப்பது
சிறப்பிற்கு உருவாக அன்று –
விடாது ஆட்படுத்தி ஸ்ரீ திருவரங்கர் முற்படுவதை குறிப்பால் உணர்த்தும் நோக்கம் உடையது அஃது என்று உணர்க –
நீர்மையின் பெருக்கினால் ஸ்ரீ திருவரங்க ஷேத்ரத்திலே -செய்யிலே -சங்கமாம் ஸ்ரீ பிரணவ விமானம் —
செழு முத்தமாய் –ஸ்ரீ முத்தனார் -எனப்படும் ஸ்ரீ பெரிய பெருமாளைத் தோற்றுமாறு செய்கிறது -என்பதே
ஸ்ரீ அமுதனார் வருணையின் உட் பொருள் என்று உணர்க

அரும் பொருளாய் நின்ற ஸ்ரீ அரங்கன் தன் நீர்மையின் பெருக்கினால் ஆட் பார்த்து உழி தருமவன்
ஆதலின் -விடேன் என்று கண் முகப்பே இருக்க மாட்டானா ?
செழு முத்தம்-செழுமையான முத்தம் -பண்புத் தொகை -நன் முத்தம் என்றபடி –
முத்தங்கி சாத்திமுத்து மயமாய் தோன்றும் ஸ்ரீ திருவரங்கரே செழு முத்தம்-என்க –

கைத் தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி
தம்மை உள்ளபடி காட்டக் கண்ட ஸ்ரீ திருப்பாண் ஆழ்வாருக்கு –
கையினார் சுரி சங்கு அனல் ஆழியராய் -ஸ்ரீ திருவரங்கர் சேவை சாதித்தது போலே
அடியேனுக்கும் சேவை தரினும் ஈடுபடேன் -என்கிறார் .

ஆழியும் சங்கமும் ஏந்தி என்ன அமைந்து இருக்க
கைத்தலத்து -என்று மிகை பட கூறியது
கைகளும் ஆயுதமுமான சேர்த்தி அழகு தோற்றற்கு -என்க .

கையில் ஆழியும் -என்னாது கைத்தலத்து ஆழியும் -என்றது
கையின் பரப்புடைமை தோற்றற்கு -என்க –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -என்றாள் ஆண்டாளும் .

காதலியின் பால் காதலன் தன்னை அலங்கரித்து செல்வது போலே
ஸ்ரீ திருவரங்கர் என்பால் வேட்கை மீதூர்ந்து தம்மை ஆழியும் சங்கமும் கொண்டு அலங்கரித்து வரினும் –
நான் அவர் இடம் ஈடுபாடு கொள்ள மாட்டேன் -என்கிறார்
எல்லா ஆபரணங்களும் இவைகளே என்னலாம்படியான அணியார் ஆழியும் சங்கமும் எந்துமவர்–திருவாய் மொழி -8 3-6 – –
தம் மனம் சூழ -சுழலும்படி -வருவதாக ஸ்ரீ நம் ஆழ்வார் அதிசங்கைப்படும்
ஸ்ரீ பகவானை ஸ்ரீ அமுதனார் மதிக்க மாட்டேன் என்கிறார் .

மெய்த்தலத்து -என்ற பாடமான போது –
மெய்யான தலத்திலே – மெய் நிலத்திலே -என்றபடி -அதாவது –
நின்னை விடேன் என்று இருக்கிற இருப்பு -ஐந்திர ஜாலிகம் போலே மெய் போலும் பொய் அன்றிக்கே சத்தியமாய் இருக்கை –
மொய்த்தல்-திரளுதல் –அலைத்தல் -நின்ற இடத்தில் நில்லாதபடி துடிப்பித்தல் –
உன்னை விடேன் என்று இருக்கிலும் -உன்னை நாம் விடக் கடவோம் அல்லோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டு
ஸ்தாவர பிரதிஷ்டியாக அடி பேராது இருக்கிலும்-

நம் கண் முகப்பே –
ஸ்ரீ திருவரங்கர் கூரார் ஆழி வெண் சங்கேந்தி வந்து தன் சௌந்தர்யம் முதலிய குணங்களில் ஈடுபடுத்த முற்படினும்
தாம் நிலை பேராது நிற்றலுக்கு ஸ்ரீ ஸ்வாமியை சாஷியாக சேர்த்து கூறும் நோக்கம் உடையவராய் –
என் கண் முகப்பே -என்னாது –நம் கண் முகப்பே -என்கிறார் .

பிரத்யஷதாமுபகதச்த்விஹா ரங்கராஜ – ஸ்ரீ எதிராஜ விம்சதி -என்றபடி தேவரீருக்கு ப்ரத்யஷமாகத் தோற்றும்
ஸ்ரீ திருவரங்கர் அடியேனுக்கும் கண் முகப்பே தோற்றி தேவரீர் இடம் அடியேன் கொண்ட ஈடுபாட்டினை-குலைக்க முற்படினும்
அடியேன் சிறிதும் நிலை பெயரேன் என்றார் ஆயிற்று .

என் கண் முகப்பே -என்னும் பாடமே இங்கு இருந்து இருக்கலாம் என்று பூர்வர்கள் உரைகளில் இருந்து தெரிகிறது
நம் கண் முகப்பே மாவேகிச் செல்கின்ற மன்னவரும் –இரண்டாம் திருவந்தாதி -69 – என்னும் இடத்தில் போலே
இங்கும் ஓதி ஓதி அந்தப் பாடமே தொடர்ந்து விட்டது என்று தோன்றுகிறது -அறிஞர்கள் ஆராயக .

மொய்த்து அழைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்
ஸ்ரீ திருவரங்கர் கையும் ஆயுதமுமான அழகுடன் என் கண் வட்டத்திலே சாஷாத்காரம் கொடுத்து-
தம் குணங்களினால் தேவரீர் விஷயத்தில் அடியேன் ஈடுபட்டு நிற்கும் நிலை குலையும்படியாக புத்தியை மாறாடச் செய்து –
உன்னை இனி நாம் விடோம் -என்று பிரதிஜ்ஜை செய்து கொண்டு –அந் நிலையில் சிறிதும் பேராமல் நிலை நிற்பினும் –
அடியேன் அங்கே ஈடுபட கில்லாது –
தேவர் குணங்களே வந்து வலிந்து தம் பால் இழுத்துக் கொண்டு விடும் என்கிறார் .

அலைத்து –
அலையும்படி செய்து–நிலை கொள்ளாது அசைதல்

இங்கு மெய்த்தலைத்துன்னை-என்று பாடம் இருக்கலாம் என்று தோற்றுகிறது .
மெய்த்து -உரு வெளிப்பாடு போல் அல்லாது உண்மையான சாஷாத்காரத்தை கொடுத்து -என்றபடி .
ஆன்றோர்கள் ஆய்ந்து முடிவு கூறுக .
இனி மெய்த்தலத்துன்னை-என்று
மற்று ஒரு பாடம் உள்ளதாக ஸ்ரீ மணவாள மா முனி காட்டி உள்ளார் .
அப்பொழுது மெய்த்தலத்து -என்பதற்கு மெய்யான நிலத்தில் -என்று பொருள் .
அதாவது ஸ்ரீ திருவரங்கர் -உன்னை விடேன் என்று இருக்கும் இருப்பு -இந்திர ஜாலம் போலே
மெய் போன்ற பொய் தோற்றம் அன்று -உண்மையாகவே தோற்றி நிற்றல் -உன்னை விடேன் என்று
உண்மையாகவே கண் முகப்பே இருக்கிலும் -என்றபடி .இங்கனம் அவரே அதனை விளக்கி உள்ளார் .

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

நின் புகழே –
ஏய்ந்த பெரும் கீர்த்தி -என்னும்படியான தேவரீர் உடைய கல்யாண குணங்கள்-

வந்து -என்னை முற்றும் நின்று -மொய்த்து அலைக்கும் –
அடியேன் இருந்த இடம் தேடி வந்து விஜாதீயர்க்கு இடம் கொடாதபடி -அடியேனை எங்கும் ஒக்க பரிவேஷ்டித்து கொண்டு நின்று –
பகவத் வை லஷண்யத்தில் கால் தாழ்த்தாத படி -அஹம் அஹம் இகயா ஸ்வ ஸ்வ வை லஷண்யத்தைக் காட்டி
ஆகர்ஷியா நிற்கிறன -ஆகையால்
ஸ்ரீ பகவத் வைலஷண்யத்தை கண்டாலும் அதிலே தோள் மாறக் கூடாது என்று கருத்து –

கச்சதா மாதுலகுலம் பரதே நத தானக சத்ருக்னோ நித்ய சத்ருக்னோ நீத ப்ரீதி புரச்க்ர்த –
சுலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் உபாசதே -ஹச்தச்த முதகம் த்யக்த்வா கனஸ் தமபி வாஞ்சதி -என்னக் கடவது -இறே –

எட்ட இருந்த குருவை இறை அன்று என்று விட்டோர் பரனை விருப்புதல் பொட்டு எனத் தன் கண் செம்பளித்து இருந்து
கைத் துருத்தி நீர் தூவி அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று-என்று ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே–

நின் புகழே –முற்றும் நின்றே –
புகழ்-புகழப்படும் குணங்களுக்கு ஆகு பெயர்
மேலே மொய்த்தல் -திரளுதல்-சொல்ல படுவதால்- புகழ் என்பது எல்லா நல் குணங்களையும் கூறுகிறது .
புகழே -ஏ பிரிநிலையின் கண் வந்தது
ஸ்ரீ திருவரங்கர் புகழ்கள் அல்ல -ஸ்ரீ எம்பெருமானாரே ! நின் புகழே அலைக்கும் -என்றபடி
அலைத்தல்-நிலை கொள்ளாதபடி ஈடுபடச் செய்தல் .

ஸ்ரீ திருவரங்கர் ஆழியும் சங்கமும் ஏந்திய கைத்தலத்து அழகு என் திறத்து பயன் பெற வில்லை .
ஸ்ரீ எம்பெருமானார் முக்கோல் ஏந்திய கைத்தலத்து அழகே என்னை ஈடுபடச் செய்கிறது .
சஸ்த்ரம் பிடித்த ஸ்ரீ அரங்கர் கையில் எனக்கு ஈடுபாடு இல்லை .
சாஸ்திரம் பிடித்த ஸ்ரீ எம்பெருமானார் கையில் தான் எனக்கு ஈடுபாடு .
ஸ்ரீ திருவரங்கரே நேரே வந்து தம் அழகைக் காட்டி உன்னை விடேன் என்று நிலை நிற்பினும்
நிலை குலையாதவன் -அடியேன் .
ஸ்ரீ எம்பெருமானார் தாம்நேரே வரா விடினும் அவர் குணங்கள் தாமாகவே வந்து எங்கும் ஒக்க என்னை சுற்றி
நின்று போட்டி இட்டுத் தம் அதிசயத்தை அறிவுறுத்திட அவற்றில் நிலை கொள்ளாது
ஈடுபட்டு நிற்பவன் அடியேன் .

ஸ்ரீ ஆசார்ய விஷயத்தை பற்றினவன் திறத்து ஸ்ரீ சர்வேஸ்வரன் தானே மேல் விழுந்து உகப்பின் மிகுதியால்
தன் வடிவைக் காட்டி ஈடுபடுத்த முற்படுவது இயல்பு –
ஆதலின் அவன் அங்கனம் முற்படினும் என் ஸ்ரீ ஆசார்ய நிஷ்டையை குலைக்க ஒண்ணாது என்கிறார் இப் பாசுரத்தில் .
ஸ்ரீ தேவ பிரான் தன் கரிய கோலத் திரு உருவை ஸ்ரீ மதுர கவியாருக்கு தானே மேல் விழுந்து காட்டினான் அன்றோ
ஸ்ரீ மதுர கவியார் கண்டார்
ஸ்ரீ அமுதனாரோ விடேன் என்று தம் அழகைக் காட்டி ஸ்ரீ திருவரங்கர் நிலை நிற்பினும்
கண் எடுத்தும் பாராது ஸ்ரீ எம்பெருமானார் குணங்களிலேயே தாம் ஈடுபட்ட நிலை
குலையாமல் இருப்பதாக பேசுகிறார் ..

ஸ்ரீ பெருமாளோடு இணைத்து வைப்பவளான ஸ்ரீ பிராட்டியைப் பற்றி இருப்பினும் இணைப்பதற்கு
ஸ்ரீ பெருமாளை எதிர் பார்த்தாக வேணும்
ஸ்ரீ ஆசார்யனையே உபாயமாக பற்றிடிலோ ஸ்ரீ பெருமாள் தாமே மேல் விழுந்து தம்மை இவனுக்கு கொடுத்திடுவார் -என்று அறிக .
ஸ்ரீ ஆசார்யனைத் தவிர தேவு மற்று அறியாத நிலை தமக்கு வாய்த்து இருப்பதை
ஸ்ரீ அமுதனார் இந்தப் பாசுரத்தில் விண்ணப்பித்தார் ஆயிற்று –

இதில் மூவர் அனுபவம்- சத்ருக்னன்/ மதுரகவி ஆழ்வார் /தம் –சரம பர்வத நிலையை இங்கு அருளுகிறார்-
உண்ட போது ஒரு வார்த்தை உண்ணாத போது -ஒரு வார்த்தை மற்ற ஆழ்வார்கள் சிரித்து இருப்பார்-
நேராக வந்தான்-ஸ்வாமி குணமே வந்தது இங்கே-அவன் நேரில் வந்தால் தான் காரியம் ஆகும்-
நாமம் தூரச்தன் ஆனாலும் காரியம் செய்யும் ஸ்வாமி குணமே காரியம் செய்யும்-
போனால் போகிறது என்று ஆழ்வார் உள்ளம் மகிழ பார்த்து வைத்தேன்..இவர் இங்கு அதுவும் இல்லை என்கிறார்.
இதுவும் தன்னால் இல்லை-
உன் கல்யாண குணங்களே என்னை சூழ்ந்து பேராமல் என்னை வைத்தது என்கிறார் ஸ்ரீ அமுதனார்–

————

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் -பெரியாழ்வார் திருமொழி-–4-1-7-

வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையன் உள்ள விடம் –4-1-7-

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே -நாச்சியார் திருமொழி-–14-8-

இரு கரையர்களாக இருப்பார்கள் உனக்கு ஒப்பார்களோ-
-குற்றத்தையும் குணத்தையும் கணக்கு இட்டு செய்யும் அவர்கள் உனக்கு ஒப்பார்களோ மாட்டார்கள் இறே–
கர்ம அனு குணமாக சிருஷ்டிக்கும் அவன் இறே அவன்
கருதும் இடம் பொருது சக்கரம் -பாஞ்ச சன்யம் திரு ஆபரணம் மட்டும் இல்லை-

கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே -திரு வாய் மொழி–6-9-1-

சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண்ணன் என்றே தளரும் –7-2-1-

அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்–8-10-9-

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading