ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக
வந்து அவதரித்தார் என்றீர் .
இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –
அவர் செய்த அகடிதகடனங்களை அருளிச் செய்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் ஆள அரிய என்னை-ஆள வந்து அவதரித்தார் என்று
அவரைக் கொண்டாடா நின்றீர் -இந்த அவதாரத்திலே உம்மை ஒருவரையே-ஆளா நின்றாரோ என்ன –
முதல் முன்னம் உத்தேசித்து அவதரித்தது என்னை ஆளுக்கைக்காகவே -ஆகிலும்
இவர் அவதரித்து அருளி -அவைதிக சமயங்களாலே நசித்துப் போன லோகங்களை எல்லாம் சகிக்க மாட்டாதே –
அந்த அவைதிக மதங்களை நசிப்பித்து -தம்முடைய கீர்த்தியாலே லோகங்கள் எல்லாவற்றிலும் வியாபித்து –
க்ரூர பாவியான என் பக்கலிலே பிரவேசித்து -என்னுடைய பாபங்கள் எல்லாம் நசித்துப் போகும்படி பண்ணி –
பின்பு பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் –
இப்படி ஒரு கார்யத்தை உத்தேசித்து-அநேக கார்யங்களை செய்தார் –
இப்படி இந்த எம்பெருமானார் செய்து அருளும் ஆச்சர்யங்களைக் கண்டீரே-என்று வித்தார் ஆகிறார்
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப்பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-
பத உரை –
அறு சமயங்கள்-ஆறு மதங்கள்
பதைப்ப -நடுங்கும்படியாக
பார்த்தான்-நோக்கினார்
இப்பார் முழுதும் -இம்மண்ணுலகம் எங்கும்
புகழ் கொண்டு –தம் கீர்த்தியாலே
போர்த்தான் -மூடினார்
புன்மையினேன் இடை -குற்றமுடையவனாகிய என்னிடத்திலே
தான் புகுந்து -தாமே வந்து புகுந்து
இரு வினை-பெரிய பாபங்களை
தீர்த்தான் -நீக்கினார்
தீர்த்து -இவ்வாறு தீ வினைகளை அகற்றி
அரங்கன் -பெரிய பெருமாள் உடைய
செய்ய -அழகிய
தாள் இணையோடு -திருப் பாதங்களோடே
ஆர்த்தான் -பிணைத்தார் –
எம் இராமானுசன் -எம் தலைவரான எம்பெருமானார்
செய்யும்-செய்திடும்
அற்புதம் இவை -வியத்தகு செயல்கள் இவை
வியாக்யானம் –
வேத பாஹ்யங்களான ஷட் சமயங்களும் நடுங்கும்படியாக கண்டார் .
இந்தப் பூமி எங்கும் தம்முடைய திவ்ய கீர்த்தியாலே மூடி விட்டார்
அநாத்ம குணங்களை நிரூபகமாக உடையனாய் இருக்கிற என் பக்கலிலே என்னுடைய அர்த்தித்வாதி நிரபேஷமாக தாமே புகுந்து –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம்-வைகுண்ட ஸ்தவம் -59 – என்கிறபடியே
கால தத்வமுள்ளதனையும் அனுபவித்தாலும் -தொலையாது என்னும்படியான மகா பாபங்களை-போக்கினார் –
இப்படி பாபங்களைப் போக்கி -பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு-சம்பந்தித்தார் –
எங்களுக்கு நாதரான எம்பெருமானார் செய்து அருளின ஆச்சர்யங்கள் இவை –
அற்புதம்-அத்புதம்-அதாவது அகடிதகட நா பிரயுக்தமான ஆச்சர்யம்
பதித்தல்-துடித்தல்
போர்த்தல்-மூடுதல்
இருமை-பெருமை
ஆர்த்தல்-பந்தித்தல்–
இராவண வதம் -வியாஜ்யம் -அபராத பிரதான சாரம் -ஜடாயு மோக்ஷம் இத்யாதிகள் உண்டே –
புன்மை உடையவன் இல்லை புன்மையாகவே -தர்மி தர்மம் வாசி இல்லாமல் -கருதும்படி புன்மைகள் செய்தவன் என்றபடி
தானே வந்து புகுந்து -நிர் ஹேதுகமாக -தீர்த்து அரங்கன் திருவடிகளை காட்டி -அருகில் நமக்காக வந்த பெரிய பெருமாள் திருவடிகள்
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப –
அறு சமயங்கள் –
பௌத்த சாருவாக சாக்ய உலூக்ய பாசுபத காணா பத்யங்கள்-என்கிற வேத பாஹ்ய சமயங்கள் ஆறும் என்னுதல் –
அன்றிக்கே –
அனுஷ்டான தசையிலே அத்யந்த துக்க ரூபங்கள் ஆனவை-என்னுதல் –
பதைப்ப பார்த்தான் –
இப்படிப் பட்ட வேத பாஹ்ய சமயங்கள் எல்லாம் நிர்மூலமாக போம்படி அவற்றை-கடாஷித்தார் –
பதைத்தல் -துடித்தல் –
திக்சவ்தாபத் தஜைத்ரத் வஜபடபவ நச்பாதி நிர்த்தூத தத் தத் சித்தாந்த ச்தோம கூலச்த
பகவிகம நவ்யக்தசத் வர்த்த நீகா -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப –
ஆறு சமயங்களும் தம்முள் ஒன்றுக்கு ஓன்று முரண்பட்டுக் போரிடவனவாயினும்
வைதிக மதத்தை எதிர்ப்பதில் அவையாவும் கருத்து ஒன்றிக் கூடுவன –
எம்பெருமானார் ஏறிட்டுப் பார்த்த உடன் திரண்ட அவை யாவும் பதைத்னவாம்
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு –
லோகம் எல்லாம் நிச்சபத்னமாகப் பண்ணவே தமக்கு எல்லாம் கைவசம் ஆய்த்து –
இப்படிப்பட்ட பூமி எங்கும் பண்டித பாமார சாதாரணமாக தம்மைக் கொண்டாடும்படி தம்முடைய கீர்த்தியை
சர்வ திக்கிலும் வ்யாபித்தார் –
போர்த்தல் -மூடுதல் –
இப்பார் -போர்த்தான்
கற்றார் மாற்றார் என்ற வேறு பாடின்றி உலகம் அனைத்தும் இவர் புகழ் பரவியது என்றபடி –
அறு சமயங்கள் பதைப்பப் பார்த்தமையால் உண்டான புகழ் ஆதலின் அந்த
சமயங்கள் பரவிய உலகம் அனைத்திலும் அப் புகழ் பரவியது என்க –
புன்மையின் இடை –
வந்தேறியான பாபங்கள் ஒன்றும் இன்றிக்கே -வேம்பு முற்ற கைப்பு மிகுவது போலே -என்கிறபடியே
நாள் தோறும் என்னால் தீரக் கழியச் செய்யப்பட்டவையாய் –
பாபாநாம்வா -என்றும் –
தேத்வகம் புஞ்சதேபாப -என்றும் சொல்லுகிறபடியே –
அந்த பாபங்களே ஒரு வடிவாக உடையவன் ஆகையாலே அத்யந்த பாபியான என் இடத்திலே –
தான் புகுந்து –
அடியேன் ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதே இருக்கச் செய்தேயும் –
அர்த்தியாதே இருக்கச் செய்தேயும் –
தத் உபய நிரபேஷமாக தாமே நிர்ஹேதுகமாக வந்து பிரவேசித்து —
இருவினை –
இரண்டு வகைப்பட்ட வினை -புண்ய பாபங்கள்-என்றபடி –
அன்றிக்கே –
இருமை -பெருமையாய் –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ர்ஜதி ஜந்து ரிஹஷனார்த்தே -என்றும்–
பாபானாம் பிரதமோச்ம்யஹம் -என்றும் –
மயிதிஷ்டதி துஷ்க்ர்தாம் பிரதானே -என்றும் அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
அனுபவ பிராயசித்தங்களாலும் -எத்தனைஎனும் தரம் உடையவராலும் நிவர்திப்பிக்க அரியதான
என்னுடைய மகா பாபங்களை -என்றபடி-
தீர்த்தான் –
இவற்றை அநாயாசேன மணலிலே எழுதின எழுத்தை துடைப்பாரைப் போலே துடைத்தார் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் –
சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடி வாசனையோடு போக்கினார் என்றபடி –
தீர்த்து –
அந்தப்படி ரஷணம் பண்ணி ஆறி கை வாங்கி இருக்கை அன்றிக்கே -இப்படி பாபங்களை எல்லாம் போக்கி –
அரங்கன் –
எட்டா நிலமான பரம பதத்தில் போய் ஆஸ்ரயி என்றும் –
யோக மார்கத்தில் அந்தர்யாமியை ஆஸ்ரயி என்றும்-
இப்படி அநேகங்களானவற்றை உபதேசித்து போருகை அன்றிக்கே –
அத்யந்த சுலபராய் கொண்டு -நான் இருந்த இடத்தில்-இருக்கிற பெரிய பெருமாள் உடைய –
செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –
அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்கிறபடியே -தர்சநீயமாய் -பாவனத்வ போக்யங்களுக்கு
பரஸ்பர சதர்சமான திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை அறிவிப்பித்தார் -என்றபடி —
ஆர்த்தல் -பந்தித்தல்
புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளி செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக – புன்மையினேன் -என்கிறார்.
புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று –
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று .
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று –
புன்மை அல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-என்பது தோன்ற அருளிச் செய்ததனால் –
புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் – என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –
இருவினை –
மகா பாபம்-
புண்ய பாபங்கள் ஆகவுமாம் –
தீர்த்தான் தீர்த்து -என்று மீண்டும் கூறுவதால் -ஒரு அரிய செயல் செய்து முடித்தமை தோற்றுகிறது –
இதனால் அநிஷ்ட நிவ்ருத்தி கூறப் பட்டது .
இனி அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்-என்று இஷ்ட ப்ராப்தி கூறப் படுகிறது
ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-
மாயப் பற்று அறுத்து –
தீர்ந்து
தன்பால் மனம் வைக்கத் திருத்தி
தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள்
இணையோடு ஆர்த்து வைத்தார் .
இவை எல்லாம் ராமானுசன் செய்யும் அற்புதமே –
இவ்வளவும் சொன்னவை எல்லாம் எங்களுக்காக அவதரித்து-அருளின எம்பெருமானார் செய்தருளும் அற்புத காரியங்கள் –
அற்புதம் -அத்புதம் –
பித்ர்வாக்ய பரிபாலனம் பண்ண-வேண்டும் என்று காட்டுக்கு போய் அவ்வளவோடு நில்லாதே –
ராஷசரை எல்லாம் சம்ஹரித்து -திரு வணை கட்டுவித்து –
மகா ராஜருக்கும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் ஸ்வ ஸ்வராஜ்யங்களைக் கொடுத்துப் போந்த-
சக்கரவர்த்தி திருமகனைப் போலே -ஓன்று செய்ய என்று ஒருப்பட்டு –
அநேகமான அதி மானுஷ சேஷ்டிதங்களைப் பண்ணி அருளினார் காணும் இவரும் –
இப்படி இறே மகா புருஷர்கள் படி இருப்பது –
கா புருஷர்கள் ஆனால்-உபக்ரமத்திலே அநேக பிரகல்பங்களைச் சொல்லி -கார்ய சமயம் வந்தவாறே –
வருந்தியும் அல்பமாகிலும் செய்ய மாட்டார்கள் -என்றது ஆய்த்து –
என் இடை =என் இடத்தில்
அறம் பொருள் காமம் ஆர் ஆர் இவற்றின் இடை அதனை எய்துவார் மூன்றின் உள்ளே -போல
தானே வந்து கை கொண்டார்.
அரங்கன் உடன் ஆர்த்தான்
தாள் இணை உடன் ஆர்த்தான்
செய்ய தாமரை தாள் இணை வாழியே
அரங்கன்-செய்ய தாள் இணை..எட்டா நிலம் இல்லை-ஏரார் முயல் விட்டு காக்கைபின் போவதே-
திரு கமல பாதம் -செய்ய தாள் இணை- சேர்க்கை-பாவனத்வம் போக்யத்வம்/ உபாய உபேயம் –
அழகிய மணவாளன் உடன் ஆர்த்தான் சம்பத்திதான் விடு பட முடியாமல் ..-இது தான் பெரிய அகடிதகட கார்யம்
——————–
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப–
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-
திரியும் கலி யுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கித யுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே–5-2-3-
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-
அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி-1-8-3-
நீடு பனி மலர் மாலை இட்டு நின் இணை யடி தொழுது ஏத்தும் -3-5-5-
ஆழி வண்ண நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-1-
எனக்குமாதல் வேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-2-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டுளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-3
அஞ்சி வந்து நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-4-
மாகமா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மா மறையாளன் –பொன்னருள் எனக்கும்
ஆகவேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-5-
நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-7
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-8-
அவ்வரத்த வடி இணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -8-1-7-
முன்பொலா விராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி இணை பணிய நின்றார்க்கு -திருக் குறுந்தான்டகம்- -15
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்–பெருமாள் திருமொழி —-5-5-
நரங்கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது -இரண்டாம் திருவந்தாதி –-84-
எந்தை இணை அடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக வென்வாய்-17
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18-
அடி இணையை தன்னுடைய அங்கைககளால் தான் தடவ தான் கிடந்தது —பெரிய திருமடல் –
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை யருளாய் வந்தே -திருவாய்மொழி -3-2-4-
என் பரஞ்சுடரே என்று உன்னை யலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10-
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்மையே நின்ற வெம்பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே-8-4-4-
———————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply