ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி கேட்ட இடத்திலும் ஒரு மாற்றமும் அருளி செய்யக் காணாமையாலே அத்தை விட்டு-
செய்த உபகாரங்களை அனுசந்தித்து -ப்ரீதியாலே தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
நமக்கு-எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
உரையாய் இந்த நுண் பொருளே -என்று இவர் நேர் கொடு நேர் நிற்று கேட்ட அளவிலும் –
எம்பெருமானார் ஒரு மாற்றமும் அருளிச் செய்யக் காணாமையாலே -அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை-அனுசந்தித்து
அவற்றை தம் அருகே இருக்கும் பாகவதோரோடே சொல்ல ஒருப்பட்டவாறே –
இவ்வளவும் இவர் தாம் அவர்களைக் குறித்து எம்பெருமானார் உடைய கல்யாண குண வைபவத்தை பிரசங்கித்தார்
ஆகையாலே அவர்களும் அந்த குணங்களில் ஆழம் கால் பட்டு வித்தராய் –
இவர் சொல்லும் அத்தை-கேட்கவும் மாட்டாதே பரவசராய் இருக்க –தம்முடைய திரு உள்ளத்தை சம்போதித்து –
புத்திர தார் க்ரஹா-ஷேத்திர அப்ராப்த விஷயங்களிலே மண்டி நிஹீனராய் போந்த நமக்கு –
அஞ்ஞா னத்துக்கு உடலான துக்கத்தைப் போக்கி
நித்தியமாய் நிரவதிகமாய் இருக்கிற தம்முடைய கல்யாண குண ஜாதம் எல்லாம் தெளியும் படியான-அறிவைக் கொடுத்து அருளின –
எம்பெருமானார் செய்த ரஷணங்கள் பின்னை ஒருவராலே செய்யப் போமோ -என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
உரையாய் இந்த நுண் பொருளே -என்று அமுதனார் கேட்டும் -மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு –
அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து -ப்ரீதியாலே –தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –
பத உரை –
நெஞ்சே -மனமே
பொருளும்-செல்வமும்
புதல்வரும்-புத்திரர்களும்
பூமியும் -வயலும்
பூம் குழலாரும் -அழகிய கூந்தலை உடைய மனைவியும்
என்றே -என்று இவற்றையே பயனாக கருதி
மருள் கொண்டு –மதி மயங்கி
இளைக்கும் -சோர்வடையும்
நமக்கு –
இருள் கொண்ட -அறியாமை கலந்த
வெந்துயர் -கொடிய துன்பங்களை
மாற்றி-போக்கி
தன-தம்முடைய
ஈறுதல்-அழிவற்ற
பெரும் புகழே -பெருமை வாய்ந்த நற் குணங்களையே
தெருளும் -அறியும்படியான
தெருள்-அறிவை
தந்து -கொடுத்து
இராமானுசன்-எம்பெருமானார்
செய்யும் சேமங்கள் -செய்யும் ரஷைகள்
மற்றுளார் தரமோ -வேறு உண்டானவர்கள் செய்யும் அளவோ
வியாக்யானம் –
அர்த்தமும் புத்ரர்களும் ,ஷேத்ரமும் ,தாரங்களும் ,என்று இவற்றையே விரும்பி அறிவு கெட்டு-அவசன்னராய் போருகிற நமக்கு
அஞ்ஞான யுத்தமான க்ரூர துக்கங்களை நீக்கித்–தம்முடைய நித்தியமாய் நிரவதிகமான கல்யாண குணங்களையே
அறியும்படி யான அறிவைத் தந்து எம்பெருமானார் செய்யும் ரஷைகள்-நெஞ்சே -மற்று உண்டான வர்கள் செய்யும் அளவோ –
பூம் குழல்-அழகிய குழல்-பூவை உடைத்தான குழல் என்னவுமாம்
மருள்-அறிவு கேடு
சேமம்-ரஷை
தரம்-ஒப்பு
மற்றுளார் தரமோ -என்றது -மற்று உள்ளாரோடு ஒப்போமோ -என்றபடி –
ராமனும் கண்ணனும் அருளாதவற்றை அன்றோ ராமானுஜர் அருளுகிறார் நமக்கு
என்றே -ஏவகாரம் ஒவ் ஒன்றாலும் கவலையில் ஆழ்ந்த படி
தாயே தந்தையே தாரமே -போலே-
பொருளும் புதல்வரும் என்று தொடங்கி -நெஞ்சே –
கீழில் பாட்டுக்களில் தமக்கு எம்பெருமானார் கிருபையாலே ப்ராப்தமான சம்ருத்தியும் அவருடைய கல்யாண குண வைபவத்தையும் –
சமீப வர்திகளான பாகவதர்களோடு சொல்லிக் கொண்டு-போருகிற அளவில் -அவர்கள் அவற்றில் -வித்தராய் பரவசராய்
ஒரு மறு மாற்றமும் அருளிச் செய்ய மாட்டாதே இருந்தவாறே தம்முடைய நெஞ்சைப் பார்த்து –
தாம் பெற்ற பல பரம்பரையை அருளிச் செய்கிறார் –
பொருளும்
சமஸ்த புருஷார்த்த சாதனமாய் -ஸ்வ ஜனங்களோடு கூடி யாவஜ்ஜீவம் செய்கைக்கு உறுப்பாய்-இருந்துள்ள –
தன கனக வஸ்து வாஹனாதி சகல பதார்த்தங்களும்
பொருளும் –
பொருள் இல்லார்க்கு இவ் உலகமில்லை யாதலின் அது முந்துறக் கூறப்பட்டது
புதல்வரும் –
புத்ரோத்பத்தி விநாசாப்யம்-நபரயம் சுக துக்கயோ -என்கிறபடியே
இனி இதுக்கு அருகே ஒரு சுகம் இல்லை என்னும்படி நிரவதிக-சுக ரூபனாயும்-கரனாபாடவதசையிலே போஷகனாயும் –
புன்நாம் நோ நரகாத் த்ரா யேத் -என்கிறபடியே
அத்ருஷ்ட உபகாரகனுமாயும் இருந்துள்ள -புத்ரனும் –
புதல்வரும்
பொருள் செல்வத்துக்கு பிறகு மக்கள் செல்வம் பேசப்படுகிறது
பெரும் அவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த மக்கள் பேறல்ல பிற -என்று பெரும் பேறாக மக்கள் செல்வம் பேசப்படுவது காண்க –
இம்மையில் முதுமை-நோய் முதலியவற்றால் துயருறும் காலத்து உதவியும்
மறுமையில் -புத்-என்னும் நரகத்து விழாது காத்தும் தாய் தந்தையர்க்கு பயன் படுபவர் புத்திரர் என்க-
பூமியும் –
சல ஸ்வபாவங்களான வஸ்துக்கள் போல் அன்றிக்கே
ஸ்தாவரம் ஆகையாலே புத்திர பௌதராதி பர்யந்தமாக ஜீவன ஹேதுவான ஷேத்ரமும்
பூம் குழலாரும் –
பரிமள பிரசுரங்களான புஷ்பங்களாலே பரிஷ்கரிக்கப் பட்ட -சபரீ பந்தங்களை –
பார்யாசமோ நாஸ்தி சரீர தோஷனே –என்று ஸ்லாகிக்கப் பட்ட நல்ல தாரமும் –
பூமியும் பூம் குழலாரும் என்றே –
நல வாழ்வுக்கு காரணமான நில நலனும் -வாழ்க்கை துணை நலனும் பேசப்படுகின்றன –
வாழ்க்கை பயன் பேசப்பட்டன கீழ்-
வாழ்க்கைத் துணைகள் பேசப்படுகின்றன இங்கே –
பூமியால் பொருளும் -பூம் குழலாரால் புதல்வரும் பயனாகப் பெரும்படும் அன்றோ –
உரிய தலைவனுக்குப் பருவத்திற்கு ஏற்ப பேணப்பட்டு போகத்தை தருதலின்
நிலத்தையும் பூம் குழலாரையும் சேர்த்து கூறினார் –
வள்ளுவனாரும் -சொல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும் -பொருள் பால்-உழவு -9 –
என்று நிலத்துக்கு இல்லாளை உவமை யாக்கிக் கூறினார் .
தன்கட் சென்று வேண்டுவன செய்யாது வேறு இடத்தில் இருந்த வழி மனையாள் ஊடுமாறு போலே
என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி -என்று பரிமேல் அழகர் சுவை ததும்ப இக் குறளினை விளக்குவது கண்டு இன்புறுக-
நிலம் நல்ல முறையில் பேணப் படின் இல்லாமை இல்லை
பூம் குழலார் மாண்புடையராய் மதிக்கப் படினும் இல்லாமை இல்லை –
இலம் என்றசை – இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் -என்னும் குறளில்-
சோம்பி நல்ல முறையில் சாகுபடி செய்யாத வறியரை நோக்கி
அவருக்கு உரிய நில மங்கை பரிஹசிப்பதாக கூறப்பட்டு உள்ளது –
இதனால் சாகுபடி செய்யும்-நன் செய் நிலம் உடையாருக்கு இல்லாமை இராது என்பது போதரும் –
இங்கனமே -இல்லதென் இல்லவள் மாண்பானால்-என்று மாண்புடைய மனைவி உடையார்க்கும்
இல்லாமை இல்லை -என்கிறார் அக்குறள் ஆசிரியரே –
பூம் குழல்-அழகிய குழல்
பூவை உடைய குழலாகவுமாம்
என்றே மருள் கொண்டு இளைக்கும் –
ஷேத்ராணி மித்ராணி தா நா நிநாத-புத்ராஸ் ச தார –பசவோ க்ர்ஹாணி -த்வத் பாத பத்ம ப்ரவனாத்
மவர்தேர்பவந்தி சர்வே பிரதிகூல ரூபா -என்று-சொல்லப்படுகிற ஆகாரத்தை மறந்து –
இவை தாரக போஷாக போகயங்கள் என்று -இவற்றிலே சக்தனாய்-பிரமித்து -அந்த அஞ்ஞா நத்திலே துவக்குண்டு –
அவசன்னராய் போந்த நமக்கு –
தாயே தந்தை என்னும்-தாரமே கிளை மக்கள் என்றும் நோய் பட்டு ஒழிந்தேன் -என்றும் –
புத்ர தார க்ரஹா ஷேத்ரம் ர்கதர்ஷ்ணாம் புபுஷ்கலே — கர்த்த்யாகர்த்த்ய விவேகாந்தம் பரிப்ப்ராந்தமிதச்தித்த -என்றும்
சொல்லக் கடவது இறே
என்றே
பெரும் பேறு வேறு ஓன்று உண்டு என்னும் நினைப்பே இன்றி இவைகளையே பேறாக
விரும்பிப் போந்தோம் -என்கிறார்
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு
மருள்-விபரீத உணர்வு
பேறு அல்லாதவற்றைப் பேறாக நினைக்கை மருள் -என்க
இறைவன் திறத்தும் -அவன் அடியார் திறத்தும் -மிக்க ஈடுபாடு கொண்டார்க்கு –
மனைவி மக்கள் நிலம் செல்வம் முதலியன ஈடுபாட்டுக்கு பிரதி கூலங்களே அன்றோ –
ஆதலின் அவை பேறாக மாட்டா –
பேறாக அவற்றை கருதி விரும்புவது மருள் ஆயிற்று
பொருளில் நசை இருப்பின் -இறை யன்பு தடைப்படும்
அம்ருத தத்தவத்தை -இறை அனுபவத்தை -பொருளினால் பெற ஆசைப்படுவதற்கே இல்லை-என்பர் யாஜ்ஞவல்கியர் –
புத்ரபாசம் -அத்யாத்ம நூல்கள் அருளும் முனிவர் களுடைய ஆன்ம உணர்வையே-மறைத்து விடுவதை காண்கிறோம் –
பூமியும் பூம் குழலாரும் நம்மை அன்பால் இறைவன் பால் போக ஒட்டாது
தம் வசத்தே அகப்படுத்திக் கொள்ளுவதும் கண்கூடு –
இளைத்தல்-துன்புறுதல் -ஞான சங்கோசமும் ஆகவுமாம் –
இருள் கொண்ட வெந்துயர் மாற்றி –
அவிவிவேக நாந்த தின்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி –பகவன் பவ துர்த்தி நேபா தச்கலிதம் – என்கிறபடியே
அஞ்ஞான மூலமாய் க்ரூரமாய் இருக்கிற-துக்கத்தை சவாசனமாக நிவர்ப்பிபித்து –
இருள் கொண்ட வெந்துயர் மாற்றி –
இருள்-அஞ்ஞானம் உவமை ஆகுபெயர்
இருள் கொண்டதாதலின் தப்பும் வழி புலனாகாது பட்டேயாக வேண்டியது தென்பது தோன்ற வெந்துயர் -என்றார்
மாற்றி-நீக்கி
அறியாமை என்னும் இருளை நீக்குமவன் குரு
எம்பெருமானாரே குரு
இராமானுஜ திவாகரன் முன்னே இருள் கொண்ட வெந்துயர் எங்கனம் நிற்க முடியும்
தன் ஈறில் பெரும் புகழ் –
ஸ்வபாவிகமாய் அவதி இன்றிக்கே-மென்மேலும் பெருகி வருகிற மகத்தான உம்முடைய கல்யாண குண ஜாதத்தை –
தெருளும் தெருள் தந்து –
தெளியும் படியான ஞானத்தைக் கொடுத்து –
இராமானுசன் செய்யும் சேமங்களே –
இப்படி எம்பெருமானார்-செய்து அருளும் ரஷணங்கள் –
தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து
புகழ்-புகழப் படும் குணம் -அது ஈறில்லாதது-அழிவின்றி நித்தியமாய் உள்ளது -எண்ணற்றதுமாம்
தன் புகழ்-எம்பெருமானாருக்கு அசாதாரணம் ஆனது
இறைவனது குணம் அருள் போலே மறு பாடு அற்றது
பெரும் புகழ்-புகழுக்கு பெருமை யாவது அனுபவிக்கும் குணத்தை விட்டு வேறு ஒரு குணத்தையோ
அன்றி வேறு ஒருவனாம் இறைவன் இடத்தில் உள்ள குணத்தையோ அனுபவிக்கப் போக ஒட்டாமை –
இனி
இருள் கொண்ட வெந்துயர் மாற்றி-அதனால் ஆகிய பெரும் புகழ் ஒன்றினையே
தெருளும் தெருள் தந்தார் -என்று உரை கூறலுமாம்
புகழே -ஏ பிரிநிலைக் கண் வந்தது
துயர் மாற்றிய புகழ் அன்றி வேறு ஒரு புகழ் தெரியாத வண்ணம் அப் புகழையே
என் அறிவுக்கு புலன் ஆக்கினர் என்றதாயிற்று –
நம் ஆழ்வார் சர்வேஸ்வரன் என்னுள்ளே புகுந்து பெறாப் பேறு பெற்றானாய்-கால் வாங்க மாட்டாதே
ரத்ன பர்வதம் போலே நின்ற இம் மகா குணத்தை யல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக
மதியேன் என்னும் கருத்துடன் -பாடி யருளிய –
என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே -திருவாய் மொழி -8 7-5 – -என்னும் ஸ்ரீ சூக்தி உடன்-இதனை ஒப்பிடுக-
மற்றுளார் தரமோ –
எத்தனை தரமுடையார் ஆகிலும் செய்ய சக்தரோ –
அறியாதன அறிவித்த அத்தா -நீ செய்தன அடியேன் அறியேனே -என்றால் போலே
சரம பர்வமான-எம்பெருமானார் பக்கலிலே க்ருதஞ்ஞராய் அருளிச் செய்கிறார் –
மற்றுளார் தரமோ –
கழுத்தில் ஓலை கட்டிக்-கொண்டு திரிந்தும் -சாரத்தியம் பண்ணியும் -பதினெட்டு அத்யாயம் உபதேசித்தும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – என்றும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம-என்றும்
அநேக பிரகாரமாக -படாதன பட்டும் –ஒருவனை ஆகிலும் சர்வேஸ்வரன் ரஷித்தான் அல்லன் –
நாராயண் மஹே திலோககுராவதந்தே கோமா-நுஷச் ரியமவாப சனாதனம் தாம் –
ராமானுஜே புவிமிதே சாகலோபி ஜந்துஸ் சம்சார திவ்ய பதயோர் நஹி வேத்தி பேதம் –-என்கிறபடியே
நெஞ்சே கண்டாயே எம்பெருமானார் நமக்கு பண்ணின உபகார பரம்பரை வாசா மகோசரம் ஆய்த்து –
தென்னரங்கர் தமக்காமோ தேவியர்கட்காமோ சேனையர்கோன் முதலான சூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறனருள் மாரி தனக்காமோ மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவர்க்கு முடியும் எதிராசா வுனக்கு அன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன் –
என்று இவ் அர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே —
மற்றுளார் தரமோ
எம்பெருமானார் செய்யும் சேமங்கள் மற்ற எவராலும் செய்ய இயலாதவை
மண வாள மா முனிகள் –
தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான சூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-
சதிர மென்று தம்மைத் தாமே சம்மதித் தின் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்காள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-
எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-
கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே–4-9-3-
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும் பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே –4-9-4-
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –ஸ்ரீ பெரிய திருமொழி—1-6-4-
பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-
ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-5 1-
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 3-
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
April 15, 2020 at 1:47 am |
ஸ்வாமி, நம்ஸ்காரம் ஒரு சின்ன சந்தேகம். தங்கள் வலைத்தளத்தில் உள்ள கட்டுரைகள் சிறப்பானவை அதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த ஒரு வாக்கியமுமே நிறைவு பெறாதததை போன்று உள்ளதே ஏதாவது விசேஷ அர்த்தம் உள்ளதா. க்ஷமிக்கனும் அடியேன் தவறாக ஏதும் கேட்டிருப்பின்.