ஸ்ரீ திருவாசிரியம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் –இரண்டாம் பாசுரம் –

வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம்
ஆதித்ய வர்ணம் தமஸஸ் பரஸ்தாத்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நாந்ய பந்தா வித்யதே அயநாய–ஸ்ரீ புருஷ ஸூக்தம் —

(வேத புருஷனாகிய நான் -ஸ்வரூப ரூப குண விபூதிகளில் பெரியவனும்
ஸூர்யன் போலே ஒளி விடுபவனும் -ப்ரக்ருதிக்கு அப்பால் பட்டவனுமான இந்தப் புருஷனை அறிகிறேன்
அவனை இம்மாதிரி அறிபவன் இப்பிறப்பிலேயே முக்தனாக ஆகிறான்
மோக்ஷத்திற்கு வேறே வழி கிடையாது )–என்று கொண்டு

த்யேயமாகச் சொல்லுகிற வஸ்துவினுடைய விக்ரஹ வை லக்ஷண்யம் சொன்னார் முதல் பாட்டில் –

அந்த த்யேய வஸ்துவினுடைய பக்கல் பிறக்கும்
பரபக்தி தொடங்கி ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கையாலே
தத் விஷய பக்தியே அமையும் என்கிறது இரண்டாம் பாட்டில் –

முதல் பாட்டில் -வடிவு அழகும் மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று –
அவை கர்ம ஞானங்களினுடைய ஸ்த்தாநேயாய் நிற்க –
அனந்தரம் பிறக்கும்
பரபக்தி பர ஞான பரம பக்தியை இறே உத்தேச்யமாகச் சொல்லிற்று –

அந்த ஞான கர்மங்களினுடைய ஸ்த்தாநத்திலே நிற்கிறவற்றை அனுபாஷிக்கிறார் –
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை-என்கிற இவ்வளவாலே-

உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?-2–

உலகு படைத்து உண்ட எல்லா உலகங்களையும் ஸ்ருஷ்டித்து -பிரளய காலத்தில் விழுங்கிய
எந்தை அறை கழல்-என் ஸ்வாமியாகிய எம்பெருமானுடைய -சப்தியா நின்றுள்ள வீரக் கழலை யுடைய திருவடிகளாகிற
சுடர் பூம் தாமரை சூடுதற்கு -ஜ்வலிக்கும் படியான அழகிய தாமரைப் பூவை அணிவதற்காக
அவாவு ஆர்-ஆசையினால் நிறைந்த
உயிர் உருகி யுக்க நேரிய காதல்-ஆத்மாவானது உருகி விழ-அதனால் உண்டான பக்தி ரூபமான அன்பு என்ன
அன்பில் இன்பு–பக்தியினால் உண்டான பரமபக்தி ரூபமான ப்ரீதியில் உள்ள இனிமை என்ன
ஈன் தேறல் அமுத வெள்ளத்தானாம் -இவைகளில் உள்ள இனிமையின் வை லக்ஷண்யம் ஆகிற அமுதக்கடலில் மூழ்கி இருக்கும் படியான
சிறப்பு விட்டு-மேன்மையை விட்டு
ஒரு பொருள்க்கு-கீழான புருஷார்த்தத்துக்காக
அசைவோர் அசைக-அல்லல் உறுபவர்கள் அலையட்டும்
திரு வோடு மருவிய இயற்க்கை -ஐஸ்வர்யத்தோடு கூடிய ஸ்வ பாவத்தோடும்
மாயாப் பெரு விறல் -அழியாத மிகுந்த பலத்தோடும்
உலகம் மூன்றினோடு -மூன்று உலகங்களோடும் கூட
நல் வீடு பெறினும்-மேலான புருஷார்த்தமான மோக்ஷத்தைப் பெற்றாலும்
கொள்வது எண்ணுமோ -இவற்றைப் பெறுகைக்கு நினைக்குமோ
தெள்ளியோர் குறிப்பே -தெளிந்த ஞானத்தை உடைய பெரியோர்களுடைய அபிப்ராயம்

உலகு படைத்து
ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜத–சாந்தோக்யம் –62-3–
(அந்தப் ப்ரஹ்மம் நானே பலவாக ஆகக் கடவேன் என்று சங்கல்பித்தது
அது தேஜஸ்ஸை ஸ்ருஷ்ட்டி செய்தது) என்கிற
சங்கல்ப மாத்திரத்தாலே ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களையும் உண்டாக்கி –

உண்ட
உண்டான இவற்றுக்கு பிரளய ஆபத்து வர –
இவற்றை அடைய திரு வயிற்றிலே வைத்து ரஷித்துப் பண்ணி அருளிய
வியாபாரத்தால் கண்ணழிவு அற்ற மேன்மை சொல்லுகிறது

எந்தை
ஸ்வாமித்வ ப்ரயுக்தமான மேன்மையை உடையனாய் இருந்து வைத்து –

மூ உலகு அளந்த
எத்தனை யேனும் தம்மைத் தாழ நினைத்து இருந்தபடியால்
தம்மை விஷயீ கரித்தவத்தால் வந்த நீர்மை சொல்லுகிறார்

மூ உலகு அளந்த –
இதனுடைய எல்லை தாமாக நினைத்து இருக்கிறார்

அறை கழல் சுடர் பூம் தாமரை
த்வனியா நின்றுள்ள வீரக் கழலை யுடைத்தாய் அத்யுஜ்ஜ்வலமாய்
நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளை
இத்தால் அழகு -சொல்லுகிறது

இம் மேன்மையாலும்
நீர்மையாலும்
வடிவு அழகாலும் விளைந்த
பரபக்தியாதிகளை மேலே விளக்கி அருளுகிறார் –

தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
தாமரை போலே இருக்கிற திருவடிகளை என்றவாறே
கதா புந சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்ரம த்வத் சரணம் புஜ த்வயம் மதீய மூர்த்தாநாம் அலங்க்ருஷ்யதி –ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -31-
(திரிவிக்ரமனே சங்கு சக்கரம் கல்பக வ்ருக்ஷம் கொடி தாமரை அங்குசம் வஜ்ராயுதம்
இவைகளை அடையாளமாக யுடைய திருவடித் தாமரை இணை என் தலையை எப்போது தான்
அலங்கரிக்கப் போகிறதோ )–என்ன வேண்டி இருக்கும் இறே

சூடுதற்கு அவாவு ஆர் உயிர்
சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –

உருகி யுக்க
அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்

அத்தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச்சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –

பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்

நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமான தொரு சங்கத்தையும் பிறப்பித்தது

அன்பில் இன்பு
த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் சங்கஸ் தேஷுப ஜாயதே
சங்காத் சஞ்ஜாயதே காம -காமாத் க்ரோதோ அபி ஜாயதே –ஸ்ரீ கீதை -2-62-
(விஷயங்களை இடைவிடாமல் எண்ணும் மனிதனுக்கு அவற்றில் அதிகமான சேர்க்கை -சங்கம் -உண்டாகிறது
அந்த சங்கத்தினால் காமம் உண்டாகிறது காமத்தினால் கோபம் ஏற்படுகிறது) என்கிறபடியே
அந்த சங்கம் தான் ஓர் அன்பைப் பிறப்பித்தது

ஆகார ஸூத்தவ் சத்வ ஸூத்தி -சத்வ ஸூத்தவ் தருவா ஸ்ம்ருதி –சாந்தோக்யம் 7-26-2-
(உண்ணும் உணவு சுத்தமாக இருந்ததாகில் மனம் சுத்தி அடைகிறது
மனம் பரிசுத்தம் அடைந்த அளவிலே நிலை நின்ற நினைவு எனப்படும் பக்தி உண்டாகிறது)
இத்யாதிகளை நினைக்கிறது –
நிலை நின்ற நினைவு என்னும் பக்தி அவஸ்தை -என்றபடி –

விஷயம் குணாதிக விஷயம் ஆகையால்-அந்த அன்பிலே ஓர் இன்பு உண்டு -இனிமை –
அது என் பட்டது -அது தான் இனிதாய் இருக்கும் இறே
துக்காத்மக விஷயத்தைப் பற்றி வந்தது இன்றிக்கே
ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷவாகமம் தர்மயம் ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் –ஸ்ரீ கீதை -9-2-
(வித்யைகளுக்குள்ளும் ரஹஸ்யங்களுக்குள்ளும் மேலானது இது –
பாபங்களைப் போக்கடிப்பதில் உயர்ந்தது -என்னை நேரில் காட்டுவது இது தான்
பலத்தைக் கொடுத்த பின்பும் அழியாதது –) என்கிறபடியே
ஸ்மர்த்தவ்ய விஷயத்தினுடைய ரஸ்யத்தையாலே இது தானே ரசிக்கும் இறே –
அது தான் என் போலே என்னில்

ஈன் தேறல்
அமுத சமுத்ரத்தில் கடைந்த அம்ருதம் போலே போக்யமாய் இருக்கும் –
விஷயத்தினுடைய வை லக்ஷண்யத்தாலே -அது தான்
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத்
அந்யோ அந்தர ஆத்மா ஆனந்த மய-தைத்ரீயம் -ஆனந்தவல்லி -5-
(அப்படிப்பட்ட இந்த விஞ்ஞான மெய்ஞான ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவனும்
அந்த ஜீவனுக்கு அந்தராத்மாவாய் இருப்பவனும் ஆனந்த மெய்ஞான பரமாத்மா)
என்கிற விஷயத்தைப் பற்றி வருகையால் -ஒரு ரஸ சாகரமாய் இருக்கும் இறே
விலக்ஷண விஷயமாகையாலும் -இவனுடைய ருசியாலும் ஒரு கடலிலே ஏகாகி விழுந்தால் போலே இருக்கும் இறே

அமுத வெள்ளத்தானாம்
இன்ப வெள்ளத்திலே உளனாகையாகிற-இன்பத்தில் திளைத்துத் திக்கித் திணற வைக்கும் அன்றோ என்றபடி –

சிறப்பு விட்டு
இந்த பரம பக்திகளை யுடையனாகை யாகிறது இறே ஐஸ்வர்யம் —
அத்தை விட்டு

ஒரு பொருள்க்கு
இத்தை விட்டால் இனிப் பெற நினைப்பது இவ்வருகே சிலவை இறே –
அவை யாகிறன–
தர்ம அர்த்த காம மோக்ஷங்களில் சொல்லுகிறவை இறே –
அவற்றை ஒன்றாக நினைத்து இராத அநாதரம் தோற்ற ஒரு பதார்த்தம் என்கிறார் –

அசைவோர் அசைக
அவை தான் இது போல் ஸூலபமாய் இராது யத்னித்து பெற வேண்டுமதாய் –
பெற்றாலும் பிரயோஜனம் அல்பமாய் இருக்கும் – அவற்றுக்கு ஆசைப்படுவோர் அங்கனம் கிலேசப்படுக –

கிலேசோ அதிகாரஸ் தேஷாம் அவ்யக்த அசக்த சேதஸாம்
அவ்யக்தாஹி கதிர் துக்கம் தேஹவத்பி ரவாப்யதே –ஸ்ரீ கீதை -12-5-
(அவ்யக்தம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபட்ட மனத்தை யுடையவர்களுக்கு
அதை அடையும் விஷயத்தில் மிகவும் துக்கம் உள்ளது
தேஹாத்ம அபிமானிகளுக்கு ஆத்ம ச்வரூபத்தை அடைவது மிகவும் கடினம் அன்றோ)என்கிறபடியே
நிரூபித்தால் துக்காத்மகம் என்றாலும் நாட்டிலே சில புருஷர்கள் அவற்றை விரும்பா நின்றார்களே என்ன
அறிவு கேடர் படியோ நான் சொல்லுகிறது –
புத்திமான்கள் இவற்றை ஸ்வீ கரிப்பதாக மநோ ரதிப்பார்களோ

திரு வோடு மருவிய இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம் மூன்றினோடு
ஐஸ்வர்யம் நிலை நின்று அது தானே யாத்ரையாய் இருப்பது –
இத்தாலும் பலம் இல்லை இறே
போக்தாவுக்கு சக்தி வை கல்யம் உண்டாகில் –
அவனும் ஒரு நாளும் அழியாத மிடுக்கை உடையனாவது –
ஐஸ்வர்யம் தான் ப்ராதேசிகம் ஆவது அன்றிக்கே த்ரை லோக்யமும் விஷயமாவது –
இத்தோடு அடுத்து

நல் வீடு பெறினும்
நல் வீடு என்று உத்தம புருஷார்த்தத்தைச் சொல்லுகையாலே
நடுவில் கைவல்ய புருஷார்த்தத்தையும் சொல்லிற்று ஆயிற்று

பெறினும்
இது தான் பெறக் கடவது என்று இருக்கை அன்றிக்கே
இதிலே தோள் மாறும்படி யானாலும்
மநோ ரதமாக இல்லாமல் பெற்றே தீர்ந்தாலும்

கொள்வது எண்ணுமோ
இவை ஸ்வீ கரிக்கக் கடவதான மநோ ரத சமயத்திலே தான் உண்டோ
ஐஸ்வர்யம் அஸ்திரம் ஆகையால் கழி யுண்டது –
ஆத்ம லாபம் பரிச்சின்னம் ஆகையால் கழி யுண்டது –
பகவத் புருஷார்த்தம் ஆசைப்பட்ட உடம்பை ஒழிய வேறு ஒரு உடம்பைக் கொண்டு போய்
அனுபவிக்குமதாகையாலே கழி யுண்டது

அவ்வுடம்போடே இருக்கச் செய்தே பெறக் கடவதான பரபக்தியாதிகளோடே
இவை ஒவ்வாதே நிற்கிற இடம் -(ஒவ்வாது என்ற இடம் )-
விசார விஷயமோ –
ஆனாலும் சிலரும் நினையா நிற்கிறார்கள் என்னில்

தெள்ளியோர் குறிப்பு எண்ணுமோ
சார அசார விவேகம் பண்ணி இருப்பார்க்கு மநோ ரதத்துக்கு விஷயம் அல்ல
சார அசார விவேகஞ்ஞர் நல்லதுக்கு தீயத்துக்கும் தரமிட்டுப் -பிரித்து அறிந்து – இருப்பார்கள்

சார அசார விவேகஞ்ஞா காரீயம் சோ விமத்சரா
பிரமாண தந்த்ரா சந்தீதி க்ருதோ வேதார்த்த ஸங்க்ரஹம் –நிகமன ஸ்லோகம்
(சாரம் அசாரம் ஆகிய இவற்றை விவேகித்து அறிபவர்களும்
மிகுந்த கேள்வி ஞானத்தால் பெருமை பெற்று இருப்பவர்களும்
பிறர் இடம் மாத்சர்யம் மற்றவர்களும் -பிரமாணங்களுக்குக் கட்டுப் பட்டவர்களுமான மஹான்கள்
இக்காலத்திலும் உளர் என்னும் நிச்சயத்தாலே என்னால் வேதார்த்த ஸங்க்ரஹம் அருளிச் செய்யப்பட்டது) -என்றவாறு

கேடில் சீர் வரத்தானாம் கெடும் வரத்தயன் அரன்
நாடினோடு நாட்டமாயிரத் தன் நாடு நண்ணினும்
வீட தான போகம் எய்தி வீற்று இருந்த போதிலும்
கூடும் ஆசை யல்லது ஓன்று கொள்வனோ குறிப்பில் –ஸ்ரீ திருச்சந்த விருத்தம் -108-

இத்யாதிகளை இங்கே அனுசந்திக்கத்தக்கவை –

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading