சில நாரைகளைக் குறித்து அவன் தன் அழகாலும் குணங்களாலும் தன்னைத் தோற்பித்த படியைச் சொல்லி
என் நிலையை அவனுக்கு அறிவித்து வந்து உங்கள் திருவடிகளை என்தலை மேலே வைக்க வேண்டும்
என்கிறாள் —
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-
——————–
சில குருகு இனங்களைக் குறித்து தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ – என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –-9-7-2-
————————
சில கொக்கு இனங்களையும் குருகு இனங்களையும் நோக்கி -திரு மேனி அடிகளுக்கு தக்கிலமே கேளீர்கள் –
தன் அழகு காண்கைக்கு -நாங்கள் யோக்யர்- தகுதியேம் அல்லோமோ –என்று கேளீர் –என்கிறாள் –
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3-
———————
சில மேகங்களை நோக்கி-என் வார்த்தையை அவனுக்கு சொன்னால் உங்களைத் தண்டிக்குமோ – என்கிறாள் –
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4-
————————–
எங்கள் வார்த்தையை அவன் அங்கீ கரிக்குமோ -என்று இருந்தனவாக
ஸ்ரீ பரம பதத்திலே செய்கின்ற ஆதரத்தை என் பக்கலிலே செய்தவன் அங்கீ காரியாது ஒழியான் –
(அம்தாமத்து அன்பு செய்பவன் அன்றோ )
ஆன பின்பு எனக்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்ய வேண்டும் – என்கிறாள் –
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5-
——————–
சில வண்டுகளைக் குறித்து –
உங்கள் வார்த்தை விலை செல்லும்படி பிராட்டி சந்நிதியிலே சொல்லுங்கோள் என் தூது வார்த்தையை -என்கிறாள் –
தூதுரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே–9-7-6-
——————–
சில குருகு இனங்களைக் குறித்து சிலரோடு கலந்து அவர்களைத் துறந்து
அதுவே புகழாக இருக்கப் போருமோ என்று அறிவியுங்கோள் –என்கிறாள்
சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குறுகினங்காள் எனக்கு ஓன்று பணியீரே–9-7-7-
——————-
சில வண்டுகளையும் தும்பிகளையும் குறித்து அங்கு உள்ளவனுக்கு என்ன தீங்கு வருமோ -என்று
அஞ்ச வேண்டாதபடி ஸூ ரஷிதமான தேசத்திலே – காவல் உள்ள இடத்தில் அவன் இருக்கப் பெற்றோம்
இனி எனது ஆர்த்தியை -துன்பத்தை அறிவியுங்கோள் -என்கிறாள்
எனக்கு ஓன்று பணியீர்காள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் தும்பிகாள்
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே–9-7-8-
————————
ஒரு குருகைக் குறித்து
நிரதிசய போக்யரான -எல்லை இல்லாத இனியரான தாம் போம் போது
தம்மைக் கொண்டு போகை தம்முடைய தகவுக்கு போருமோ -என்று
விண்ணப்பம் செய் -என்கிறாள் –
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் கொண்டதனால் தகவன்று என்று உரையீரே–9-7-9-
——————-
சில அன்னங்களைக் குறித்து நான் முடிவதற்கு முன்னே அவனுக்கு என் தசையை -நிலையை
அறிவியுங்கோள் -என்கிறாள்
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10-
———————-
நிகமத்தில் –
இத் திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு -கற்பார்க்கு பிரிவுக்கு அடியான -சம்சார துரிதத்தை –
பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்துக் கொடுக்கும் – என்கிறார் –
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply