இத் திருவாய்மொழியில் அருளிச் செய்கிற -அர்த்தத்தை -பொருள்களை எல்லாம்-திரள – தொகுத்து
அருளிச் செய்கிறார் இப் பாசுரத்தில்-
மஹா பலி, தன் வரவை நினையாதே இருக்க, அவன் பக்கலிலே இரப்பாளனாய்ச் சென்று
தன்னுடைமையைத் தனது ஆக்கியது போன்று,
நான் நினைவு இன்றிக்கே இருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்கு ஆக்கினான் என்று
அவன் தன்மையை அனுசந்தித்து – நினைந்து இனியர் ஆகிறார்.
இத்திருவாய் மொழியில் சொல்லுகிற அர்த்தம் -நிர்ஹேதுக விஷயீ காரம் –
ஸங்க்ரஹமாக திரள அருளிச் செய்யும் படியைக் காட்டுகிறார் –
அக்கருமாணிக்கம் என்கையாலே வடிவு அழகை -என்றபடி
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு
திரு மா நீள் கழல் ஏழுலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமே–1-10-1-
———————
பரம பத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டுவான்’ என்கிறார்.
காதன்மையால் எண்ணிலும் வரும்-என்கிற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-
———————
‘இறைவன் ஸ்வரூபம் இருந்தபடி கண்டாயே!
நீயும் உன் ஸ்வரூபத்துக்குச் சேர நிற்கப் பாராய்’ என்கிறார்.
அவன் குணாதிக்யத்தைச் சொன்ன அனந்தரம்
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -என்றதால் பலித்தத்தை அருளிச் செய்கிறார் –
அவன் -ஸ்வாமி -பரம பக்திக்கும் பரி கணனைக்கும் ஓக்க வந்து முகம் காட்டும் ஸ்வரூபம் –
மட நெஞ்சே -என்கையாலே எனக்கு பவ்யமாகை அன்றோ உன் ஸ்வரூபம்-
ஆகையால் உன்னுடைய பாரதந்தர்யத்துக்கு ஈடாக தொழாய் என்கிறார்-
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்குந்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனைக்
கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!–1-10-3-
—————–
தாம் கூறிய போதே மேல் விழுந்து தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடி,
நிகர்ஷ அனுசந்தானம் பண்ணி -என் தாழ்மையை நினைந்து நான் பிரிகின்ற காலத்திலும்
நீ விடாதே கொள் என்கிறார்.
நெஞ்சைக் கொண்டாடி -நல்லை நல்லை -என்றதின் தாத்பர்யம் –
நிகர்ஷ அனுசந்தானம் இத்யாதி -துஞ்சும் போது இத்யாதிக்குக் கருத்து-
நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-
——————
கீழே ‘எண்ணிலும் வரும்’ என்ற எண் தானும் மிகையாம்படி கண்டாயே!’ என்று
அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்.
பரி கணனைக்கு வரும் என்றார் கீழ் –
தம் பக்கலிலே பார்த்தவாறே -அந்தப் பரிகணனை தானும் இன்றிக்கே தான் இருந்தது –
ஆகையால் எண்ணிலும் வரும் என்ற எண் தான் மிகை என்கிறது –
எண் என்று சங்க்யா பரமான பக்ஷத்தைப் பற்ற அவதாரிகை –
கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே–1-10-5-
———————-
இப்படிச் ஸூலபன் ஆனவன் நம்மை விடான் அன்றே?’ என்ன,
‘நம் -அயோக்யதையை -தாழ்மையை நினைத்து அகலா தொழியில் நம்மை ஒரு நாளும் விடான்’ என்று
திரு வுள்ளத்துக்கு அருளிச் செய்கிறார்.
இந் நேர் நிற்கில் மற்றோர் நோயும் சார் கொடான்-என்றதுக்கு ஈடாக அருளிச் செய்கிறார் –
நாம் அகன்று முடியில் முடியும் அத்தனை போக்கி அவன் நம்மை விடான் என்று தாத்பர்யம் –
நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே! சொன்னேன்
தாயுந் தந்தையுமாய் இவ் வுலகினில்
வாயும் ஈசன் மணி வண்ணன் எந்தையே–1-10-6-
——————–
கீழ் -‘துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்’ -இவர் அஞ்சியது போன்றே முடிந்தது;
அயோக்யன்-‘தாழ்ந்தவன்’ என்று அகலுகிறார்-
இவர் அஞ்சினால் போலே ப்ராப்தமாயிற்று -பலித்தது –
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே–1-10-7-
—————–
நாம் இதற்கு முன்பு நினைத்தும் பேசியும் தப்பச் செய்தோம், இனித் தவிருமித்தனை’ என்று
‘அவன் குணங்கள் நடையாடாதது ஓரிடத்தில் கிடக்க வேண்டும்’ என்று போய்,
ஒரு குட்டிச் சுவரின் அருகில் முட்டாக்கு இட்டுக் கொண்டு கிடந்தார்;
அங்கே, வழியே செல்கின்றான் ஒருவன் சுமை கனத்து ‘ஸ்ரீமந் நாராயணன்’ என்றான்;
அச் சொல்லைக் கேட்டுத் தம்முடைய கரணங்கள் அங்கே -ப்ரவணம்- அன்புடைமை யாகிற படியைக் கண்டு –
விஸ்மிதராகிறார் -ஆச்சரியப்படுகிறார்.
கேட்டலும்’ என் கையாலே, அசம்பாவிதமான இடத்தில் இருத்தல் சித்தம்
என்று திருவுள்ளம் பற்றி அவதாரிகை அருளிச் செய்கிறார்.
கேட்டலும் -என்கையாலே அசம்பாவித ஸ்தலத்தில் இருப்பு என்று சித்தம் என்று திரு உள்ளம் பற்றி அவதாரிகை –
குட்டிச் சுவர் -ஏகாந்த ஸ்தலம் பாஹ்ய இந்திரிய வியாபாரம் இல்லாத தசையில் என்றுமாம் -ஸ்வாபதேசம் -கைவல்யம்
முட்டாக்கு -பகவத் பர்யந்தாயா அந்தர் இந்திரிய கதேர் நிரோதனம் –
சுமை -சம்சார பாரம்
மாயமே -என்றதை பற்றி விஸ்மிதராகிறார் –
இப்படி அயோக்யதா அனுசந்தானம் பண்ணி அகலுகையிலே அத்யவசித்து இருக்கவும் சாபல அதிசயத்தாலே
கரணங்கள் ஸ்ரீ பகவத் விஷயத்திலே ப்ரவணங்கள் ஆகின்றன -என்று கருத்து –
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே–1-10-8-
———————
‘நீர்தாம் இங்ஙனே கிடந்து வருந்தி உழலாமல், அவ் விஷயத்தை மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு
உடுத்துத் திரிய மாட்டீரோ?’ என்ன, ‘நான் எத்தைச் சொல்லி அவனை மறப்பது?’ என்கிறார்-
என் சொல்லி மறப்பனோ -என்றத்தைக் கடாக்ஷித்து சங்கா பரிஹார முகேன சங்கதி –
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம் பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பனோ–1-10-9-
——————–
ஆனாலும் வருந்தி யாகிலும் மறந்தாலோ என்னில் –
நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு நிறைந்த வாசம் பண்ணுகிறவனை
மறக்க விரகுண்டோ -என்கிறார-
புநஸ் ச இனி மறப்பனோ -என்றதுக்கு அனுகுணமாக அவதாரிகை-
மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10–
—————-
நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத
புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்-
——————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை –
——————–
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியைத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே–1-10-11-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply