தன் பக்கத்திலே தங்கி இருப்பது ஒரு நாரையைப் பார்த்து,
என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னாகக் காரியங்கொள்ள வேண்டும்’ என்று இருக்கும்
தம் வாசனையாலே பேடையை முன்னிட்டுச் சேவலைப் பற்றி
‘நீ என் நிலையை அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்,’ என்கிறாள்
மட நாராய் என்று பேடையை முன்னிடுகிறதுக்கு பாவம் –
இத்தால் பகவத் விஷயத்தில் போலே ஆச்சார்ய விஷயத்திலும் புருஷகாரம் வேணும் என்றபடி –
சேவல் -பும்பஷி / பேடை -ஸ்த்ரீ பஷி
அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெஞ் சிறைப் புள் உயர்த்தாற்கு என் விடு தூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ–1-4-1-
————————
சில நாரைகளைத் தூது போகல் வேண்டும் என்று இரந்தாள் கீழ் ;
அங்குப் போனால் சொல்லும் பாசுரத்தைக் குயில்களுக்குச் சொல்லுகின்றாள் இங்கு:
அந்யா துபக்ராந்த மன்யதா பதிதம் (‘தொடங்கியது ஒன்று, முடிந்தது வேறு ஒன்று,’ )என்கிறபடியே வந்து விழுந்தது.
‘இப்படிக் கலங்கலாமோ?’ எனின், இத்தனையும் கலங்கிற்றிலளாகில் இவள் பிரிந்த பொருளுக்கும்
நாட்டார் பிரிந்த பொருளுக்கும் வேற்றுமை யின்றி ஒழியுமே,
இப்படிக் கலங்கப் பண்ணாத அன்று குணங்களால் குணாதிக விஷயத்துக்கு நமஸ்காரமாமித்தனை அன்றோ?
இவள் கலங்கிற்றிலள் ஆகில் இவள் ப்ரேமத்துக்கும் விஷய வைலக்ஷண்யத்தைக்கும் கொத்தையாகும் –
அவன் ஸூந்தர்யத்துக்குக் கொத்தை -அவன் குணாதிக்யதைக்கும் கொத்தை –
நமஸ்காரமாம் அத்தனை -என்றது தேசாய் தஸ்மை நம-என்கிற இடத்தில் போலே
பரித்யாகமே யாய் விடும் அத்தனை -என்றபடி –
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள்! நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?–1-4-2-
—————-
‘அகல்வதுவோ’ என்பது போன்று சொல்லுகிற பக்தி வாதங்கள் நமக்குத் தெரியா;
அவஸ்யம் அனுபோக்தவ்யம் (‘செய்த வினைகள் அவசியம் அனுபவித்தற்கு உரியவை’ )என்கிறபடியே,
அனுபவித்தே அற வேண்டும் என்று இறைவனுடைய திருவுள்ளக் கருத்தாகக் கொண்டு,
‘நான் செய்த பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது என்று சொல்லுங்கள்’ என்று சில அன்னங்களை இரக்கிறாள்.
விதியினால் -அகிஞ்சனோ அநந்ய கதி -த்வத் ஏக சரணஸ் சாஹம்-போன்ற பக்தி க்ருத உபசார யுக்திகள் –
நான் பண்ணின -சிந்தையந்தி யுடைய வினை அனுபவித்தாள் மாளலாமோ என்று தாத்பர்யம் –
மதியிலேன் வல்வினையோ -என்று அன்வயத்தி வியாக்யானம்
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்!
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே–1-4-3-
—————–
அனுபவித்தாலும் மாளாதது நான் பண்ணின பாபமேயோ!’ என்றாள் கீழே –
‘இவள் அனுபவித்தாளோ பின்னை?’ எனில் ஆம்; அனுபவித்தாள்;
அவன் அரைக் கணம் தாழ்ந்து முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தாள் அன்றே?
இவ் வளவிலே சில மகன்றில்கள்,-நாம் கிஞ்சித்கரிக்க நல்ல அளவு –
நாம் உதவி சிறிதாயினும் செய்வதற்கு நல்ல சமயம்’ என்று நினைந்து,
‘நாங்கள் இவ் விடத்திற்குச் செய்ய வேண்டுவது என்ன?’ என்று வந்து முகங் காட்டினவாகக் கொண்டு,
அவற்றைப் பார்த்து, ‘என் நிலையைக் கண்டும் இரங்காதே போனவருக்கு நான் எத்தைச் சொல்லுவது? என்று –
நிராசையாய் -ஆசையற்றவளாய், பின்னரும் -சாபலத்தாலே -ஆசைப் பெருக்காலே,
பலகால் சொல் மறுத்தார்க்குச் சொல்லுவாரைப் போன்று,
இத்தனையுஞ் சொல்ல வல்லீர்களோ, மாட்டீர்களோ? என்கிறாள்
மகன்றில்காள் -சக்ரவாகங்கள்
நன்னீல மகன்றில்காள் என்றத்தையும் என் சொல்லி யான் சொல்லுகேனோ என்றதையும் கடாக்ஷித்து அவதாரிகை –
நல்லளவு -நல்ல சமயம்
அவன் பக்கலில் உள்ள கோபம் இவற்றின் பக்கலிலும் ஏறி நல்குதிரோ நல்கீரோ என்கிறாள் –
சொல்லு மறுத்தற்கு -கேளாதவர்க்கு
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-
——————
‘முடிவார்க்கு வேண்டா அன்றே? ஆதலால், எங்களை விடீர்;
ஜீவிக்க நினையும் தமக்கு தாம் வேண்டாவோ?’ என்கிறாள்.
அதாவது,
‘தம்முடைய நாராயணன் என்னும் பெயர் ஒறுவாய்ப் போகாமல் நோக்கிக்கொள்ளச் சொல்,’ என்கிறாள்.
கீழ்ப் பாட்டிலே நான் முடிவதற்கு முன்னே வந்து உதவ வேணும் என்ற அளவிலே முகம் காட்டக் காணாமையாலே
நம்முடைய சத்தை போனாலும் போகிறது-தம்முடைய சத்தைக்கு ஒரு ஹானி வராமல் பரிஹரிக்கச் சொல்
என்று போக விடுகிறாள் என்கிறார் -வாக்ய த்வயத்தாலே –
என் சத்தையில் அபேக்ஷை இல்லையே யாகிலும் தன் சத்தையில் அபேக்ஷை இல்லையோ -என்று தாத்பர்யம் –
ஒறுவாய்ப் போகாமே-விகலமாய்ப் போகாமே -என்றபடி
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே!
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங் கொண்டருளாயே–1-4-5-
——————
எங்கள் ஆற்றாமை நீக்கிலராயினும், தம்முடைய நாராயணன் என்ற பெயர் குறைந்து போகாதபடி,
நோக்கிக் கொள்ளச் சொல்லுங்கள்,’ என்றாள் முன்,
‘தாம் அல்லாதாருடன் கலந்து வரும் தாழ்வினைக் காட்டிலும் நம்முடைய நாராயணன் என்ற பெயர் அழியினும் அமையும்’
என்பதனை இறைவன் திருவுள்ளமாகக் கொண்டு, மேல் செய்யத் தக்க செயலைக் கூறுகிறாள் இப் பாசுரத்தில்.
அதாவது, தமக்கும் தாழ்வு வாராமல் எங்கள் சத்தையும் கிடக்கைக்கு ஒரு வழி உண்டு.
தாம் அழகு செண்டு ஏறப் புறப்படுதல், யானைக்கு அருள் செய்யப் புறப்படுதல் செய்வன போல்வன சில உளவே அன்றே?
அப்போது எங்கள் தெருவே போனால் தமக்கும் ஒரு தாழ்வு வாராது;
நாங்களும் சாளரத்தின் வழியால் கண்டு பிழைத்துக் கிடப்போம்;
இப்படி அவிருத்தமாக- மாறுபாடு இல்லாதனவாகச் செய்யலான பின்பு,
அதனைச் செய்யச் சொல்,’ என்று ஒரு வண்டை இரக்கிறாள்.
கீழ்ப் பாட்டில் பிரமேயத்தை அனுபாஷித்து சங்கதி -ஒறுவாய்-விகலமாய் –
அவர் வீதி ஓரு நாள் அருளாழிப் புட் கடவீர்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
அழகு செண்டு ஏறுகை -தான் அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டால் அந்த அழகு ஆஸ்ரிதர் நெஞ்சில் படும்படி புறப்படுகை –
விளையாட்டுச் சரிகை புறப்படுகை -செண்டு என்று பந்தாய் அது அடித்து விளையாடுகைக்காக ராஜாக்கள்
அழகியதாகக் குதிரை ஏறிப் புறப்படுவதைச் சொன்னவாறு-
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன்
அருள் ஆழிப் புட் கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
யருள் ஆழி வரி வண்டே! யாமும் என் பிழைத்தோமே–1-4-6-
—————–
தம்தாமுடைய குற்றங்களைப் பாராமல், ‘அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி’ என்று சொல்லும் இத்தனையோ
வேண்டுவது என்று அவர்க்குக் கருத்தாக,
‘எங்கள் குற்றம் ஒன்றுமேயோ பார்ப்பது?
தம்முடைய அபராத சஹத்வம் பார்த்தல் வேண்டாவோ என்று சொல்,’ என்று தன் கிளியை இரக்கிறாள்.
கீழ்ப் பாட்டில் யாமும் என் பிழைத்தோமே என்று அதப்யுபகத வாதத்தால் அருளிச் செய்து
இப்பாட்டில் அப்யுபகத வாதத்தாலே அருளிச் செய்கிறார் என்று அருளிச் செய்வர்-
குற்றம் -பூர்வாகம் -கீழ்ப் பாட்டிலே அபராதம் உத்தராகம் -என்று விவஷிதம் என்று கருத்து –
என்பு இழை கோப்பது போலப் பனி வாடை ஈர்கின்ற
என் பிழையே நினைந் தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக் கென்று ஒரு வாய் சொல்
என் பிழைக்கும் இளங்கிளியே! யான் வளர்த்த நீ யலையே?–1-4-7-
——————–
முன்பு இவள் வார்த்தை சொல்லிக் கொண்டாடுகையாலே தரித்திரிந்த பூவையானது,
இவள் உறாவப் புக்கவாறே தானும் உறாவப் புக்கது; அத்தைப் பார்த்து,
‘முன்னரே என் நிலையை அறிவி என்னச் செருக்கு அடித்திருந்தாய்;
நானோ, முடியா நின்றேன்; இனி, உன்னைக் காப்பாரைத் தேடப் பாராய்,’ என்கிறாள்.
பூவை என்பது நாகணை வாய்ப் புள் -அதாவது ஒரு பஷி விசேஷம்-
நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-
———————–
‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்’ என்று இருக்கிற சமயத்தில் வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது;
அதனுடைய தோற்றரவு இருந்தபடியால் வெறுமனே அன்று -இத்தைக் கண்ட தலைவி
மகாராஜருடைய மிடற்று ஓசையில் தெளிவைக் கேட்டுத் தாரை, சிறிது நேரத்திற்கு முன் வாலி கையில் நெருக்குண்டு போனவர்
இப்போது இப்படித் தெளிந்து வந்து அறை கூவுகிற இது வெறுமன் அன்று; இதற்கு ஓர் அடி உண்டு, என்றது போல
இவ் வாடைக்கு ஓர் அடி உண்டாக வேண்டும் என்று நினைத்தாள்;
நினைந்து, ‘இராஜாக்கள் இராஜத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வர விடுமாறு போன்று,
நம்மை நலிகைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன் இவ் வாடையை வரவிட்டானாக வேண்டும்’ என்று பார்த்து,
வேற்காரர் கொடு போம் நலியப் புக்கவாறே ‘நிதி உண்டு’ என்பாரைப் போன்று,
‘நான் சொல்லுகிற வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்தால்,
‘அத் தலையால் வரும் நன்மையும் வேண்டா’ என்று இருந்தானாகில்,
அவசியம் வந்து என்னை முடிக்கவேண்டும்,’ என்று அவ்வாடையை இரக்கிறாள்.
தூதரை -ஈராய் எனதுடல்-என்கையாலே இது பாதகம் என்னும் இடம் தோன்றி இருக்கையாலும்-
அவனுக்குச் சொல்லி என்னை முடி -என்கையாலே அவன் வர விட்டான் என்று தோற்றுகையாலும் –
இவ்விரண்டுக்கும் அனுகுணமாக அருளிச் செய்கிறார் –
ஊடாடு பனி வாடாய்-என்றதைக் கடாக்ஷித்து அருளிச் செய்கிறார் –
தோற்றரவு -ப்ராதுர் பாவம் -இதனுடைய தோற்றரவு இருந்தபடியால்
இவ்வாடைக்கு ஓரு அடி-அவஷ்டம்பம் – உண்டு என்று அன்வயம் –
ஈஸ்வரனே வர விட வந்ததாக வேணும் என்றபடி –
வேற்காரரை-ஆயுதவான்களை-
இன்னுயிர் சேவல் -9-5-பிரவேசத்தை படியே பாதக பதார்த்தங்களை முடிக்கச் சொல்லி வர விட்டானானாக வேணும் –
வைக்கவே வகுக்கின்று -என்றதை பற்ற நிதி யுண்டு என்பாரைப் போலே இரக்கிறாள் -என்று அன்வயம் –
நலிய வந்தவர்கள் தாழ்க்கைக்காக நிதி உண்டு இத்தைக் கொள்ளுங்கோள் என்று இரப்பார்களே-
நிதி போலே இங்கே இரண்டு பிரயோஜனம் -மலர் நாடி சமர்ப்பிக்கையும் அல்லாவாகில் ஈருகையும்-
தார்ஷ்டாந்திக்கே நிதி ஸ்தாநீயம் -கைங்கர்யம் –
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன்றன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை யற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே–1-4-9-
——————-
அல்லாதவற்றை எல்லாம் விட்டு முடிவில் நெஞ்சினைத் தூது விடுகிறாள்,’ என்பாரும் உளர்.
அப்போது ‘விடல்’ என்பவற்கு, ‘அவனை விடாதே கொள்’ என்பது பொருளாம்.
அன்றிக்கே-முந்தின பாசுரத்தின் சேஷம் என்பதாகக் கொண்டு
‘வைக்கவே வகுக்கின்று’ என்று கைங்கர்யம் ப்ரஸ்துதமானவாறே –
தொண்டினைப் பற்றிய வார்த்தை வந்தவாறே’
‘தாய் முலையை நினைந்த கன்று போன்று திருவுள்ளம் பதறிச் சரீரத்தை விட்டுப் போகப் புக்கது;
நம் காரியம் ஓர் அறுதி பிறக்குமளவும் நீ என்னை விடாதே கொள்’ என்கிறாள் என்னுதல்;
தூத பிரகரணம் ஆகையால் மனசைச் சொல்லுகிறதுக்கு இரண்டு பிரயோஜனம் அருளிச் செய்கிறார்
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாமளவே–1-4-10-
——————-
நிகமத்தில் – இத்திருவாய்மொழியில் சப்த மாத்திரம் அப்யஸிக்கவே -‘சொற்களை மாத்திரம்
கற்றலே அமையும், திருநாட்டினைப் பெருகைக்கு,’ என்கிறார்.
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளம் பெறலாம் என்றத்தைக் கடாக்ஷித்து
சங்கதி அருளிச் செய்கிறார் –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள வுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே–1-4-11-
————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply