நிகமத்தில் இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார்.
முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11-
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை –
அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை,
அவன் உறங்குகின்றிலன்; நம்மை ரக்ஷண சிந்தை – காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை.
ஸ்ரீரங்கதாமநி. ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா நித்ராஸி ஜாகர்யயா–ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்-உத்தர சதகம்-75.
நித்ராஸி ஜாகர்யயா– உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத்
திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே,
வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனை யல்லது,
மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார்.
மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேஸ்வரன், இவ்வளவிலே தன் படிகளை நினைப்பித்தான்.
சிறந்த பொழில் குருகூர் –
சர்வேஸ்வரன் ரக்ஷண சிந்தை செய்து கொண்டு கண் வளர்ந்தருளுகிற படியை அனுசந்தித்து -நினைத்து
இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது, ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது.
பிரிந்த விரஹதாபத்தால் அபி வ்ருஷா -மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி,
மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும்,
ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே அகால பலிநோ வ்ருஷா -வழியில் உள்ள எல்லா மரங்களும்
காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும் தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும்
சொல்லலாம்படி அன்றோ இருப்பது.
விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்ஸதா: அபிவ்ருக்ஷா: பரிம்லாநா: ஸ்புஷ்பாங்குர கோரகா:-அயோத். 59 : 4.
அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா: பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத:” யுத். 127 : 19.
அரி இனம் சென்ற சென்ற அடவி களனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று கிழங்கொடு கனி காய் துன்றி
விரி புனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதே யாகெனப் புகன்றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.
நிறம் கிளர்ந்த அந்தாதி –
பண்களிலே கிளர்ந்த அந்தாதி.
இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-
இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று,
பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவு படுமது வேண்டா;
இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப் பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள்
புகும் தேசம் பரமபதம் ஆகையாலே ‘வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம்.
இத் திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில்,
பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்களுடைய- மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்கு,
பிரகிருதி விஸ்லேஷ அநந்தரம் -சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் ப்ராப்யமாக -பேறாக நினைத்திருக்கும்-
தேச பிராப்தி – தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை.
பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய-பிரவணரானவருடைய – பாசுரம் கேட்டுப் பொறுக்க மாட்டாதே
ஈடுபட்டு பிரகிருதி விஸ்லேஷம் – இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள்,
அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார்.
நீள் இரவாய் நீண்டதால்”,
ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று
இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் அஸ்தமியாத -மறைதலில்லாத சூரியனும்
அஸ்தமியாத மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப்பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.
ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாத படி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு வுளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ–திருவாய்மொழி நூற்றந்தாதி–44-
————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply