ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-2-8–

ராஜசராயும் தாமசராயும் உள்ள சேதநர் குணங்களுக்குத் தகுதியாக -அனுகுணமாக -ஆஸ்ரயிக்கலாம்- அடையலாம்-படி
இதர தெய்வங்களை உலகம் அடங்கப் பரப்பி வைத்தான்;
ஆகையாலே, அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகம் அடங்கப் பரந்தார்கள்;
நீங்களும் அவர்களைப் போன்று அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே–5-2-8-

இறுக்கும் இறை இறுத்து உண்ண தன்மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-
செய்த பயிருக்குக் கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக
அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக,
எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது,
ராஜாக்கள் ஊர்தோறும் கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார்.

அத்தெய்வ நாயகன் தானே –
இவ்வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே.

மறுத் திரு மார்வன் –
ஸ்ரீவத்ஸத்தையும் பிராட்டியையுமுடைய மார்வன் என்னுதல்;
ஸ்ரீவத்ஸத்தையுடைய அழகிய மார்வையுடையவன் என்னுதல்.

அவன் பூதங்கள்-
அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

கீதங்கள் பாடி வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்-
பிரீதியின் ப்ரகர்ஷத்தாலே – மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வர்த்திக்க – வசிக்க வேண்டியிருந்ததே!’
என்கிற வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள்.

நீர் மேவித் தொழுது உய்ம்மின் –
ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை ஆஸ்ரயித்து -அடைந்து உஜ்ஜீவியுங்கோள் என்னுதல்;
அந்தச் சத்வ குணத்திலே நிலை நின்ற பெரியோர்களைப் போன்று நீங்களும் -அனன்யா பிரயோஜனராய் –
வேறு ஒரு பயனைக் கருதாதவர்களாய்ச் சர்வேஸ்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading