ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -4-9-11–

நிகமத்தில் -இத்திருவாய்மொழி அப்யசித்தாரை இதுதானே அவன் திருவடிகளிலே சேர்க்கும்,’ என்கிறார்.

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே–4-9-11-

புறம்பு உண்டான ருசியைப் போக்கித் தன் பக்கலிலே ருசியைப் பிறப்பித்த உபகாரத்தை நினைத்து
ஏத்துகிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி.
திருவடியை –
சர்வ -எல்லார்க்கும் ஸ்வாமியாய் உள்ளவனை.

நாரணனை –
இவை அல்லோம்’ என்ற அன்றும் தான் விடமாட்டாதபடி அன்பு உள்ளவனாய்-வத்சலனாய் – இருப்பவனை.

கேசவனை –
வத்சலனாய் -அன்பு உள்ளவனாய்க் கடக்க இருக்கை அன்றிக்கே,
இவர்களோடே -சஜாதீயனாய் -ஓர் இனத்தானாய் வந்து அவதரித்து, இவர்கள் விரோதியைப் போக்குமவனை.

பரஞ்சுடரை –
இப்படி அவதரித்து நின்ற இடத்திலே உண்டான மனிதத் தன்மையிலே பரத்வத்தைச் சொன்னபடி.

திருவடி சேர்வது கருதி –
அவன் திருவடிகளைக் கிட்டினோமாக வேண்டும்’ என்னும் மநோ ரதத்தை எண்ணத்தை யுடையராய்;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு’ என்று அடியே பிடித்து வருகின்ற எண்ணம் மநோ ரதம் இதுவே அன்றோ?

செழுங்குருகூர்ச் சடகோபன் –
திரு வயோத்தியையில் மண்பாடுதானே ஸ்ரீராமபத்தியைப் பிறப்பிக்குமாறு போலே,
அவ்வூரில் பிறப்பாயிற்று இவர்க்கு இந்த ப்ராவண்யத்துக்கு – ஈடுபாட்டிற்குக் காரணம்.

திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமின் –
அவன் திருவடிகளிலே சொன்ன தமிழ் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இந்தப் பத்தும் அவன் திருவடிகளிலே சென்று அடைவிக்கும்;
நீங்களும் அதற்கு உறுப்பாகத் திருவடிகளிலே சென்று கிட்டுங்கோள்.
அவன் திருவடிகளிலே கிட்டக் கொள்ள, நீங்கள் உங்களுக்குமாய் இராமல்,
அடிசிற்பானை போலே அவன் திருவடிகளிலே நித்ய கைங்கரியத்திலே சேரப் பாருங்கோள்.
சாயுஜ்யம் பிரதிபன்னாயா -சமானமான பதவியை அடைந்தவர்களாய், விரோதி கழிந்தவர்களாய் எப்பொழுதும்
என்னுடைய கைங்கரிய பரர் ஆகின்றார்கள்,’ என்றும், ‘
யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி – பகவான் எந்த எந்த வழியாலே செல்லுகிறானோ,
அந்த அந்த வழியிலே உயிரும் செல்கிறது,’ என்றும் சொல்கிறபடியே,
இப்படி அடிமை செய்வார்க்கு, இவர் விட்டவையும் விட்டுப் பற்றியதும் பற்ற வேண்டுமோ?’ என்னில்,
இவர் அருளிச்செய்த இத் திருவாய்மொழியைச் சொல்லவே-அனுசந்திக்கவே –
தன்னடையே சப்தாதிகளில் -ஐம்புல இன்பங்களில் விரக்தியையும் பிறப்பித்து
அவன் திருவடிகளில் சேர விடும் இத் திருவாய்மொழிதானே,’ என்க.

நண்ணாது மாலடியை நானிலத்தே வல் வினையால்
எண்ணாராத் துன்பமுறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று-திருவாய்மொழி நூற்றந்தாதி–39-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading