கீழ் பாசுரத்தில், ‘விடுத்து’ என்றும், ‘கூட்டினை’ என்றும் ப்ரஸ்துதமான- சொல்லப்பட்ட பேற்றினைப்
பிரீதி அதிசயத்தாலே ‘விட்டது இது; பற்றினது இது’ என்று வியக்தமாக – விளக்கமாக அருளிச் செய்கிறார் இதில்.
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–4-9-10-
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி –
காட்சிக்குக் கருவியாக இருக்கும் கண், கேட்கைக்குக் கருவியாக இருக்கும் செவி,
ஸ்பர்சித்து அறிதற்குக் கருவியாக இருக்கும் த்வக் -சரீர இந்திரியம்,
கந்த க்ரஹணத்துக்கு -நாற்றத்தை அறிதற்குக் கருவியாக இருக்கும் க்ராண இந்திரியம் மூக்கு,
ரசனை ரஸா அனுபவிப்பதற்குக் கருவியாக இருக்கும் நாக்கு;
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு இப்படி இவையே செயலாய்ப் போருகைக்குக் கருவிகளாக-ஸாமக்ரியாய்
இருப்பனவே யாமன்றோ கண் முதலான இந்திரியங்கள்-
ஐங்கருவி கண்ட இன்பம் –
உழக்காலே அளக்குமாறு போன்று -பரிச்சின்ன -அளவிற்குட்பட்ட பொருள்களை அறியத் தக்கவைகளான
இந்திரியங்களாலே அனுபவிக்கப்பட்ட -ஐஹிக -இவ்வுலக இன்பம்.
இப்படி இருக்கச் செய்தேயும், கர்மம் காரணமாகக் குறைவுபட்டதாய்-சங்குசிதமாய் -, மனம் அடியாகப் புறப்பட்டு,
பாஹ்ய -புற இந்திரியங்கள் -த்வாரா -வழியாக விஷயங்களை அறியக் கூடியதாய் அன்றோ இருப்பது?
ஆதலின், ‘ஐங்கருவி கண்ட இன்பம்’ என்கிறது.
தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம் –
இவ்வுலக அனுபவத்தைப் பற்றத் தான் தெரிவரியதாய்–துர்ஜேயமாய்,
அவ்வுலகில் பகவத் அனுபவத்தைப் பற்றத் தான் முதன்மை இல்லாததாய்-அளவிலியாய்
அணுவான ஆத்மாவைப் பற்ற வருகிற இன்பமாகையாலே சொரூபத்தாலே அளவிற்குட்பட்டதாய் இருக்கிற
ஆத்ம அனுபவ சுகம். அந்தமில் பேரின்பத்திற்கு எதிர்த்தட்டான தாகையாலே ‘சிற்றின்பம்’ என்கிறது.
ஒழிந்தேன் –
இவற்றை விட்டேன்.
விட்டது இதுவாகில், பற்றியது எதனை?’ என்னில், அருளிச்செய்கிறார் மேல் :
ஒண் தொடியாள் திரு மகளும் நீயும் –
தொடி என்பது, முன்கை வளை. அதற்கு ஒண்மையாவது, இவள் கையினின்று நீங்காதிருக்கை.
நித்ய அநபாயினி -எப்பொழுதும் சர்வேஸ்வரனை விட்டுப் பிரியாமல் இருப்பவளாகையாலே,
முன்பு ஒருகால் கழன்று பின்பு பொறுக்கவேண்டும்படி இருப்பது இல்லையே அன்றோ?
‘சங்கு தங்கு முன்கை நங்கை’-திருச்சந்த விருத். 57. என்னக் கடவதன்றோ?
ஆதலால், ‘ஒண்டொடியாள்’ என்கிறது;
நீயுமே நிலா நிற்ப –
இருவருடையவும் அபிமானத்துக்குள்ளே திரிபாத் விபூதியாக அடங்கிக் கிடக்கும்.
நாநயோர் வித்யதே பரம் ‘புருஷன் என்பவன் பகவானாகிய நாராயணனே; பெண் என்பவள் பிராட்டியே;
இவர்களைத் தவிர வேறு பொருள் இல்லை,’ என்னாநிற்க, வாசல்தோறும் ஈஸ்வரர்களேயன்றோ இங்கு?
ஆதலின், ‘நீயுமே நிலாநிற்ப’ என்கிறது.
நிலா நிற்பக் கண்ட சதிர்-
உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே கிடக்குமதுவே வாழ்க்கையாம்படி நீ பார்த்து வைத்த நேர்பாடு.
கண்டு –
வைகுண்டே இத்யாதி -நினைவிற்கும் எட்டாத, உலகத்திற்கெல்லாம் பதியான மகா விஷ்ணுவானவர்
நித்ய முத்தர்கள் சூழப் பிராட்டியோடு கூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற மேலான உலகத்திலே எழுந்தருளி யிருக்கிறார்,’ என்கிறபடியே,
நீ பார்த்து வைத்த வாய்ப்பான அதனைக் கண்டு. என்றது,
பெரிய பிராட்டியாரும் நீயுமாகச் சேர இருக்கிற உங்கள் இருவருடையவும் அபிமானத்திலே
ஓர் உலகமாக அடங்கியிருக்கிற இருப்பைக் கண்டேன்,’ என்றபடி.
உன் திருவடியே அடைந்தேன் –
அந்த நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய் உன் திருவடிகளிலே அடிமை செய்யவேண்டும்
என்று உன் திருவடிகளைக் கிட்டினேன்.
இது நான் உற்றது-
கீழ்ச்சொன்னவை நான் விட்டவை.
நன்று; ‘ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே’ என்ற அளவில், நித்ய விபூதியில் அடியார்களுடன்
இருக்கும் இருப்பைச் சொல்லியது ஆமோ?’ என்னில்,
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ!’ என்று இவர் சொல்லுகையாலும், ‘
கொடு உலகம் காட்டேல்’ என்றதைப் போன்று, ‘அவர்கள் இருவருமே’ என்ற இடத்தில்,
அவர்கள் அபிமானத்திலே அடங்கிக் கிடப்பது ஒரு உலகம் உண்டாகச் சொல்லத் தட்டு இல்லையே அன்றோ?
அங்ஙனமாயின், பிராட்டியும் தானும் நித்ய ஸூரிகளுமாய் இருக்கிற அவ்வுலகம் இவ்வுலகம் ஆனாலோ?’ என்னில்,
அசாதாரண -தனக்கே உரிய விக்கிரஹத்தோடே, -பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா– நீர் சீதா பிராட்டியாரோடுகூட’ என்கிறபடியே,
தானும் பிராட்டியுமாய் இருந்து, கிரியதாம் ‘இதனைச் செய்க’ என்று சொல்லுகிறபடியே,
இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இவரை அடிமை கொள்ளுவது
ஒரு தேச விசேஷாமாகவே இருக்கவேண்டும் அன்றோ?
கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.’- திருக்குறள்.
உண்டு கேட் டுற்று மோந் தும்பார்க்கு மைவர்க்கே தொண்டு படலாமோ உன் தொண்டனேன்?’- நூற்றெட்டுத் திருப்பதியந். 25.
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply