ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-11-

நிகமத்தில் ‘இத் திருவாய்மொழியைக் கற்று உணர வல்லார்கட்கு,-அப்யஸிக்க வல்லாருக்கு –
இறைவன் வரக் கொள்ளத் தம் தாழ்மையை நினைத்து அகன்று -அயோக்ய அநுஸந்தானம் பண்ணி அகன்று –
இவர் பட்ட கிலேசம் பட வேண்டா,’ என்கிறார்.

—————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பிரகரண அனுகுணமாக அவதாரிகை –

————————-

மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-

மாலே-
ஸ்வரூபத்தால் வந்த விபுத்வம் உயர்வு.

மாயப் பெருமானே –
குணத்தால் வந்த விபுத்வம் – உயர்வு.

மா மாயவனே –
சேஷ்டிதங்களால் -செயல்களால் வந்த -ஆதிக்யம் -மேன்மை.

என்று என்று மாலே ஏறி –
ஏவம் விதமான -இவ்விதமான வைலக்ஷண்யத்தை நினைத்து, ‘நான் அயோக்கியன்’ என்று அகலும்படி பிச்சு ஏறி,

மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-
தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று,
அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஸ்ரீ ஆழ்வார்
பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத ஸூகுமாரரைப் போன்று, நின்ற நின்ற நிலைகள் தோறும் இறைவன் திருவருள் ஒழிய
நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.

பால் ஏய் தமிழர் –
பால் போலே இனிய தமிழை யுடையவர்கள்.

இசைகாரர் –
இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீ மதுர கவிகளையும் ஸ்ரீ நாத முனிகளையும் போல்வார்.

பத்தர் – பகவத் குண அனுபவத்தில் இவர் தம்மைப் போலே ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும்’ என்று இருக்குமவர்கள். 

ஸ்ரீ ஆழ்வான் ஒரு-உருவில் – முறை 
‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது;
இசைகாரர் என்றது, ஸ்ரீ ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; 
பத்தர் என்றது, ஸ்ரீ பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். 

ஸ்ரீ ஆளவந்தார் -பாலேய் தமிழர் என்கிறது, ஸ்ரீ முதலாழ்வார்களை;
இசைகாரர் என்கிறது, ஸ்ரீ திருப்பாணாழ்வாரை;
பத்தர் என்கிறது, ஸ்ரீ பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்.

ஆக, இயல் அறிவார் இசை யறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,

பரவும்-
இவர் அகலுகை தவிர்ந்து பாடின பின்பு உண்டான உலகத்தாரின் பரிக்கிரகத்தைச் சொல்லுகிறார்.

ஆயிரத்தின் பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு –
‘கடலிலே முத்துப் பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே
பொருந்தி இருக்கிற இத் திருவாய்மொழியை வல்லார்க்கு.

பரிவது இல்லை-
‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, இறைவன்-சம்ச்லேஷ உன்முகன் ஆனவாறே –
வந்து காட்சி அளித்தவாறே அயோக்கியன் -‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.

—————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மாலே என்றும் -மா மாயப் பெருமானே என்றும் -வானோர் இறையை -வெண்ணெய் தொடு உண்ட -என்ற பதங்களின் அனுவாதம் –
விபுத்வம் என்றது உத்கர்ஷம் என்றவாறு –
குண சேஷ்டிதங்கள் ஆச்சர்ய ரூபங்கள் ஆகையால் மாயா சப்த பிரயோகம் –
மாலே -ஸ்வரூப உத் கர்ஷம் / மாயப்பெருமானே -ஆச்சர்ய குணங்களால் அளவிறந்தவனே –
மா மாயனே -அபரிச்சின்னமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன் என்று சப்தார்த்தம் –
மால் அருளால் -பெரிய அருளால் என்று ஒன்பதினாயிரம் –

நின்ற நின்ற நிலைகள் தோறும்-சம்ஸ்லேஷ -விஸ்லேஷ -அயோக்கியா அனுசந்தானாதி தசைகள் எல்லாவற்றிலும் – அவன் அருளே –
முதல் தன்னிலே மயர்வற மதி நலம் அருளினன்-
அருளாத நீர் அருளி -அவன் வருவதும் அவன் அருளாலேயே
அல்லேன் என்றவரைப் பொருந்த விட்டுக் கொள்ளுகிறதும் அவன் அருளாலே
இவர் அகலவே -பின்னை மேல் திருவாய் மொழிகள் இல்லை இறே –
இத்தைக் கண்டு இயல் அறிவாரும் -இசை அறிவாரும் -பத்தராய் இருப்பாரும் கொந்தளிக்கிற படியைக் கண்டு
இப்படி இவர்களுக்கு உபகாரம் பண்ணப் பெற்றோமே என்று களித்துச் சொல்லுகிறார் என்றபடி –
சொன்ன என்னாதே ஆயிரத்தில் பாலே பட்ட – என்றதுக்கு பாவம் அருளிச் செய்கிறார் –
பட்டது உண்டாயிற்று -துவக்க -சேர்ப்பிக்க -புரிவது துக்கம் –

———————

முதற்பாட்டில், ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
இரண்டாம் பாட்டில், ‘அகலுவதற்கும் நான் அதிகாரி அல்லேன்’ என்றார்;
மூன்றாம் பாட்டில், சில குணத்தைக் காட்டித் துவக்கத் துவக்கு உண்டார்;
நான்காம் பாட்டில், ‘அகல ஒட்டுவார்களோ உடையவர்கள்?’ என்றார்;
ஐந்தாம் பாட்டில், ‘உடைய உன் திருவடிகளைக் கிட்டும்படி பார்த்தருளல் வேண்டும்,’ என்றார்;
ஆறாம் பாட்டில், அவன் அரைக் கணம் தாழ்க்க, ‘முடியப் புகுகின்றேன்’ என்றார்;
ஏழாம் பாட்டில், அவ்வளவில் இறைவன் வரக்கொள்ள, ‘அயோக்கியன்’ என்று அகன்றார்;
எட்டாம் பாட்டில், ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயைப் போன்று உம்முடைய சம்பந்தம் தாரகம்,’ என்றான் இறைவன்;
ஒன்பதாம் பாட்டில், ‘அப்படி அன்று; இது நஞ்சு,’ என்ன, ‘நஞ்சு தானே நமக்குத் தாரகம்?’ என்றான்;
பத்தாம் பாட்டில், தம்மை இசைவித்துப் பரம பதத்தை கோடிக்க- அலங்கரிக்கத் தொடங்கினான் என்றார்;
முடிவில், கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.

———————

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளமுற்று அங்கு ஊடு உருவ ஓர்ந்து -தளர்வுற்று
நீங்க நினை மாறன் மால் நீடு இலகு சீலத்தால்
பாங்குடன் சேர்ந்தான் பரிந்து –திருவாய்மொழி நூற்றந்தாதி -5-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading