இவரை இப்படி இசைவித்து வைத்து, ஒரு புதுமை செய்ய வேண்டாதபடியான பரம பதத்தை
கோடிக்க-அலங்கரிக்கத் தொடங்கினான்.
———————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்-என்ற பதங்களைக் கடாக்ஷித்து அவதாரிகை –
புதுமை -நூதனத்வம் அதிசயம் / கோடிக்க -அலங்கரிக்க
—————-
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்துத்
தீர்ந்து தன் பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே–1-5-10-
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து
தில தைலவத் தாரு வஹ்னி வத் ( ‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ )என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து.
சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை,
விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார்,
மாயப் பற்று அறுத்து-
ருசி வாசனைகளையும் கழித்து.
தீர்ந்து – தான்-க்ருதக்ருத்யனானான் – செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய்.
இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி,
‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.
வீடு திருத்துவான் –
கலங்காப் பெரு நகரத்துக்கும் ஒருபுதுமை பிறப்பியா நின்றான்.
(‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.
இரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக.
முதற்பொருளில், இறைவன் தொழில்;
இரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்..
ஆயின், ஐந்தாந் திருவாய்மொழியின் முடிவிலேயே இவரை அங்கீகரிப்பதாகத் திருவுள்ளம் பற்றி, இறைவன் வீடு திருத்துவானாயின்,
இப் பிரபந்தத்தையும் முற்றுப் பெறச் செய்து உலகத்தைத் திருத்திய வழியாலே
உலகத்திற்குப் பெரியதோர் உபகாரத்தைச் செய்தனன் ஆயினமை யாங்ஙனம்?’எனின்,
‘மனந்திருத்தி வீடு திருத்தப் போய் நாடு திருந்திய வாறே வந்து’-என்கிறபடியே, இறைவன் இவர் பக்கல் கொண்ட அவாவின் மிகுதியால்
வீடு திருத்துகையில் விளம்பிக்க, அக்கால நீட்டிப்பிற்குப் பொறாராய் ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா’ என்ற திருவாய் மொழி முடிய
இறைவன் தமக்குச் செய்த உபகாரத்தைச் சொல்லிக் கூப்பிட்ட கூப்பீடு உலகத்தார்க்கு எல்லாம் பெரியதோர் உபகாரமாய் முடிந்தது)
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி –
பரிபூர்ண ஞான பிரபனாய் – ஒளியனாய்.
அகலம் கீழ் மேல் அளவு இறந்து-
பத்துத் திக்குகளிலும் வியாபித்து -நிறைந்து.
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம்-
மிக்க ஸூக்ஷ்மமான-சேதன -அசேதனங்களுக்கும் – உயிர்ப்பொருள் உயிரல்பொருள்கட்கும் ஆத்துமாவாய் இருக்கிற.
இனி, -நேர்ந்த -கிட்டின -ப்ரத்யக்ஷ பரிதிஷ்டமான – பல பக்கங்களிலும் வெளிப்படையாகக் காணப்படுகிற
அசித்து சித்து இவற்றிற்கு உயிராய் இருப்பவன் என்று பொருள் கூறலும் ஒன்று.
நெடுமால்-
இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு –
புதுக்கணித்தது -அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் -என்கிறார்.
இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய்
இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார்
நெடுமாலே
‘முனியே நான்முகனே’ என்னும் அளவும் அவன் செய்த உபகாரத்தை அருளிச் செய்கிறார்.
அவன் தெளிந்து வந்து கொடு போகப் பற்றாமல் கூப்பிடுகிறார் அன்றே நடுவெல்லாம்.
——————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
கூடின -என்னாதே- சார்ந்த என்கிறதுக்கும்
தள்ளி என்னாதே சரித்து என்கிறதுக்கும் தாத்பர்யம் அருளிச் செய்கிறார்-
மாயா சப்தம் ஞான பர்யாயம் ஆகையால் ருசி ரூப ஞானத்தைச் சொல்லுகிறது –
பற்று -ப்ரக்ருதி கார்யமான ருசி வாசனை –
மாயப்பற்று -என்றது சேதனனை வஞ்சித்து விஷயங்களில் மூட்டுகையாலே மாயமான பற்று என்னவுமாம் –
நேர்ந்த உருவாய் அருவாகும்-என்று காரண அவஸ்தமான ஸூஷ்ம சித் அசித் வஸ்துக்களிலே வியாப்தி சொன்ன போது –
அகலம் கீழ் மேல் அளவிறந்து-என்று அபரிச்சின்னனாய் ஸ்தூல சித் அசித் வஸ்துக்களிலே வ்யாப்தி சொல்லுகிறது –
உரு -பிரகிருதி -அரு -சேதன –
அகலம் பஹிர் வ்யாப்தி என்றுமாம் -நேர்ந்த இத்யாதி அந்தர் வியாப்தி என்னவுமாம் –
நெடுமால் -சர்வாதிகன் என்றும் மிக்க வ்யாமோஹத்தை யுடையவன் என்றுமாம் –
தீர்ந்து -தனக்கே அற்றுத் தீர்ந்து –
ஈஸ்வரன் இவர் பக்கல் வியாமோஹத்தாலே வீடு திருத்துகையிலே விளம்பிக்க அது பற்றாமே
முனியே நான் முகனே அளவும் இவர் கூப்பிட்ட கூப்பீடு ஜகத் உபகாரமாய்த் தலைக் கட்டிற்று -என்றபடி-
அவன் தெளிந்து வந்து -இவர் திரு மேனியில் உண்டான பிச்சு அவனுக்குத் தெளிய வேணும் இறே-
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply