அவதாரிகை –
இந்த பிரபந்த திரு நாமம் ஸ்ரீ எம்பெருமானார் தாமர் இட்டருளினார் என்பார் –
அவசியம் ஜ்ஞாதவ்ய பரமார்த்தன்களை தெளிவாக தெரிவிக்கும் பிரமாணங்களின் சாரம் -என்றபடி –
ஸ்ரீ எம்பெருமானார் தாமே அருளிச் செய்வதாக இந்நூல் ஆசிரியர் திரு உள்ளம் கொண்டதால்
ஸ்ரீ எம்பெருமானார்க்குக் காப்புச் செய்யுள் இல்லாமல் அருளி உள்ளார்
ஸ்ரீ மா முனிகள் அந்த பிரமாண வசங்களை எல்லாம் எடுத்துக் காட்டி அருளிச் செய்து இருக்கிறார் –
——————————–
தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கு புகழ்
அருளாள மா முனி யாம் பொற் கழல்கள் அடைந்த பின்னே –
——-
ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-
பதவுரை :-
ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்
ஆர்த்த பிரபத்தி –உடனே -ஒரு ஷணமும் தரித்து இருக்க முடியாமல் தானாகவே விழுகை
த்ருப்த பிரபத்தி -தேக அவசானத்தில் -மோஷம்
ஸ்ரீ சனத்குமார சம்ஹிதை –
யதா பராநன்வயிபி துச்சக ஸ்ம்ருதி பிர் வி நா தேன தத்புரத பாதஸ் சா பிரபத்திஸ் தாதா பவேத்
பரா அந்வயிபி ஸ்ம்ருதி பிர் வி நா துச்சக -இதர விஷயங்களிலே அன்வயம் அற்ற சிந்தனைகள் இல்லாமல்
இந்நிலத்தில் தரித்து இருக்க முடியாதவனாய் –
இப்படிப்பட்டவனாக -யதா -எப்போது ஆகிறானோ -ததா -அப்போது –தேன -அப்படிப்பட்ட நிலைமையோடு
தத் புரத பாத -எம்பெருமான் திரு முன்பே விழுகை எனபது யாது ஓன்று உண்டோ –
சா பிரபத்தி பவேத் -அது தான் பிரபத்தியாகும் என்றபடி
ஆர்த்தியின் பரிபாகம் சரம அவஸ்தை அளவாக முதிர்ந்த பின்பு ஒரு ஷணமும் இந்நிலத்தில் இருப்பு அரிதாகி
ஆர்த்த பிரபத்தி செய்யும் அளவில் –
ஆர்த்தேஷூ ஆசுபலா -நியாச திலக ஸ்ரீ ஸூக்திப்படியே கடுகப் பலன் கை புகும் என்றதாயிற்று
—————————–
நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –2-
நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்
துரிசு அற்று -இப்படிப் பட்ட பிரேமத்தை உபாயமாகக் கொள்ளுகையாகிற தோஷம் இன்றிக்கே
யஸ் த்வயா சஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா வி நா -அயோத்யா -30-28-
பிரபன்னச் சாதகோ யத்வத் ப்ரபத் தவய கபோத
ஏக க்ருதீ சகுந்தேஷூ யோந்யம் சக்ராத் ந யாசதே –
சாதக பஷியானது மேகத்தை எதிர்பார்த்து இருப்பது போலே பிரபன்னனும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் –
ஸ்ரீ எம்பெருமானை பிரிந்து கிடப்பதை நரக பிராயமாக நினைத்து இருப்பதும் அவன் அருளையே
பார்த்து இருப்பதும் பரம பக்தர்கள் லஷணம் –
————————————————————-
ஆனை இடர் கடிந்த ஆழி யங்கை யம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்கமிலா வன்பர் நிலை –3-
ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.
ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ரு தௌ-அயோத்யா -53-31-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்ட திருமால்
பக்தர்கள் இடத்தே அன்பே நிரூபகமானவன் -என்று அறிந்து அத் திருக் குணத்திலே ஈடுபட்டு
அவனைப் பிரிந்தால் நீரை விட்டுப் பிரிந்த மீன் படும் பாடு படுமதே மெய்யன்பர்களின் நிலை –
—————————————————————–
மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து பெற்ற
பெறும் பேற்றின் மேல் உளவோ பேறு என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு –4-
பதவுரை:
மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்
யே ப்ரஹ்மன் பகவத் தாஸ்ய போகைக நிரதாஸ் சதா தே ப்ரியாதிதய ப்ரோக்தா ஸ்ரீ வைகுண்ட நிவாசி நாம் -பாஞ்சராத்ரம்
ஏக -மற்று ஒன்றை எண்ணாதே -மாதவனுக்கு ஆட செய்வதே ஸ்வயம் பிரயோஜனம்
—————————————————-
தீர்த்தம் முயன்று ஆடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் -சீர்த்துவரை
மன்னடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததற்பின்
என்ன குறை வேண்டும் இனி –5-
பதவுரை:
முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)
பார்த்தனை முன் காத்த பிரான் -ஸ்ரீ கீதை அருளி -ஸ்ரீ சரம ஸ்லோஹம் -உபதேசித்து அருளி
அர்ஜுனனை -சதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினவன் –
ஸ்ரீ சரம ச்லோஹார்த்த நிஷ்டை உண்டாகும் அளவே இந்த பிரவ்ருத்திகளுக்கு அவகாசம் உள்ளது
தாவத் கச்சேத் து தீர்த்தானி சரிதச் ச சராம்சி ச யாவன் நா பூச்ச பூபால விஷ்ணு பக்தி பரம் மன –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
கிம் தாஸ்ய தாநை கிம் தீர்த்தை கிம் தபோபி கிமத்வரை யோ நித்யம் த்யாயதே தேவம் நாராயண ம நன்யதீ -இதிஹாச சமுச்சயம்
யாமோ வைவஸ் வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்தித தேன சேத அவிவாதஸ் தே மா கங்காம் மா குரூன் கம
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இப் பாசுரம் அனுசந்திப்பார்களுக்கும் அதிகாரிகள் ஆவாரே –
—————————————————
புண்டரீகை கேள்வன் அடியார் அப்பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா ஆதரியார் -மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல் –6-
பதவுரை:-
புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது
ப்ரஹ்மாண்ட மணலி மாத்ரம் கிம் லோபாயா மனஸ் வின சபரீஸ் புரிதே நாப்தே
ஷூப்ததா நைவ ஜாயதே -பாகவத -10-20-15
மகத்தான தத்வம் ஆகிய சமுத்ரத்தை ஒரு சூத்திர மத்ஸ்யம் கலக்க வல்லதோ
பக்தர்கள் -கடல் ஸ்தானம் -ப்ரஹ்மாண்ட ஐஸ்வர்யம் மத்ஸ்ய ஸ்தானம்
புண்டரிகை -கோகனகை சரோருகை அரவிந்தை
முந்நீர் -ஆற்று நீர் உஊற்று நீர் மலை நீர்
முன்னீர்-அவ ஏவ சசர்ஜா தௌ -சிருஷ்டியில் முற்பட்ட நீர் -என்றுமாம் –
——————————————-
தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செயார் மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு –7-
பதவுரை:
தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ-
தத் பதம் ப்ராப்துகாமா யே விஷ்ணோஸ் தேஷாம் மஹாத்மநாம் போகா புரந்தரா தீநாம்
தே சர்வே நிரயோபமா -ப்ரஹ்மாண்ட புராணம்
அப்ராக்ருதமாய் அதி மநோ ஹரமாய் இருக்கும் விஷயத்தின் வாசி அறிந்து அதிலே தோற்று இருக்குமவர்கள்
மிகவும் ஆபாசமாய் அவிலஷணமாய் இருக்கின்ற ப்ராக்ருத விஷயங்களை விரும்புவார்களோ –
—————————————————————-
முற்றப் புவனம் எலாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா வன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8-
பதவுரை:
புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்
யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் சயு ஏகாந்த கத புத்திபி தாஸ் சர்வாஸ் சிரஸா தேவ பிரதி க்ருஹ்ணாதி
வை ஸ்வயம் -மோஷ தர்மம் மஹா பாரதம் –
உண்மையான பக்தர்கள் இடுமத்தை எல்லாம் ஸ்ரீ எம்பெருமான் திரு முடியாலே ஏற்றுக் கொள்கிறான்
பிரேம பரவசராய்க் கொண்டு அக்ரமமாக வாதல் சக்ரமமாகவாதல் எப்படி செய்தாலும்
திரு உள்ளம் உகந்து சிரஸா வஹித்து அருள்வான்
———————————————————————-
ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9-
பதவுரை:
ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்
யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் —
அநந்ய பக்தர்கள் திரு உள்ளமே சிறந்த ஸ்தானம்
ஆசு -குற்றம் -அருளுக்கு குற்றமாவது சஹேதுகமாய் இருத்தல் –
நிர்ஹேதுக கிருபை என்றதாயிற்று
————————————-
நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன் தன் -தாளில்
பொருந்தாதார் உள்ளத்தில் பூ மடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு –10-
பதவுரை:
நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்
பகவச் சரண த்வந்தவே பக்திர் யேஷாம் ந வித்யதே தேஷாம் ஹ்ருதி ஸ்திதோ
தேவ கண்டகாக்ர இவ ஸ்தித -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம்
சர்வ வியாப்தி சித்தமாக எங்கும் பொருந்தி இருந்தாலும் முள் மேல் இருப்பாக காணும் –
—————————————————–
தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-
பதவுரை:
விரையார் –நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் –திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர்–மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால்–திருமால்
தன் பொன்னடி யன்றி–தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் -வேறு பயன்களில்
தாழ்வு செய்யா -ஈடுபாடு கொள்ளாத
அன்பர் -பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது-மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் -மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் -பொன் மிளிரும்
மேருவாய் -பொன் மலையாய்
கொள்ளும் -ஏற்றுக் கொள்வான்
பக்தைரண் வப்யுபா நீதம் ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் பூர்யப்ய பக்தோ பஹ்ருதம் நமே
தோஷாய கல்பதே-பௌஷ்கர சம்ஹிதையில் தானே அருளிச் செய்தான் இறே /ஸ்ரீ பாகவத ஸ்லோஹமுமாம்–
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருத மச்னாமி பிரயதாத்மான –ஸ்ரீ கீதை -9-26-
அந்யத் பூர்ணாதபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜ நாத்
அந்யத் குசல சாம்ப்ராஸ் நாத் ந சேச்ச தி ஜனார்த்தன -பார -உத்தியோக -69-13-
ஒரு திருத் துழாய் தளத்தினால் திருப்தி அடையக் கூடியவன் –
விரையார் துழாய் அலங்கல் மாரிமாக் கொண்டல் நிகர் மால் –
ஸ்ரீ குசேல முனிவர் இடம் ஸ்ரீ கண்ணபிரான் அனுபவம் போலே –
———————————————————————–
மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–
பதவுரை:
மலர் மடந்தை கோன்-திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த -தன்னிடம் பகை கொண்டு சேர்ந்து நின்ற
மருதம் -இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற -முறிந்து விழும்படி
தவழ்ந்த -தவழ்ந்து போன
சேறார் -சேற்றில் அலர்ந்த
அரவிந்தம்-செந்தாமரை போன்ற
வேறாக -சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார்-நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை-மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும்-தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான்-பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான்-மகிழ்வுடன் ஏற்க மாட்டான்
பேறாக உள்ளாதார் -வேறாக உள்ளாதார் பாட பேதங்கள்
ப்ருதிவீம் ரத்ன சம்பூர்ணம் யா க்ருஷ்ணாய ப்ரயச்சதி
தஸ்யாப் யன்ய மனஸ் கஸ்ய ஸூலபோ ந ஜனார்த்தன
நெஞ்சு கனிந்து இராமல் நவ நிதிகளை இட்டாலும் அவற்றை ஸ்ரீ எம்பெருமான் கண் எடுத்துப் பாரான் –
பொய்ம்மாய மருதான வசுரரைப் பொன்றுவித்தின்று நீ வந்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் -3-1-3- -போலே
இங்கு மாறாய் இணைந்த மருதம்
——————————————————-
பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-
பதவுரை:
பண்டே -தொன்று தொட்டே
உயிரனைத்தும் -அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே -லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் -அடிமையாகும்
எனத் தெளிந்த -என்ற உண்மையை அறிந்த
தூ மனத்தார்க்கு -தூய மனம் படைத்தார்க்கு
பலவும் கற்று -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து -தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் -செருக்கித் திரியும்
உலகத்தவரோடு -உலகியல் மக்களோடு
உறவு உண்டோ -தொடர்பு உண்டாகுமோ?
விஷ்ணு தாஸாவயம் யூயம் ப்ரஹ்மணா வர்ண தர்மிணா அஸ்மாகம் தாஸ வ்ருத்தி நாம்
யுஷ்மாபிர் நாஸ்தி சங்கதி நாஸ்தி சங்கதி
ரஸ்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் வயந்து கிங்ரா விஷ்ணோர் யூய மிந்த்ரிய கிங்கரா
ஸ்ரீ திருவயிந்திர புரத்தில் ஸ்ரீ வில்லி புத்தூர்ப் பகவர்-தனியொரு துறை அனுஷ்டானம் –
ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்தோ வைத்யோ வைஷ்ணவ உச்யதே
ஆவித்யேன நகே நாபி வைத்ய கிஞ்சித் சமாசரேத்-
சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் என்று துறை
வேறு இடுவித்து -ஸ்ரீ ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்திகள்-
ஸ்ரீ திரு மந்தரப் பொருளை நன்கு தெளியப் பெற்ற பரமைகாந்திகளுக்கு
தேஹாத்மா அபிமானிகளோடு சேர்ந்து வாழ்வது பொருந்தாது -என்றபடி
——————————————————–
பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14–
பதவுரை:
பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை
சாதங்கள் -ஜாதிகள்
தேஹாத்ம அஜ்ஞான கார்யேண வர்ண பேதேன கிம் பலம் கதிஸ் சர்வாத்மாநாம்
ஸ்ரீ மன் நாராயண பத த்வயம் –பரமைகாந்தி தருமம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் ஜாதி பேதம் எதுவுமில்லை –
சகலாத்மா வர்க்கங்களுக்கும் பொதுவான பகவச் சேஷத்வம் பொலியுமே -என்றபடி –
——————————————-
குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-
பதவுரை:
குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று
ஆர்கலி -கடல்
ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ கிராமகுலாதிபி விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி- நத்யா நச்யதி நாமாதி
பிரவிஷ்டாயா யதார்ணவம் சர்வாத்மநா பிரபன்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ் ததா –
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் பேர் அடியான் என்று இறே —
கிராம குலாதிகளால் வரும் பேர் அனர்த்த ஹேது -ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய -ஸ்ரீ ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்திகள்
ஆறுகள் கடலில் சேருவதற்கு முன்பு கங்கை யமுனை கோதாவரி இத்யாதி நாம பேதங்களையும் வெண்மை கருமை முதலான
நிற வேற்றுமைகளையும் தாங்கி நிற்கின்றன -கடலில் புகுந்த பின்பு முன்பு இருந்த நாம பேதங்களையும் வர்ண பேதங்களையும்
அறவே விட்டிட்டு கடலின் நிறமே கொண்டு கடலின் பெயரினாலேயே வழங்கப்படுவது போலே
————————————————————–
தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-
பதவுரை:
நான்-உயிராகிற நான்
தேவர்-இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் -அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு-பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம்-மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன்-எவையுமாய் சொல்லப்பட மாட்டேன்
(இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன.
ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான்-நான் (அடியேன்)
பூவின் மிசை-தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின்-தெய்வப் பெண்ணான திரு மகளின்
கேள்வன்-மணாளனும்
அமலன் -குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் -அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன்-நாராயணனுடைய
தாட்கே-திருவடிகளுக்கே
இலகும் -அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் -உயிர்கள்
அடிமை -அடிமையாகும்
“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” -அடிமையே உயிர்களின் இயற்கையாம்.
நாஹம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா ஜ்ஞா நானந்த மயஸ் த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன —
நாஹம் விப்ரோ ந ச நரபதிர் நாபி வைஸ்யோ ந சூத்ரோ நோ வா வர்ணீ ந ச க்ருஹபதிர் நோ வனஸ்தோ யதிர் வா கிந்து
ஸ்ரீமத் புவன பவன ஸ்தித்ய பாயைக ஹேதோர் லஷ்மீ பர்த்துர் நரஹரி தநோர் தாஸ தாசஸ்ய தாஸ —
சரமாவதி தாசத்வமே வடிவு எடுத்தவன் -என்றபடி
——————————————————————
ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-
பதவுரை:
விண்ணவர் கோன்-தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க -பெருஞ்செல்வம்
ஒன்றிடுக-ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக-அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக-எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க-இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின்-ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால்-இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும்-இன்பமும் துன்பமும்
பிறக்குமோ-உண்டாகுமோ (ஆகாது)
களிப்பும் கவரவும் -கொந்தளிப்பும் கிலேசமும்
தன் தெளிந்த பின் -ஸ்வ ஸ்வரூபம் ஞானம் வந்த பின்பு
ஆகச்சது ஸூ ரேந்த்ரத்வம் நித்யத்வம் வா அத்ய வா ம்ருதி தோஷம் வா த்ரவிஷாதம் வா நைவ கச்சந்தி பண்டிதா-
—————————————————————————-
ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-
அறிவரியன் -அறவரியன் -பாட பேதங்கள்
பதவுரை:
மட்டு ஆர்-தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் -திருத்துழாய் மாலையுடைய
மால்-திருமால்
ஈனமில்லாத அன்பர்-தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும்-பக்தி யுடையவர்கள் ஆனாலும்
எய்திலா -பகவானுக்கு எதிரிகளான
மானிடரை-கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும்-பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய-வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு-துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு -அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன்-மிகவும் அரியனாய் இருப்பான்
பக்தோபிவா ஸூ தேவஸ்ய சாரங்கிண பரமாத்மன லோகேஷணாதி நிர்முக்தோ முக்தோ பவதி நான்யதா –
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –
செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
மனுஷ்ய ஜாதியில் பிறந்து வைத்தே பசு ப்ராயராய் வர்த்திக்கும் ப்ராக்ருதர்களோடு உறவை ஒழித்துக் கொண்டால் தான்
அவர்களுக்கு எளியவன் ஆவான் என்றதாயிற்று
—————————————————————-
நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-
பதவுரை:-
நல்ல புதல்வர்-நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள்-நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை -குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் -குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம்-பொன் விளையும் பூமி
மாடு-வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவை யனைத்தும்-இவை யெல்லாம்
அல்லலென-துன்பம் தருவன என்று
தோன்றி -மனதுக்குத் தோன்றி
எரிதீயில்-கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் -எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு-அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் -தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து-அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு-அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் -மிக எளிதாகும்
நவை இல் கிளை -குற்றம் அற்ற உறவினர் –
ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத –புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாதபத்ம ப்ரவணாத் மவ்ருத்தேர்
பவந்தி சர்வே பிரதிகூல ரூபா –என்று ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட வசனம்
இப் பாட்டில் சொன்ன அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –
விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தமும் அன்று -நரக ஹேதுவும் அன்று -ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் இருக்கையாலே ஸ்வரூபம் குலையும் —
ஷேத்ராணி மித்ராணி என்கிற ச்லோஹத்தில் அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூபம் குலையாமைக்கு -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –
புத்திர களத்ராதிகள் அக்னி கல்பமாகத் தோற்றும் -அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு -என்கை –
—————————————————–
விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திருப் பொலிந்த மார்பன் அருள் செய்யான் நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20-
பதவுரை:
விருப்புறினும் -அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு –தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் -திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் -அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி -பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை -தீச்சுடரை
விடாதே -அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய்–குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ-அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தே விடுவாள்)
யாசிதோபி சதா பக்திர் நாஹிதம் காரயேத் ஹரி பால மக்நௌ பதந்தந் து மாதா கிம் ந நிவாரயேத்-
நெருப்பின் ஒளியைக் கண்டு அதை விட மாட்டாமல் அதிலே விழ முயலும் குழந்தையை
ஹிதம் செய்யும் தாய் அத்தை தகையாமல் அனுமதி செய்வாளோ -என்றபடி
——————————————————-
ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய்நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-
பதவுரை:
வேரிச் சரோருகை கோன் -நறுமணம் நிறைந்த தாமரைப் பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் -பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப் பெருந்துயர் -மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் -தந்த போதிலும்
தேரில் -இதை ஆராய்கையில்
மெய்ந் நலமாம் -உண்மையான அன்பிலே யாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் -தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது
மைந்தன் -பிள்ளையினுடைய
உடற் புண்ணை -உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு -அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று – அனுமதிக்கும் தந்தை போலவாம்
வேரி சரோருகை கோன் –நறுமணம் மிக்க தாமரையில் பிறந்த ஸ்ரீ பிராட்டியின் வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
தேரில் -ஆராயும் அளவில்
மெய் நலமாம் -உண்மையான அன்பின் காரியமேயாகும்
ஹரிர் துக்கா நி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை சஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா-
தனக்கு ஒரு கிலேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல் க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் –ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஸூ க்திகள் –
முமுஷுவாய் பிரபன்னனானாலும் பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் தாபத்ரயங்களில் ஏதேனும் ஒரு கிலேசம் உண்டானால் –
இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலம் அன்றோ –
ஏவம்பூத கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு ஸ்ரீ எம்பெருமான்
நம்மை வைக்கிறது -பிராரப்த பிரதிபந்தகங்களிலே ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அனுசந்தானத்தாலே யாதல்
துர் வாசனையாலே இவ்வுடம்பை விட இசையாமல் ப்ராக்ருத பதார்த்தங்களை யுபஜீவித்துக் கொண்டு சம்சாரத்துக்குள்ளே பொருந்தி
இருக்கிற நம்மை துக்க தர்சனத்தைப் பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய கிருபையின்
பலம் அன்றோ இது என்கிற அனுசந்தானத்தாலே யாதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் —
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே —
கர்ம பலனான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் இத் தேஹத்தை விட வென்றால் இசையாத விவனை
நிர் துக்கனாக்கி வைப்போமாகில் இச் சரீரத்தோடு நெடும் காலம் இருக்க இச்சித்தல் இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சித்தல் செய்யுமாகையாலே
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இறுக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்து சம்சாரத்தில் நின்றும் இவனைக் கடுகத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகையில்
உண்டான கிருபையாலே யானாப் போலே இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே இறே –
அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் பகவன் நிக்ரஹ பலம் –
இது அனுக்ரஹ பலம் –ஸ்ரீ மா முனிகள் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -ஸ்ரீ பெருமாள் திருமொழி பாசுரமும் இங்கே அனுசந்தேயம்
————————————————————-
உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-
பதவுரை:
நான் -நான் என்கிற ஆன்மா
உடைமை -இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் -இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் -பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து -உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் -இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் -அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் -இனி மேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் -பழ வினைகள்
உண்டோ -இருக்குமோ? இல்லை என்றவாறு –
ஆர்த்தா நாம் ஆசு பலதா சக்ருதேவ கருதாஹ்ய சௌ திருப்தாநாம் அபி ஜந்துநாம் தேஹாந்தர நிவாரணீ – —
பிரபத்தி ஸ்வ பாவம் சொல்லும் பிரமாணம்
ஸ்வத்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் உபயோரேஷ சம்பன்னோ ந பரோபிமதோ மம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
என்கிறபடியே
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணருவதே பிரபத்தி -என்றவாறு
————————————————————
ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-
பதவுரை:
ஊழிவினை -பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் -கயவர்கள்
ஓட்டருவர் -ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி -பயந்து
ஏழை மனமே -அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் -இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் -கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் -திருவடிகளில்
வீழ்ந்து -விழுந்து (சேவித்து)
சரண் என்று -நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து -வேண்டிக்கொண்டு
ஒருக்கால் -ஒரு தடவை
சொன்னதற்பின் -அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ -வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.
சரணாகதியின் பிரபாவத்தைப் பேசுகிறது –
த்வயத்தை அனுசந்தித்து ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் விழுந்தாருக்கு
தீ வினைகள் கண்டு தளர வேண்டாம் -என்றவாறு –
மாபீர் மந்த மநோ விசிந்தய பஹூதா யாமீஸ் சிரம் யாதநா நாமீ ந பிரபவந்தி பாபரிபவ ஸ்வாமீ ந நு ஸ்ரீ தர –
-ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் லோகஸ்ய
வ்யசநாப நோத ந கரோதா சஸ்ய கிம் ந ஷம-முகுந்த மாலை ஸ்லோஹம்-
————————————————————————
வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-
பதவுரை:
வண்டுபடி -தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை -திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை -இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று -அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் -ஏ மனமே
தளரேல் -வருந்தாதே
இறை -(அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் -தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் -அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் -தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் -பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் -கண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்
அவிஜ்ஞாதா -சர்வஜ்ஞ்ஞனை அடியார்கள் குற்றங்களைக் காணாதவன் –
அவிஜ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ் ஸூ கமலேஷண சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன் நபி ந பஸ்யதி-ஹ்ருதஸ்தித —
தோஷங்களை காணாமை ஒரு குணம் -கண்டு அவற்றையே நற்றமாகக் கொள்ளுவது வேறு ஒரு குணம்
அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –
பிரேமத்தின் பரிபாக தசை பலவகைப் பட்டு இருக்கும் -தோஷ தர்சனமும் வாத்சல்யம் -தோஷங்களை குணமாக கொள்ளுவது –
அதனில் மேற்பட்ட தசை -ஷமிப்பது என்பதும் ஒரு தசை
—————————————————————————————–
அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-
பதவுரை:
அற்றம் உரைக்கில்–முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் -தாமரை மணாளன்
அடைந்தவர்பால் -தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் -பாபங்களை
உணர்ந்து–அறிந்து (கண்டு கொண்டு)
இகழும் கொள்கையனோ –அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே –என்ன வியப்பு
ஆ –பசுவானது
தன் கன்றின் –தன் கன்றினுடைய
உடம்பின் –உடம்பிலுள்ள
வழுவன்றோ –கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து –கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று –அப்பொழுது
காதலிப்பது–ஆசையுடன் நாவால் சுவைப்பது
அற்றம் உரைக்கில் -என்றது அறுதி இட்டுச் சொல்லும் அளவில் -என்றபடி -சாஸ்திரம் நிஷ்கர்ஷிக்கும் அளவில்
பிரபன்னான் மாதவஸ் சர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே அத்யஜாதம் யதா வத்சம் தோஷேண சஹ வத்சலா –
இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே —பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு இருக்கும்
புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களைத் திரு உள்ளத்தாலே நினையாதே —
குற்றங்களை ஸ்ரீ பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு —
அன்று ஈன்ற காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாகக் கொண்டு –
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும் –ஸ்ரீ தத்வத்ரய ஸ்ரீ ஸூக்திகள் –
————————————————
தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-
பதவுரை:-
தப்பு இல்–அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு -குருவினுடைய
அருளால்–நல்லருளால்
தாமரையாள் நாயகன் –தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் –உவமை யில்லாத
அடிகள் –திருவடிகள்
நமக்கு –அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள்–நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி–ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து–வீட்டுலகத்தில்
ஏறி–அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு–அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் –பொருத்தமுடைய அடியராயிருப்பார்
ஆச்சார் யஸ்ய பிரசாதேன மம சர்வ மபீப்சிதம் ப்ராப்நுயா மீதி விஸ்வாசோ யஸ்யாஸ்தி ச ஸூகீ பவேத் –
ஸ்ரீ ஆசார்யன் திருவருளாலே நமக்கு எம்பெருமான் திருவடிகள் மஹா நிதியாகக் கிடைத்தன என்று தேறி இருக்குமவர்கள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விழா வடிமை செய்யும் பாக்யசாலிகளாகத் தட்டில்லை என்கிறார்
————————————————–
நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-
பதவுரை:-
நெறி -உபாயம்
அறியாதாரும்–அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று–வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் –வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் –தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து–இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார்–அடைய மாட்டார்கள்
இடர்–பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார்–முழுகித் தவிப்பார்கள்
த்வயம் உபதேசிக்கப் பெறாதவர்கள் -நெறி -சம்சாரம் தப்புவிக்கும் உபாயம் என்று இத்தைச் சொல்லி –
அதை உபதேசிக்க வல்ல ஆசாரியனை அடி பணியாதவர்கள் -ஸ்ரீ சரம ஸ்லோஹத்தில் விஸ்வாசம் அற்றவர்கள்
அஜ்ஞஸ் சாஸ்ரத்ததா நஸ்ச சமசயாத் மாவி நஸ்யதி நாயம் லோகோஸ்தி
நபரோ ந ஸூகம் சம்சயாத் மன -ஸ்ரீ கீதா வசனம் -4-40-
————————————————————————
சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-
பதவுரை:
சரணாகதி–பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை–அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் –தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது–முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை –அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய –அவனது பலம் தொலையும்படி
கட்டியது –இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு –பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்) கொண்டு
ஆர்ப்பதன் முன் –கட்டும் பொழுதே
விட்ட படைபோல் –அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் –சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்
சணல் கண்ட பிரஹ்மாஸ்திரம் போலே நழுவும் –
பிரபத்தே க்வசி தப்யேவம் பராபேஷா ந வித்யதே சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பலப்ரதா சக்ருதுச்சாரி தாயேன தஸ்ய
சம்சார நாசிநீ ராஷசாநாம் அவிஸ்ரம்பாதாஜ்ஞநே யஸ்ய பந்தனே யதா விகளிதா சத்யஸ் த்வமோகாபி
அஸ்த்ர பந்தநா ததா பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விச்ரம்ப
யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி சாசிராத் -ஸ்ரீ சனத்குமார சம்ஹிதாயாம்
——————————————————————————–
மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-
பதவுரை:
மந்திரமும்–திருமந்திரமும்
ஈந்த குருவும்–அம் மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் –அத் திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற–மனனம் செய்கின்ற
திருமாலும்–ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது–(இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் –எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர்–அருளுக்கு இலக்காவார்
யாவர்–யாவரோ
அவர்–அவர்களே
இடரை வென்று–பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது–விரைவில்
வீடு அடைவர்–வீடு பேற்றை அடைவார்கள்
நந்தல் இலாது-இடைவீடு இன்றி எப்போதும்
மந்த்ரே தததேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ-த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –
தேவதாயா குரோஸ் சைவ மந்த்ராஸ்யைவ பிரசாதத
ஐஹிக ஆமுஷ்மிகா சித்திர் விஜஸ் யஸ்யாந்ந சம்சய -புராண சார சமுச்சையே மூல மந்திர மகாத்ம்யே
மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க யுண்டானால் கார்யகரம் ஆவது -ஸ்ரீ முமுஷுப்படி
அருள் புரிவர் -என்றது அருள் புரியப் பெற்றவர் -என்றபடி -மழை பெய்த இடம் என்றால் போலும் இது –
———————————————————————
மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-
பதவுரை :
மாடும்–பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும்–இன்ப நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும்–உறவினர்களும்
மறை முனிவர் தேடும்–வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும்–மேலான வீட்டுலகமும்
சென்னெறியும்–அவ் வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும் எல்லாம்
பீடுடைய –பெருமையுடைய
எட்டெழுத்தும்–பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே–உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார்–என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை –தொடர்பை
விட்டிடுகை–சேராதபடி விட்டிடுகை
விதி–சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் –காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)
ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் குருர் அஷ்டாஷர ப்ரத இத்யேவம் யேந மன்யந்தே த்யக் தவ்யாஸ்தே மநீஷிபி –
மாடு பொன் பக்கம் செல்வம் -நிகண்டு -செல்வம் என்றபடி -ஷீரம் தரும் பசு என்றுமாம்
செம் நெறி -மோஷ சாதனம் -ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கம் என்றுமாம் –
இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்தரம் பிரதானம் -ஸ்ரீ முமுஷுப்படி
உறவை விட்டிடுகை கண்டீர் விதி -அன்னவர்கள் ஹேயர்கள்-என்பதைக் காட்டி நிற்கும்
நூல் கொள்கை -சாஸ்திர விதி என்றவாறு
——————————————
வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-
பதவுரை:
தீதில்–குற்றமில்லாத
சரணாகதி–அடைக்கல நெறியை
தந்த–தனக்கு காட்டிக் கொடுத்த
தன்னிறைவன்–தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே–திருவடிகளே
அரணாகும்–தஞ்சமாகும்
என்னுமது–என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம்–ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த–நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப் பொருளும்–உண்மைப் பொருளும்
கோதில் –குற்றமற்ற
மனுமுதநூல்–மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும்–உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே–ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியே யாகும்
சரணாகதி தந்த தன்னிறைவன் -த்வயத்தை உபதேசம் பண்ணி அருளிய ஆசார்யனே பர தைவதம் —
சரணாகதிக்கு தீதின்மை யாவது -ஸ்வ ரூப அனுரூபமாய் இருக்கை
குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ
பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு
அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம்
ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா -ஸ்ரீ சாத்விக தந்த்ரே த்வய பிரசங்கே
———————————————————————–
மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-
பதவுரை:
குருவை –தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும்–சாதாரண மனிதர்களைப்போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர்மகள் கோன் –தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம்–தான் விரும்பி ஏற்றுக்கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும்–பஞ்ச லோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா –கீழ்த் தரமாக
எண்ணுகின்ற–நினைக்கின்ற
நீசர்–கீழ் மக்களான
இருவரும்–இவர்கள் இருவருமே
எக்காலும்–காலம் உள்ளவரையும்
நரகு–நரகத்தை
நண்ணிடுவர்–அடைவார்கள்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும் மகநா நுத்தரதே லோகன்
காருணயாத சாஸ்திர பாணி நா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
நம்மைப் பிறவிக்கடல் நின்றும் எடுக்கைகாக எம்பெருமான் தானே மனுஷ்ய ரூபம் கொண்டு வந்து
அருளுகிறான் என்று பிரதிபத்தி பண்ணாதே மனுஷ்யன் என்று நினைப்பதும்
உமர் உகந்து உகந்த உருவம் நின்னிருவமாகி -என்றும்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அர்ச்சா ரூபத்தை அப்ராக்ருத விக்ரஹமாக பிரதிபத்தி பண்ணாதே இதுவும் ஒரு லோஹம் என்று நினைப்பவன்
இருவரும் நீடூழி காலம் நரகத்தில் விழுந்து துவளுமவர்கள்-
விஷ்ணோர் அர்ச்சாவதா ரே ஷூ லோஹபாவம் கரோதிய யோ குரௌ
மானுஷம் பாவம் உபௌ நரகபாதி நௌ —
அர்ச்சாவதாரோபாதான வைஷ்ண வோத்பத்தி சிந்தனம் மாத்ரு யோநி
பரீஷாயாஸ் துல்ய மாஹூர் மநீஷிண —
————————————————————-
எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-
பதவுரை:
எட்ட இருந்த–மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை –ஆசார்யனை
இறையன்று–தலைவன் இல்லை என்று
விட்டு–புறக்கணித்து
ஓர் பரனை–அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல்–அடைய வேணுமென்று அவாவுதல்
(எது போன்றது எனில்)
பொட்டன–சடக்கென்று
தன் கண்–தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து –மூடிக் கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் –விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி–தரையில் ஊற்றி விட்டு
அம்புதத்தை–மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று–எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவன் அல்லன்
-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை யுபேஷித்து ஜீமூத ஜலத்தையும் சாகர சலித்தையும்
வாபி கூப பயஸ் ஸூக்களையும் வாஞ்சிக்கக் கடவன் அல்லன் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –
இங்கு மா முனிகள் வியாக்யானம் -பிபாசை விஞ்சின போது ஜலத்தை சடக்கெனப் பானம் பண்ணலாம் படி பாத்ரகதமாய்க் கொண்டு
தன் கையில் இருக்கிற ஜலத்தை ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்துத் தரையிலே உகுத்து –
ஆகாசஸ்தமாய்க் கொண்டு எட்டாத படியையும் பூமிஸ்தமாய் இருக்க தூரஸ்தமாயும் ஆசன்னமாயும் இருக்கச் செய்தே
பெருகும் காலம் ஒழிய வற்றின காலம் இன்றிக்கேயும் எப்போதும் உண்டானாலும் அவ்வளவும் சென்று உபஜீவிக்க வேண்டியும்
இருந்த இடம் தன்னிலே யுண்டாயும் கநித்ராதிகள் கொண்டு பேர வேண்டியம் இருக்கும்
ஜீமூதாதிகளின் ஜலத்தை யாசைப்படுமவனைப் போலே ரஷக அபேஷை பிறந்த தசையிலே அப்போதே தனக்கு உதவும்படி
கை புகுந்து இருக்கிற ஆசார்ய விஷயத்தில் சௌலப்யமே பற்றாசாக உபேஷித்து
பரம ஆகாச வர்த்தியாய் துஷ் ப்ராபமாய் இருக்கிற பரத்வத்தையும்
பூமியிலேயாயும் ஷீராப்தி அளவும் செல்ல வல்லவர்களுக்கு அன்றி யுதவாத வ்யூஹத்தையும்
ஆசன்னமாக வந்தும் தாத்காலிகர்க்கு ஒழியபாச்சாத்யர்க்கு உதவாத விபவத்தையும் நித்ய சந்நிதி யுண்டாயும்
சம்பாஷணாதிகளால் இவனோடு கை கலந்து இராத அர்ச்சாவதாரத்தையும்
இருந்த இடம் தன்னிலே உண்டாய் இருந்த தாகிலும் யம நியமாதி க்ரமேணயத்நித்து தர்சிக்க வேண்டும் அந்தர்யாமித்வத்தையும்
ஆசைப் படக் கடவன் அல்லன் என்கை –
சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யம் துயஸ் ஸ்மரேத் கரஸ்தம் உதகம்
த்யக்த்வா கநஸ்தம் அபி வாஞ்சதி -என்று-இவ்வர்த்தம் தான் ஸ்ரீ பகவத் போதாயன க்ருதமான புராண சமுச்சயத்தில்-
ஸ்ரீ ஆச்சார்ய மஹாத்ம்ய பிரகாரணத்தில் சொல்லப் பட்டது இறே
எட்டவிருந்த குருவை இறை அன்று என்று விட்டு –அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று -என்றும்
சொல்லக் கடவது இறே -என்று ஸ்ரீ மா முனிகள் அருளினார் –
—————————————————–
பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-
பதவுரை:
பற்று குருவை–தன்னாலே பற்றப்படுகிற ஆசார்யனை
பரன் அன்று என்று–இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை –வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல்–தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள்–தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு–அல்பம் என்ற நினைவால்
ஆரேனும்–எவராயினும்
தாம்–தாங்கள்
காசினியில்–பூமிக்குள்ளே
புதைத்த –புதைத்து வைத்த
அப்பொருள்–அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான்–தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே –என்ன மடமையோ?
ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–
அதி ஸூலபனாய்த் தனக்குக் கை புகுந்து இருக்கும் ஆசார்யனை அவரத்வ புத்தியாலே உபேஷித்து
அதி துர்லபனாய்ப் பெரு முயற்சிகள் செய்து காண வேண்டும் படி இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரனை அனுவர்த்திப்பதானது –
கைப்பட்டு இருக்கும் கிழிச் சீரையை விட்டு பூமிக்குள்ள புதைத்து வைத்து இருக்கும் பொருளைத் தேடித் திரிவது ஒக்கும்
———————————————————-
என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-
பதவுரை:
நின்ற புனல்–தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த–விட்டு அகன்ற
பங்கயத்தை–தாமரைப் பூவை
பொங்கு சுடர்–கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன்–உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான்–முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து–பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று–உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் –எப்பொழுதும்—எக்காலத்திலும்,-
அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.
அனைத்துயிர்க்கும்–எல்லா உயிர்களுக்கும்-எல்லா ஆன்மாக்களுக்கும்
ஈரஞ்செய்–கருணை காட்டும்
நாரணனும்–நாராயணனும்
தன்னாரியன்பால் –தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் –பக்தி அகன்று போனால்
அன்றும் –சீற்றத்தால் எரிப்பான்.
நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ பிரச் யுதஸ்ய துர்ப்புத்தே கமலம்
ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-
ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் ஸ்வரூபத்தை வாடவும் பண்ணுவன்
தாமரையை அலற்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால்
அத்தை வாடப் பண்ணும் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்
—————————————————-
வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-
பதவுரை:
வில்லார் –ஒளி நிறைந்த
மணி –ரத்தினங்களை
கொழிக்கும்–குவித்துத் தள்ளும்
வில்லார் மணி கொழிக்கும் – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை
வேங்கடம்–அழகிய திருமலை முதலான
செல்லார்–மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் –சோலைகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம்–திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம் இருள்–அறியாமையாகிற இருளை
ஓட–விரைவில் அகலும்படி
மத்தகத்து–சீடன் தலைமேல்
தன்தாள் –தம்முடைய திருவடிகளை
அருளாலே–மிக்க கருணையினாலே
வைத்த –வைத்து அருளின
அவர் –ஆசார்யரான அவரே ஆவார்
செல் -மேகம் -மேகங்கள் வந்து படியும்படி ஓங்கி இருக்கும் சோலைகள் சூழ்ந்த திருப்பதிகள் எல்லாம் என்றபடி
யேநைவ குருணா யஸ்ய நியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச
சச்சிஷ்யனாய் சதாசார்யா ப்ரேமம் உடையனாய் இருக்குமவனுக்கு சகல திவ்ய தேசங்களும்
தன்னாசார்யனே யாவான் -என்கிறது
ஸ்லோஹத்தில் ஸ்ரீ வைகுண்டத்தையும் -ஸ்ரீ ஷீராப்தி யையும் -ஸ்ரீமத் த்வாரகையும் சொல்லிற்று –
இப் பாட்டில் ஸ்ரீ திருமலை முதலான திவ்ய தேசங்களைச் சொல்லிற்று –
————————————————–
பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-
பதவுரை:
பொருளும்–தன்னுடைய செல்வமும்
உயிரும் –தன் உயிரும்
உடம்பும் –தன் உடம்பும்
புகலும் –தன் குடியிருப்பும்
தெருளும்–தன் அறிவும்
குணமும்–தன்னுடைய நற்பண்புகளும்
செயலும்–தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த–தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா–தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர்–எண்ணி இருப்பவர்
நெஞ்சு–இதயம்
எந்நாளும்–எக்காலத்திலும்
மாலுக்கு –பகவானுக்கு
இடம்–உறையுமிடமாகும்.
பொருளும் உயிரும் உடம்பும் புகலும்-செல்வமும் பிராணனும் உடலும் வீடும் –
தெருளும் குணமும் செயலும்-ஞானமும் சமதமாதி குணங்களும் செய்கைகளும் ஆகிய இவை எல்லாமும் —
சரீரம் வஸூ விஜ்ஞானம் வாஸ கர்ம குணா ந ஸூந் குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ச சிஷ்யோ நேதரஸ்
ஸ்ம்ருத குர்வர்த்தம் ஸ்வாத்மன பும்ஸ க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மான ஸூபிரசன்னஸ் சதா விஷ்ணுர்
ஹ்ருதி தஸ்ய விராஜதே -ஸ்ரீ ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது
அர்த்தம் பிராணன் சரீரம் முதலான எல்லாவற்றையும் ஆசார்ய சேஷமாக அனுசந்திக்குமவர்கள் நெஞ்சு
சர்வேஸ்வரன் சர்வ காலமும் வாசஸ் ஸ்தானம் -ஆகும் –ஸ்ரீ ஆசார்ய பக்தர்களுக்கே
ஸ்ரீ எம்பெருமான் உடைய திருவருளுக்கு இலக்காவார்
——————————————————————
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-
பதவுரை:
தேனார் – தேன் நிரம்பிய
கமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய
திருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன – கணவனான பகவான்
தானே – மேலான தானே
குருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா -திருந்த தக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே – இப்பூவுலகத்தே
தோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம்
கீழே அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய பிரபாவம் தகும் என்பதை ஸ்ரீ ஆசார்யன் சாஷாத் நாராயணன் உடைய அவதார விசேஷமே
என்ற சாஸ்த்ரார்த்தம் காட்டி அருளுகிறார் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஸ்ரீ பெரியாழ்வார் –
———————————————————————–
அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-
பதவுரை:
அலகை முலை – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று கூறும்படி
திரிவார் தம்மை – நடமாடுகிற பெரியோர்களை
உலகர் – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில் – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின் செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும் – அது இவர்களது அடியார் பக்தியை வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர் – அந்த உலகர்கள்
தூற்றாது – அவ்வாறு பழிக்காமல்
இவரை – அடியார் பக்தரான இவரை
போற்றில் – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது – அப்புகழ்ச்சி
புன்மையேயாம் – பழிப்பதேயாகும்
அலகை -பேய்மகள் -பூதனை -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையோடு உயிரை வற்ற வாங்கி
உண்டவனுக்கு அன்பு பூண்டார் அடியார் அடியார் –
நியாச வித்யைக நிஷ்டா நாம் வைஷ்ணவா நாம் மஹாத்மா நாம் ப்ராக்ருதாபி ஸ்துதிர் நிந்தா நிந்தாஸ்துதிரிதி ஸ்ம்ருதா –
பாகவத உத்தமர்களின் ஏற்றம் அறிந்து அவர்களைக் கொண்டாடக் கடமைப் பட்டவர்கள் –
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே -என்னும்படி இருக்கும் மஹா ஜ்ஞான நிதிகள் மஹா நீயர்கள் –
அவிவேகிகள் -லௌகிகர் பழிப்பதும் புகழ்வதும் -வாசி இல்லாமல் -மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -என்கிற கணக்கில் –
——————————————————-
அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-
பதவுரை:
அல்லிமலர்ப் பாவைக்கு — பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர் –காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர் — திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும் — வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால் — வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை — அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம் — மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை — அவர்களுடய நோக்கு
செடியார்– தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு– பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ–நெருப்புப் போன்றதாகும்.
பரம பாகவத உத்தமர்களின் வாய்ச் சொல்லுக்கு மேற்பட்ட வேதம் இல்லை –
அவர்கள் நடத்தைகளுக்கு மேற்பட்ட தர்ம சாஸ்திரம் இல்லை
அவர்களது கடாஷ வீஷணத்துக்கு மேற்பட்ட பாவனம் வேறு ஓன்று இல்லை -என்று
அருளிச் செய்து இந்த பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –
வேத சாஸ்த்ர ரதா ரூடா ஜ்ஞானகட்கதரா த்விஜா க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ச தர்ம பரமோ மத -பிரமாணம் கொண்டு
சொல்லும் அவிடு சுருதியாம் -அவிடு விநோத வார்த்தை
வாஸூ தேவம் ப்ரபன்நா நாம் யான்யேவ சரிதா நிவை தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த்யேவம் வேத விதோ விது-பிரமாணம் படி
நல்ல படியாம் மனு நூற்கு அவர் சரிதை
ந ஸூத்த்யாதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி லிலயைவ யதா பூப வைஷ்ணவாநாம் ஹி வீஷணை -பிரமாணம்
அடி ஒற்றி -அவர் பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ -என்று அருளிச் செய்கிறார் –
—————————————————-
ஆக இப்படி ஸ்ரீ சாஸ்திரங்கள் இதிஹாச புராணாதிகளில் சாரமாக விளங்கும் பிரமாண வசங்களை பாசுரம் ஆக்கிப் பணித்த
ஞான சாரம் பிரபந்தம் இவ்வளவோடு தலைக் கட்டி அருளுகிறார் –
———————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply