பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -11-6-மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்-

இன் கனி தனி அருந்த மாட்டாரே -பரத்வ சௌலப்ய திருக் கல்யாண குணங்களை அனுபவித்தார் –
உபதேசிக்கப் பார்த்தார் -தேவதாந்திர பஜனம் செய்வார்களாயே திரிகின்றார்களே சம்சாரிகள்
உபதேசிப்பதையும் அந்த உபதேசம் சடக்கென பலிக்காமல்
திரு உள்ளம் நொந்து பேசுவதாயுமாய்ச் செல்கிறது இத் திரு மொழி –

————————————–

மைந்நின்ற கருங்கடல் வாய் யுலகின்றி வானவரும் யாமும் எல்லாம்
மெய்ந்நின்ற சக்கரத்தன் திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்
எந்நன்றி செய்தாரா வேதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்
செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனையே யேத்தீர்களே–11-6-1-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதீர் -திருவிருத்தம்
க்ருத்ஜ்ஞராக இருக்க உபய விபூதி நாதனையே ஏத்தப் பாருமின்
ஓர்தல் -ஆராய்ந்து அறிதல்
ஓரீர் -முன்னிலைப் பன்மை எதிர்மறை வினைமுற்று-

—————————-

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீதோடி நிமிர்ந்த காலம்
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்தன்று
எல்லாரும் அறியாரோ வெம்பெருமான் உண்டு உமிழ்ந்த வெச்சில் தேவர்
அல்லாதார் தாம் உளரே யவன் அருளே யுலகாவது அறியீர் களே –11-6-2-

மகா பிரளயத்தில் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் ஏழு மால் வரை முற்றும்
மல்லாண்ட திண் தோளால் வாரிப்பிடித்து திரு வயற்றிலே புகப் பெய்து அருளின காலத்தில் எச்சில் ஆகாதார் யுண்டோ
மல்லாண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த-சர்வேஸ்வரன் பிரளயம் சென்று அடராத படி தன் திருக் கையாலே பரம பதத்தை
தன் கைக் கீழே இட்டுக் கொண்டு நின்ற காலம் -என்னவுமாம் –
அவன் அருளே உலகாவது -சரியான பாடம் -உலகாள்வது -பாட பேதம்

——————————————-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால்வாய்
ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே –11-6-3-

நெற்றி மேல்  கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும்
நீண்ட நால்வாய் ஒற்றைக் கை வெண் பகட்டில் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்-
ருத்ர பிரமன் -நீண்ட தொங்குகின்ற வாயையும் துதிக்கையும் யுடைய ஐராவதம் என்கிற வெள்ளை யானைப் பாகனான இந்த்ரனும்
வெற்றிப் போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட-
ஜெயசீலனான சமுத்திர ராஜன் பிரளயத்தில் விழுங்க ஒண்ணாத படி
கொற்றப் போராழியான் குணம் பரவாச் சிறு தொண்டர் கொடியவாறே – சூத்திர ஜனங்கள் கொடும் தன்மை இருக்கிறபடி என்னே
பகடு யானை –

—————————————

பனிப் பரவித் திரை ததும்பப் பார் எல்லாம் நெடும் கடலே  யானகாலம்
இனிக் களை கண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
முனித்தலைவன் முழங்கொளி  சேர்  திரு வயிற்றில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கனிக்கவளத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே –11-6-4-

சர்வ ஸ்வாமி என்கிற முறையாலே திரு வயிற்றிலே வைத்து உஜ்ஜீவிப்பித்தவனும்
இப்படி ரஷித்த படியால் உகந்து திரு மேனி புகர் பெற்று களங்கனி வண்ணனுமான எம்பெருமான் ஒருவனையே
திருவடி வணங்கப் பாருமின்
களை கண் -சரணம்
முனித்தலைவன் -லோக ரஷணம்  ஒன்றேயே  சிந்தை செய்து கொண்டு அருள்பவன்
முழங்கொலி சேர் திரு வயிறு -திரு வயிற்றினுள் புகும் போது யுண்டாகக் கூடிய ஆரவாரத்தின்  மிகுதியைச் சொல்லுகிறது-

கல்லீர்களே -கற்க மாட்டீர்களோ-

————————————————

பாராரும் காணாமே பரவை மா நெடும் கடலே யான காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உனர்விலீர் உணருதிரேல் உலகளந்த உம்பர் கோமான்
பேராளான் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே -11-6-5-

பிரளயத்தில் அனைவரையும் திரு வயிற்றிலே வைத்து நோக்கி அருளி
சர்வ ஸ்வாமித்வம் தோற்ற உலகையும் அளந்து கொண்ட உம்பர் கோமானுடைய பல்லாயிரம் திரு நாமங்களை
பேசிக் கொண்டே இருத்தலே உங்களுக்கு தக்கதாம்
பார் -எல்லா உலகங்களுக்கும் உப லஷணம்-

———————————————

பேயிருக்கு நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீதோடிப் பெருகு காலம்
தாயிருக்கும் வண்ணமே யும்மைத் தன் வயிற்றிருத்தி  உய்யக் கொண்டான்
போயிருக்க மற்று இங்கோர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாயிருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே —11-6-6-

பெற்ற தாய் போலே பரிந்து திரு வயிற்றிலே இருத்தி உஜ்ஜீவிப்பித்து அருளின பெருமான்
வெறுக்கும் படியாக வேறு ஒரு சூத்திர தேவதையை கொண்டாடுவது
அறிவற்ற மணை  கட்டையை வெந்நீர் ஆட்டுமா போலே
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -திரு வாசிரியம் -6-
மாட்டாத தகவு அற்றீரே -ஒருவருக்கும் எளிதில் கிட்ட முடியாத எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகாது ஒழிந்தீர்களே-

———————————————–

மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடியவனை உள்ளத்து
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே –11-6-7-

பிரளயத்தில் திரு வயிற்றினுள் அடக்கி ரஷித்து அருளியவனே அத் திருக்குணம் நன்கு விளங்க
திருக்கண்ண மங்கை திவ்ய தேசத்தில் நித்ய சந்நிதி பண்ணி அருளுகிறான்
அவனையே இடைவிடாது சிந்தித்து இருப்பதே நன்றி அறிவுக்குத் தகுதி
அப்படி சிந்திக்க மாட்டாத பாவிகளை நெஞ்சிலே இட்டு எண்ணாது இருந்தால் அதுவே நமக்கு பரம போக்கியம் –
எண்ணாத மானிடத்தை எண்ணாத  போதெல்லாம் இனியவாறே-என்கிறார்
மேலால் பிறப்பின்மை பெற்று அடிக்கீழ் குற்றேவல் அன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு -பெரிய திருவந்தாதி
திவி வா புவி வா மமாஸ்து வாஸோ நரகே வா நர காந்தக ப்ரகாமம் அவதீரித
சாராதார விந்தௌ சரனௌ தே மரணேபி சிந்தயானி -முகுந்த மாலை
எம்பெருமானையும் எம்பெருமான் அடியார்களை சிந்திப்பதைக் காட்டிலும் விமுகர்களை சிந்தியாது இருக்கையே பரம புருஷார்த்தம் –
மருவினிய தண்ணார்ந்த கடன்மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே –
பகவத் ஜ்ஞானமும் வேண்டா -வைஷ்ணவ சஹ வாசமும் வேண்டா–அவைஷ்ணவர்களை நினையாத போது -இனிது என்கை- –

———————————————————

மறம் கிளர்ந்து கரும் கடல் நீர்  உரந்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்
புறம் கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில் வாங்கி
அறம் கிளர்ந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக் கொண்ட
நிறம் கிளர்ந்த கருஞ்சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே –11-6-8-

திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளி அத்தாலே திரு மேனி புகர் படைத்த பரஞ்சோதி பெருமானை
நினைக்க மாட்டாத வர்களுக்கு மேலே நீசர்கள் இல்லை –

———————————————————

அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆவா வென்று
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தான் அருளி உலகம் ஏழும்
உண்டு ஒத்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை யுய்யக் கொண்ட
கொண்டற் கைம் மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே–11-6-9-

திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளி -பரம உதாரனன்-நீல மணி வண்ணன் நித்ய வாஸம் செய்து அருளும்
திருக் குடந்தை   நகரை பாடி ஆடுமின்
உண்டு ஒத்த திரு வயிறு -உண்ட பின்பும் முன்பு போன்ற திரு வயிறு யுடையவன்
முதல் திரு மொழியில் -சூழ்  புனல் குடந்தையே தொழுமின் -என்றார்
இங்கே தண் குடந்தை நகர் பாடி யாடீர்களே -என்கிறார்
தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே -திரு நெடும் தாண்டகம் -தலைக் கட்டி அருளுவார் –

———————————————————

தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-

இத் திருமொழியை கற்று வல்லார்கள்
புருஷகார பூதையான பெரிய பிராட்டியார் யுடைய திரு அருளுக்கு இலக்காகப் பெற்று
நித்ய விபூதியிலே நித்ய ஸ்ரீர் நித்ய மங்களமாக வாழப் பெறுவார்-

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading