ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96—–

சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில்  -என்கிறார் –
என் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞசிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

தொழில் இத்யாதி –
எனக்குத் தொழில் -பழையனாய் சர்வாதிகனான சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை ஏத்துகை-
அதுக்கே எனக்குக் காலம் போரும் இத்தனை
கழி சினத்த இத்யாதி –
எப்போதும் ஒக்க ஆகர்ஷகமாய் இருப்பது ஒரு விஷயம் உண்டோ என்னில்
மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த-
வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –

————————————————————————–

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன்  கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதி க தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறு வியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை -அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————————————————————————–

நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின
ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே -என்கிறார்

தம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)

இமை இத்யாதி –
ஹிமவான் ஆகிற பெரிய மலை போலே இந்தரனுக்கு என்று இட்டுச் சொரிந்த வத்சரம் தோறும்
வ்யவஸ்திதமான சோற்றைத் தான் அமுது செய்து அவனால் வந்த நலிவை எம்பெருமான் அன்றோ காத்தான் –
இடையர் தாங்களோ ப்ரஹ்மாதிகளோ தேவாதி சமயங்களைக் கண்டான்
அவற்றை ரஷிக்கைக்காக ப்ரஹ்மாவோடு கூடின ருத்ரனையும் லோகத்தோடே கூடின சகல ஆத்மாக்களையும் திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்தான்
சமயங்கள் கண்டான் –
வைதிக சமயங்களைக் கண்டான் -என்றுமாம் –
வர்ஷ ஆபத்தோடு பிரளய ஆபத்தோடு வாசி அற ரஷித்தவன் சர்வேஸ்வரனே இத்தனை போக்கி-இடையராதல் –
ப்ரஹ்மாதிகள் ரஷித்தார்களாக பிரசங்கம்   உண்டோ என்கை-
சமயங்கள் கண்டானவை காப்பான் என்று வைதிக சமயங்களைப் ப்ரவர்த்திப்பித்து ரஷித்தமை சொல்லுகையாலே-
சம்சாரத்தைப் பரிஹரிப்பானும் இவனை ஒழிய வேறு ஒருவர் உண்டோ என்று சொன்னபடி –

————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும்
பெருமானை ஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் –
ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் என்கிறார் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

உயிர்-இத்யாதி –
ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது-
ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே-
தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்
செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய்
ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை –
அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –

————————————————————————–

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும்  உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

————————————————————————–

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

வீற்று இருந்து இத்யாதி –
தங்கள் வேறுபாடு தோற்ற இருந்து ஸ்வர்காதி களை யனுபவிக்க வேண்டுவார் சர்வ ஸூ லபனான திருவேங்கடமுடையான்
திருவடிகளிலே புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயித்தாரே மேற்பட்டு நன்றாக வாழ்வார்
அன்றிக்கே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்த்லே மூர்த்த அபிஷிக்தர் ஆகையாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்து
பரம பதத்தில் கைங்கர்ய நித்ய நிரதரான நித்யஸூரிகளை ஸ்வா தீனமாக நிர்வஹிக்கை யாகிற இப் புருஷார்த்தத்தை பெற வேணும் என்று
மநோ ரதித்து யதா மநோ ரதம் பெற்றவர்கள் -என்றுமாம் –
வருமதி இத்யாதி
அறிவுடையராய் ச்நேஹிகளாய் எம்பெருமான் எண்ணத் தாழ்ந்து இருக்குமவர்களை ஆஸ்ரயித்தார்-
வருமதி இத்யாதி
எம்பெருமான் திரு உள்ளத்தில் கோலின அளவறிந்து அதுக்கீடான அடிமைகளில் ச்நேஹித்து
யேந யே ந தாத்தா கச்சதி தேந தே ந சஹ கச்சதி -என்கிறபடியே அவன் பக்கலிலே ப்ரவண ரானவர்களாலே விஷயீ க்ருதரானவர்கள் –
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம்   -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-

————————————————————————–

தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –
எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில்
உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான பெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று–அத்திருவடித் தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்

தமராவார் -இத்யாதி
ஆஸ்ரிதர் ஆனவர்கள் ப்ரஹ்மாவிற்கும் மற்றுள்ள தேவருக்கும் ஆடுகிற பாம்பைப் பூண்ட ருத்ரனுக்கும்-மற்றுள்ள எல்லாருக்கும் நிர்வாஹகர் ஆவர் –
தாள் தாமரை இத்யாதி
தாளையுடைய தாமரைப் பூக்களை திருவடிகளிலே இட்டு வணங்கி சர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் என்று
தாள் தாமரை அடைவோம் என்று தமராவார் தாமரை மேலாற்கும்  அமரர்க்கும் ஆடரவத்தாற்கும்-
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நிர்வாஹகரான தேவர்களாம் படி யான பெருமையை யுடையவர்கள் என்றுமாம்
அன்றிக்கே
மால் வண்ணன் -இத்யாதி
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே கறுத்த  நிறத்தை யுடையனான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளிலே
செவ்விப் பூக்களைப் பணி மாறித் தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து
அவன் திருவடிகளை அடைவோம் என்னுமவர்கள் என்றுமாம்
தாள் தாமரை அடைவோம் -என்று தமராவார் தாமரை மேலாற்கும் ஆடரவத்தாற்கும் அமரர்க்கும் இத் யந்வய

————————————————————————–

கர்ப்பாவஸ்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே
சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.

என்றும் மறந்து அறியேன் -இத்யாதி
ஒரு நாளும் மறந்து அறியேன் -என்னுடைய ஹிருதயத்திலே வைத்து நின்ற போதும் இருந்த போதும் சர்வேஸ்வரனை –
என்றும் இத்யாதி
என்றும் பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையவன் ஆகையாலே-ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை யுடையவனுக்கு அடிமையாய்
கர்ப்பத்திலே இருந்த நாள் தொடக்கமாக அவனுடைய ரஷை –
கருவிருந்த நாள் முதலாக் காப்பு -அவனாகையாலே என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதனுக்கு ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை என் நெஞ்சிலே வைத்தேன்
என்றும் ஒக்க நின்ற போதொடு இருந்த போதொடு வாசி இன்றிக்கே மறந்து அறியேன் -என்கிறார்-

————————————————————————–

சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார்  –

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள்செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்–திருக்குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

காப்பு -இத்யாதி –
கண்ணனே காப்பு மறந்து அறியேன் –
இவ்வாத்மாவுக்கு என்றும் உன்னுடைய ரஷையை மறந்து அறியேன் –
கிருஷ்ணனே ப்ராப்ய ப்ராபகன் என்று இருப்பேன் -என்றுமாம் –
ஆப்பங்கு ஒழியவும் –
சரீரம் அழிந்து போகவும்
பல்லுயிர் -இத்யாதி –
சகல ஆத்மாக்களுக்கும் உன்னை அறிகைக்கு ஈடான சரீரங்களைக் கொடுத்து ரஷித்த சர்வேஸ்வரனே-குணங்களால் மிக்கு உள்ளவனே –
இத்தேக ஸ்வ பாவத்தை அறிந்தார்கள் உன்னை விட அத்யவசியார்
இப்படி ரஷிக்கைக்கு உறுப்பான ஸ்வா பாவிகமான சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை உடையவன் -என்று-
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தார் உன்னை விடத் துணியார் -என்றுமாம் –

————————————————————————–

அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் –
என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே
வஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள்   விஷயீ கரிப்பர் -என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து–(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்–எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக்கூடியவர்களே)

மெய் இத்யாதி –
மெய்யாக அறிந்தவர்கள் என் செய்வார் –
பாரத சமரத்தில் அனுகூலர் அல்லாதார் துளியாய் போம்படி கையும் அணியும் வகுத்து எதிரிகள் மர்மங்களைக் காட்டி
யுத்த பூமியிலே கொன்று விழ விட்டுப் பின்னைப் படுக்கையிலே சாய்ந்தவனே –
பர ஹிம்சை என்று கலங்காதே ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதிகள் ஆகையாலே திரு உள்ளம் தெளிந்து
அணி வகுத்து-ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து கை ஒழிகையாலே-
ஸ்வ ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்களை யுடைய-திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் கரைச்சல் அற்றுக் கண் வளர்ந்து அருளுகிறவனே
அத்யந்த ஹேயனாய் அநந்ய கதியான   எனக்கு கிருபை பண்ணி அருள வேண்டும் –
அருளாய் அடியேற்கு –
அவர்கள் தக்க ஐவர் -நீர் ஹேயர் அன்றோ -என்னில்
ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்-கறியாக கொள்ள வேணும்  என்று அபிமானிக்க விரசமான வேம்பும் கறியானாப் போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ-யுத்த -18-36-இதிவத்
பை தெளிந்த என்கிற இடத்தில் தெளிவால் குளிர்த்தியை நினைக்கிறது  –

————————————————————————–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

ஏன்றேன் -இத்யாதி
அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
அமரர்க்கு அமராமை –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
ஆன்றேன் -இத்யாதி
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————————————————————————–

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே  முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

இனி -இத்யாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
இனி -இத்யாதி
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இனி இத்யாதி
இப்போது அறிந்தேன்
சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நன்கு அறிந்தேன் நான் -நான் அழகிதாக அறிந்தேன் –

ஏன்றேன் இத்யாதி –
இத்தால் –
1-ப்ராப்யமான  கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த  சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு  விரோதியான  அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை   நடுங்கித்
தம்  கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்
அருளிச் செய்தார் ஆய்த்து-

இனி அறிந்தேன் இத்யாதி –
மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும்
காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –
இனி யறிந்தேன் -இத்யாதி -யால்-

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading