கீழ்ப்பாட்டில் புகழ்ந்து பேசப்பட்ட ஆச்ரித பாரதந்திரிய குணத்தை (அல்லது, அவதார விக்ரஹ வைலக்ஷணயத்தை)
உலகளந்த சரிதை முகத்தால் அநுபவிக்கிறாரிதில்.
நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-
பதவுரை
அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரியகோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்
மாவிலியிடத்தில் உதகதாநம் பெறும்போது சிறிய இரண்டு திருவடிகளோடே நீ நின்றுகொண்டிருந்தாயே,
அத் திருவடிகளுள் ஒரு திருவடியானது விம்ம வளர்ந்து பூமிப் பரப்பு முழுவதையும் ஆக்கிரமித்து விட்டது.
மேலுலகங்களை ஆக்கிரமிப்பதற்காக இரண்டாவது திருவடியை உயரத்தூக்க நினைத்திருக்கையிலே
திசைகள் தோறும் விம்மவளர்ந்த திருத்தோள்களை மேலூலகப் பரப்பு முழுவதையும்
ஆக்ரமித்துவிட்டன என்று சமத்காரமாகச் சொல்லுகிறார்.
இப்படி மாவலியை வஞ்சித்து உலகமளந்தவிது ஆச்ரிதனான இந்திரனுக்காகச்செய்து செயலென்று
ஸாமாந்யமாகச் சிலர் நினைக்கக் கூடுமாயினும் அவ்விந்திரனொருவனுக்காக மாத்திரம் செய்த காரியமன்று இது,
“அப்பெருமானையே நாம் விச்வஸித்திருந்தால் நமக்காகவும் இப்படி தன்னை அழியமாறியும் காரியஞ் செய்தருள்வன்“ என்று
ஒவ்வொருவரும் நம்பியிருப்பதற்குடலாக எல்லார்க்குமாகச் செய்த காரியமேயாம் இது – என்கிறார் பின்னடிகளில்.
வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “உன்னைப் பேணாதே உன்னுடைய விபூதியை அவன் (மாவலி) தன்னதென்ன,
அவன் பக்கலிலே இரந்தாயாய் வஞ்சித்தாயாய்ச் செய்த்து இந்த்ரனொருத்தனுக்குச் செய்த்தேயோ?
‘ஆச்ரித் விஷயத்தில் தன்னை அழிய மாறி, வஞ்சிக்கும் – தூதுபோம் ஸாரதத்யம்பண்ணும் –
எல்லாம் செய்து ரக்ஷிக்கும்‘ என்று உன்னை ப்ரமாணித்தவர்கள்
மார்விலே கைவைத்துறங்கும்படி பண்ணினாயத்தனையன்றோ என்பதாம்.
————————————————————————-
இப்படி ஆச்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தங்களைப் போக்கி அபேக்ஷிதங்களையும் தந்தருள்வனென்று
அவனைப் பற்றினேனென்கிறார்.
பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-
பதவுரை
பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆச்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.
நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்கு இடையூறாயிருந்த ஏழ் விடைகளையுமு வென்றடர்ந்து
அவளை மணந்து கொண்ட பெருமான் அவ்விதமாகவே நம்மோடு சேர்வதற்கும்
பிரதிபந்தகமாயுள்ள பாவங்களைத் தொலைத்து நம்மையும் மணந்தருள்வனென்று கருதி அவன் திருவடிகளில் தலைசாய்த்தேன்.
அநாதிகாலம் அவிவேகியாய் இழந்தொழிந்த நான் இன்று இப்போது பெற்றேன் என்றாராயிற்று.
————————————————————————–
கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்ரயித்தேனென்று அருளிச் செய்தவர்
‘அவ் வெம்பெருமானே எல்லார்க்கும் ஆச்ரயணீயன்‘ என்று தெரிவிக்க வேண்டி அவனுடைய மேன்மையைத்
தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்துரைக்கிறாரிதில்.
ஏறு எழும் வென்று அடர்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-
பதவுரை
ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறிபட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
வீடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலைவாய் நிறைய–பருந்துக்கள் ஏறியிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக்கையாலே
கீறியெடுத்து அளித்த்–ஒண் குருதி
அழகிய ரத்தத்தாலே–கண்ட பொருள்
அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.
முன்னொரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது
பலரும் பார்த்து மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனத சிரயொன்றைக் கிள்ளியெடுத்துவிட,
அக்கபாலம் அப்படியெ சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!‘ என்று
கவலைப்பட தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலைய பிச்சையெடுக்கவேண்டும் என்றைக்கு கபாலம் நிறையுமோ,
அன்றைக்கே இது கையைவிட்டு அகலும், என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பல தலங்களிலுஞ் சென்று
பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறாமையால் நீங்காமற்போகவே,
பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது
அப்பெருமான் ‘அக்ஷயம்‘ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
சிவனுடைய நிறம் செந்தீநிறமாதலால் “எரியருவந்து“ எனப்பட்டது. விடுசாபம் – வினைத்தொகை,
“கபாலீ த்வம் பலிஷ்யஸி“ என்று பிரமானால் பிரயோகிக்கப்பட்ட சாபம் என்றாவது,
‘இந்த சாபத்தைத்தீர்க்க என்னாலாகாது, என்று ஒவ்வொருவராலும் கைவிடப்பட்ட சாபம் என்றாவது பொருள் கொள்க.
சாபம் – சாபத்திற்காக, சாபம் நீங்குவதற்காக என்றபடி
பாறு பிணந்தின்னிப்பறவை பாறேறியுண்டதலை – மாம்ஸ விருப்பத்தினால் முண்டத்தைப் பருந்து முதலிய பறவைகள்
உண்பது வழக்கமாதலால் அவ் வழக்கம் பற்றிய விசேஷணம் இது.
“தொடரெடுத்தமால்யானை“ என்றது போல.
ஒண்குருதி – அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திருமேனியில் நின்றுமுண்டான ரக்தமாகையாலே
‘ஒண் குருதி‘ என்று சிறப்பித்துக் கூறப்பட்ட தென்க.
சொல்லில் கதை – “பன்னியுரைக்குங்காற் பாரதமாம்.
————————————————————————–
இந்த லீலாவிபூதியில் இருந்து கொண்டு, உன்னுடைய குண சேஷ்டிதம் முதலியவற்றைப் பிரதிபாதிக்கின்ற
இதிஹாஸ புராண முகமாக உனது திருநாம ஸங்கீர்த்தனமாகிற பாக்கியம் எனக்கு வாய்ந்தாலும்,
நித்ய விபூதியில் வந்து சேர்ந்து “ஹாவு ஹாவு, அஹமந்த மஹமந்த அஹமந்நாதோ ஹமந்நாதோஹ மந்தாத“ என்று
வாய் விட்டுப் பேசியநுபவிக்கும் படியான பூர்ணாநுபவத்தை எனக்குத் தந்தருளவேணுமென்கிறார்.
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-
பதவுரை
கண்ணா–கண்ணபிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரு பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏலத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவையெல்லாம்) உன்னுடைய திருநாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பருமொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்
கதை என்ற ஸாமாந்யசப்தம் இங்கு பகவத்கதையான இதிஹாஸபுராணங்களென்று விசேஷப் பொருள் பெற்று நிற்கும்.
ஸ்ரீராமாயணம் ஸ்ரீமஹாபாரதம் முதலான இதிஹாஸங்களையும், வைஷ்ணவம், பாத்மம் முதலான
புராணங்களையும் மூலம்மாத்திரமே அநுஸந்தித்தாலும், அவற்றின் அர்த்தங்களை அநுஸந்தித்தாலும்,
அவற்றின் உட்கருத்தைக் கண்டறிந்து அநுஸந்தித்தாலும் எல்லாம் உன்னுடைய
திருநாமங்களேயாயிருக்கு மென்பதில் ஸந்தேஹமில்லை, ஏனென்றால்,
கதையின் திருமொழியாய் நின்றதிருமாலே! – அந்த இதிஹாஸ புராணங்களின் அக்ஷரங்களாக அமைந்துள்ளவன்
நீயே யாதலால் அவற்றைச் சொல்லுவதும் அவற்றின் அர்த்தங்களையும் தாத்பர்யங்களையும் அநுஸந்திப்பதும்
உன்னுடைய திருநாம ஸங்கீர்த்தநமாகக் குறையில்லை யென்றவாறு.
ஆனால் இவ்வளவிலே நான் திருப்திபெறக் கூடவில்லை, பரமபதத்திலே முக்தர்களும் நித்யர்களும் பெருமிடறுசெய்து
சொல்லுகிற சப்தராசிகளுண்டே ‘ஹாவுஹாவுஹாவு‘ முதலியன – அவற்றைக்கொண்டு
உன்னை நான் அநுபவிக்கும் படி அருள்புரியவேணுமென்கிறது ஈற்றடி
இதயம் – ‘ஹ்ருதயம்‘ என்ற வடசொல்விகாரம் “கதையும் திருமொழியாய் நின்ற“ என்ற சிலருடைய பாடமும் இருக்கலாம்,
கதையும் – சொல்லப்படுகிற என்கை, அவரவர்கள் சொல்லுகிற திவ்ய ஸூக்தி ஸ்வரூபமாக நிற்பவனே! என்றபடி.
————————————————————————–
இதுவரையில் தாம்பெற்ற லாபத்தை முன்னடிகளிற் பேசி,
இனிப் பெற விரும்பும் லாபத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்.
பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-
பதவுரை
திருமெனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி
ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.
திருமேனி பணிந்தேன் – உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவித்து அதிலே ஆழங்காற்பட்டு
வேரற்ற மரம் போலே விழுந்தேன் என்றபடி.
அன்பாய் உன் சேவடிமேல் கையால் பைங்கமலமணிந்தேன் – அடிமை செய்யாவிடில் தரிக்க மாட்டாத ப்ரேமத்தை
யுடையேனாய்க்கொண்டு உன்னுடைய திருவடிகளின்மேல் அழகிய தாமரைப்பூ முதலிய நன்மலர்களை,
கைபடைத்த ப்ரயோஜ்னம் பெறுமாறு ஸமர்ப்பிக்கப் பெற்றேன்.
இப்படிச் சொன்ன ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘இவ்விபூதியில் உமக்கு இவ்வளவு அநுபவம் வாய்த்ததாகில்
இனி ஒரு குறையுமில்லையே, இங்கேயே இருந்துகொண்டு இப்படியே போது போக்கலாமன்றோ என்றாருளிச்செய்ய
அதற்கு உத்தரமாகப் பின்னடிகளில் கூறுகின்றார் –
இவ்விபூதியில் கிடைக்கிற அநுபவம் நிலைத்திருக்கமாட்டாதே, ஆற்றங்கரைவாழ் மரம்போல் அஞ்சவேண்டிய விபூதியாயிற்றே இது,
ஆகையால், முடிவாகப்போய்ச் சேரவேண்டுமிடமான பரமபதிற் போய்ச்சேர்ந்து அங்கேயிருந்துகொண்டு
“பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே“ என்று சொல்லப்படுகிற மங்களாசாஸநத்தைச்
செய்துகொண்டு வாழும்வகையொன்றை உரியதென்று துணிந்திருக்கின்றேன் என்றாராயிற்று.
புகலிடம் – நாம்போய்ப் புகவேண்டுமிடம் என்று காரணத்தினாலாவது அவதாரஸமாப்தியான பின்பு
எம்பெருமான் போய்ப்புகுமிடம் என்ற காரணத்தினாலாவது பரமபதத்தைச் சொல்லுகிறது.
————————————————————————–
இந்த ஸம்ஸாரத்தின் கொடுமையைத் தம் திருவுள்ளத்திற்கு உரைக்க எடுத்தெடுத்துக் காட்டுகிறார்.
நன்னெஞ்சே! இப்பிறவியாவது இதுகண்டாய் – பிறப்பதும் இறப்பதுமாக நடந்து செல்லுகிற
இந்த ஸம்ஸாரத்தின் நிலைமையை நெஞ்சே! தெரிந்து கொண்டிருக்கிறாயா? என்கை.
இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-
பதவுரை
நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப்பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமேகாண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.
நாம் உற்றதெல்லாம் இதுகண்டாய் – இதுவரையில் நாம் ஸுகதுக்கங்களை மாறி மாறி அநுபவித்து
வருகிறோமே, அதற்குகாரணம் அந்த ஸம்ஸாரமேகிடாய் என்கை.
நாரணன் பேரோதி நரகத்தருகளையாக் காரணமும் இது கண்டாய் – நித்யவிபூதியில் ஒரு முலையிலிருந்துகொண்டு
ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டு நரக ப்ரணமான இந்நிலத்தின் அருகிலும்
அஞகாதிருக்கவேணுமென்று இவ்விருள் தருமா ஞாலத்தில் நாம். வெறுப்புக் கொண்டிருப்பதற்குக் காரணமும்
இந்த ஸம்ஸாரத்தின் தோஷங்களேயாம் – என்கை.
(இவ்விபூதியின் தோஷங்களைக் கொண்டு இதை நரசு மென்றே ஞானிகள் சொல்லுவர்கள்)
கல்லையேல் காண் – உலகத்தில் மறைபொருளாக இருக்குமவற்றை ஒருவர் எடுத்துக்காட்டவேணுமே யன்றி,
கண்ணெதிரே நன்கு புலப்படும் விஷயங்களை எடுத்துக்காட்டவேண்டுடிய அவசியமில்லை,
இந்த ஸம்ஸாரத்தில் தோஷம் மறைவானதல்ல, நீயே பிரத்யக்ஷமாகக் காணலாம்,
பாபத்தாலே கண் குருடானால் ஸம்ஸார தோக்ஷம் தெரியமாட்டாலும் அப்படியன்றயே,
நீ காணவில்லையேல் நீயே நன்கு கண்டுகொள் என்றவாறு.
இப்பாட்டின் கருத்தை மற்றும் பலவகையாகப் பன்னி யுரைக்கலாம்.
————————————————————————–
கீழ்ப் பாட்டில் ஆழவார் தம் திருவுள்ளத்திற்கு ஸம்ஸார தோஷங்களை எடுத்துரைக்கக் கண்ட எம்பெருமான்
“எம்மாவீட்டுத்திறமும் செப்பம்“ என்றும்,
“இச்சுவைதவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும் வேணடேன் அரங்கமாநகருளானே!“ என்றும்.
“என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்றும்
வைகுண்டவாஸேபி நமேபிலாஷ“ என்றும் ஞானிகள் பேசா நிற்க.
இவர் இந்நிலத்தை இப்படி இகழ்கிறாரே, நம்முடைய அநுபவம் இவர்க்கு இங்கு நன்கு வாய்த்ததாகில்
இவர் இந்நிலத்தை இகழ்ந்து பரமபதத்தை ஒரு பொருளாக விரும்பமாட்டார் – என்றெண்ணி,
தன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹ ஸேவையை விலக்ஷணமாகப் பண்ணிக் கொடுக்க
ஸேவித்து ஆநந்தம் பொலியப் பேசும் பாசுரம் இது.
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-
பதவுரை
யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக்கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர்மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறுகிளை கிளர்ந்து வரக்கூறிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.
ப்ரதயக்ஷ ஸமாநாகாரமான மாநஸ ஸாக்ஷாத்காரத்தைக் கனவு என்கிறது.
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழுமருக்கனணி நிறமுங்கண்டேன் –
செருக்கிளரும், பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன். என்னாழிவண்ணன் பாலின்று“ என்ற
பேயார் பாசுரத்தின் பொருளை முன்னிரண்ட்டிகளில் அடக்கிப் பேசின போலே –
உறுநோய் வினையிரண்டு மோட்டுவித்துப் பின்னும் மறுநோய் செறுவான் வலி கண்டேன் – இப்படி மாநஸ ஸாக்ஷாத்காரம்
பெற்ற மாத்திரத்திலே தம்முடைய இருவகைக் கருமங்களும் தொலைந்து ருசி வாஸநைகளும் அகன்றொழிந்தனவாகத்
தாம் இறுதியிட்டபடியை இதனால் வெளியிடுகிறார். முமுக்ஷுக்களுக்குப் பாபம்போலலே புண்யமும் பிரதிபந்தம் மாதலால்
‘வினையிரண்டு மோட்டுவித்து எனறார். பாவம் நரகத்திலே கொண்டுதள்ளும், புண்யம் சுவர்க்கத்திலே கொண்டு தள்ளும்‘
ஆகவே இருவினைகளும் ஒழிய வேண்டும். “ததா வித்வாந் புண்யபாபே விதூய நிரஞ்ஜந பரமம் ஜாம்யம் உனபதி“ என்று
சுருதியும் புண்யபாபங்கள் தொலைந்த பின்பே பரம ஸாம்யபத்தி விளைவதாகச் சொல்லிற்று.
அரிசியில் உமிகழிந்தாலும் தவிடானபாகம் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஆத்மாவில் புண்யபாபங்கள் கழிந்தாலும்
சில நாள் வரையில் அவற்றில் நடைதொடர்ந்து வருமாதலால் அதுவும் கழியவேண்டியது முக்கியம்,
அதனையுங் கழித்துத் தந்தமை சொல்லுகிறது ‘பின்னும் மறுநோய் செறுவான்‘ என்று.
செறுவான் என்பதை வினையாலனையும் பெயராகக் கொள்ளாமல் வான் விகுதிப்பெற்ற
வினையெச்சமாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும்,
வாஸநையையும் போக்குகைக்குத் தக்க வலிவு பெற்றேன் என்றவாறு.
————————————————————————–
பிரயோஜநாந்தரத்தை விரும்புமவர்களானாலும் தன்னை வந்து ஆஸ்ரயித்தால் அவர்களது விருப்பத்தைப்
படாதன பட்டும் தலைக்கட்டி யருளமவன் எம்பெருமான் என்கிறது இப்பாட்டு.
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-
பதவுரை
வலிமிக்க–மஹாபலசாலிகளாய்
வாள் எயிறு–வாள்போன்ற கோரப்பற்களை யுடையராய்
வாள்–வாட்படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள்வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மதயானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்
முன்னொருகாலத்தில், இவ்வண்ட கோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்திற், சென்று திருமகளைப் புகழ்ந்துபாடி
அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப் பெற்ற ஒரு வித்யாதரமகள், மகிழ்ச்சியோடு அம் மாலையைத் தன் கையில்
தரித்துக் கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில் “துர்வாஸமஹாகமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க,
அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள், அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட
அம்முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஜராவதாயானையின்மேற்
பவனி வந்துகொண்டிருந்த இந்திரனைக்கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைநீட்டிக் கொடுக்க,
அவன் அதனை மாவட்டியினால் வாங்கி அந்தயானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதயானை
அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துத் துவைத்தது,
அதுகண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி ‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய
ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்துவிடக் கடவன‘ நின்று சபிக்க, உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன.
ஒழியவே, அசுரர்வந்து பொருது அமர்ரை வென்றனர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் செனறு சரணமடைந்து
அப் பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி அசுரர்களையுந் துணைக்கொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி
வாஸுகியென்னும் மஹா நாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக் கடையலாயினர்.
அப்பொழுது மத்தாகிய மந்தரகிரிகடலினுள்ளே அழுந்திவிட தேவர்களின் வேண்டுகோளினால் திருமால்
பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளி யிருந்தனன்.
இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹாகூர்ம்மாய் மந்தர பரவதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க,
வாஸுகியின் வாலைப் பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய இருதிறந்தாரும்
அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால தான்
ஒரு திருமேனியைக் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் வேறொரு திருமேனியைத் தரித்து அசுரர்கள் பக்கத்திலேயும் நின்று
வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து வளமும் இடமுமாக இழுத்துக்கடைந்தனன் – என்பது கடல்கடைந்த வரலாறு.
(அப்பால் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தத்வந்தரி யென்னும் தேவரூபத்தைத் தரித்து அம்ருத பூர்ணமான கமண்டலத்தைக்
கையிலெடுத்துக் கொண்டு அந்த க்ஷீரஸமுத்ரத்திலிருந்து தோன்றினன்.
அப்பொழுது அசுரர்கள் தந்வந்தரியின் கையிலிருந்த அம்ருத“ கலசத்தை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ள
அந்த எம்பெருமான் ஜகத் மோஹநமான ஒரு பெண்வடிவத்தைத் தரித்து அசுரர்களை மயக்கி வஞ்சித்து
அமுதத்தை கைக்கொண்டு அமரர்களுடைய கோஷ்டிக்கு மாத்திரம் ப்ரஸாதித்தனன் என்பது அறியத்தக்கது.
கோணாகங் சொம்பொசித்த வரலாறு – கம்ஸன் தன்னைக் கொலைப்பிறந்த தேவகீ புத்திரன் யசோதையினிடம்
ஒளிந்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரதமுனிவர் சொல்லக்கேட்டு அதிக கோபங்கொண்டு
எவ்வகையினாலாவது கண்ணனை கொல்ல நிச்சயித்து, லில்விழாவெண்கிற வியாஜம் வைத்துக்
கண்ணப்பிரானையும் பலராமனையும் அழைத்துவரும்படி அக்ரூரனை நியமிக்க, அக்ரூரனுடய பிரார்த்தனைக்கிணங்கக்
கண்ணபிரான் நம்பி மூத்தபிரானுடைன் புறப்பட்டு கம்ஸனைரண்மனையை நோக்கி செல்லுகையில்,
அவ்வரண்மனை வாயில் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதபானை சீறிவா.
அவ்யாதவவீரர்அதனை யெதிர்த்து அகன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல
எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப் பாகனையுமு உயிர
தொலைத்து விட்டு உள்ளே புகுந்தனர் – என்பதாம்.
நாகம் – வடசொல்.
————————————————————————–
கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-
பதவுரை
கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூமண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப்பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பலபல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்
ஸ்வர்க்க லோகத்திலுள்ள தேவர்கள் எம்பெருமானைப்பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்றமை சொன்னார் கீழ்ப்பாட்டில்,
அவர்கள் மாத்திரமேயன்று பூலோகத்திலுள்ள அரசர்களும் எம்பெருமானை ஆராதித்தே மேன்மை
பெற்றுப் பொலிகின்றன ரென்கிறா ரிப்பாட்டில்.
சக்ரவர்த்திகளென்று பட்டப் பெயர்பெற்று இந்நிலம் முழுவதையும் அரசாண்டுகொண்டு குதிரையேறிப் பவனி வருகின்ற
பிரபுக்களும் தாமே பிரபுக்களாய் விடவில்லை. பத்மநாபனான எம்பெருமானுடைய திருவடிகளில் பல பிறவிகளில்
தொண்டு செய்து அப்பெருமானுடைய அநுக்ரஹத்தினால் பிரபுக்களாயின் என்றாராயிற்று.
“பூமேவுஞ் செங்கபலதாபியான்“ என்றதை உள்ளபடியே அந்வயித்து போகயதை, மேவும் – பொருந்தி யிருக்கப் பெற்ற
செங்கமலம் – செந்தாமரைப்பூவை, நாபியான் – திருநாபியிலுடையவன் என்றுரைக்கவுமாம்.
ஈற்றடியில் ‘ஏய்ந்தார்தமர்“ என்றதற்கு ‘ஏய்ந்தாருடைய பக்தர்களாய்க் கொண்டு‘ என்று பொருள்கூறி
பகவத் பக்தர்களுக்குத் தொண்டுசெய்தே பிரபுக்களாயினர் என்று உரைத்தலுமாம்.
————————————————————————–
எம்பெருமான் திருவுற்ற முவந்து எழுந்தருளியிருக்குமிடங்களிற் சிலவற்றை யெடுத்துக் கூறுகின்றாரிதில்.
தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-
பதவுரை
தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு இருப்பிட மென்பர்.
அன்பருடைய நெஞ்சகம். தஞ்சைமாமணிக்கோயில், திருப்பதிகளெல்லாவற்றினும் தலையான திருவரங்கம்,
திருத்தண்கால், திருமலை, திருப்பாற்கடல், திருக்கடன்மல்லை, திருக்கோவலூர், திருக்குடந்தை –
என்னு மிவ்விடங்களை இங்கெடுத்தது மற்றுமுள்ள திருப்பதிகட்கும் உபலக்ஷணமென்க
அன்பருடைய நெஞ்சகமே மிகவும் ஆதரணீயமா யிருத்தலால் ‘தமருள்ளம்‘ என்று முற்படக் கூறப்பட்டது.
ஏவல்ல – ஏ-அம்பு, பாகவத விரோதிகளின் மீது அம்புகளைச் செலுத்த வல்ல ஸ்வாமி என்கை.
————————————————————————–
உலகளந்தருளின காலத்தில் திருவாழி திருச்சங்குகளோடு நித்யஸூரிகளுக்கு நேர்ந்த ஸம்ப்ரமத்தைப் பேசுகிறாரிதில்.
இடங்கை வலம்புரி நின்றார்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்குவித்த தாழி-விடம்காலும்
தீவாய் அரவணை மேல் தோன்றல் திசை யளப்பான்
பூவாரடி நிமிர்த்த போது–71-
பதவுரை
விடம் காலும்–விஷத்தைக் கக்குகின்ற
தீ வாய்–பயங்கரமான வாயையுடைய
அரவு–திருவனத்தாழ்வானாகிய
அணை மேல்–சயனத்தின் மீது (பள்ளி கொண்டிருக்கின்ற)
தோன்றல்–ஸர்வேச்வரன்
வலம்புரி–சங்கானது
இடங்கை–இடத் திருக்கையில்
நின்று–இருந்து கொண்டு
ஆர்ப்ப–முழங்க
ஆழி–திருவாழியானது
திசை–எல்லாவிடங்களையும்
அளப்பான்–அளந்து கொள்வதற்காக
பூ ஆர் அடி–பூப்போன்ற திருவடியை
நிமிர்த்த போது–உயரத்தூக்கியருளின காலத்து
எரி கான்று–நெருப்பை உமிழா நின்று கொண்டு
அடங்கார்–எதிரிகளாய் நின்ற நமுசி முதலானவர்களை
ஒடுங்குவித்து–வாய் மாளப் பண்ணிற்று
எம்பெருமான் மாண்குறள் படியே கொடுப்பதாக இசைந்து தாரை வார்க்கத் தொடங்கும்போது அஸுரகுருவான சுக்கிரன் தடைச் செய்யவும்,
பிறகு முவடிமண்ணை எம்பெருமான் அளந்து கொள்ளத் தொடங்கும்போது
“என்னிதுமாயம்! என்னப்பனறிந்திலன், முன்னைய வண்ணமே கொண்டளவாய்“ என்று நமுசி வந்து தடை செய்யவும் நேர்ந்து,
இவ்விரோதிகளெல்லாம் தொலைந்து எம்பெருமான் வெற்றிபெற்று உலகங்களை அளக்கப்பெற்ற ஸ்ந்தோஷ மிகுதியினால்
திருச்சங்காழ்வான் இடத்திருக்கையிலிருந்துகொண்டு பகைவர் அஞ்சி நடுங்கும்படி பெருமுழக்கஞ் செய்தான்.
திருவாழியாழ்வான் வலத்திருக்கையிலிருந்துகொண்டு சத்துருக்கள் மண்ணுண்ணும்படி பெருஞ்சுடர் விட்டு ஜ்வலித்தான்.
மெத்தென்ற பஞ்சசயனம்போன்ற சேஷசயனத்தின் மீது இனிதாகத் திருக்கண் வளர்ந்தருள வேண்டிய பெருமான்
ஆச்ரிதார்த்தமாகக் காடு மோடையுமளக்க நேர்ந்ததே! என்னும் வயிற்றெரிச்சல் ஆழ்வார்க்கு உள்ளமை பின்னடிகளிற் போதரும்.
விடங்காலுந்தீவாயரவு – அறிவில் தலைகின்ற நித்யஸூரிகளுக்கும் எம்பெருமானிடத்துப் பரிவு மிகுதியினால்
அஸ்தாநத்தில் பயசங்கை உண்டாவதுண்டு, நித்யர்களும் முக்தர்களும் திரண்டு ‘ஹாவு ஹாவு ஹாவு‘ என்று
ஸாமகோஷம் செய்யாநின்றாலும் அதனை ஸாமகோஷமென்று தெவித்து கொள்ளாமல்
‘அஸுர ராக்ஷஸர்கள் இவ்விபூதியிலும் வந்து ஆரவாரஞ் செய்கின்றனர்‘ என்று பிரமித்துத் திருவனந்தாழ்வான்
விஷத்தைக் கக்குகின்றன்னென்கை. “ஆங்கு ஆரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்றார் திருமழிசைப் பிரானும்.
————————————————————————–
போதறிந்து வானரங்கள் பூஞ்சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது உள்ளம் -போது
மணி வேங்கடவன் மலரடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேராய்ந்து-72-
பதவுரை
வானரங்கள்–குரங்குகளானவை
போது அறிந்து–விடியற்கால முணர்ந்து (எழுந்து போய்)
பூ சுனை புக்கு–புஷ்பித்த நீர் நிலைகளிலே புகுந்து (நீராடி)
ஏத்தும்–தோத்திரஞ் செய்யா நின்றன
உள்ளம்–மனமே!
போது–(நீயும் அப்படி செய்ய) வா
அணி வேங்கடவன்–அழகிய திருமலையிலுள்ள பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஆங்கு அலர்ந்த–அப்போதே மலர்ந்த
போது–புஷ்பங்களை
அரிந்து கொண்டு–பறித்துக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து
ஆய்ந்து–அநுஸந்தித்துக் கொண்டு
வேங்கடன் மலர் அடிக்கே செல்ல–அத்திருவேங்கட முடையானுடைய திருவடி தாமரைகட்கே சென்று சேரும்படியாக
போதும்–புஷ்பங்களையும்
அணி–ஸமர்ப்பிக்கக் கடவர்
திருமலையில் திர்ய ஐந்துக்களான வானரங்களும் எம்பெருமானுக்குப் பணிவிடை செய்யும்படியை எடுத்துக்காட்டி
நெஞ்சே! நீயும் அப்படி செய்ய வேணுமென்கிறார் பஞ்ச பஞ்ச உஷகாலத்திலே ரிஷிகள் நீயும் துயில்
எழுமாப் போலே குரங்குகளும் எழுந்து பூத்த கனைகளிலேசென்று ஸ்நாநம் பண்ணி அங்குள்ள
செவ்விப் பூக்களைப் பறித்துக் கொண்டு போய் ஜாதிக்கு ஏற்றவாறு ஏதேனுமொன்றைச் சொல்லித் துதிசெய்து
பணியா நிற்கும் நெஞ்சே! நீயும் அப்படி செய்யப்புறப்படு திருவேங்கட முடையானுடைய சீலம் முதலிய குணங்களும்
வாசகமான திருநாமங்களை அநுஸந்தித்துக் கொண்டு நன்மலர்களை நாம் கொணர்ந்து அவனது திருவடித் தாமரைகளிர் சாத்துவாயாக.
இப்பாட்டில் போது என்ற சொல் நான்கிடத்தில் வந்துள்ளதும் முதுலிலுள்ளதற்குக் காலமென்று பொருள்,
இரண்டாவதாகவும் நான்கால் முள்ளதற்கு புஷ்பமென்று பொருள்,
மூன்றாவது வினைமுற்றாய் புறப்படு என்னும் பொருளது.
மூன்றாமடியின் முதற்சீர் மோனை யின் பத்திரகிணங்க ‘மணி‘ என்றிருக்க தகுமாதலால்
“மணி வேங்கடவன்“ என்றல் சிறக்கும் நான்காம்படியின் முதலினும் அணி என்பதை வினைமுற்றாகக் கொள்ளலாம்.
————————————————————————–
எம்பெருமான் ஸ்ரீகஜேந்திராழ்வான் திறத்தில் வெளியிட்டருளின அநுக்ரஹத்தை நோக்கின பின்பு,
நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட பகவதநுகரஹத்திற்கு நாமும்
பாத்திரமாகலாமன்றோ என்று கொண்டு எப்பொதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும்
அவனுடைய ஸஹஸ்ர பேரைச் சொல்லிக் அதுநுஸந்திப்பது மாயன்றே என்று
தம்முடைய போது போக்கைச் சொல்லிக் கொண்டாராயிற்று.
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் -ஏய்ந்த
பிறை கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் –73-
பதவுரை
பிறை ஏய்ந்த கோடு–சந்திரகலை போன்ற தந்தத்தையும்
செம் கண்–சிவந்த கண்களையுமுடைய
கரி–கஜேந்திராழ்வானை
விடுத்த–முதலை வாயில் நினறு விடுவித்தருளின
பெம்மான்–ஸர்வேச்வரனான
இறைக்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஆள்பட–அடிமை செய்ய
துணிந்த யான்–உறுதிகொண்ட யான்
ஆதி நடு அந்திவாய் கைகலும்–காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்கள் எல்லா காலங்களிலும்
வாய்ந்த மலர்–கிடைத்த புஷ்பங்களை
ஆயிரம் பேர்–ஸஹஸ்ர பேரைகளை
உய்ந்து உரைப்பான்–ஆராய்ந்து
“ஆதி நடு அந்திவாய்“ என்று மூன்று காலங்களை யெடுத்துரைத்தது எல்லாக் காலங்களிலு மென்றபடி.
ஆயந்து உரைத்தலாவது – அர்த்தாநுஸந்தாநத்துடன் சொல்லுகை, “வாய்ந்தமலர் தூவி“ என்றதனால் –
எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க வேணுமாகில் இன்ன புஷ்பந்தான் ஸமர்ப்பிக்கவேணு மென்று
சிரமப்பட்டுத் தேடவேண்டிய நிர்ப்பந்தமில்லை, எந்தப்புஷ்பம் கையில் கிடைக்கிறதோ அதுவே போதுமானது
இது எம்பெருமானுக்கு என்றும் பிரதிபத்தி யொன்றே வேண்டுவது என்பது வெளியாம்.
ஏய்ந்த பிறைக்கோடு – யானையின் தந்தத்திற்குப் பிறையை உவமை கூறுதல்
“கானக்களியானை தன் கொம்பிழந்து நிற்குங் கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்ற
பெரியாழ்வாரது வரணனையிலுங் காணத்தக்கது.
செங்கண்கரி – யானையின் கண்ணுக்குச் செம்மைநிறம் இயற்கையன்று, முதலையின் மீது கோபத்தினால் வந்தேறியானதென்க.
“கரிவிடுத்த பெம்மான்“ என்றவிதனை கஜேந்திரமோக்ஷபரமாக உரைத்தலின்றியே கம்ஸனுடைய யானை யான
குவலயாபீடத்தின் நிரஸநத்தைக் கூறுவதாக உரைத்தலுமொக்கும், கரிகுவலயாபீட யானையை, விடுத்த – தொலைத்த.
————————————————————————–
விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடுவே தாம் அப்படியிராமல்
எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமை நினைக்குங்கால்,
இவ்விருள்தருமா ஞாலத்திலும் நமக்கு இப்படிப்பட்ட நற்காலக்ஷேபம் வாய்த்ததே! என்கிற ஸந்தோஷ மிகுதியினால்
‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதிரே‘ என்றாற்போன்ற வாசகங்கள்
பரவசமாகவே வெளிவருவதுண்டு, இவ்வநுஸந்தாநம் ஹேயமான அஹங்காரத்தின் பாற்படாது,
உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்கா நிற்கும்.
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-
பதவுரை
எம்பெருமான்–ஸர்வ ஸ்வாமிந்!
ஏழ் பிறப்பும்–எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும்–எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன்–தவம் புரிந்தவன்
யானே–நானே
தவம் உடையேன் யானே–அந்தத் தபஸ்ஸின் பலனைப் பெற்றவனும் யானே
இரும் தமிழ் நல்மாலை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய நல்ல சொல்மாலைகளை
இணை அடிக்கே–(உனது) உபய பாதங்களிலே
சொன்னேன்–விஜ்ஞாபித்தவனாய்
பெரும் தமிழன்–பெரிய தமிழ்க் கலையில் வல்லவனாய்
பெரிது–மிகவும்
நல்லேன்–உனக்கு நல்லவனாயிருப்பவன்
யானே–அடியேனே
காயிலே தின்றும் கானிலுறைந்தும் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிகின்ற சிலர், தங்களையே மஹா தபஸ்விகளாக
நினைத்துக் கொள்ளுகின்றனர். உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிந்தித்தும் இப்படிப்பட்ட
இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அநுபவிக்கின்ற தானே தவஞ்செய்தவனாவேன்,
தவத்தின் பலனைப் பெற்றவனும் நானேயாவேன் – என்கிறார்.
முதலடியில் “யானை தவஞ்செய்தேன்“ என்றார்! தாம் முயற்சிகொண்டு ஒரு தபஸ்ஸு பண்ணினதாகத்
தமக்குத் தெரியாமையாலும் தபஸ்ஸின் பலன்மாத்திரம் தம்மிடத்திலுண்டாயிருக்கக் காண்கையாலும்
‘யானே தவமுடையேன்‘ என்றார். இங்ஙனே தாம் சொல்லிக்கொள்வதற்குக் காரணம் இன்னதென்பதை விளக்குவன பின்னடிகள்.
என்னுடைய வாக்கு பகவத்விஷயத்தில் உபயோகப்படப் பெற்றதனால் நானே தவஞ்செய்தேன், நானே தவமுடையென் என்கை.
மற்றுள்ள ஆழ்வார்களும் இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்ன பெருந்தமிழர்களாயிருந்தாலும்
தம்முடைய அடங்காப் பெருமகிழ்ச்சியினால்
“யானே இருந்தமிழ்நனமாலை யிணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது“ என்று
சொல்லிக் கொள்ளக் குறையில்லையென்க.
————————————————————————–
கீழ்ப்பாட்டில் ‘பெருந்தமிழன் நல்லேன் பெரிது‘ என்று போரப் பொலியச் சொல்லிக் கொண்ட ஆழ்வாரை நோக்கி
எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கறி ஒருகவி சொல்லும், பார்ப்போம்‘ என்ன,
அப்போ தருளிச்செய்த கவியாம் இது.
பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-
பதவுரை
பெருகும்–பெருகுகின்ற
மதம்–மத நீரை யுடைத்தான
வேழம்–யானையானது
மா பிடிக்கு முன் நின்று–(தனது) சிறந்த பேடையின் முன்னே நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி–இரண்டு கணுக்களை யுடைத்தாய் இளையதான மூங்கில் குருத்தைப்பிடுங்கி
அருகு இருந்த தேன் கலந்து–(அந்த மூங்கிற் குருத்தை) ஸமீபத்திலுள்ள தேனிலே தோய்த்து
நீட்டும்–(பேடைக்குக்) கொடுப்பதாகக் கையை நீட்டப் பெற்ற
திருவேங்கடம் கண்டீர்–திருமலையன்றோ
வான் கலந்த வண்ணன் வரை–மேகத்தோடொத்த நிறத்தனான பெருமானுடைய (வாஸஸ்தான மான) பர்வதம்.
வடதிருவேங்கடமாமலையை வருணிக்கிறார். மதம்பிடித்து மனம் போனபடி திரிந்துகொண்டிருந்த
ஒரு யானையானது தன்பேடையைக் கண்டது, அதனைமீறி அப்பாற்செல்லமாட்டாமல்
அதற்கு இனிய உணவுகொடுத்து அதனை த்ருப்தி செய்விக்க விரும்பி மூங்கில்குருத்தைப் பிடுங்கித்
தேனிலே தோய்த்து அப்பேடையின் வாயிலே பிழிகின்றதாம்,
இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது நீலமேகநிறத்தனான எம்பெருமான் உவந்து எழுந்தருளி
யிருக்குமிடம் என்றாராயிற்று. எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படியைக் கூறுதல் இதற்கு உள்ளுறை பொருள்.
பெரிய திருமொழியில் “வரைசெய்யாகளி றிளவெதில் வளர்முறை யளைமிகு தேன்தோய்த்தும்,
பிரசவசயீதன் இளம்பிடிக்கருள்செயும் பிரதிசென்றடைநெஞசே என்ற (1-2-5) என்ற பாசுரமும் இப்பொருள் கொண்டதே.
————————————————————————–
எம்பெருமானைத் திருவடிதொழுவதற்காக அவன் ஸந்நிதிக்கு நாம் பிடைகொள்ளும்போது
அரசனையும் கடவுளையும் ஆசார்யனையும் வெறுங்கையனாக அணுகலாகாது என்ற விதியை அடியொற்றியும்
நமது காதலுக்கு இணங்கவும் அப்பெருமானுக்கு உரிய பொருள்களைக் கையிற்கொண்டு செல்லவேணுமென்கிறார்.
வரைச் சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் -நிறைத்துக் கொண்டு
ஆதிக்கண் நின்ற வறிவன் அடி இணையே
ஓதிப் பணிவது உறும் —76-
பதவுரை
வரை சந்தனம் குழம்பும்–(மலய) பர்வதத்தினின்று முண்டான சந்தனத்தின் குழம்பையும்
வான் கலனும்–சிறந்த ஆபரணங்களையும்
பட்டும்–பட்டுப் பீதாம்பரங்களையும்
விரை பொலிந்த–பரிமளம் விஞ்சி யிருக்கப் பெற்ற
வெண் மல்லிகையும்–வெளுத்த மல்லிகை மலர்களையும்
நிறைத்துக் கொண்டு–சேரித்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன்–ஸகல ஜகத் காரண பூதனாய் ஸர்வஜ்ஞனான பெருமானுடைய
அடி இணையே–உபய பாதங்களையே
ஓதி–வாயாரத் துதித்து
பணிவது–தலையார வணங்குவது
உறும்–ஸ்வரூபத்துக்குச் சேரும்.
சிறந்த சந்தனம், திவ்யமான ஆபரணம், உயர்ந்த பீதாம்பரம், நறுமணமிக்க நன்மல்லிகைமலர் ஆகிய
இவற்றைக் கையிற்கொண்டு சென்று எம்பெருமானது திருவடிகளைத்துதித்து வணங்குதல் நன்று.
இப்பாசுரத்திற்கு ஓரடைவிலே அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக ஏற்பட்டு உபந்யஸித்த ஒரு பொருளும் குறிக்கொள்ளத்தக்கதே,
அதாவது –வரைச்சந்தனக்குழம்பு முதலியவற்றை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கும்பொருட்டு கையிற்கொண்டு ஸந்திக்குச்
செல்லவேணுமென்பதே இப்பாசுரத்தின் பொருளாயினும் வேறுவகையான பொருளும் தொனிக்கின்றது.
அன்பர்கள் பகவத் ஸந்நிதியிலே அருளிச் செயல் ஸேவிக்கப் போகும்போது அழுக்குடம்போடும் கந்தைத்துணியோடும்
சிக்கு நாற்றத்தலையோடும் போகுகையின்றியே,
“மெய்யிட நல்லதோர் சாந்தமும்“ என்கிறபடியே அழகாக உடம்பிற் சந்தனம் பூசிக்கொண்டும்,
“கழுத்துக்குப்பூணொடு காதுக்குக் குண்டலமும்“ என்கிறபடியே திவ்ய வஸ்த்ர முடுத்துக்கொண்டும்,
“தொடுத்த நுழாய்மலர் குடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்“ என்கிறபடியே நல்ல புஷ்பங்களைச் சூடிக்கொண்டும்
சென்று ஓதிப்பணிவது உறும் –அருளிச்செயல் ஓதுவது நன்று –என்றாம்.
பண்டைகாலத்தில் பட்டர் இயல் கோஷ்டிக்கு எழுந்தருளும்போது இவ்வகை அலங்காரங்களுடனெ எழுந்தருள்வரென்பது ப்ரஸித்தம்.
————————————————————————–
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் -உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்தவன் பேர் ஈர் ஐஞஜூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம்-77-
பதவுரை
நல் நெஞ்சே–நல்ல மனமே!
உத்தமன்–புருஷோத்தமனுடைய
நல் பாதம்–சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய்–நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால்–அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)
உறும் கண்டாய்–நமக்கு உரியது காண்
சாத்தி–(அத் தாமரை மலர்களை) ஸமர்ப்பித்து
ஏத்தி–துதித்து
பணிந்து–நமஸ்கரித்து
அவன் பேர் ஈர் ஐந்நூறு–அவனது ஸஹஸ்ர நாமங்களையும்
எப்பொழுதும்–அநவரதமும் ஸங்கீர்த்தனம் பண்ணுகையாகிற
தவம்–தபஸ்ஸானது
உறும் கண்டாய்–உரியது காண்.
நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே நடக்கும் நன்னெஞ்சமே! உனக்கு ஹிதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய்,
யோக்யர் அயோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகையாகிற சிறந்த குணம் வாய்ந்த
புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள், அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர்
முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூபப்ராப்தம் என்று கொள்,
அவனையே வாயாரத் துதித்துத் தலையார வணங்கிப் பேராயிரமும் ஓதுவதே நமக்குத் தவம் என்று கொள் – என்றாராயிற்று.
————————————————————————-
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி
நிவர்ந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் -சிவந்த தன்
கை யனைத்தும் ஆரக் கழுவினான் கங்கை நீர்
பெய்தனைத்துப பேர் மொழிந்து பின்-78-
பதவுரை
தரணி–பூமியை
அளப்ப நிவர்ந்து–தாவி யளப்பதாகத் தொடங்கின த்ரிவிக்ரமாவதார காலத்தலே
நீட்டிய–பரப்பின
பொன் பாதம்–அழகிய திருவடியை
கங்கை நீர் பெய்து–கங்க தீர்த்தமாகப் பெருகின கமண்டல தீர்த்தத்தைப் பணி மாறி
அனைத்து பேர் மொழிந்து–(பரமனுடைய) எல்லாத் திருநாமங்களையும் வாயாரச் சொல்லி
பின்–பிறகு
தன் சிவந்த கை அனைத்தும் ஆர–தனது அழகிய கைகளெல்லாம் ஸபலமாகும்படி
கழுவினான்–திருவடி விளக்கியவனான
நான் முகனே–பிரமனொருவனெ
தவம் செய்து பெற்றான்–தவப் பயன் பெற்றவனாயினான்.
எம்பெருமான் உலகளந்தருளின காலத்தல் ஸ்ரீபாத தீர்த்தங்கொண்ட நான்முகனொருவனே பெருந்தவத்தோனென்கிறார்.
“குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து, மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்திக் –
கறைகொண்ட, கண்டத்தான் செனனிமேலேறக் கழுவினான், அண்டத்தான் சேவடியையாங்கு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரங்காண்க.
கங்கை நீர்பெய்து –நான்முகன் தனது கமண்டலதர்த்தைத்தைக் கொண்டு திருமாலின் திருவடியை விளக்கினதாக
ப்ரமாணங்கள் சொல்லாநிற்க. இவர் ‘கங்கை நீர் பெய்து‘ என்கிறாரே, இது பொருந்துமோ? என்னவேண்டா,
பிரமன் திருவடி விளக்கின கமண்டலத்தீர்த்தமே அடுத்த க்ஷணத்தில் கங்காதீர்த்தமாக ப்ரவஹிக்கப் பெற்றதனால்
அதனையுட்கொண்டே “கங்கைநீர் பெய்து“ என்றருளிச் செய்யப்பட்டுள்ளது – என்றுணர்க.
ஆகவே இங்குக் கங்கைநீர் என்றது – கங்கைநீர் ஆவத்ற்கு உறுப்பான கமண்டல தீர்த்தத்தைச் சொன்னபடி தரணி – வடசொல்.
————————————————————————–
பின்னின்று தாய் இரப்பக் கேளான் பெரும் பணைத் தோள்
முன்னின்று தான் இரப்பாள் மொய்ம்மலராள் -சொல் நின்ற
தோள் நலந்தான் நேரில்லாத் தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அனைத்துக்கும் நேர்-79-
பதவுரை
தாய்–மாதாவான கௌஸல்யை
பின் நின்று–பின் தொடர்ந்து
இரப்ப–(என்னை விட்டு நீ காட்டுக்குப் போகலாகாது) என்று பிரார்த்திக்கவும்
கேளான்–அதனை ஏற்றுக் கொள்ளளாதவனாயும்
பெரு பணை தோள்–சிறந்த முங்கில் போன் திருத் தோள்களை யுடையளாய்
சொல் நின்ற-தந்தையின் நியமனமாகிய சொல் ஒன்றிலேயே தீவ்ரமாக நின்ற
தோள் நலத்தான்–புஜ பலத்தை யுடையனும்
நேர் இல்லா தோன்றல்–ஒப்பற்ற ஸ்வாமியுமான இராமபிரானுடைய
மொய் மலராள் தான்–அழகிய தாமரைப்பூவில் பிறந்தவளான பிராட்டியின் அம்சமான ஸீதையானவள்
முன் நின்று–முன்னை நின்று
இரப்பாள்–(இந்த ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டு காட்டுக்குப் போவது வேண்டா என்று) பிரார்த்தித்த வளவிலும்
அத்தனைக்கும்–(காட்டின் கொடுமையைப் பாராமல் தைரியமாகக் காட்டுக்கு எழுந்தருளின்) அப்படிப்பட்ட செயலுக்கு
அவன் அளந்த நீள் நீலம் தான் நேர்–அப்பெருமான் மிகப்பெரிய இவ்வுலகத்தை அளந்த செயல் ஒன்றே ஒத்தது.
ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நியமநங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில்
தாயாகிய கௌஸல்யையும் தேவியான பிராட்டியும் வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகொளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல்
‘தந்தை சொல் தவறலாகாது‘ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிஷ்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக
நமக்கு வாய்த்த வநவாஸத்தை இழக்கலாகாது‘ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுந்தருளின
பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய விஷயம் வேறொன்றுமில்லை, சொல்லில்,
அப்பெருமான் வஸிஷ்டசண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் திருவடியை வைக்கத் தாவி
யன்றுலகளந்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும், இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்ரமனுடைய
பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று – என்கிறார்.
இதனால், ‘சந்திரன் சந்திரனைப்போலே அழகியான், கடல் கடல்போலே பெரிது என்னுமாபோலே எம்பெருமானுடைய
குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேணு மத்தனையல்லது,
வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது – என்று காட்டியவாறு.
“அத்தனைக்கும் அவனளந்த நீணிலந்தான் நேர்“ என்றதற்கு – இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால்,
“பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறாப்போலே இவ்வுலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிது
என்னலாமத்தனை யொழிய, மற்றைப் படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்ல முடியாது என்றுங் கருத்தாகலாம்.
சொல்நின்ற – ஸ்ரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்றுமாம்.
மூன்றாமடியில். “தோள் நலத்தான்“ என்பதே ப்ராசீந பாடம், “தோள் நலந்தான்“ என்ற பாடத்திலும் பொருள் பொருந்தும்,
தோள – திருந்தோள்களுடையனான இராமபிரானுடைய நலந்தானத்தனைக்கும் – மஹாகுணத்துக் கெல்லாம் என்க.
————————————————————————–
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம்
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் -ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்கு என் கொலோ முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல் -80-
பதவுரை
அடிமை நேர்ந்தேன்–உனது திருவடிகளில் கைங்கரியம் பண்ண நேர் பட்டேன்
ஒரு கண் மலம் அது நினைந்தேன்–அழகிய தாமரைப் பூப்போன்ற அத்திருவடிகளைச் சந்தித்தேன்
உன் சே அடிமேல்–உனது அத்திருவடிகள் விஷயத்திலே
அன்பு ஆய் ஆர்ந்தேன்–அன்பே வடிவெடுத்தவனாகப் பொருந்தினேன்
ஆர்ந்த–பரிபூர்ணமான
அடி கோலம்–திருவடிகளினழகை
கண்டவர்க்கு– ஸேவிக்கப்பெற்றவர்கட்கு
படி கோலம் கண்ட முன்னைப் பகல் என்கொல்–திருமேனியின் அழகை ஸேவிக்கப்பெற்ற முற்காலம் சிறந்த தாகுமோ?
(திருமேனி ஸேவையிற் காட்டிலும் திருவடி ஸேவையேயன்றோ மிகச் சிறந்தது)
எம்பெருமானுடைய திருவடிகளிலே தமக்கு அளவுகடந்த அன்பு அமைந்திருக்கும்படியை முன்னடிகளில் வெளியிட்டார்.
அதற்குமேல் ‘எம்பெருமானுடைய‘ திருமேனியெல்லாம் உத்தேச்யமன்றோ திருவடியை மாத்திரமே பேசுகின்றீரே,
மற்ற அவயங்கள் உத்தேச்யமல்லவோ உமக்கு?‘ என்று ஒரு கேள்வி. பிறந்தாகக்கொண்டு, திருவடியின் அழகுக்கு முன்னே
திருமேனியின் அழகு ஒரு பொருளாய்த் தோற்றுமோ? என்கிறார் பின்னடிகளில்.
ஒண்கமலம் அது நினைந்தேன் – ‘கமலம்போன்ற திருவடி‘ என்று சொல்லவேண்டும் இடத்து,
கமலம் என்றே சொன்னது – ரூபகாதிசயோக்தி யலங்காரமென்க.
உன் சேவடிமேல் அன்பாய் ஆர்ந்தேன் – அன்பு என்று ஒரு வஸ்துவும் அதனையுடைய நான் என்று ஒரு வஸ்துவும் ஆக இரண்டு
வஸ்துக்களின்றியே அன்புதானே நானாக வடிவெடுத்ததென்னப் பொருந்திவிட்டேன் என்கை.
ஆர்ந்த அடிக்கோலம் கண்டவர்க்கு முன்னடிப்படிககோலகண்ட பகல் என்கொல்? – உலகளந்தகாலத்தில், கீழுலகத்திலுள்ளவர்கட்கும்
மேலுலகத்திலுள்ளவர்கட்கும் திருவடிஸேவை கிடைத்தது, நடு உலகத்திலுள்ளவர்கட்குத் திருமேனிஸேவை கிடைத்து,
திருமேனியை ஸேவிக்கப் பெற்றவர்களிற் காட்டிலும் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றவர்களின் பாக்கியமே
சிறந்த பாக்கியமாதலால் திரு மேனியிற் காட்டிலும் திருவடியே பரம உத்தேச்யமாம் என்பது இப்பாட்டின் ஸாரமான கருத்து.
“அடிக்கோலம் கண்டவர்க்கு“ என்றதை – தன்மையில் வந்த படர்க்கையாகக் கொண்டு, இன்று திருவடிகளை ஸேவிக்கப்பெற்ற
வெனக்கு இதற்குமுன் திருமேனியை ஸேவிக்கப்பெற்ற காலம் என்னாவது?
அக் காலத்தை விட இக்காலம் எனக்கு சிறந்தது – என்பதாகவும் உரைக்கலாம்.
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply